விழுந்துபோன பராக்கிரமசாலி !
அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி
வேதபகுதி: 1 சாமுவேல் 16:1-18
இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள் (2 சாமுவேல் 1:19).
“மரித்தவரைப் பற்றி எப்பொழுதும் உயர்வாகவே பேசுங்கள்” என்பது ஒரு பழமொழி. தாவீது அதைப் பின்பற்றினான். மரித்துப்போன சவுல், யோனத்தானைப் பற்றி தாவீது உயர்வான ஓர் இரங்கற்பா பாடினான். அவன் சவுலின் சுயநலமான பாவச் செயல்களைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் “பராக்கிரமசாலிகள் விழுந்தார்கள்” (2சாமு.1:19,25, 27) என்று மூன்று முறை புலம்பினான். சவுல் தோற்றத்தில் பெரியவனாயிருந்தாலும் (10:23-24) குணத்தில் குள்ளனாகவே இருந்தான். ஏனெனில் அவன் எப்பொழுதும் மறைந்தேயிருந்தான்.
அவர் பொறுப்புகளை ஏற்க தயங்கி னான்: (1சாமு.10:20-24)
இஸ்ரவேலின் முதல் அரசரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சாமுவேல் ஒரு வியப்பினை உருவாக்கினார். பென்யமீன் கோத்திரம் வரும்வரை ஒவ்வொரு கோத்திரத்தையும் நீக்கினார். பின்னர் கீசின் குடும்பம் வரும்வரை குடும்பங்களை விலக்கினார். ஆனாலும் சவுலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கர்த்தரிடத்தில் விசாரித்தபொழுது “அவன் தளவாடங்களிலிருக்கிற இடத்தில் ஒளித்துக்கொண்டிருக்கிறான்” (வச. 22). அதாவது, கூடிவந்திருந்த மக்களின் சாமான்களின் நடுவே இருக்கிறான் என்று பதிலளித்தார். ஏற்கனவே அவர் சாமுவேலால் அபிஷேகம் செய்யப்பட்டவர். தேவன் தன்னை அரசராகத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை நன்கு அறிந்திருந்தார். எனவே தயங்குவதற்கோ மறைந்துகொள்ளவோ எந்தவொரு காரணமும் இல்லை. இது பயத்தின் விளைவா அல்லது போலியான பணிவா? “தேவன் ஒரு மனிதனை அரசனாக அழைத்தால் அதை மறைத்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை” என்று ஜி காம்ப்பெல் மார்கன் கூறியுள்ளார்.
பொறுப்புடைமையைப் பயிற்சி செய்வ தில் தயங்கினான்:
சவுலின் வாழ்க்கையை நாம் வாசிக்கும்போது அவர் அடிக்கடி தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததையும், பாவ அறிக்கை செய்து மன்னிப்பைத் தேடுவதற்குப் பதிலாக சாக்குப்போக்குகள் சொல்வதையும் நாம் காணலாம். 1 சாமுவேல் 13ம் அதிகாரத்தில் பலிகளைச் செலுத்த சாமுவேல் வரத் தாமதமானபோது அவர் காத்திருக்காமல் பொறுமை இழந்தார். எனவே அவரே சர்வாங்க தகனபலியை செலுத்தத் துணிந்தான். ஆனால் சாமுவேல் வர தாமதமாயிற்று என்று அவரைக் குற்றம் சாட்டினான். 14ஆம் அதிகாரத்தில் தனது மூர்க்கமான ஆணையால் தனது மகன் யோனத்தான் மேல் குற்றஞ்சாட்டி அவனைத் தண்டிக்கவும் முயற்சித்தான்.
15ஆம் அதிகாரத்தில்: அமலேக்கிய அரசன் ஆகாகைக் கொலை செய்யவும், எதிரிகளின் ஆடு மாடுகளை அழிக்கவும் கட்டளையிட்ட தேவனின் சொல்லுக்குக் கீழ்ப்படியவில்லை. மாறாக ஜனங்கள் ஆடுமாடுகளில் “நலமானவைகளைத்” தப்பவைத்து அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்துப்போட்டார்கள் என்று சாக்கு சொன்னான். “ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்ப வைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் (15:15)” என்றான். தேவன் சங்கரிக்கச் சொன்னால் அதில் நலமானவைகள் என்பது எதுவும் இல்லை. இந்த சாக்கு சவுலின் ராஜாங்கத்தை இழக்கச்செய்தது. அவன் மனச்சிதைவுக்குள்ளாகி சந்தேகப் பிராணியாக மாறினான்; தாவீதுக்கு உதவின அனைவரையும் சந்தேகித்தான்; நோப் பட்டணத்து ஆசாரியன் தாவீதுக்கும் அவனுடைய மனிதருக்கும் ஆலயத்தின் பரிசுத்த அப்பங்களைக் கொடுத்ததினால் நோப் பட்டணத்து ஆசாரியர்களின் குடும்பங்கள் அனைத்தையும் கொன்றுபோட்டான் (1சாமு.21,22). சவுல் பொய்யனும் கொலைகாரனுமாகிய சாத்தானைப்போல (யோவான் 8:44) நடந்து கொண்டான்.
உண்மை நிலையை எதிர்நோக்க தயங்கினான்: (1சாமு.28:31)
சவுலுக்குக் கர்த்தரிடத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கக் கூடாது. ஏனெனில் “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்.66: 18) என்று வேதவசனம் கூறுகிறது. நம்மிடத்தில் பாவம் இருக்கிறது என்று தெரிந்தும் அதனை அங்கீகரித்து, அதை அகற்ற எந்த திட்டங்களையும் நாம் போடவில்லையானால் நமது ஜெபத்துக்கு பதில் வராது. சவுல் வேஷம் மாறி ஓர் அஞ்சன ஸ்திரீயிடம் ஆலோசனை கேட்கச் சென்றான். ஆனால் பிசாசிடமிருந்துதான் அவனுக்குரிய குறிப்பு வந்தது. சவுல் அங்கே உருமாறவில்லை; தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தினான். தனது ஆட்சி காலத்தில் ஒரு நடிகனாகவே இருந்து வந்திருந்தான். அவனது குமாரர்கள் மூவரும் மரிப்பார்கள் என்றும், மறுநாள் அவருடைய கடைசி நாளாக இருக்கும் (1 சாமு.26:19; 31:1-6) என்றும் பதில் வந்தது. இஸ்ரவேல் தோற்கும் என்றும் தான் இறந்துவிடுவேன் என்று தெரிந்தும் அவர் போருக்குத் துணிவுடன் சென்றான்.
ஒரு ராஜபரம்பரையை சவுல் உரு வாக்கவேண்டும் என்று தேவன் எண்ணவில்லை. இஸ்ரவேலின் ராஜா யூதா கோத்திரத்திலிருந்து வரவேண்டும் (ஆதி. 49:10). தாவீது ஏற்கனவே ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார். சவுலின் சோகமான வீழ்ச்சி “இதோ சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு” (வெளி 3:11) என்ற நமது ஆண்டவரின் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டுகிறது.
சவுலின் அரசவாழ்வு அவன் உயரமாக நிற்பதில் தொடங்குகிறது (1 சாமு.10:23-24), ஆனால் முடிவில் அவர் பரிதாபமாக இறந்து கிடந்தார்;. சிம்சோன், லோத்து, யூதாஸ் மற்றும் தேமா போன்றவர்களைப்போல தோல்வியையே தழுவினார்.
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1 கொரி. 10:12).
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை