ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான காரியங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். இவ்வூழியத்தை காணிக்கையாலும் ஜெபத்தினாலும் தாங்கும் அன்பர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

ஓராண்டிற்குள் வேதாகமத்தை வாசிப்பதற்கான அட்டவணைப்படி 2023ஆம் ஆண்டு வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். இவ்வாண்டிலும் இன்னும் அநேகர் வேதாகமத்தை வாசிக்க உற்சாகப்படுத்துகிறோம். சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வாரத்தில் நான்கு நாட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அநேகமாயிரமான மக்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து சத்தியங்களை கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் பயனடைந்து வருகிறார்கள். தாங்களும் குடும்பமாக நிகழ்ச்சியில் பங்கெடுங்கள். தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளே பிரசுரிக்கப்பட்டுள்ளது. சத்தியவசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து ஊழியத்தைத் தாங்க தங்களை அன்பாய் அழைக்கிறோம். YouTube சேனலில் வெளிவரும் Audio version அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களையும் குடும்பமாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். இதற்கான Link தேவைப்படுவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் ஒரு புதிய தொடராக வெளிவருகிறது. மார்ச் மாதத்தில் லெந்துநாட்களுக்கான இயேசு கிறிஸ்துவின் பாடுகளை குறித்த தியானங்களையும், ஏப்ரல் மாதத்தில் உயிர்த் தெழுந்தலைப்பற்றிய தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். தியானங்களை எழுதுகிற சகோதர சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். தியானங்கள் வாயிலாக தாங்கள் அடையும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

புத்தாண்டில் இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். 2023ஆம் வருடம் முழுவதும் தேவன் நம்மை பாதுகாத்து நம் தேவைகளை யெல்லாம் சந்தித்து வழிநடத்தினபடியால் அவருக்கு ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்போம். 2024ஆம் ஆண்டில் பிரவேசித்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் குடும்பமாக ஆசீர்வதிக்க தேவனிடம் வேண்டுதல் செய்கிறோம். இவ்வாண்டில் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடர தேவன் கிருபை செய்வாராக! இப்புதிய ஆண்டில் சத்தியவசன ஊழியப் பணிகளை தேவன்தாமே ஆசீர்வதிக்கவும் தேவைகள் அனைத்தையும் சந்திக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வூழியங்கள் வாயிலாக நற்செய்தி அறிவிக்கப்படவும் பங்காளர்கள் வேண்டுதல் செய்ய அன்போடு கேட்கிறோம்.

2024ஆம் வருட சத்திய வசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர்கள் 78ஆம் பக்கத்திலுள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும். சத்தியவசன ஊழியத்தைக் கடந்தாண்டு முழுவதும் ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம். தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணை யைப் பயன்படுத்தி 2023ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் இவ்விதழிலிருந்து ஒரு புதிய தொடராக வெளிவருகிறது. ஜனவரி மாதமும், பிப்ரவரி 20-24 வரை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ள தியானங்களும், பிப்ரவரி மாதத்தில் 1-19 தேதி வரை சகோ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்கள் எழுதிய தியானங்களும், ஏனைய தினங்களுக்கு தியானங்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபியுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் மூலமாக அநேகர் பிரயோஜனமடைந்து வருகிறதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். நீங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களுக்குத் தெரியப்படுத்த அன்பாய் கேட்கிறோம். இத்தியானங்களை தங்கள் உறவினர்கள், விசுவாச நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அவர்களது முகவரிகளை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் மாதிரிபிரதிகளை அவர்களுக்கு அனுப்பித் தருகிறோம்.

சத்தியவசன ஊழியத்தை இணைக்கரம் கொடுத்து தாங்கிவரும் பங்காளர்கள் அனைவருக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். பங்காளர்கள் அனுப்பும் அன்புகாணிக்கையினாலே தேவன் இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வருகிறார். இதுவரை விசுவாச பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் தயவுகூர்ந்து புதுப்பித்து தொடர்ந்து ஆதரிக்க அன்பாய் வேண்டுகிறோம். நீண்ட நாட்களாக சந்தாவைப் புதுப்பிக்காதவர்களுக்கு பத்திரிக்கை நிறுத்தப்படும் என்பதை வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறோம்.

இத்தியான புத்தகத்தில் ஜனவரி முதல் வெளியாகிவரும் வேதவாசிப்பு அட்ட வணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடிக்கிறவர்கள் வழக்கம் போல் பெயர்களை எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் வழங்கிய இயேசுகிறிஸ்து அருளிய உவமைகள் என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பங்காளர்களுக்கு அனுப்பிவைக்கிறோம். உங்கள் ஜெபவிண்ணப்பங்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

இவ்விதழில் நவம்பர் மாதத்தில் சகோ.தர்மகுலசிங்கம் அவர்கள் எழுதியுள்ள தியானங்களும், டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மாதத்தில் நாம் சிந்தித்து தியானிக்கவேண்டிய தியானங்களாக சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வெளிவர தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இத்தியானங்கள் வாயிலாக அநேகமாயிரமான மக்களது வாழ்க்கையிலே கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்யும்படியாக உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள்.

