புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(6) கன்னட மொழிபெயர்ப்பு
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் கன்னட மொழியில் 1809இல் புதிய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது. செரம்பூரிலிருந்த மிஷனரிகள் மொழிபெயர்த்த இப்புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதிகள் 1812இல் செரம்பூர் அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்துவிட்டன. இதன்பின்னர் அவர்கள் 1823இலேயே கன்னடமொழி புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். அதே சமயம் 1810இல், பெலாரி எனுமிடத்துக்கு மிஷனரியாக வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஜோன் ஹேன்ட்ஸ் என்பவர், 1812இல் முதல் மூன்று சுவிசேஷங்களையும் கன்னட மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1820இல் இவர் மொழி பெயர்த்த சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் கன்னட மொழியில் சென்னையில் அச்சிடப்பட்டன. 1830இல், பெலாரி மிஷன் அச்சகத்தில் இவரது கன்னட மொழி புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1831இல் இவர் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடும் கன்னட மொழியில் வெளிவந்தது.
1837இல், சுவிசேஷ புத்தகத்தையும் அப்போஸ்தலருடைய நடபடிகளையும் ஹேன்ட்ஸ் திருத்தி வெளியிட்டார். பிற்காலத்தில் ஏனைய பகுதிகளும் திருத்தப்பட்டன. 1848 இல் பேசல் எனுமிடத்திலிருந்த லூத்தரன் மிஷனைச் சேர்ந்த ஜி.எஸ்.வெய்கல் கன்னட புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்த்தார். இது 1850இல் வெளிவந்தது. 1854இல் இது மறுபடியுமாக திருத்தப்பட்டது. 1865இல் இரு ஏற்பாடுகளையும் கொண்ட திருத்தப்பட்ட கன்னட மொழி வேதாகமம் வெளிவந்தது. 1890இல் இவ்வேதாகமம் மறுபடியுமாகத் திருத்தப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. 1891இல் இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. இவர்களது பணி காரணமாகப் புதிய கன்னட மொழி புதிய ஏற்பாடு 1907இல் வெளிவந்தது. 1934இல் முழுவேதாகமத்தினதும் திருத்தப்பதிப்பு வெளியிடப்பட்டது.
(7) மராத்தி மொழிபெயர்ப்பு
இந்திய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்ட்ராவில் பேசப்படும் மராத்திமொழியில் 1807ஆம் ஆண்டு 1000 புதிய ஏற்பாடுகள் செரம்பூர் அச்சகத்தில் அச்சிடப்பட்டன. பண்டித் வைஜநாத் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்ட இம் மராத்தி மொழி புதிய ஏற்பாடு வில்லியம் கேரியினால் திருத்தப்பட்டு அச்சிடப்பட்டபோதிலும், அம்மொழிபெயர்ப்பு நாக்பூர் எனும் பிரதேசத்தில் பேசப்பட்ட மராத்தி மொழியில் இருந்தமையினால், மற்றைய பிரதேச மராத்திய மக்களுக்கு அம்மொழிபெயர்ப்பு பிரயோஜனமற்றதாகவே இருந்தது. 1807ஆம் ஆண்டு பம்பாய்க்கு வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஜோன் டெய்லர் என்பவர் 1817 இல் மத்தேயு சுவிசேஷத்தை மராத்தி மொழியில் மொழிபெயர்த்தார். இது பம்பாய் வேதாகமச்சங்கக் கிளையினால் அச்சிடப்பட்டது. அதேசமயம், அமெரிக்காவிலிருந்து பம்பாய்க்கு வந்த கோர்டன் ஹால், சாமுவேல் நியூவெல் எனுமிருவரும் மராத்தி மொழியைக் கற்றவாறே சுவிசேஷத்தை அறிவித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் செரம்பூர் அச்சகத்தினால் வெளியிடப்பட்ட மராத்தி மொழி புதிய ஏற்பாட்டையே உபயோகித்து வந்தபோதிலும், இவர்களது மராத்திய மொழியறிவு அதிகரிக்க அதிகரிக்க, அம்மொழி பெயர்ப்பு மகாராஷ்ட்ரா மக்களது மராத்திய மொழியைவிட வித்தியாசமானதாக இருப்பதை அறிந்துகொண்டனர். இதனால் இவர்கள், எபிரேய கிரேக்க மொழிகளைக் கற்கத் தொடங்கியதோடு அம்மொழிகளில் இருந்து மராத்திய மொழிக்கு வேதாகமத்தையும் மொழிபெயர்க்கத் தொடங்கினர்.
1816இல் பார்ட்வெல் என்பவரும் இவர்களுக்கு உதவியாக வந்து சேர்ந்தார். இவர்கள் புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகளையும் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தையும் மராத்திய மொழியில் மொழி பெயர்த்திருந்தனர். 1821இல் பார்ட்வெல் அமெரிக்காவுக்குத் திரும்பிச்செல்ல வேண்டியதாயிற்று. அவ் வருடம் நியூவெல் மரணமடைந்தார்.
ஒரு சில மாதங்களின் பின்னர் பம்பாய்க்கு வந்த மற்ற மிஷனரிகளும் மரித்துவிட்டனர். 1832ஆம் ஆண்டு வரை பம்பாயிலிருந்த மிஷனெரிகளுக்குப் பிறந்த 30 பிள்ளைகளில் 18 பிள்ளைகள் மரித்துள்ளனர். எனினும், இவை எஞ்சியிருந்த மிஷனெரிகளை அதைரியப்படுத்திவிடவில்லை. அவர்கள் வேதாகம மொழிபெயர்ப்பு வேலையைத் தொடர்ந்து செய்தனர். 1818இல் பம்பாய்க்கு வந்த அலன் கிரேவ்ஸ் என்பவர், இம்மொழிபெயர்ப்புப் பணியைப் பூர்த்திசெய்து மராத்திய மொழி வேதாகமத்தையும் அச்சிட்டு வெளியிட்டார். 1826இல் மராத்திய புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1830இல் கிரேவ்ஸ் இப்புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்த்தார்.
அமெரிக்க மிஷனெரிகளது மராத்திய மொழிபெயர்ப்பு திருப்திகரமற்றது என எண்ணிய சபை மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த வில்லியம் மிச்சேல் 1830இல் மத்தேயு சுவிசேஷத்தை மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1831இல் அமெரிக்க மிஷனெரிகள் மொழி பெயர்த்த மராத்திய மொழி பெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு ஒரு புதிய மொழி பெயர்ப்பு தயாரிக்கப்பட வேண்டும் என கருதப் பட்டமையினால், இதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. இவர்களது முயற்சியினால் 1847இல் திருத்தப்பட்ட மராத்திய புதிய ஏற்பாடும், 1855இல் இரு ஏற்பாடுகளையும் கொண்ட புதிய மராத்திய மொழி பெயர்ப்பு வேதாகமமும் வெளிவந்தது.
