தேடினால் தென்படுவார்!

தியானம்: 2024 மார்ச் 23 சனி | வேத வாசிப்பு: 2 நாளாகமம் 15:1-19

YouTube video

நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார் (2 நாளாகமம் 15:2).

பலவித சூழ்நிலைகளிலும், “கர்த்தர் நம்மைக் கைவிட்டுவிட்டார்; எந்தவிதமான பதிலும் உத்தரவும் அவர் தரவில்லை” என்று நாம் புலம்புவதுண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. நாமேதான் பொறுமையிழந்து கர்த்தரைத் தேடாமல் வேறு வழிகளை நாடுகிறோம். தேவைக்கு மாத்திரமா கர்த்தர்? எல்லா நிலையிலும் அவரையே சார்ந்து வாழவேண்டாமா?

ஆசா ராஜாவானபோது, “தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்” என்று வாசிக்கிறோம். இதன் விபரத்தை 14:2-7வரை வாசிக்கலாம். எத்தியோப்பியர் ஆசாவுக்கு விரோதமாக வந்தபோதும், அவன் தன் சுயத்தில், தனது இராணுவபெலத்தில் இயங்காமல், “கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம். எங்களுக்குத்துணை நில்லும்” என்று ஜெபிக்கிறான். கர்த்தரும் அவனுக்கு வெற்றி கொடுத்தார். அந்த சமயத்தில் அசரியாவில் தேவஆவி இறங்கியதால், அவன் ஆசாவுடன் பேசினான். “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்” என்று கூறிய அசரியா, “உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்” என்றும் திடப்படுத்தினான். ஆசாவும் ஜனங்களும் முழுமனதுடன் கர்த்தரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப் பண்ணினார்” (2நாளா.15:15).

முப்பத்தைந்து ஆண்டுகள் நன்றாகவே சென்றது. தனது முப்பதாறாம் வருஷத்திலே இஸ்ரவேலின் ராஜா ஆசாவுக்கு எதிராக வந்தபோது, அவன் கர்த்தரைத் தேடாமல் தன் சுயபுத்தியின்படி நடந்துகொண்டான். அந்நியனாகிய சீரியா ராஜாவை உதவிக்கு நாடினான். அதிலும் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களை அனுப்பி, வேண்டுகோள் விடுத்ததுதான் வேதனைக்குரிய விஷயமாகும். அனானி என்ற ஞானதிருஷ்டிக்காரன் ஆசாவிடம் வந்து, “இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்” என்கிறான். மனந்திரும்பவேண்டிய ஆசா அவனிடம் கோபமடைந்தான். ஆசா, தனது வியாதியிலும் கர்த்தரைத் தேடவில்லை. அவன் கர்த்தரை விட்டான். அதினால் கர்த்தரால் அவனுக்கு உதவ முடியவில்லை.

பிரியமானவர்களே, இன்பமோ துன்பமோ, இன்று நாம் யாரைத் தேடுகிறோம்? யாரைச் சார்ந்து நிற்கிறோம்? கர்த்தரைத் தேடினால் நிச்சயம் அவர் நமக்கு ஏதோ ஒருவிதத்தில் தாம் நம்மோடிருப்பதை உணர்த்துவார். கர்த்தர் நம்மோடிருக்கவில்லை என்று உணர்ந்தால், அது கர்த்தரல்ல, நாமேதான் அவரை விட்டுவிட்டோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே நமது நிலையை உணர்நதவர்களாக மனந்திரும்புவோமாக.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, இதுவரை என் இக்கட்டில் நான் வெளிவரமுடியாமல் தவித்ததின் காரணத்தை எனக்குக் காட்டினீர். நான் முழுமனதுடன் உம்மையே சார்ந்து, வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

எதுவரைக்கும்?

தியானம்: 2024 மார்ச் 22 வெள்ளி | வேத வாசிப்பு: சங்கீதம் 13:1-6

YouTube video

கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்? எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? (சங்கீதம் 13:1).

சமீபத்திலே ஒரு ஆட்டோவில் செல்லுகையில், அதன் ஓட்டுனருடன் பேச்சுக் கொடுத்தேன். கொழும்புக்கு வெளியே வசிக்கின்ற, இரு பிள்ளைகளுக்குத் தந்தையான அவர், உழைப்புக்காக தினமும் கொழும்புக்கு வருவதாகக் கூறினார். ஒருநாள் தான் வேலை செய்யாவிட்டால் தனது குடும்பம் முழுவதும் அன்றைய நாளில் பட்டினிதான் என்றவர், “எதுவரைக்கும் இந்தவாழ்வு என்று தெரியவில்லை” என்று பெருமூச்சுவிட்டார். அந்தப் பெருமூச்சு அவரது கனத்த இருதயத்தை வெளிப்படுத்தியது.

தாவீதின் சங்கீதங்கள் யாவும் அவருடைய வாழ்வின் பெறுமதிமிக்க அனுபவங்களைத் தழுவியவை மாத்திரமல்லாமல், இன்று நமது வாழ்வின் அனுபவங்களையும் படம்போட்டு காட்டுவதாகவே இருக்கிறது. தாவீது, தனது மன உணர்வுகளை, தனது நினைவுகளை, ஒருபோதும் மறைத்ததில்லை. தேவ சமுகத்தில் தன் உள்ளத்தின் ஆழத்தை ஊற்றியே சங்கீதங்களைப் பாடியுள்ளார். இந்த சங்கீதங்களில் துதி ஸ்தோத்திரம், புலம்பல்கள், ஆனந்தக் களிப்புகள், முறையீடுகள் கேள்விகள் என்று எல்லாமே கலந்திருந்தாலும், அநேகமாக இறுதியில் கர்த்தரைத் துதித்தே அவருடைய சங்கீதங்கள் முடிவடையும். எந்த இக்கட்டிலும் தாவீது தேவனுக்குள் தன்னை திடப்படுத்தவும், மகிழ்ந்திருக்கவும் தவறவில்லை. தான் செய்த பாவத்தை அறிக்கையிட்டுப் பாடியபோதும், தன் உணர்வுகளை அவர் மறைக்கவில்லை.

தாவீது பாடிய 13வது சங்கீதத்தின் முதல் இரண்டு வசனங்களிலும், “எது வரைக்கும்” என்ற கேள்வி நான்கு தடவைகள் இடம்பெற்றிருப்பது, தாவீதின் மன ஆழத்தில் எவ்வளவு வேதனை புதைந்திருந்திருக்கும் என்பதை நமக்கு விளக்குகிறது. கர்த்தர் தமது முகத்தை ஒருபோதும் தமது பிள்ளைகளுக்கு மறைக்கிறவர் அல்ல; ஆனால் நமது துன்பங்கள், தேவன் நம்மை விட்டுவிட்டதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. இதைத்தான் தாவீதும் அனுபவித்தார்; “எது வரைக்கும் கர்த்தாவே, உமது முகத்தை மறைப்பீர்” என்று கதறுகிறார். சத்துருக்களால் மனமுடைந்தவராக பாடுகிறார். ஆனால் இறுதியில், தேவனுடைய கிருபையிலும் இரட்சிப்பிலும் நம்பிக்கை கொண்டவராய் “கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்” என்று தனது விசுவாச அறிக்கையுடன் முடிக்கிறார்.

தேவபிள்ளையே, நமது வாழ்விலும் எவ்வகையிலாவது நெருக்கங்கள் நேரிடும்போது, “எதுவரைக்கும் கர்த்தாவே” என்று மனமுடைந்துவிடுவதுண்டு. நமது உணர்வுகளை நாம் மறைக்க வேண்டியதில்லை. திறந்த மனதுடன் கர்த்தரிடம் வரும்போது, நெருக்கங்கள் இருக்கும்போதே கர்த்தருடைய கிருபை நம்மைத் தாங்கிக்கொள்வதை நம்மால் உணரமுடியும்; நமது இருதயம் நிச்சயம் மகிழ்ச்சியினால் நிரம்பும்.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்பதை விடுத்து, நான் என்ன செய்யவேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அதற்கு என்னை ஒப்புவிக்கிறேன். உமது கிருபையை எனக்கு அருளும். ஆமென்.

இலக்கு ஒன்றே!

தியானம்: 2024 மார்ச் 21 வியாழன் | வேத வாசிப்பு: பிலிப்பியர் 3:1-15

YouTube video

கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன் (பிலிப்பியர் 3:12).

ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற எவனும் பின்னோக்கிப் பார்க்கமாட்டான். அப்படிப் பார்த்தால் அவன் பின்தங்கிவிடுவான். பின்னாலே வந்தவன் முந்திக்கொண்டு சென்றுவிடுவான். பின்னர் அவன் அந்த இலக்கை சரியான நேரத்துக்கு அடைய முடியாமற் போய்விடும். பந்தயத்தில் தோற்றும் விடுவான், பரிசையும் இழந்து விடுவான். வாகனம் ஓட்டுனர்களைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அருகிலிருப்பவர்களுடன் பேசினாலும், அவர்களுடைய பார்வை முற்றிலும் நேராகவே இருக்கும். அந்த நேர்பார்வையைத் திருப்பிவிட்டால் வாகனம் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கமுடியாது. ஆக, நமக்கு இலக்கு அவசியம்.

பவுலுக்கு ஒரு இலக்கு இருந்தது. அவர், தான் இயேசுவால் பிடிக்கப்பட்டவர் என்பதை ஒருபோதும் அறிக்கை செய்யத் தவறுவதில்லை. அந்த இலக்குக்காக பவுல் எதையும் இழந்துவிடத் தயாராகவே இருந்தார். பவுலுக்கு இருந்த ஒரே இலக்கு, கிறிஸ்துவை அறிந்துகொள்ளவேண்டும், கிறிஸ்துவைப்போல மாறவேண்டும், தனக்காக கிறிஸ்து என்ன நினைத்திருக்கிறாரோ அதையே தானும் செய்து முடிக்கவேண்டும். இந்த இலக்கை நோக்கியே பவுல் தன் வாழ்வில் தளராது ஓடினார். தனது தலை வெட்டப்படும்வரை அவர் அந்த இலக்கைவிட்டு விலகவேயில்லை. இதுவே இன்று நமது இலக்காகவும் இருக்கவேண்டும் இந்த இலக்கிலிருந்து நம்மைத் தடுமாறவைக்கின்ற ஒன்றுண்டு; அதுதான் நமது முந்திய வாழ்வு. ஸ்தேவானின் மரணத்துக்கு சாட்சியாக நின்ற பவுல் தான் முன் செய்த எதுவும் தன்னைக் குற்றப்படுத்த இடமளிக்காமல், சகலத்தையும் பின்னே விட்டு, முன்நோக்கி ஓடினார். ஏனெனில், அவருடைய இலக்கு “இயேசுகிறிஸ்து” ஒருவரே! அவரை அடைவதற்கு அவர் தனது ஜீவனையும் இழக்கத் தயாராயிருந்தார்.

பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற பூமிக்கு வந்த இயேசுவானவர், அந்த இலக்கைவிட்டு விலகவேயில்லை. பிதாவின் சித்தத்தைச் செய்வதே தமது போஜனம் என்றுரைத்தவர், நமது பாவங்களைச் சுமந்து பாவமாக்கப்பட்டவராய் சிலுவையில் தொங்கி, பிதாவின் முகத்தைவிட்டுப் பிரிக்கப்பட்டபோதும், அவர் தமது இலக்கைவிட்டு விலகவில்லை. இன்று, இந்த இயேசுவைத் தரித்துக்கொள்ள வேண்டும், அவரையே சென்றடைய வேண்டும் என்பதைத் தவிர நமக்கு வேறென்ன இலக்கு இருக்கப்போகிறது?

தேவபிள்ளையே, நாம் இவ்வுலக வாழ்விலே இயேசுவைப் பிரதிபலிக்கிறவர்களாக ஆகாவிட்டால், அவரை எப்படி முகமுகமாய் சந்திப்போம். தம்முடன் நித்திய நித்தியமாய் நாம் வாழவேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் நம்மை இரட்சித்து, இந்த இடம்வரைக்கும் கொண்டு வந்திருக்கிறார். நமது முந்திய வாழ்வின் குற்ற உணர்வும், இந்த உலகம் காட்டும் இச்சைகளும் நமது இலக்கை விட்டு நாம் விலகக் காரணமாகிவிட இடமளிப்போமானால் நம்மைப்போல பரிதாபத்துக்குரியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

ஜெபம்: அன்பின் தேவனே, இயேசுவை நோக்கி ஓடுகின்ற இவ்வாழ்வில் நான் எதிர்நோக்கும் தடைகளைத் தாண்டி அந்த இலக்கை நான் அடைய கிருபை தாரும். ஆமென்.