மணிப்பூர் மாநிலத்தின் சமாதானத்திற்காகவும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்வதற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கும் இடைவிடாது மன்றாடுவோம். அதைத் தொடர்ந்து அரியானா மாநிலத்தில் ஏற்பட்ட கலவரங்களினாலே பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் அங்கு கர்த்தர் சமாதானத்தை நிலவச்செய்யவும் மற்ற இடங்களிலும் இப்படிப்பட்ட கலவரங்கள் பரவாதபடி தேசத்தின் அமைதிக்காக சமாதானத்திற்காக தொடர்ந்து நாம் பாரத்தோடு ஜெபிப்போம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு அச்சுத்தாளின் கடுமையான விலை ஏற்றத்தினால் இருமாத வெளியீடுகளின் ஆண்டு சந்தா உயர்த்தப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் இதை கவனத்தில் கொள்ள அன்புடன் கேட்கிறோம். சத்திய வசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள். இந் நிகழ்ச்சிகளின் மூலமாக அநேகமாயிரமான ஆத்துமாக்கள் சந்திக்கப்படுவதற்கும் நிகழ்ச்சிகள் தடைகளின்றி ஒளிபரப்பு ஆவதற்கும் வேண்டிக்கொள்ளுங்கள்.

இவ்விதழில் செப்டம்பர் மாதத்தில் பல்வேறு தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். அக்டோபர் மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் எழுதிய தியானங்கள் இடம்பெற்றுள்ளன. தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நித்தமும் நம்மை வழிநடத்திச் செல்கிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். உலகில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களை நாம் பார்க்கும்போது ஆண்டவருடைய வருகை மிகமிக சமீபமாயிருப்பதை நாம் உணரமுடிகிறது. அவருடைய வருகையிலே காணப்பட எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருப்போம்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் நிலைகுலைய வைத்தது. இவ்விதமான கோர சம்பவங்கள் இனி நேரிடாதபடியும் ரயில் பயணங்கள் பாதுகாப்பாக அமைவதற்கும் ரயில் இலாகாவில் பணிபுரிகிற ஒவ்வொருவருக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிப்போம். மணிப்பூர் மாநிலத்தின் சமாதானத்திற்காக இடைவிடாது ஆண்டவருடைய சமுகத்தில் மன்றாடுவோம். கலவரத்தினாலே இடிக்கப்பட்ட ஆலயங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதற்கும், பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் சோர்ந்துபோகாமல் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கும், காடுகளில் சிதறியிருக்கிற அனைவரையும் பாதுகாத்து தேவன்தாமே அவர்களைப் போஷித்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு அச்சுத்தாளின் கடுமையான விலை ஏற்றத்தினால் இருமாத வெளியீடுகளின் ஆண்டு சந்தா உயர்த்தப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் இதை கவனத்தில் கொள்ள அன்புடன் கேட்கிறோம்.

பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் இந்த கல்வியாண்டு ஆசீர்வாதமாக இருப்பதற்கும், மேற்படிப்புக்காக கல்லூரிகளில் முயற்சி செய்யும் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பின பாடத்தைப் படிப்பதற்கு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கு கர்த்தர் கிருபை செய்யவும் ஜெபிக்கிறோம்.

இவ்விதழில் ஜூலை மாதத்தில் சகோ.தர்மகுலசிங்கம் அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். ஆகஸ்டு மாதத்தில் 1-26 நாட்களுக்கு சகோ.வஷ்னி ஏர்ன்ஸ்ட் அவர்கள் எழுதிய தியானங்களும் 27-31 ஆகிய நாட்களுக்கு சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்களும் இடம்பெற்றுள்ளன. தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

உலக இரட்சகராக இவ்வுலகில் வந்த கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மே-ஜுன் மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை வெளியிட கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். தியான புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தியானங்கள் ஒவ்வொன்றும் கடைசிகாலத்தில் வாழுகின்ற நமக்கு அதிகப் பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாதங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம். இப்புத்தகத்தை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள். தங்களது உறவினர்கள், நண்பர்கள், சகவிசுவாசிகளின் முகவரிகளை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு மாதிரி பிரதியை நாங்கள் அனுப்பிவைப்போம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு பேப்பர் தடையின்றிக் கிடைக்கவும், பிரிண்டிங்கில் உள்ள தாமதம் நீங்கவும், உரியநேரத்தில் பங்காளர்களுக்கு வெளியீடுகள் அனுப்பிவைக்கவும், தபாலில் தவறாமல் பங்காளர்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கும் பாரத்தோடு ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வெளிவருவதற்கு உள்ள பணத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபியுங்கள். தேவன் உங்களை ஏவுவாரானால் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்கவும் அன்புடன் வேண்டுகிறோம்.

பங்காளர் குடும்பத்திலுள்ள அரசுத்தேர்வு, கல்வி இறுதியாண்டு தேர்வு எழுதின எல்லாப் பிள்ளைகளது சிறந்த தேர்ச்சிக்காகவும், புதிய கல்வியாண்டை தேவன் ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிக்கிறோம்.

இவ்விதழில் மே மாதத்தில் உடைக்கப்படுதலின் அனுபவத்தைக் குறித்தும், அதனால் நாம் அடையும் ஆசீர்வாதங்களைக் குறித்தும் தியானங்கள் இடம்பெற்றுள்ளன. ஜுன் மாதத்தில் இடம்பெற்றுள்ள தியானங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது வாழ்வை நாம் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. இரு மாதங்களின் தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்