விழுந்துபோன பராக்கிரமசாலி !

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1 சாமுவேல் 16:1-18

இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள் (2 சாமுவேல் 1:19).

“மரித்தவரைப் பற்றி எப்பொழுதும் உயர்வாகவே பேசுங்கள்” என்பது ஒரு பழமொழி. தாவீது அதைப் பின்பற்றினான். மரித்துப்போன சவுல், யோனத்தானைப் பற்றி தாவீது உயர்வான ஓர் இரங்கற்பா பாடினான். அவன் சவுலின் சுயநலமான பாவச் செயல்களைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் “பராக்கிரமசாலிகள் விழுந்தார்கள்” (2சாமு.1:19,25, 27) என்று மூன்று முறை புலம்பினான். சவுல் தோற்றத்தில் பெரியவனாயிருந்தாலும் (10:23-24) குணத்தில் குள்ளனாகவே இருந்தான். ஏனெனில் அவன் எப்பொழுதும் மறைந்தேயிருந்தான்.

அவர் பொறுப்புகளை ஏற்க தயங்கி னான்: (1சாமு.10:20-24)

இஸ்ரவேலின் முதல் அரசரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சாமுவேல் ஒரு வியப்பினை உருவாக்கினார். பென்யமீன் கோத்திரம் வரும்வரை ஒவ்வொரு கோத்திரத்தையும் நீக்கினார். பின்னர் கீசின் குடும்பம் வரும்வரை குடும்பங்களை விலக்கினார். ஆனாலும் சவுலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கர்த்தரிடத்தில் விசாரித்தபொழுது “அவன் தளவாடங்களிலிருக்கிற இடத்தில் ஒளித்துக்கொண்டிருக்கிறான்” (வச. 22). அதாவது, கூடிவந்திருந்த மக்களின் சாமான்களின் நடுவே இருக்கிறான் என்று பதிலளித்தார். ஏற்கனவே அவர் சாமுவேலால் அபிஷேகம் செய்யப்பட்டவர். தேவன் தன்னை அரசராகத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை நன்கு அறிந்திருந்தார். எனவே தயங்குவதற்கோ மறைந்துகொள்ளவோ எந்தவொரு காரணமும் இல்லை. இது பயத்தின் விளைவா அல்லது போலியான பணிவா? “தேவன் ஒரு மனிதனை அரசனாக அழைத்தால் அதை மறைத்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை” என்று ஜி காம்ப்பெல் மார்கன் கூறியுள்ளார்.

பொறுப்புடைமையைப் பயிற்சி செய்வ தில் தயங்கினான்:

சவுலின் வாழ்க்கையை நாம் வாசிக்கும்போது அவர் அடிக்கடி தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததையும், பாவ அறிக்கை செய்து மன்னிப்பைத் தேடுவதற்குப் பதிலாக சாக்குப்போக்குகள் சொல்வதையும் நாம் காணலாம். 1 சாமுவேல் 13ம் அதிகாரத்தில் பலிகளைச் செலுத்த சாமுவேல் வரத் தாமதமானபோது அவர் காத்திருக்காமல் பொறுமை இழந்தார். எனவே அவரே சர்வாங்க தகனபலியை செலுத்தத் துணிந்தான். ஆனால் சாமுவேல் வர தாமதமாயிற்று என்று அவரைக் குற்றம் சாட்டினான். 14ஆம் அதிகாரத்தில் தனது மூர்க்கமான ஆணையால் தனது மகன் யோனத்தான் மேல் குற்றஞ்சாட்டி அவனைத் தண்டிக்கவும் முயற்சித்தான்.

15ஆம் அதிகாரத்தில்: அமலேக்கிய அரசன் ஆகாகைக் கொலை செய்யவும், எதிரிகளின் ஆடு மாடுகளை அழிக்கவும் கட்டளையிட்ட தேவனின் சொல்லுக்குக் கீழ்ப்படியவில்லை. மாறாக ஜனங்கள் ஆடுமாடுகளில் “நலமானவைகளைத்” தப்பவைத்து அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்துப்போட்டார்கள் என்று சாக்கு சொன்னான். “ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்ப வைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் (15:15)” என்றான். தேவன் சங்கரிக்கச் சொன்னால் அதில் நலமானவைகள் என்பது எதுவும் இல்லை. இந்த சாக்கு சவுலின் ராஜாங்கத்தை இழக்கச்செய்தது. அவன் மனச்சிதைவுக்குள்ளாகி சந்தேகப் பிராணியாக மாறினான்; தாவீதுக்கு உதவின அனைவரையும் சந்தேகித்தான்; நோப் பட்டணத்து ஆசாரியன் தாவீதுக்கும் அவனுடைய மனிதருக்கும் ஆலயத்தின் பரிசுத்த அப்பங்களைக் கொடுத்ததினால் நோப் பட்டணத்து ஆசாரியர்களின் குடும்பங்கள் அனைத்தையும் கொன்றுபோட்டான் (1சாமு.21,22). சவுல் பொய்யனும் கொலைகாரனுமாகிய சாத்தானைப்போல (யோவான் 8:44) நடந்து கொண்டான்.

உண்மை நிலையை எதிர்நோக்க தயங்கினான்: (1சாமு.28:31)

சவுலுக்குக் கர்த்தரிடத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கக் கூடாது. ஏனெனில் “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்.66: 18) என்று வேதவசனம் கூறுகிறது. நம்மிடத்தில் பாவம் இருக்கிறது என்று தெரிந்தும் அதனை அங்கீகரித்து, அதை அகற்ற எந்த திட்டங்களையும் நாம் போடவில்லையானால் நமது ஜெபத்துக்கு பதில் வராது. சவுல் வேஷம் மாறி ஓர் அஞ்சன ஸ்திரீயிடம் ஆலோசனை கேட்கச் சென்றான். ஆனால் பிசாசிடமிருந்துதான் அவனுக்குரிய குறிப்பு வந்தது. சவுல் அங்கே உருமாறவில்லை; தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தினான். தனது ஆட்சி காலத்தில் ஒரு நடிகனாகவே இருந்து வந்திருந்தான். அவனது குமாரர்கள் மூவரும் மரிப்பார்கள் என்றும், மறுநாள் அவருடைய கடைசி நாளாக இருக்கும் (1 சாமு.26:19; 31:1-6) என்றும் பதில் வந்தது. இஸ்ரவேல் தோற்கும் என்றும் தான் இறந்துவிடுவேன் என்று தெரிந்தும் அவர் போருக்குத் துணிவுடன் சென்றான்.

ஒரு ராஜபரம்பரையை சவுல் உரு வாக்கவேண்டும் என்று தேவன் எண்ணவில்லை. இஸ்ரவேலின் ராஜா யூதா கோத்திரத்திலிருந்து வரவேண்டும் (ஆதி. 49:10). தாவீது ஏற்கனவே ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார். சவுலின் சோகமான வீழ்ச்சி “இதோ சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு” (வெளி 3:11) என்ற நமது ஆண்டவரின் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டுகிறது.

சவுலின் அரசவாழ்வு அவன் உயரமாக நிற்பதில் தொடங்குகிறது (1 சாமு.10:23-24), ஆனால் முடிவில் அவர் பரிதாபமாக இறந்து கிடந்தார்;. சிம்சோன், லோத்து, யூதாஸ் மற்றும் தேமா போன்றவர்களைப்போல தோல்வியையே தழுவினார்.

இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1 கொரி. 10:12).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

தாவீதோடே இருந்த கர்த்தர்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1 சாமுவேல் 16:1-18

அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, புத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான் (1சாமு.16:18).

கோலியாத்தை வெல்லும் முன்னர் தாவீது அதிக அளவில் புகழ் பெறவில்லை. ஆனாலும் சவுலின் வேலைக்காரன் ஒருவன் தாவீதை கவனித்து, ஆச்சரியப்பட்டு, சவுல் பொல்லாத ஆவியினால் கலங்கிய நேரங்களில் சுரமண்டலம் வாசிப்பதற்கு அவனே ஏற்றவன் என்று பரிந்துரை செய்தான்.

இஸ்ரவேல் தேசத்தில் அநேக இளைஞர்கள் பாடகர்களாகவும், போர் வீரர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும், அழகுள்ளவர்களாகவும் இருந்தனர். ஆனால் தாவீதிடம் இந்த வேலைக் காரனைக் கவர்ந்த அம்சம் கர்த்தர் அவனோடு கூடஇருந்ததே. கர்த்தர் சவுலுடன் இருந்தார்; ஆனால் அவனைவிட்டு நீங்கிவிட்டார் (1சாமு.10:7;16:14). கர்த்தர் ஆபிர காம்; (ஆதி.21:22), ஈசாக்கு (ஆதி.26: 28), யாக்கோபு (ஆதி.28:15), யோசேப்பு (ஆதி.39:2-3, 21-23), யோசுவா (யோசு.1:5) ஆகியோருடன் இருந்தார். எனவே தாவீதும் இத்தனித்துவமான குழுவில் இடம் பெற்றுள்ளார். தேவன் உங்களுடன்கூட இருக்கிறார் என்பதை விட வேறு உன்னதமான பாராட்டு எதுவுமில்லை. ஆனால் இதன் பொருள் யாது?

அது ஆவிக்குரிய பண்பு

சாமுவேல் தாவீதை அபிஷேகம் பண்ண ஈசாயின் வீட்டுக்குச் சென்ற பொழுது அவருடைய ஒவ்வொரு குமாரரும் அவனைக் கவர்ந்தனர். ஆனால் தேவனோ தோற்றத்தின்படி முடிவெடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார். ஏனெனில் “கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1சாமு.16:7). சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசாப் தாவீதைப் பற்றி “இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்” (சங்.78:72) என்று பாடியுள்ளார்.

