ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 31 செவ்வாய்

இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார் (வெளி.21:5) சர்வஞானமுள்ள தேவன் இதுவரைக்கும் உதவி செய்தார். புதிய வருடத்தையும் ஆசீர்வதிப்பார். இந்தநாளின் அனைத்து உலக திருச்சபைகளுக்காக, நடைபெற உள்ள புதுவருட ஆராதனைகளுக்காக தேவபிரசன்னம் அளவில்லாமல் நிரம்ப ஜெபிப்போம்.

இயேசுவின் பின்னே…

தியானம்: 2019 டிசம்பர் 31 செவ்வாய் | வேத வாசிப்பு: லூக்கா 9:23-26

“..ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக்கா 9:23).

வருடத்தின் இறுதிநாளுக்குள் வந்துவிட்டோம். சற்று கண்களை மூடித் திரும்பிப் பார்ப்போமா? தலைநிமிர்ந்து நின்ற வேளைகள், தடுமாறி நிலை குலைந்த சந்தர்ப்பங்கள்; வெற்றிகள், தோல்விகள் என்று எத்தனை! தீர்க்கப்படாத பிரச்சனைகளும், பதிலில்லாத கேள்விகளும் இன்றும் இருக்கலாம். முதலில் இவை யாவும் இயல்பானவை பொதுவானவை என்பதை நாம் ஏற்கவேண்டும். அப்போது அரைவாசிப் பாரம் இறங்கிவிடும். அடுத்தது, இதுவரை நாம் எவரை, எவருடைய ஆலோசனைகளைப் பின்பற்றினோம் என்பதுவும் மிக முக்கியமான விஷயமாகும். அதையும் சிந்திப்போம்.

இயேசுவிடம் எதையாவது பெற்றுக்கொள்ளலாமோ என்று ஒரு கூட்டமும், அவரில் குற்றம்பிடிக்கும் நோக்குடன் இன்னொரு கூட்டமும் அன்று இயேசுவைப் பின் பற்றிச் சென்றது. இயேசு பிடிக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, சிலுவை சுமந்து சென்ற போதும் ஒரு கூட்டம் சென்றது. ஆனால், அவரிடம் நன்மை பெற்றவர்கள் அக்கூட்டத்தில் இருந்தார்களோ, இல்லையோ நாம் அறியோம். ஆனால் இருந்தவர்களில் சிலர் துக்கத்தோடு சென்றாலும், அதிகமானோர் அவரை இகழ்ந்தும், நடப்பதைப் பார்க்கவுமே சென்றனர். அவரது சீஷர்களில் யோவானைத் தவிர எவரும் அங்கிருக்கவில்லை. செழிப்பாயிருக்கின்ற ஒருவரைப் பின்பற்றிவர அநேகர் இருப்பார்கள். ஆனால் பாடுகளின் மத்தியில், சோர்வுகளின் மத்தியில் இருப்போரைப் பின்பற்ற யாரும் இருக்கமாட்டார்கள். காரணம், பாடுகள்பட, துன்பங்களுக்கூடாக கடந்துசெல்ல யாருக்கும் விருப்பம் கிடையாது. ஆனால் ஆண்டவராகிய இயேசுவோ நமக்கு செழிப்பான ஒரு வழியைக் காட்டவில்லை. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று நமக்குத் தைரியம் தந்து தாங்குகிறவராக இருக்கிறார்.

ஆகவே, அன்பானவர்களே, ஆண்டவரின் அழைப்பின்படி, நமது சிலுவையைச் சுமந்துகொண்டு வருகின்ற புத்தாண்டுக்குள் பிரவேசிக்க நாம் ஆயத்தமாகுவோம். சிலுவை சுமக்கும் பாதை இலேசானதல்ல; ஆனால், அழைக்கிறவர் யார் என்பதை நாம் அறிவோம். கடந்துபோன வருடங்களில், ஆண்டவரைப் பின்பற்றுவதாகத் தீர்மானித்து தோற்றுப் போயிருக்கலாம். பரவாயில்லை, மறுபடியும் எழும்புவோம். சிலுவை சுமந்த ஆண்டவர் சென்ற வழியில் நம் சிலுவையைச் சுமந்துசெல்ல நம்மை ஒப்புக்கொடுப்போம். கர்த்தர் நமது வாழ்வில் பெரிய காரியம் செய்வார்.

“என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்” (மத்தேயு 4:19).

ஜெபம்: அன்பின் தேவனே, இந்த வருடத்தில் நான் எடுக்கும் தீர்மானத்திலே தோற்று போகாதபடிக்கு இறுதிவரையிலும் அதிலே உறுதியாய் நின்று உம்மை பின்பற்றவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 30 திங்கள்

… இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார் (1யோவா.2:1) நம் ஒவ்வொருவருக்காகவும் பரிந்துபேசி நம்மை நடத்தி வந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதோடு நின்றுவிடாமல், கிறிஸ்துவின் நாமத்தை பிறருக்கு அறிவிப்பதில் நமது பங்கை நிறைவேற்றுவதற்கு நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.

நன்றி மறவாதே!

தியானம்: 2019 டிசம்பர் 30 திங்கள் | வேத வாசிப்பு: சங்கீதம் 103:1-5

“என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” (சங்.103:2).

ஒரு வயோதிப தம்பதியினர் தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து, அதில் வெள்ளைத் தாள்களைச் சிறு சிறு சுருள்களாகச் சுற்றிக் கட்டித் தொங்க விட்டிருந்தனர். அது என்னவென்று கேட்டபோது, “இந்த வருடம் முழுவதும் ஆண்டவர் செய்த ஒவ்வொரு நன்மைகளையும் நன்றியுள்ள மனதோடு இதில் எழுதித் தொங்கவிட்டிருக்கிறோம்” என்றனர்.

சங்கீதம் 103 நமக்கு மிகவும் பழக்கமாகிவிட்ட ஒரு சங்கீதம். அதனால் அதற்குள் பொதிந்துள்ள ஆழமான அர்த்தங்களை நாம் சிந்திப்பதும் குறைந்துவிட்டது. ‘முழு உள்ளமே’ என்னும்போது நமது முழுமையும், ஆவி ஆத்துமா சரீரம் முழுமையும் கர்த்தரை ஸ்தோத்திரிக்கட்டும் என்று தாவீது உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடியுள்ளார். ‘அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே’ என்னும்போது, அந்த ‘சகல’ என்ற சொல்லின் ஆழம் நமக்குப் புரிகிறதா? பலவேளைகளிலும் நம் வாழ்வில் ஆண்டவர் செய்த நன்மைகளையும், அவரது உன்னதமான வழிநடத்துதலையும் மறந்துவிடுகிறோம் என்பதை நம்மால் ஒத்துக்கொள்ள முடியுமா? அதனால்தான் நம் வாழ்வில் அடிக்கடி சோர்வு, முறுமுறுப்பு, பதட்டம் என்பவற்றுக்கு ஆளாகிறோம். இது ஏன்? இதுவரை ஆண்டவர் நம்மை நடத்திய அற்புதமான வழிகளை மறவாமல் அவற்றை சிந்தித்து, எப்போதும் அவருக்கு நன்றி கூறுவோமானால், தொடர்ந்தும் அவர் நம்மை நடத்துவார் என்ற நம்பிக்கை வருமல்லவா! அதைவிட்டு, இந்த உன்னதமான சங்கீதத்தின் அர்த்தத்தை உணராமல், ஆராதனை முடிவுக்கும், ஜெபத்தின் முடிவுக்குமான வார்த்தையாகப் உபயோகித்து அதைத் தியானிப்பதையே விட்டுவிட்டோம் எனலாம்.

இந்த வருடத்தில் எத்தனையோ நன்மைகளையும், தீமைபோல நமக்கு தெரிந்தவைகளுக்கூடாக ஆசீர்வாதங்களையும் நாம் கண்டு, கடந்து வந்திருக்கிறோம். நமது உள்ளம் நன்றியால் நிரம்பட்டும். ஒருநாளை முடிக்கும்போது அந்நாளில் தேவன் நம்முடன் இருந்ததற்கு நன்றிகூறி, மறுநாள் கண் விழிக்கும்போது, அந்நாளைக் காணத் தந்ததற்கும் ஆண்டவருக்கு நன்றி கூறுவோமாக. வருடத்தின் இறுதியில் வந்து நிற்கிறோம். இந்த வருடம் முழுவதும் நம்மோடு கூடவேயிருந்து வழிநடத்தி வந்த ஆண்டவரை நன்றியுடன் துதிப்போம். மீண்டும் ஒரு புதிய வருடத்துக்குள் நம்மை வழிநடத்திச் செல்ல வல்லவர் கரத்தில் நன்றியுடன் நம்மை அர்ப்பணிப்போமாக.

“தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள், நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (கொலோசெயர் 3:15).

ஜெபம்: துதிக்குப் பாத்திரரே, இந்த ஆண்டு நீர் எங்களுக்கு செய்த சகல உபகாரங்களை யும் மறவாமல் நினைவுகூர்ந்து உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்.