என் கிருபை உனக்குப் போதும்!

தியானம்: 2024 மார்ச் 20 புதன் | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 12:1-10

YouTube video

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார் (2 கொரிந்தியர் 12:9).

ஒரு ஊழியர் இப்படியாக தனது அனுபவத்தைக் கூறினார். அவர் பிரசங்கிக்க வேண்டியநேரம் நெருங்கவும், அவரது தொண்டை நோவெடுத்து அடைபட்டது போல உணரவும் சரியாயிருந்தது. கர்த்தரை நோக்கி ஜெபித்தும், எந்த மாற்றமும் இல்லை. நேரமும் வந்தது, கரகரத்த தொண்டையுடன் பிரசங்க மேடை ஏறினார். ஆனால் அவர், தன் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தது முதற்கொண்டு, பிரசங்கத்தை முடிக்கும்வரைக்கும் எவ்வித தடங்கலும் நேரிடவில்லை. இறுதியாக, “என் பெலவீனத்திலே கர்த்தருடைய கிருபை என்னைத் தாங்கியதை நான் அதிகமாக உணர்ந்து அனுபவித்தேன்” என்றார் அவர்.

“கிருபை” – பெறுமதிப்பு வாய்ந்ததும் வலிமைமிக்கதுமான இந்த சொல்லை மிக அலட்சியமாகவே இன்று கிறிஸ்தவர்கள் உபயோகிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அபாத்திரரான நமக்குக் கிடைக்கும் தேவதயவுதான் கிருபை! ஆனால், இது எங்கிருந்து எப்படி நமக்குக் கிடைக்கிறது? “எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,..” (தீத்து 2:11). ஆக, இது புதிதானது அல்ல; ஆதியிலே இருந்தது, இயேசுகிறிஸ்துவுடன் கூடவே நமக்குள் பிரசன்னமானது. ஆதியிலே இருந்த வார்த்தை கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள் வந்து வாசம்பண்ணினாரே! (யோவா.1:14) இந்தக் கிருபை நமது வாழ்வில் செய்வது என்ன? “அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத் துக்கும், மகாதேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது” (தீத்து 2:12,13). இதுதான் கிருபை!

தேவபிள்ளையே, நாம் கர்த்தரைச் சார்ந்திருக்கும்போது அவருடைய கிருபை எல்லா நிலையிலும் நம்மைத் தாங்கும். இயேசுவைச் சந்திக்க நம்மை ஆயத்தப் படுத்துகின்ற தேவகிருபை, நமது பலவீனங்களில் நம்மைத் தோற்றுப்போக விடுமா? மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்ட அனுபவம்மிக்க பவுல், அதைக் குறித்து தன்னை உயர்த்தாதபடிக்கு அவருடைய மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டது என்கிறார். அவர் மூன்றுதரம் ஜெபித்தும் அது நீங்கவில்லை. அதற்காக கர்த்தர் பவுலைக் கைவிட்டாரா? அந்த நிலையில் தான் கர்த்தருடைய கிருபை அவரில் பெருகியது. “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று சொன்ன கர்த்தரின் கிருபையைவிட நமக்கென்னதான் வேண்டும். நமது பலவீனம் பெருகும்போது, அங்கேதான் கர்த்தருடைய வல்லமையும் நம்மில் அதிகமாக விளங்குகிறது. எனவே, நமது பெலவீனங்களின் மத்தியில் நாம் சோர்ந்துபோகாமல் அவர் கிருபையை பெற்றுககொள்வோம். அதுவே நமக்கு போதுமானது!

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எத்தனை தரம் ஜெபித்தும் பலன் இல்லையே என்று சோர்ந்துபோன எனக்கு உமது விலையேறப்பெற்ற கிருபை போதுமானதாக இருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். அதை எனக்குத் தந்தருளும். ஆமென்.

விசுவாசத்தை விட்டுவிடாதே!

தியானம்: 2024 மார்ச் 19 செவ்வாய் | வேத வாசிப்பு: லூக்கா 18:1-8

YouTube video

ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார் (லூக்கா 18:8).