சவுல் பெருமையுள்ள இருதயத்தை உடைய இரு மனமுள்ளவன்; ஜனங்களுக்கு முன்பாக மகிமையை விரும்பிய வன் (1 சாமு. 15:30); ஆனால் தாவீதோ தாழ்மையுள்ளவன், ஆண்டவர் ஒருவரை மாத்திரமே மகிமைப்படுத்த விரும்பினான்; நற்குணங்களையுடையவன், தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவன் (13:14). இராபர்ட் முர்ரே மெக்கெய்ன் என்ற போதகர் “தேவன் உங்களிடமுள்ள சிறந்த தாலந்துகளைவிட நீங்கள் இயேசுவைப்போலிருப்பதையே விரும்புகிறார்” என்று எழுதியுள்ளார்.

அது தேவனுடைய வல்லமை

தாவீது இளைஞனாக இருந்தபொழுது ஒரு மேய்ப்பனின் கவணினாலே கோலி யாத் என்ற இராட்சதனைக் கொன்றான். தனது படைவீரர்களை வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று நடத்திச்சென்றான். எனவேதான் பெண்கள் அவனைப் புகழ்ந்து “சவுல் கொன்றது ஆயிரம்; தாவீது கொன்றது பதினாயிரம்” (18:7) என்று பாடினார்கள். இது தாவீதின் பேரில் சவுலின் பொறாமை தீயை எழுப்பக் காரணமாயிற்று. எனவே அவன் தாவீதைக் கொல்ல விரும்பினான். ஆனால் தேவன் தாவீதைக் காத்துக்கொண்டார். தேவன் அழைத்தவர்கள் எவர்களோ அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து செயல்படுத்தும் ஞானத்தையும் கொடுக்கிறார். தாவீது கர்த்தருடைய வல்லமையைச் சார்ந்திருந்தார். தலைவர்களை உருவாக்கும் முறையையும் அவர் அறிந்திருந்தார் (அதிகாரம் 23). கர்த்தர் அவனோடே கூட இருந்தார்! அவனைக் கைவிடவில்லை. எனவே தாவீது, “யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்” (சங்.18:39) என்று பாடினார்.

அது எதிர்ப்பைக் குறிக்கும்

இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதை நேசித்து அவனைக் கனப்படுத்தினர். ஆனால் சவுலும் அவனைப் பின்பற்றிய வர்களும் அவனைக் கொல்ல வகை தேடினர். தேவனைக் கனப்படுத்தி, அவருடைய ஒளியைப் பிரகாசிக்கும் எந்த ஒரு உண்மையான ஊழியனும் இருளை விரும்பும் மக்களால் தாக்கப்படுவான். இதனை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளார் (யோவான் 3:19-21). சுமார் ஏழு ஆண்டுகளாக சவுல் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பின்தொடர்ந்தான். எனவே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தப்பிச்சென்றனர். சில வேளைகளில் குகைகளிலும் வாழ்ந்தனர். நீங்களும் நானும் இவ்வாறு படை வீரர்களால் துரத்தப்படாவிட்டாலும், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவருக்கும் துன்பங்கள் உண்டு (2 தீமோ.3:12) என்று வேதாகமம் கூறுகிறது.

அது நித்திய ஆசீர்வாதத்தைத் தரும்!

1 இராஜாக்கள் 2 ஆம் அதிகாரம் தாவீதின் மரணத்தைப் பதிவுசெய்துள்ளது. ஆனால், அதன்பின்னரும் வேதாகமத்தில் அவருடைய பெயர் அநேக இடங்களில் காணப்படுகிறது. தாவீது தனது மரணத்துக்குப் பின்னரும் தனது மக்களுக்கு ஆசீர்வாதங்களை வைத்துச்சென்றார்; இன்றும் தேவனுடைய மக்களை ஆசீர்வதிக்கிறார். தேவனுடைய ஆலயக் கட்டுமான வரைபடத்தையும், அதற்கென்று திரளான பொக்கிஷங்களையும் சேகரித்து வைத்துச்சென்றார் (1நாளா. 28:11-20). படைகளுக்குத் தேவையான அநேக ஆயுதங்களையும் ( 2இராஜா. 11: 10; 2நாளா.23:9) ஆலயப் பாடகர்களுக்கான இசைக்கருவிகள் (2 நாளா.29: 26,27; நெகே.12:36) இனிமையான சங்கீதங்கள் ஆகியவற்றையும் அளித்துள்ளார். இன்று நாம் பாடும் அநேக பாடல்கள் தாவீதின் சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டவை. நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவும் தாவீதின் வம்சத்திலே தோன்றி தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார்.

தாவீது நமக்கு விட்டுச்சென்ற ஆஸ்திகள் இன்றும் நமக்கு ஆசீர்வாதமாக அமைந்துள்ளன. “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்று 1 யோவான் 2:17 உறுதி அளிக்கிறது. ஆண்டவர் நம்மோடே இருப்பாராக! தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிற தற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்” ( 1 நாளா. 28:20).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

உம்மோடே இருக்கிறேன்!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1சாமுவேல் 14:1-23

அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான் (1சாமு.14:7).

