ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 31 வெள்ளி

எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு (செப்பனியா 3:14) இம்மாதத்தில் தேவன் அருளிச்செய்த சொல்லிமுடியாத நன்மைகளுக்காக, அவருடைய செட்டைகளின் கீழ் கிடைத்த அடைக்கலத்திற்காக, பாதுகாப்பிற்காக, கொடுத்த பதில்களுக்காக முழு இருதயத்தோடு அவரை ஸ்தோத்திரிப்போம்.

தேவனோடு நடத்தல்

தியானம்: 2020 ஜனவரி 31 வெள்ளி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 5:18-24

“ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்” (ஆதியாகமம் 5:24).

இறையியல் கல்லூரி விரிவுரையாளர் ஒருவரின் 75 வயது நிரம்பிய மனைவி மிகவும் சுறுசுறுப்பானவர். கல்லூரிக்கு யாராவது புதிதாக வந்தால் அவர்களை முதலில் வரவேற்பவர் இவர்தான். இவருடைய சுக பெலத்தின் காரணத்தைக் கேட்டபோது, ‘மழையோ வெயிலோ ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட தூரம் அதிகாலையில் நடப்பேன். இந்த வயதிலும் என் சுறுசுறுப்பின் இரகசியம் இதுதான்” என்றார்.

தேவனோடு நடத்தலும் இவ்விதமான அர்ப்பணிப்போடு கிரமமாகச் செய்யப்படவேண்டிய ஒன்றாகும். நாம் அவரோடு எப்போதும் நடந்தால் நமது வாழ்வின் முடிவும் சரியாக முடியும். பலவிதமான குறுக்குப் பாதைகளும், விசாலமான பாதைகளும் தாராளமாகவே திறந்து கிடக்கின்ற இக்காலத்தில், நாம் சரியான பாதையைத் தெரிவுசெய்து நடக்க தேவனின் கரம்பற்றி அவரோடு நடப்பதே ஞானமான செயலாகும். ‘என் கரம் உம் கையைப் பிடித்து சென்றால் தவறிவிடுவேனே; ஆனால் உம் கரம் என் கையை பிடித்து சென் றால் ஒருக்காலும் தவறிடேனே’ இந்தப் பாடல் வரிகள் ஞாபகமா!

ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போது காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். அதேபோல் தேவனோடு நாமும் நடந்தால் தேவனோடு நாமும் சேருவோம். தேவனோடு நடக்கும் பாதை கடினமாய்த் தோன்றினாலும், அதிலும்; தேவனும் நம்மோடு வருகிறார். என்ற சிந்தனையே நமக்குப் பெலன் தரும். மாறாக, பாதை கடினம் என்றெண்ணி, பக்கப் பாதையில் இறங்கினால், அது இலகுவாய் தெரிந்தாலும், நாம் தேவனைவிட்டுப் பிரிந்துவிட்டோம் என்பதுதான் உண்மை.

நாளை அழிந்துபோகின்ற இந்த சரீரம் சுகமாயிருக்க பல முயற்சிகளைக் கிரமமாக முன்னெடுக்கின்ற நாம், நித்திய தேவனோடு நித்திய வாழ்வில் பிரவேசிக்கும்படி, இந்த உலக வாழ்விலே அவரோடு சேர்ந்து நடக்க என்ன முயற்சி எடுக்கிறோம்? பாதை கடினமாயினும் தேவன் நம்முடன் வரும்போது வேறென்ன வேண்டும்? ‘பின்தொடர்ந்த காலடிகள்’ என்ற பிரபல்யமான வாசகத்தில், இரண்டு காலடிகள், ஒரு காலடியாக மாறியதன் அர்த்தம், தேவன் கைவிட்டார் என்பது அல்ல; அவர் நம்மைத் தூக்கி சுமந்து சென்ற அவருடைய காலடியே அந்த ஒன்றைக் காலடியாகும். இன்று நாம் என்ன சொல்லுவோம்?

“என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது” (சங்கீதம் 94:18).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நீரே என் கரங்களைப் பற்றிக்கொள்ளும். உம்மோடு நடந்து செல்லும்போது பாதை கடினமாயினும் என்னைத் தூக்கி சுமந்து பாதுகாக்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 30 வியாழன்

தேவனே என்னை ஆராய்ந்து … என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் (சங்.139:23) நமது வேதவாசிப்பும் ஜெபமும் எந்நாளும் நம் வாழ்வோடு ஒன்றித்து இருக்க கர்த்தருடைய சமுகத்தில் காத்திருப்பதற்கான நேரங்களை ஒதுக்கி நம்மைநாமே ஆராய்ந்து பார்ப்போம். கர்த்தர் நம்மை கழுவும்படியாக ஒப்புவித்து ஜெபிப்போம்.

வழிகாட்டியாயிரு!

தியானம்: 2020 ஜனவரி 30 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 4:25-36

“அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்” (யோவான் 4:29).

காகத்தை அதிகமாக யாருக்கும் பிடிக்காது. ஆனால், அதனிடமும் ஒரு நல்ல பண்பு உண்டு. உணவைக் கண்டதும் பெரிய சத்தமாக, ‘கா! கா!’ என்று கரைந்து மற்றைய காகங்களையும் கூப்பிட்டு பகிர்ந்து உண்ணும் தன்மை காகத்திற்கு உண்டு. ‘உணவு இருக்கும் இடத்தைக் கண்டுகொண்ட ஒரு பிச்சைக்காரன் இன்னுமொரு பிச்சைக்காரனுக்கு வழிகாட்டுவது போன்றதுதான் சுவிசேஷம் அறிவிப்பது’ என்ற கூற்று எத்தனை உண்மையானது.

சமாரியப் பெண் இயேசுவோடு பேசியபோது, அவர்தான் மேசியா என கண்டுகொண்டாள். அப்போது அவள் அமைதியாக இருந்துவிடவில்லை. தன்னை மற்றவர்கள் ஏற்பார்களோ இல்லையோ என்றுகூட சிந்திக்க நேரம் அளிக்காமல், ஊருக்குள் ஓடிச்சென்று, தான் கண்ட மேசியாவை அவர்களும் வந்து பார்க்கும்படி எல்லோரையும் அழைக்கிறாள். தான் பெற்ற மகிழ்ச்சியை அனைவரும் பெறவேண்டும் என்று அவள் நினைத்தாள்.

கிறிஸ்துவின் அன்பை நாம் ருசிபார்ப்பது உண்மையானால், அந்த ருசியை அறியாதிருக்கின்றவர்களும் அதை ருசிக்கும்படிக்கு, அவர்களுக்கு நாம் நல்ல வழிகாட்டிகளாக இருக்கவேண்டும். அப்படி வழிகாட்டுவதற்கு அந்த ருசியை ருசித்த நம்மால்தான் முடியும். ஆனால், ருசித்த நாமே அதை மறந்து வாழ்ந்தால் அடுத்தவருக்கு வழிகாட்டுவது யார்? உண்மையான வழிகாட்டிகளாக இருக்கவேண்டிய நாம் உறங்கிக்கொண்டிருந்தால் தவறான வழிகாட்டிகள் முளைத்தெழும்பி தவறாக வழிகாட்டுவார்களே!

அன்று பேதுருவுக்கு அவன் சகோதரன் அந்திரேயாவே வழிகாட்டியாயிருந்தான். இந்த பேதுரு பின்னால் ஒரு பெரிய அப்போஸ்தலனாக வருவான் என்றா அந்திரேயா வழிகாட்டினான்? இல்லை. தான் கண்டவரை பேதுருவும் காணும்படிக்கு வழிகாட்டினான். கிறிஸ்துவை அறிந்துகொண்ட ஒவ்வொருவர் தலைமீதும் விழுந்த பெரிதான பொறுப்பு இதுதான். இதை நாம் உதாசீனம் செய்யாது ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்காக ஆதாயம் செய்வோம். ஒன்றும் வேண்டாம்; நாம் பெற்ற விடுதலையை பகிர்ந்துகொள்வோம். அதனால் தொடப்பட்டு, நம்மூலம் ஆண்டவரிடம் வழிநடத்தப்படுகிறவர்கள் தேவனால் உபயோகப்படுத்தப்படக்கூடும் அல்லவா? அதுவே நமக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை தருமல்லவா!

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6)

ஜெபம்: ஆண்டவரே, எங்களை பாவத்திலிருந்து விடுவித்த கிறிஸ்துவின் அன்பை பிறருக்கு அறிமுகப்படுத்தும் நல் வழிகாட்டியாக காணப்பட எங்களுக்கு உதவும். ஆமென்.