2. மிகச் சிறப்பான வெளிப்பாடு
இது மூன்று வகைகளில் நடைபெறுகிறது.
i. ஆரம்ப காலத்தில் தேவன் மக்களோடு நேரடியாகப் பேசினார். சிலவேளைகளில் அது பரலோகத்திலிருந்து வெளிப்படும் சத்தமாயிருந்தது.
“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, நீ எங்கே இருக்கிறாய்? என்றார் (ஆதி.3:9). சில தடவைகளில் தேவன் மக்களோடு சொப்பனத்தின் மூலமாகப் பேசினார்.
யாக்கோபு தான் கண்ட தரிசனத்தில் வானத்துக்கும் பூமிக்கும் வைக்கப்பட்டிருந்த ஏணியில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களுமாய், இறங்குகிறவர்களுமாய் இருக்கக் கண்டான். அப்பொழுது யாக்கோபு தேவனுடைய சத்தத்தைக் கேட்டான் ( ஆதி.28:12-17).
தரிசனஙகளின் மூலம் தேவன் அடிக்கடி மக்களுடன் பேசினார். அப்பொழுது தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். தேவன் எசேக்கியேல் தீர்க்க தரிசியைப் பலதடவைகளில் கிரியை செய்யும்படி தூண்ட வேண்டியதாயிற்று (எசேக்.43:3). அப்போதும் கூட இத்தகைய நிகழ்ச்சிகள் சாதாரணமாக நடை பெறவில்லை. புதிய ஏற்பாட்டு காலத்தில் இது மிக மிகக் குறைவு.
ii. இரண்டாவதாக, இயேசு இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, வாழும் வார்த்தையாக இருந்த அவர் தேவனை நமக்கு வெளிப்படுத்தினார்.
அவர் பிதாவாகிய தேவனின் வார்த் தைகளை உலகில் பேசினார். “பூர்வ காலங்களில் பங்குபங்காகவும், வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்” (எபி. 1:1,2).
தம்முடைய பிதாவாகிய தேவனைக் குறித்து இயேசு கூறும்போது, “என்னை அனுப்பினவர் (தேவன்) சத்தியமுள்ளவர் அவனிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்” என்றார் (யோவான் 8:26).
தேவனுடைய நித்திய தன்மையையும், திட்டத்தையும் வெளிப்படுத்த தேவனுடைய நித்தியகுமாரன் வந்தார். எனினும் உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை. உலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கோ, தேவனுடைய பிள்ளைகளாகும் உரிமை கொடுக்கப்பட்டது.
“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).
தேவகுமாரன் இப்போது பரலோகத்தில் தம் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். அப்படியானால் நாம் தேவனைப்பற்றிய எந்த சிறப்பான வெளிப்பாடும் இல்லாமல் விடப்பட்டிருக்கிறோம் என்று பொருளா? அவருடைய அன்பையும், கரிசனையையும் குறித்து நாம் அறிந்துகொள்ள ஒரு இடம் இல்லையா?
தேவன் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார்? என்று அறிய ஒரு மார்க்கமும் இல்லையா? நிச்சயமாக இருக்கிறது! ஜாண்பர்ட்டன் எழுதிய பழைய பாடலைப் பாருங்கள்.
பரிசுத்த வேதம், தெய்வீக புத்தகம் விலையேறப்பெற்ற பொக்கிஷம்!
நீ என்னுடையதே! எங்கிருந்து வந்தேன்? நான் யார்? என்று நீ எனக்குப் போதிக்கிறாய்.
வனாந்தரப் பாடுகளிலும் துன்பத்திலும் எனக்கு ஆறுதல் நீயே!
மனிதன் மரணத்தை வெல்லலாம் என்று ஜீவனுள்ள விசுவாசத்தின் மூலம் காட்டுகிறாய் எனக்கு நீயே!
iii. மூன்றாவதாக, தேவன் தம்மை இன்னொரு சிறந்த வழியின் மூலம் வெளிப்படுத்த விரும்பினார். அது தான் எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தை, வேதவசனம் அடங்கிய பரிசுத்த வேதாகமம் அது ஒரு தெய்வீகபுத்தகம்.
வேறு எல்லாப் புத்தகங்களையும் விட வேதாகமத்தைப் பிரித்துக்காட்டுவது எது? அது ஏன் வித்தியாசமாகக் காணப்படுகிறது? ஏனென்றால், இது தேவனுடைய புத்தகம். அந்தப் புத்தகத்தின் ஆக்கியோன், தேவனே! அதைத் தோற்றுவித்தவர் அவரே. இந்த வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் அனைத்துக்கும் மூல கர்த்தா அவரே!
தேவன் ஆசிரியராய் இருந்து எழுதிய புத்தகம் ஒன்றே. அதுவே வேதாகமம்! அது ஒன்றே தேவனுடைய உள்ளத்தின் சிந்தனைகளை மனிதனின் உள்ளத்துக்குக் கொடுக்கிறது. இது ஒன்றே தேவனுடைய குணாதிசயத்தையும், மனிதனுடைய எதிர்கால வாழ்வின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அந்தத் திட்டம் நேரடியாக ஆக்கியோனாகிய அவரிடமிருந்தே வருகிறது.
புகழ்பெற்ற சில புத்தகங்களைப் பாருங்கள். வெப்ஸ்டர் அகராதி, ஜோசப் ஸ்மித் எழுதிய “மார்மன் பற்றிய புத்தகம்”, மேரி பேக்கர் எடி எழுதிய “வேதாகம வெளிச்சத்தில் விஞ்ஞானமும், ஆரோக்கியமும்”, L.ரான் ஹப்பார்டு எழுதிய “டயனெட்டிக்ஸ்” (சிந்தனை) இந்தப் புத்தகங்கள் எல்லாம் தேவனால் எழுதப்பட்டவை அல்ல.
தேவனால் எழுதப்பட்ட புத்தகம் வேதாகமம்மட்டுமே! அது தனித்தன்மை வாய்ந்தது. அதைப்போல வேறொரு புத்தகமும் இல்லை. அதற்கு இணை ஏதும் இல்லை. அந்த இனத்தில் அது மட்டுமே உலகில் உள்ளது; தெய்வீக அதிகாரம் கொண்டது. வெளிப்படுத்துவதிலோ, அதிகாரத்திலோ, மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமையிலோ, வேறு எந்தப் புத்தகமும் இதற்கு இணை இல்லை.
(தொடரும்)