வாக்குத்தத்தம்: 2018 மே 31 வியாழன்

ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். (யோவா.9:31)
வேதவாசிப்பு: 2இராஜாக்கள்.11,12 | யோவான் 9:21-41

ஜெபக்குறிப்பு: 2018 மே 31 வியாழன்

“தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது … நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (கொலோசெயர்3:15) என்ற இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் உலகம் கொடுக்கக்கூடாததும் எடுக்கக்கூடாததுமான தேவசமாதானம் நம்முடைய இருதயத்தை நிரப்பினபடியால், முழு உள்ளத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவருக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.

நாம் விசேஷித்தவர்கள்!

தியானம்: 2018 மே 31 வியாழன்; வேத வாசிப்பு: மத்தேயு 6:25-32

“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள். …அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா” (மத்தேயு 6:26).

எதை உண்பது, எதைக் குடிப்பது, எப்படி உடுப்பது என்ற கவலையே இன்று அநேகருடைய வாழ்க்கையை சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது. அடுத்தவேளை என்னசெய்வதென்ற கவலை சிலருக்கு; அதிகம் கிடைப்பதினால் அதை எப்படி செலவு செய்வதென்ற கவலை இன்னும் சிலருக்கு. ஆனால், இவற்றைக்கொண்டு நமது விசேஷத்தைக் கணக்கிட ஆண்டவர் வரவில்லை. மாறாக, நாம் விசேஷமாக இருப்பதினாலேயே கவலைகளை விட்டுவிடும்படி கூறுகிறார். நமது வாழ்வு தேவன் கொடுத்தது. அவர் தம்மையே நமக்காகக் கொடுத்திருக்கிறார். இன்னும் நமக்காக யாவையும் செய்துமுடித்த அவர் நித்தியத்திலும் நமக்காக யாவையும் ஆயத்தப்படுத்தியும் வைத்திருக்கிறார். இப்போது சொல்லுங்கள், நாம் விசேஷித்தவர்களா இல்லையா?

தேவன் வானம், பூமி, அண்டசராசரங்கள் யாவற்றையும் சிருஷ்டித்த பின்னரே மனிதனைச் சிருஷ்டித்தார், அவனை விசேஷமானவனாக சிருஷ்டித்தார். அவனுக்குத் தமது ஜீவ சுவாசத்தை ஊதினார். அவரது ஜீவ சுவாசத்தை பெற்ற நாமே விசேஷித்தவர்கள். தேவன் படைத்த ஏராளமான ஜீவராசிகள் உள்ளபோதிலும், அவரை நோக்கிப் பார்க்கும் மனுஷரையே அவர் விசேஷித்தவர்களாகக் காண்கிறார். மனுஷன் பாவத்தில் விழுந்தபோதும், அவனை மீட்கும் படி தாமே உலகிற்கு வந்தார். நாம் விசேஷித்தவர்களா இல்லையா?

ஆகாரமும், உடையும் நமக்கு அவசியம்தான். ஆனாலும், மண்ணினாலே நாம் உருவாக்கப்பட்டாலும், தாம் வாழுவதற்கென்று இன்று நமது சரீரத்தை தமது ஆலயமாக்கி அதைத் தமதாக்கிக்கொண்டாரே தேவன், அதைக்குறித்து சிந்திக்கிறோமா! இந்த தேவன், தாம் வாசம்பண்ணும் நமது சரீரத்தை உடுத்து வியாமல் விடுவாரா? ஆகாயத்துப் பறவைகளையும் பிழைப்பூட்டுகிற தேவன், இத்தனை விசேஷமிக்க தமது பிள்ளைகளாகிய நம்முடைய தேவைகளைச் சந்திக்காமல் விடுவாரா? நமது தேவை என்னவென்பதை நம்மைப்பார்க்கிலும், அவர் அதிகமாக அறிந்திருக்கிறார். இன்று உடை இல்லை என்ற கவலையை விட எந்த உடையை உடுத்துவது என்ற கவலைதான் அதிகம். இது ஆபத்திலே கொண்டுபோய் விட்டுவிடும். ஆகவே, உணவையும், உடையையும் பார்த்து, ஜீவனையும் சரீரத்தையும் பராமரிக்க வல்லவரான கர்த்தரை மறந்துவிடாதிருப்போமாக. நாம் விசேஷித்தவர்கள் ஆனபடியினால் ஒன்றுக்கும் கவலைப்படாமல் அவரில் மட்டும் என்றும் சார்ந்திருப்போமாக.

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்.6:33).

ஜெபம்: ஆண்டவரே, இந்த நாளிலும் உணவுக்காக உடைக்காகவே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதபடி, நீர் எங்களை விசேஷித்தவர்களாக வைத்திருப்பதை எண்ணி  உமக்கு நன்றிபலிகளை ஏறெடுக்கிறோம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2018 மே 30 புதன்

“.. மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்..” (எபேசி.4:14) இவ்வாக்குப்படி இந்நாளில் பலவித கள்ள உபதேசமும் தந்திரமுமான போதகங்களை பகுத்தறிய வேண்டிய ஞானத்தை கர்த்தர் ஒவ்வொருவருக்கும் தரவும் அவர்கள் வேதத்தின் மகத்துவங்களை புரிந்துகொள்வதற்கும் ஜெபிப்போம்.

இன்றைக்கே…

தியானம்: 2018 மே 30 புதன்; வேத வாசிப்பு: யோவான் 3:17-21

“சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்… வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்” (யோவான் 3:21).

பர்மா தேசத்தில் ஊழியம் செய்த அதோனிராம் ஜட்சன் அவர்கள், “நான் கடவுளுக்குச் சொந்தம். அவருடைய பார்வையில் நலமானதைச் செய்ய அவருக்கு உரிமையுண்டு. என் இதயம் அவர் கையில் இருக்கிறது. நான் துயரத்தை அனுபவிக்க நேரும்போதும், சோகம் என்னை அயர்வுறச் செய்யும்போதும் அவரது கரம் என்னைத் தேற்றும்! எல்லாவற்றையும் இனி அவரிடமே ஒப்புவித்துவிட்டேன். இவ்வுலக இன்பத்தைவிட்டு துன்பம் நிறைந்த வாழ்க்கை நடத்துவது கடவுளது சித்தமானால் நான் அவ் வாழ்க்கையையே நடத்துவேன்” என்று அவர் திருமணம் முடிக்கும் முன்னர் தன் தினக்குறிப்பில் எழுதிவைத்திருந்தாராம்.

ஆண்டவருக்காக சாதிக்கவேண்டுமானால், அவரது சித்தப்படியே நமது வாழ்க் கையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இன்பமோ, துன்பமோ, பாடுகளோ, உபத்திரவமோ, எவ்விதமான சூழ்நிலையிலும் தேவனுக்காக வாழமுற்பட வேண்டும். சில வேளைகளில் இழப்பைச் சந்திக்க வேண்டியுமிருக்கும். தானியேலும் நண்பர்களும் மற்றவர்களைப்பார்க்கிலும் பத்து மடங்கு (தானி.1:20) சமர்த்தராகக் காணப்பட்டதன் இரகசியம் என்ன? அவர்கள் தேவனின் நிமித்தம் உணவினால் தம்மை அசுத்தப்படுத்திக்கொள்ளாமல் காத்துக்கொண்டு, சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தேவனுக்கென்று ஒப்புவித்ததேயாகும். இவ்விஷயம் அன்று பிரதானிகளின் தலைவனுக்கோ, நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கோ தெரியாது. ஆனால் தேவனுக்காக இவர்கள் கொண்டிருந்த வைராக்கியம் தேவனுக்கு வெளிச்சமாயிருந்தது. ஆகவே, அவர்கள் எல்லோரும் அதிசயிக்கத்தக்க சமர்த்தர்களாகக் காணப்பட்டார்கள். அவர்கள் சிங்கக்குகைக்கும் அக்கினிச் சூளைக்கும் பயப்படவில்லை. தேவன் அவர்களைக் காத்தார். நடுநடுங்கியது ராஜாதான்.

கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டும் இருளுக்குள் வாழுகிறோமா என்று நம்மை ஆராய்ந்து பார்ப்போமாக. போலியான காரியங்களை வெறுத்துவிடுவோம். பொல்லாப்புச் செய்கிறவன் கிறிஸ்துவினிடத்தில் வரான். ஆனால், நம்மில் பலர் பொல்லாப்புக்குள் இருந்தும், கிறிஸ்துவின் பிள்ளைகள் என்று பயமின்றி சொல்லுகிறோம். சத்தியத்திற்காக வாழுவதும், சுயத்தை வெறுப்பதும், தேவை ஏற்பட்டால் சத்தியத்தினிமித்தம் ஜீவனைக் கொடுப்பதும் தேவனை மகிமைப்படுத்தும். அன்று தானியேலுடைய, நண்பர்களு டைய வாழ்வில் தேவன் மகிமைப்பட்டார்! ஆகவே, நாமும் தேவகரத்தில் அவருடைய சித்தத்திற்குள் நம்மை ஒப்புவிப்போமாக.

“அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான். அவனுக்குள் சத்தியமில்லை” (1யோவான் 2:4).

ஜெபம்: அன்பின் பிதாவே, கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இன்னமும் இருளிலே நடவாமல், ஒளியிலே நடந்து சத்தியத்தின்படி வாழ உமதாவியின் வல்லமையால் எங்களை நிரப்பும். ஆமென்.