“இதோ உம்மோடே இருக்கிறேன்” என்ற வார்த்தைகள் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. யோனத்தான் வெற்றிபெற்ற யுத்தத்தின் மேன்மையை அவனது தகப்பனான சவுல் எடுத்துக்கொண்டான் (1சாமு.13:1-4). ஆனால், இஸ்ரவேல் பாதுகாப்பாக உள்ளது; தேவனே மகிமைக்கு உரியவர் என்பதாலும் யோனத்தான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நாமும் ஆண்டவருடைய சத்துருக்களுடன் நித்தமும் போரிட நேரிடும். பெலிஸ்தருக்கு விரோதமான அந்த யுத்தகளத்தில் இஸ்ரவேலரில் மூன்று பிரிவினர்; இருந்தனர். இன்றும் நமது சபைகளில் மூன்று வித “கிறிஸ்தவ வீரர்கள்” காணப்படுகின்றனர்.

பார்வையாளர்கள்

சவுல் அரசன் ஏறக்குறைய அறுநூறு வீரர்கள் சூழ்ந்திருக்க ஒரு மரத்தின் கீழ் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தவனாய் அமர்ந்திருந்தான். தலைவர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன் படுத்தவேண்டும். கடமையை செய்து விடுவதுடன்மட்டும் நின்று விடக்கூடாது (1தீமோ.3:13). தேவன் சவுலுக்கு அதிகாரத்தையும் பதவியையும் கொடுத்திருந்தார். ஆனால் சவுலோ, தரிசனம், அதிகாரம் அல்லது செயல்திட்டம் அற்றவனைப் போல காணப்பட்டான். காரியங்களை செயல்படுத்துவதற்குப் பதிலாக காரியங்கள் நடந்தேறுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். வெறும் பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் எதையும் சாதித்து முன்னேறுவதில்லை. சவுலுடன் ஒரு சிறிய இராணுவம் மட்டுமே இருந்தது. இஸ்ரவேலரில் சிலர் யுத்தகளத்தை விட்டு ஓடி ஒளித்துக்கொண்டனர். ஒரு சிலர் எதிரிகளிடம் சரணும் அடைந்து விட்டனர்! ஆனால் யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் பெலிஸ்தரை எதிர்த்து போரிட்டு அவர்களை வெட்டிக்கொண்டே போனார்கள்.

ஆண்டவரும் எதிரிகளின் போர்க்களத்தை கலங்கடித்தார். ஒளித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலரும் வெளியில் வந்து யுத்தத்தில் கலந்து கொண்டனர். இவர் களைப்போன்ற கிறிஸ்தவர்களை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அவர்களில் நீங்களும் ஒருவரா?

பயப்படாதவர்கள்

யோனத்தான் ஏற்கனவே பெலிஸ் தரை யுத்தத்தில் தோற்கடித்திருந்தான். இஸ்ரவேலின் தேவன் தங்களுக்கு வெற்றியைத் தருவார் என அதிக நிச்சயமாய் நம்பியிருந்த அவன் ஒரு விசுவாச வீரன். ஒருவேளை லேவியராகமம் 26:7-8 வரையுள்ள “உங்கள் சத்துருக்களைத் துரத்திவிடுவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறு பேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம் பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்” என்ற தேவனுடைய வாக்குறுதியை அவன் சிந்தித்திருப்பான். தன்னுடைய ஆயுததாரிக்கும் “அநேகம் பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை” (1சாமு. 14:6) என்று கூறி உற்சாகப்படுத்தினான். தன்னுடைய நிலைப்பாடு சரியானது தான் என்பதற்கு தேவன் ஒரு அடையாளத்தைத் தருவார் என எதிர்பார்த்தான். தேவனும் அதை நிறைவேற்றினார் (வச. 9-14). எதிரிகளின் பாளையத்தில் பூமியதிர்ச்சி உண்டானதினால் பெலிஸ்தர்கள் திகில் அடைந்து ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்தனர். எதிரிகளின் இராணுவம் கலைய ஆரம்பித்தது (வச. 16).