1851இல் மறுபடியுமாக புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1857 இல், திருத்தப்பட்ட இன்னுமொரு புதிய மராத்திய வேதாகமம் வெளியிடப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இதனால், பம்பாய் வேதாகமச் சங்கம் 1872இல் மறுபடியுமாக ஒரு திருத்தப்பட்ட புதிய மராத்திய வேதாகமத்தை வெளியிட்டது. 1880இல் இதை மறுபடியும் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு இன்னுமொரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் 1907இல் பழைய ஏற்பாட்டையும் 1924இல் முழு வேதாகமத்தையும் திருத்தி வெளியிட்டனர். 1953இல் மறுபடியுமாக இதைத் திருத்த இன்னுமொரு குழு நியமிக்கப்பட்டது. இவற்றைத் தவிர ராவ் பகதூர் அத்தாவேல் என்பவரினால் புதிய ஏற்பாடும், பண்டிதை ராமா பாயினால் முழுவேதாகமமும் மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
(8) குஜராத்தி மொழிபெயர்ப்பு
செரம்பூரிலிருந்த மிஷனரிகள் 1809இல் குஜராத்தி மொழியில் மத்தேயு சுவிசேஷத்தை மொழி பெயர்த்து வெளியிட்டபோதிலும், அதன் பிறகு 1813ஆம் ஆண்டு வரை அம்மொழியில் மொழிபெயர்ப்பு வேலையைச் செய்யாதமையினால் 1820ஆம் ஆண்டே அவர்கள் மொழி பெயர்த்த குஜராத்தி புதிய ஏற்பாடு வெளிவந்தது. எனினும், இம்மொழி பெயர்ப்பு குஜராத்தி மக்களால் புரிந்து கொள்ள முடியாததொன்றாய் இருந்தது. லண்டன் மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த மிஷனெரிகள் குஜராத் மாநிலத்திலுள்ள சூரட் எனுமிடத்தில் தமது ஊழியங்களை ஆரம்பித்தபோது, அவர்களால் அம்மொழிபெயர்ப்பை உபயோகிக்க முடியவில்லை.
பம்பாய்க்குச் சென்ற ஜோன் டெய்லர் குஜராத்தி மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். எனினும் அவரது மரணம், அப்பணியை மத்தேயு சுவிசேஷத்தோடு நிறுத்திவிட்டது. 1815இல் சூரட் எனுமிடத்திற்கு வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த மிஷனரிகளான வில்லியம் ஃபைவி, ஜேம்ஸ் ஸ்கின்னர் எனுமிருவரும் 1817இல் புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டில் பஞ்சாகமங்கள் வரையும் மொழிபெயர்த்திருந்தனர். இவர்கள் 1820இல், சூரட் எனுமிடத்தில் தமது சொந்த அச்சகத்தை ஏற்படுத்தி தாம் மொழி பெயர்த்த குஜராத்தி புதிய ஏற்பாட்டை 8 பகுதிகளாக வெளியிட்டனர். இவ் வெளியீட்டு வேலைகள் பூர்த்தியடையுமுன்பே 1820இல் ஜேம்ஸ் ஸ்கின்னர் மரித்துவிட்டார்.
எனினும் 1822இல் வில்லியம் ஃபைவி இன் சகோதரர் அலெக்சான்டர் அவருக்கு உதவியாக சூரட்டுக்கு வந்து சேர்ந்தார். இவர்களிருவரும் பழைய ஏற்பாட்டை 18 பகுதிகளாக குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். இதன் கடைசிப் பகுதி 1823இல் வெளிவந்தது. 1825இல் அச்சுத் தொழிலில் தேர்ச்சி பெற்ற தோமஸ் சல்மொன் என்பவரை லண்டன் மிஷனரி சங்கம் சூரட்டுக்கு அனுப்பியது. 1827இற்கும் 1829 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் முழு வேதாகமத்தையும் 4 பகுதிகளாக குஜராத்தி மொழியில் அச்சிட்டு வெளியிட்டனர். 1832 இல் இவர்கள் தமது புதிய ஏற்பாட்டைத் திருத்தி வெளியிட்டனர்.
1853இல் ஜோன் வில்சன் என்பவர், வில்லியம் ஃபைவி இன் குஜராத்தி மொழி புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழி பெயர்த்து வெளியிட்டார். 1857இல் இன்னுமொரு புதிய குஜராத்தி மொழி புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1860 இல், பழைய ஏற்பாட்டின் திருத்த மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவில் பணிபுரிந்த ஐரிஸ் பிரஸ்பிட்டேரியன் மிஷனைச் சேர்ந்தவர்களால் 1889இல் குஜராத்தி மொழி புதிய ஏற்பாடு திருத்தப்பட்டது. 1899 இல் இவர்கள் பழைய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்டனர். அவ் வாண்டு குஜராத்தி மொழியில் முழு வேதாகமமும் ஒன்றாக வெளியிடப்பட்டது. 1903இல் இவ்வேதாகமத்தின் திருத்தப்பதிப்பு வெளிவந்தது.