“என் மனைவி சுகமடையவேண்டும், மனஅமைதி பெறவேண்டும்” என்று பல நாட்களாக ஜெபித்து வருகிறேன். இன்னமும் பதில் இல்லை. ஆனாலும், நான் என் விசுவாசத்தில் தளர்ந்துவிடவில்லை. சரியான தருணத்தில் அவள் கர்த்தரை ஏற்றுக்கொண்டு புதிய வாழ்வு வாழுவாள், அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்” என்று ஒரு அன்பான கணவர் தனது ஜெபவாழ்வைக் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

தேவபயமற்ற, மனுஷரை மதிக்காத ஒரு நியாயாதிபதி இருந்த அதே பட்டணத்தில் ஒரு விதவைத் தாய்க்கு ஒரு மனிதனுடன் ஒரு பிரச்சனை இருந்தது. தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று அந்த நியாயாதிபதியிடம் முறையிடுகிறாள். விதவைகள் கவனிக்கப்படவேண்டும் என்பது பழைய ஏற்பாட்டுச் சட்டம் மாத்திரமல்ல, புதிய ஏற்பாட்டிலும் அச்சட்டம் இருந்தது. இந்த நியாயாதிபதிக்கோ அந்த விதவைக்கு நீதி செய்ய மனதில்லாதிருந்தது. அதற்காக அந்த விதவை ஓயவில்லை. தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தாள். கடைசியில் அந்த நியாயாதிபதி சொன்னதைக் கவனிப்போம். “இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்ய வேண்டும்” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். அவன் அவளுக்கு இரங்கவில்லை; பதிலுக்கு, அவளுடைய தொந்தரவை நிறுத்த எண்ணினான். அதற்காகவாவது நியாயஞ் செய்ய நினைத்தான்.

ஒரு அநீதியுள்ள நியாயாதிபதி, ஒரு விதவை தனக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த காரணத்தினாலே அவளுக்குப் பதிலளிக்க முற்பட்டானென்றால், மகா உன்னதமானவரும், நம்மில் அளவற்ற அன்புகூர்ந்திருக்கிறவருமான தேவன் நமது ஜெபங்களைப் புறக்கணிப்பாரா? அவர் நம்மில் நீடிய பொறுமையும் அன்புமுள்ள தேவன் என்பதை ஒருவன் உணருவானானால், நமது ஜெபங்களை நமது கூக்குரலை அவர் கேட்கிறார் என்றும், நமது கண்ணீரை அவர் காண்கிறார் என்றும் நிச்சயம் நம்புவான்; அவர் நிச்சயம் நியாயம் செய்வார் என்று விசுவாசத் துடன் காத்திருப்பான்.

அன்பானவர்களே, நமது ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கவில்லையென்று நாம் சோர்ந்துபோவதற்கு முக்கியமான காரணம் விசுவாசக் குறைவுதான் என்றால் மிகையாகாது. நமக்குள் விசுவாசம் வேர்விட்டிருக்குமானால் நாம் அசைக்கப்படமாட்டோம். நாம் விசுவாசத்தை இழந்து போவதினாலேயே நமக்குள் சோர்வு வருகிறது. “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ” என்று இயேசு ஒரு கேள்வியை முன்வைத்தார். ஆகவே, நமது விசுவாசம் எப்படிப் பட்டதென்று நம்மைநாமே நிதானித்துப் பார்ப்போமானால் நலமாயிருக்கும். தேவஅன்பை உணருவோமானால், அவரை விசுவாசித்து, அவரது வேளைக்குக் காத்திருப்பது நமக்குக் கடினமாயிராது.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, என் ஜெபங்களுக்கு தடையாக இருக்கிற விசுவாசக் குறைவை என்னைவிட்டு அகற்றும். நான் விசுவாசத்தில் வளர கிருபை தாரும். ஆமென்.

உலகத்தில் அன்புகூராதிருங்கள்!

தியானம்: 2024 மார்ச் 18 திங்கள் | வேத வாசிப்பு: 1யோவான் 2:15-17

YouTube video

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை (1யோவான் 2:15).