பயன்தருபவர்கள்

தங்களுக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு உதவும் மக்களும் உண்டு. யோனத்தானின் ஆயுத தாரியின் பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. வேதத்தில் பெயர் தரப்படாத அநேகர் தங்களுக்குரிய வேலையை முடித்துவிட்டு அறியப்படாதவர்களாய் காணப்படுகின்றனர். அவர்களுக்கு பரலோகில் சிறந்த வெகுமானங்கள் தரப்படும் என்பதில் ஐயமில்லை. இயேசு ஐந்தாயிரம் மக்களைப் போஷிக்க தன்னுடைய உணவை தியாகம் பண்ணின சிறுவன் (யோவான் 6:8-11), நாகமானை குஷ்ட ரோகத்திலிருந்து குணமாக்க எலிசாவிடம் செல்ல ஆலோசனை கூறிய சிறு பெண் (2 இராஜா.5:1-4), பவுலின் உயிரைக் காப்பாற்ற முயன்ற அவனுடைய சகோதரியின் மகன் (அப். 23:16-22) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தானும் கூடவே வருவதாகக் கூறி ஆயுததாரி யோனத்தானை உற்சாகப்படுத்தினான். அனைத்து தலைவர்களுக்கும் தங்களுடைய செயல்பாட்டை நடத்த உதவும் சில உண்மையான மக்கள் தேவை. யோசுவாவுக்கும் இஸ்ரவேல் இராணுவத்துக்கும் மோசே ஜெபித்த பொழுது, ஆரோனும் ஊரும் அவனுடைய கைகளைத் தாங்கினர் (யாத் 17:8-16). கெத்செமெனே தோட்டத்தில் இயேசு ஜெபிக்கும்பொழுது தன்னுடனே விழித்திருக்க பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை கேட்டுக்கொண்டார் (மத்.26:36-46). தங்களுக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் “கூடவே இருப்போம்” என்று கூறும் ஒரே மனமுடைய தொண்டர்களைக் கொண்ட தலைவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இயேசுகிறிஸ்துவும் நம்முடன் கூடஇருப்பதாக வாக்களித்திருக்கிறார்; நாமும் மற்றவர்களுக்கு அதனைக் கூற அவர் நமக்கு உதவி செய்வார்.

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென் (மத்.28:20).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

மதிப்பிடும் தேவன்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1சாமுவேல் 2:1-10

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? (1சாமுவேல் 2:3).

அன்னாள் தேவபக்தியுள்ள ஒரு பெண்மணி. ஆனால் அவள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டாள். அன்னாளுக்குக் குழந்தையில்லாததால், அவளுடைய கணவனின் இரண்டாவது மனைவி பெனின்னாள் பரியாசம் பண்ணி அவளை அழவைப்பாள். பிரதான ஆசாரியனான ஏலியும் அவள் குடித்திருக்கிறாள் என எண்ணினார். யோசேப்பு, தாவீது, எரேமியா, பவுல் போன்ற தேவபக்தர்களைப்போலவே இவளும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாள். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்கூட “சாத்தானுடன் தொடர்புடையவர்” என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் ஆண்டவர், அன்னாளின் விண்ணப்பத்தைக் கேட்டு அவளுக்கு ஓர் ஆண் மகனை அருளினார். அவனுக்கு சாமுவேல் என பெயரிட்டு ஆசரிப்புக் கூடாரத்தில் தேவபணி செய்ய ஒப்படைத்தாள். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் சாமுவேல் ஒரு வல்லமையான தீர்க்கதரிசியாக விளங்கினார். மக்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ளும் நேரங்களில் அன்னாளின் இந்த மகிழ்ச்சியான துதிப்பாடலின் வரிகள் நம்மை ஆறுதல் படுத்தி உற்சாகப்படுத்துகின்றன.

தேவன் சகலத்தையும் அறிவார்:

மற்ற மனிதர்கள் சிந்திப்பதையும் அவர்களது சொற்களையும் தேவன் அறிவார். உங்களுடைய சிந்தனையையும் சொல்லையும் அவர் அறிவார் (சங்.139: 1-6). ஒவ்வொருவருடைய இருதயத்தில் இருப்பதையும் அவர் அறிவார் (அப்.1: 24). “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” (எபி.4:13). நம்முடைய இருதயத்தையே நாம் அறிய மாட்டோம் (எரே.17:9). ஆண்டவருக்காக தான் மரிக்கவும் ஆயத்தம் என்று பேதுரு எண்ணியிருந்தார். ஆனால், தான் அவரை மூன்றுமுறை மறுதலித்ததை அறிந்து வருத்தம் கொண்டார். மக்கள் உங்களைப் பற்றி பொய் சொல்வார்களானால் கவலைப்படாதீர்கள். உங்கள் பரலோக தகப்பன் உண்மையை அறிவார்; ஒருநாளில் உண்மையை வெளிப்படுத்துவார்.

தேவன் மக்களையும் அவர்களது செயல்களையும் மதிப்பிடுபவர். மனம் மாறியவர்கள் கணிக்கப்பட்டு அவர்கள் கவனிக்கப்படவேண்டும் என்று நற் செய்தியாளர் டி.எல்.மூடி அடிக்கடி கூறுவார். நம்முடைய ஆண்டவரும் மக்கள் சொல்வதையும் செய்வதையும் அளவிடுகிறார். கீழ்மக்கள் மாயையும், மேன் மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள் (சங்.62:9). “மாயை, மாயை, எல்லாம் மாயை” என்று பிரசங்கி சொல்லுகிறான். Hevel என்ற எபிரெய சொல்லை 83 முறை பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் இங்கு பயன் படுத்தியுள்ளார். அதற்கு “மாயை, ஒன்று மில்லாமை, பயனற்றது” என்று பொருள் கூறலாம்.