(9) ஒரிய மொழிபெயர்ப்பு
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் பேசப்படும் ஒரிய மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பு 1804இல் ஆரம்பமானது. வங்காள மொழியிலிருந்து ஒரிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு, வில்லியம் கேரியினாலும் அவரது உதவியாளர்களினாலும் கிரேக்க மொழி வேதாகமத்துடன் ஒப்பிட்டுத் திருத்தப்பட்டு 1809இல் வெளியிடப்பட்டது. 1815இல், பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களும் இவ்வாறு ஒரிய மொழியில் பிரசுரிக்கப்பட்டது. இதன் பின்னர் வேதாகமத்தின் சில பகுதிகள் ஒரிய மொழியில் வெளிவந்தன. 1840இல் கல்கத்தா வேதாகமக் கிளைச் சங்கம், ஒரிய மொழி புதிய ஏற்பாட்டைத் திருத்தி வெளியிட்டது. இதேவிதமாக 1844இல் ஒரிய மொழி பழைய ஏற்பாடும் திருத்தப்பட்டு 3 பகுதிகளாக வெளியிடப்பட்டது. 1862இல், கட்டக் எனுமிடத்தில் இருந்த மிஷன் அச்சகம் ஒரிய புதிய ஏற்பாட்டை மறுபடியுமாகத் திருத்தி வெளியிட்டது. 1872இல் பழைய ஏற்பாட்டின் திருத்தப்பதிப்பும் வெளிவந்தது. இத் திருத்த வேலைகள் கட்டக் எனுமிடத்தில் மிஷனரியாகப் பணியாற்றிய பக்லி மற்றும் ஜகுரூல் என்போரினால் செய்யப்பட்டதாகும்.
1902இல் பப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்தவர்களால் மறுபடி யுமாக ஒரிய மொழி வேதாகமம் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. 1941இல் மறுபடியுமாக புதிய ஏற்பாடு திருத்தப்பட்டது. 1957இல், திருத்தப்பட்ட முழுவேதாகமமும் வெளிவந்தது.
(10) அஸ்ஸாமிய மொழி பெயர்ப்பு
செரம்பூரிலிருந்த மிஷனரிகளினால் இந்தியாவின் அஸ்ஸாம் மொழியில் 1810ஆம் ஆண்டு வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், 1812ஆம் ஆண்டின் தீ விபத்தினால் அவ்வேலைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் 1819இல், புதிய ஏற்பாடும் 1832இல், முபவேதாகமமும் அஸ்ஸாம் மொழியில் வெளியிடப்பட்டது. எனினும், இம்மொழி பெயர்ப்பு அஸ்ஸாம் மக்களால் உபயோகிக்கப்படவில்லை. பிற்காலத்தில் அஸ்ஸாம் பகுதிக்கு ஊழியம் செய்யச் சென்ற அமெரிக்க பப்டிஸ்ட் மிஷனரி நேத்தன் பிரவுன் என்பவர் 1817 இல், புதிய ஏற்பாட்டை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1860ஆம் ஆண்டிலிருந்து பல மிஷனரிகள் பழைய ஏற்பாட்டின் பகுதிகளை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினர். 1903இல் கேர்னி என்பவர் அவற்றையெல்லாம் தொகுத்து, பின்னர் அவற்றைத் திருத்தி முழு பழைய ஏற்பாட்டையும் அஸ்ஸாம் மொழியில் வெளியிட்டார். வேதாகமச் சங்கமே இம்மொழிபெயர்ப்பு வெளிவர உதவி செய்தது.