உப்புச்செறிவு மிக்க கடல் நீரில் வாழுகின்ற மீனைப் பிடித்து சமைக்கும் போதும் உப்பு போடுவது ஏன்? எவ்வளவுதான் கடல் நீரில் உப்பு செறிந்திருந்தாலும் அதில் வாழுகின்ற மீனில் உப்பு ஒட்டிக்கொள்ளாது. தாமரையானது குளத்தில் வளருகின்ற தாவரமாகும். சேற்றுத் தண்ணீரோ குளத்துத் தண்ணீரோ எதில் அது வளர்ந்தாலும் இலையில் தண்ணீர் ஒட்டாது. இதுதான் உலகத்தில் வாழ்ந்தாலும் உலகத்துடன் ஒட்டாத ஓர் வாழ்வாகும்.

உலகத்தையும், உலகத்தில் உள்ளவைகளையும் பொறுத்தளவில், நாம் பழகுகிற மக்கள், போகின்ற இடங்கள், விரும்பிச் செய்யும் செயல்கள் என்று நமது வெளிப்புற வாழ்வுடன் உலகம் சம்மந்தப்பட்டது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், உலகத்துக்குரிய வாழ்வு என்பது நமது உள்ளான வாழ்வுடன் சம்மந்தப்பட்டது; அது இருதயத்தில்தான் உற்பத்தியாகிறது. மாத்திரமல்ல, இது மனிதனுக்கு எதிராக மும்முனைத்தாக்குதலை நடத்துகிறது.

ஒன்று, மாம்சத்தின் இச்சை. அதாவது, சரீர சம்பந்தமான சிற்றின்பங்கள் நிறைந்த பாவ மனித ஆசைகள். இரண்டாவது, கண்களின் இச்சை. அதாவது, பொருளாசை தொடங்கி சகல ஆசைகளையும் ஒன்றிணைத்த ஆசைகள். மூன்றாவது, ஜீவனத்தின் பெருமை. அதாவது, தன்னிடமுள்ளதைக் குறித்தோ தகுதி தராதரத்தைக் குறித்தோ பெருமையாக பேசுதல். அன்று சர்ப்பம் இந்த மூன்று பகுதிகளில்தான் ஏவாளை வஞ்சித்து பாவத்தில் வீழ்த்தியது. வனாந்தரத்தில் இயேசுவைச் சோதித்த சாத்தானும், இந்த மூன்று பகுதிகளில்தான் தன் தாக்குதலை நடத்தினான். ஒரு மனித வாழ்வில் அவன் செய்யக்கூடிய அனைத்துப் பாவங்களையும் இந்த மூன்று வரையறைக்குள் வைத்து நாம் சிந்திக்கலாம்.

இந்த மூன்று பகுதிகளுக்குப் பதிலாக தேவனது பெறுமதிகள் முற்றிலும் மாறுபட்டவை. சுயகட்டுப்பாடு, கருணையுள்ள உள்ளம், தாழ்மையுள்ள சேவைக்கு அர்ப்பணித்தல் ஆகிய மூன்றும் இயேசுவில் வெளிப்பட்டதைக் காண்கிறோம். ஒருவனால் உலக ஆசை இச்சைகளை வெறுப்பதுபோல காட்டிக்கொண்டு, தன் இருதயத்திலே உலகத்தைச் சுமந்துகொண்டிருக்கவும் முடியும். அதேசமயம், இயேசுவைப்போல பாவிகளை நேசித்து, அவர்களுடன் நேரம் செலவு செய்தாலும், அதேசமயம் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்த விஷயங்களில் உறுதியாயிருக்கவும் முடியும்.

பிரியமானவர்களே, உலகத்தின் காரியங்கள் தேவனால் உண்டானவைகள் அல்ல. முதலில் இன்பமாய் தோன்றும் இவைகள் பின்னர் ஒழிந்துபோவது உறுதி. உலகத்திற்கு இசைந்துகொடுக்காமல் வெற்றி வாழ்வு வாழவேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, தேவசித்தத்தின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்பதேயாகும். உலக பெறுமதிப்பா? தேவனுடைய பெறுமதிப்பா? உலகம் காட்டும் சிற்றின்ப வழியா? கடின பாதையானாலும் தேவசித்தமா? நமது தெரிந்தெடுப்புதான் நமது முடிவாகும்.

ஜெபம்: அன்பின் தேவனே, உலகம் தரும் இச்சைகளைப் பகுத்தறிந்து விலக்கி, தேவனுடைய ராஜ்யத்துக்கு அடுத்தவைகளை நாட எனக்கு உதவியருளும். ஆமென்.