தேவனுடைய சித்தத்தில் வாழும் வாழ்வே திடமானதும் நிறைவானதும் ஆகும். அவரது சித்தத்துக்கு வெளியே வாழும் வாழ்வு அர்த்தமற்றதும் வெறுமையானதுமே. நாம் பேசுவதற்கு முன் நம்முடைய வார்த்தைகளை சிந்தித்துக் கூறவேண்டும், ஏனெனில் தேவன் அவ்வாறே செய்கிறார். நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும் என்று சாலொமோன் எழுதியுள்ளார் (நீதி.15:28). சபையில் கூறப்படும் வார்த்தைகளையும் நாம் நிதானிக்கவேண்டும். ஏனெனில் அவை தேவனுடைய வார்த்தைக்கு ஒத்துப்போகாதிருக்கலாம் (1கொரி. 14:29). எனவேதான் ஆண்டவராகிய இயேசு: மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று எச்சரிக்கிறார் (மத்.12:36). தேவன் நமது நோக்கங்களையும்(நீதி.16:2) நம்முடைய இருதயத்தையும் (நீதி.21:2;24:12) நிறுத்துப்பார்க்கிறார். ஒருவரும் காண முடியாதவற்றையும் தேவன் காண்கிறார்; கேட்கமுடியாததையும் அவர் கேட்கிறார்.

தேவன் கனமானவற்றுக்கு வெகு மதியளிக்கிறார். தேவனுக்கு ஊழியம் செய்யும்பொழுது விலைமதிப்பற்ற மரம், மற்றும் புல் வைக்கோல் இவைகளை யல்லாது விலையுயர்ந்த தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்களை பயன்படுத்தும்பொழுது தேவன் அவற்றையும் அளவிடுகிறார்; இவ்வுலகில் இல்லையென்றாலும் மறுவுலகில் நாம் வெகு மதிகளைப் பெறுவோம் (1 கொரி. 3:12-17; எபே.6:8; கொலோ. 3:23-24).

போத்திபாரின் மனைவி யோசேப்பின் பேரில் பொய்யான குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் அடைத்தாள். ஆனால், தேவன் அவனை உயர்த்தினார். சவுல் அரசர் தாவீதைத் தவறாகப் புரிந்துகொண்டு அவனைக் கொல்லப் பார்த்தார். ஆனால் தாவீதின் உத்தமம் நிரூபணமானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் உயிர்த்தெழுதலினாலும் மகிமையின் பரமேறுதலினாலும் நியாயப்படுத்தப்பட்டார்.

பெல்ஷாத்சார் அரசர் உலகத்தின் அளவீட்டை வைத்து தான் வல்லமையானவர் என்றும், செல்வந்தன் என்றும் எண்ணினார். ஆம்; அவை உண்மைதான். ஆனால் தேவனோ நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் (தானி.5:27) என்று அவரிடம் கூறினார். அன்று இராத்திரியிலே அவர் கொலை செய்யப்பட்டார். உலகத்தின் தராசை வைத்து உங்கள் வாழ்வை எடை போடாதீர்கள்; தேவனுடைய தராசை வைத்து உங்கள் வாழ்வை சீர்தூக்கிப் பாருங்கள். கிறிஸ்துவை முதலாவது நாம் வைத்தால் அவரையும் நமக்குத் தேவையான யாவற்றையும் நாம் பெற்றுக்கொள்வது அதிக நிச்சயம்!

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்.6:33).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

செட்டைகளின் நிழலில்!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ரூத் 2:1-12

உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான் (ரூத் 2:12).

கர்த்தராகிய தேவன் மீது தன் நம்பிக் கையை வைத்திராவிட்டால் அவர் ரூத்தினுடைய விசுவாசமுள்ள கிரியைக்கு பலனளித்திருக்கமாட்டார். ஏனெனில் கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது (யாக்கோபு 2:26). ரூத் தன் மாமியார் நகோமியிடம் செய்த அறிக்கை (1:16-17) வேதாகமத்தில் மிகவும் முக்கியமான ஒரு சான்றுரையாகும். ரூத், தூய்மையானதும் இன்பமானதுமான ஒரு வரலாற்றுப் பெண்மணியாவாள். அவள் தேவனை நம்பினபடியால் ஆண்டவர் அவளுடைய வாழ்க்கையில் சில அற்புதமான மாற்றங்களை அருளினார்.

விலக்கப்பட்டவள் சேர்த்துக்கொள்ளப்பட்டாள்:

அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது (உபா.23:3). ரூத் தன்னுடைய விக்கிரக தேவர்களைவிட்டு ஆண்டவரை ஏற்றுக்கொண்டு நாட்டின் யூத மதத்திற்கு மாறினாள். ஆவிக்குரிய வார்த்தைகளில் கூறுவோமானால், அவள் மகா பரிசுத்த ஸ்தலத்தில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் காவல் செய்யும் கேரூபின்களின் செட்டைகளின் கீழ் வந்து சேர்ந்தாள் (சங்.36:7,8; 61:4; 91:1-4). நான் கிறிஸ்துவை விசுவாசித்தபொழுது இதைப் போன்ற அனுபவத்தைப் பெற்றுக் கொண்டேன். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் (எபே.2:13).

சஞ்சலப்பட்டவள் சமாதானம் பெற்றாள்:

ரூத்தின் ஆரம்ப அதிகாரத்தில் எலிமெ லேக்கும் அவன் மனைவி நகோமியும் தங்களுடைய இரு மகன்களுடன் பெத்லெகேமை விட்டு புறப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. நகோமியின் கணவரும் இரு மகன்களும் மரித்ததால் மூன்று விதவைப்பெண்கள் தனித்து விடப்பட்டனர். அக்காலத்தில் விதவைகளும் குஷ்டரோகிகளும் சமுதாயத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்தனர். நகோமி பெத்லெகேமுக்குத் திரும்ப முடிவெடுத்தாள். ரூத்தும் அவளுடன் வருவதாக வற்புறுத்தினாள். அவர்கள் தங்கள் ஊரை அடைந்தபொழுது நகோமி தன் இனத்தாரிடம் “நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று சொல்லுங்கள்” என்று கூறினாள். மாராள் என்ற எபிரெயச் சொல்லுக்கு கசப்பு என்று பொருள் (ரூத் 1:20). ஆனால் ரூத் தன்னுடைய இருதயத்தில் தேவசமாதானத்தைப் பெற்றிருந்ததால் உடனடியாக தன் மாமியாருக்கு உதவ ஆரம்பித்தாள். மோவாபிலிருந்த நகோமியின் அடுத்த மருமகளோ மறுமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ ஆரம்பித்திருக்கலாம் (1:9). ஆனால் பெத்லெகேமிலே ரூத் அனுபவித்த சமாதானமோ மிகச்சிறந்தது.

உழைப்பாளி மனநிறைவடைந்தாள்:

அறுவடைகாலத்தில் ஏழைகள் வயலில் அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ள எபிரெயச் சட்டம் அனுமதித்திருந்ததை ரூத் அறிந்துகொண்டாள். தன்னால் இயன்ற அளவு நகோமியை நன்கு கவனிக்க விரும்பினாள். இங்கே தேவனுடைய வழிநடத்துதலை நாம் காண்கிறோம். “தற்செயலாய்” அவளுக்கு நேரிட்ட வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது. அவள் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் பொழுது போவாஸ் அங்கு வந்ததும் தற்செயலாக நிகழ்ந்தது. அதைக் “கண்டதும் காதல்” என நாம் கருதலாம். தன்னுடைய வயலில் மாத்திரமே பொறுக்கிக் கொள்ள அவன் கூறினான். மேலும் அவள் பொறுக்கிக் கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று தன் வேலைக்காரருக்குக் கட்டளையிட்டான். அவள் அந்நியளாயிருந்தும் அவள் ஓய்வெடுக்கவும், சாப்பிடவும், தண்ணீர் அருந்தவும் வேண்டியவைகளைக் கட்டளையிட்டான். அவனுடைய கண்களில் அவளுக்கு தயை கிடைத்தது (2:2,10,13); இதுவே இரட்சிப்பின் வழிக்கான ஆரம்பம்.

ஒன்றுமில்லாதவள் மேன்மையை அடைந்தாள்:

ரூத் தேவனை விசுவாசித்து, யூத சமுதாயத்தின் உறுப்பினரானது மாத்திரமல்ல, போவாஸை மணந்து தாவீது அரசரின் பாட்டனாரைப் பெற்றெடுத்தாள். அதற்கும் மேலாக, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு அட்டவணையில் அவளுடைய பெயரும் காணப்படுவது அதிக விசேஷமானது (மத்.1:5). ஓர் ஏழை விதவையாக ஆரம்பித்து (அதி.1), பொறுக்கினதில் வாழ்ந்து (அதி.2) போவாஸிடமிருந்து பரிசுகளைப் பெற்று (அதி.3) இறுதியில் அவனை மணந்து அவனுடைய சம்பத்துகள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாள். இதுவே தேவனுடைய கிருபை! இவை யாவும் தேவன் அளித்த “பரிசு” ஆகும். ஒருநாளில் அவள் பரலோகத்தை அடையும்பொழுது “முழு வெகுமதியையும்” பெற்றுக்கொள்வாள். இங்கு பரிசுகளும் பரலோகத்தில் முழுமையான வெகுமதிகளும் கிடைக்கும். நாம் ஊழியம் செய்யும் எஜமான் எவ்வளவு தயையுள்ளவர்! நாம் அனைவரும் உன்னதரின் உச்சிதமான வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியக்காரராய் பணிபுரிய உறுதிகொள்வோம்.

உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (2 யோவான் 8).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

பராக்கிரமசாலி!

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நியாயாதிபதிகள் 6:11-14

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார் (நியாயாதிபதிகள் 6:14).

ஒருவேளை நாம் கிதியோனின் அயலகத்தாராய் இருந்திருந்தால், ஒருநாள் அவர் இஸ்ரவேலின் பெரிய தளபதியாகவும், புகழ்பெற்ற நியாயாதிபதியாகவும் மாறுவார் என நினைத்திருக்கமாட்டோம்; ஆனால் அதுவே நிகழ்ந்தது. கிதியோன் திராட்ச ஆலைக்கு அருகே இருந்த களத்தில் இரகசியமாக கோதுமையைப் போரடித்துக் கொண்டிருந்தபோது, “பராக்கிரமசாலியே” (நியா.6:12) என்று அவனை கர்த்தருடைய தூதன் அழைத்ததைக் கேட் டதும் அவன் அதிர்ச்சிக்குள்ளானான்.

பாகாலின் பீடத்தைத் தகர்த்து தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும் என்று தைரியமாக அவன் கூறியது அவனுடைய நண்பர்களுக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கும். அவன் ஒரு சிறிய படையைத் திரட்டி மீதியானியரைத் தோற்கடித்தான். பயந்த அவன் தைரியசாலியானான். அவனுடைய இந்த மாற்றத்தின் இரகசியம் யாது? அவன் தேவனால் அனுப்பப்பட்டான். அவர் தம்முடைய வாக்குறுதியைக் காத்துக்கொள்வார் என நம்பினான். நாம் யார் என்பதோ, நம்மால் என்ன முடியும் என்பதோ முக்கியமல்ல. நாம் தேவனால் அனுப்பப்பட்டோமா என்பதே முக்கியம்.

தேவனுடனான முதல் சந்திப்பில் வெளிப்பட்ட கிதியோனுடைய அவிசுவாசம் அனைத்தையும் பாழாக்கிவிடுவது போல் இருந்தது. “கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்”. தேவனை நோக்கிப்பார்த்து அவருக்குக் கீழ்ப்படியாமல் தன் சூழ்நிலையைப் பார்த்ததே கிதியோன் செய்த தவறு ஆகும். எந்த சூழ்நிலைகளும் நமது சர்வவல்ல தேவனை ஒரு போதும் பாதிக்காது; ஏனெனில் இயலாதவற்றையும் செய்ய அவர் அதிகாரமுடையவர். உண்மையான ஜீவனுள்ள தேவனை விசுவாசித்து நீங்கள் வாழ்ந்தால் வினா எழுப்பமாட்டீர்கள். அவருடைய வாக்குறுதியை நம்புவீர்கள்.

கிதியோன் தன் நிலையைப் பார்த்து இன்னும் அதிகமாக அதைரியமடைந்தான்.”அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்” (வச.15). ஆனால் தேவன் அவனை “பராக்கிரமசாலியே” என்று அழைத்து விட்டார். தேவன் கூறுவது அனைத்தும் உண்மையாகவே இருக்கும்.

“ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்” (1கொரி.1: 27- 29).

கிதியோன் தேவனால் தகுதி பெற்றான், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நாமும்தான்!

எபிரெயர் 11:32இல் தங்களை அனுப்பின தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்து அவரை மகிமைப்படுத்திய விசுவாச வீரர்களின் பட்டியலில் கிதியோனும் இடம் பெற்றுள்ளார். தேவன் நம்மை அனுப்பும்பொழுது அவரும் நம்முடன் வருகிறார்; நம்முடன் தங்குகிறார். “இதோ நான் உங்களுடன் கூட இருக்கிறேன்” என்று வாக்களித்த தேவன் அவர்களைத் தாங்கினார். அவருடைய வாக்குறுதி இன்றும் நம்மைத் தாங்குகிறது. தேவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தார் (ஆதி.26:3), யாக்கோபுக்கு (ஆதி. 31:3), மோசேக்கு (யாத்.3:12), யோசுவாவுக்கு (யோசுவா 1:5,9) எரேமியாவுக்கு (எரே.1:8,19), அப்.பவுலுக்கு (அப்.18: 9-10) கிறிஸ்தவ விசுவாசி ஒவ்வொருவருக்கும் (எபி.13:5-6) இவ்விதமான வாக்குறுதி அளித்துள்ளார். “உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா˜”, “நான் உன்னோடே இருக்கிறேன்” என்ற வாக்குறுதிகள் எந்த ஒரு கிறிஸ்தவனையும் தைரியசாலியாக்கிவிடும்.

என் நண்பர் அனுப்பிய ஒரு சிறு கவிதை இந்த தியானத்தின் சுருக்கத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

சூழ்நிலையைப் பார்த்தால் அது துயரத்தைத் தரும்;
சுயத்தைப் பார்த்தால் அது மனச்சோர்வை அளிக்கும்;
ஆனால் விசுவாசத்தோடு இயேசுவைப் பார்த்தால்
அது உங்களுக்கு ஆசீர்வாதத்தை அளிக்கும்.

“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர்12:1-2).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை