வாக்குத்தத்தம்: 2020 மே 1 வெள்ளி

தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம் (சங். 139:17).


இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். (செப்.3:15)
1சாமுவேல் 29 -31 | லூக்கா 22:1-27

ஜெபக்குறிப்பு: 2020 மே 1 வெள்ளி

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர்  பிரியமாயிருக்கிறார் (சங்.147:11)


இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். (செப்.91:4) என்ற வாக்குப்படி புதிய மாதத்தை காணச்செய்த ஆண்டவர், நம் மை நடத்திச் செல்வற்கு கிருபையுள்ளவராய், பெரியவராய் நம்மோடுகூட இருக்கிறபடியால் நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.

தூக்கி நிறுத்துங்கள்!

தியானம்: 2020 மே 1 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 8:1-11

“….தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்கீதம் 51:17).

“பனைமரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதை” நாம் அனைவரும் அறிந்ததே. நாம் நடக்கும் பாதையெல்லாம் குன்றும், குழியுமாகவே உள்ளது. தேவகிருபையினாலேயே நாம் பார்த்துப் பார்த்து நடக்கவேண்டியதுள்ளது. ஒருவர் படுகுழியிலே விழுந்து, “ஐயோ விழுந்துவிட்டேனே” எனக் கதறும்போது அவரை இன்னமும் படுகுழியிலே வைத்து அமுக்குவதா, அல்லது அவர் மேலேயெழும்பி மீண்டும் சீராய் நடப்பதற்குக் கைகொடுப்பதா? எது நியாயம்?

விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை அனைவரின் முன்னிலையிலும் கல்லெறிந்து, அவமானப்படுத்தி, பாவத்தோடு அவளுக்குச் சாவு மணியடிக்கத் திட்டமிட்டு, அதன்மூலம் இயேசுவிலும் ஏதாவது குற்றத்தைக் கண்டுபிடிக்கலாம், என்ற பெரிய திட்டத்தோடு வந்த அந்த மக்கள் கூட்டத்தை, இயேசு தனது வார்த்தையினால் முறியடித்தார். அதேவேளை அந்தப் பெண் ஒரு புதிய வாழ்வு வாழ, மீண்டும் பாவம் செய்யாதிருக்க, இயேசு மன்னிப்பு என்னும் ஊன்று கோலை வார்த்தையினால் அவளுக்கு நீட்டினார். பாவத்தின் படுகுழியிலே விழுந்துபோய்க் கிடந்த அந்தப் பெண், இயேசுவின் மன்னிப்பு என்னும் ஊன்று கோலைக்கொண்டு ஊன்றி எழுந்து உயிர் பெற்றாள்.

நாத்தான் தீர்க்கனால் பாவம் உணர்த்தப்பட்டபோது தாவீது பாடிய 51ம் சங்கீதத்திலே, ‘தேவனே நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்’ என்கிறார். ஆம், பாவத்தில் விழுந்தவன் தனது பாவத்தை உணர்ந்து கதறும்போது தேவன் அதைக் கேட்கிறார். அவனை மன்னிக்கிறார். அவன் புதுவாழ்வு வாழ வழிவகுக்கிறார்.

அப்படியிருக்க நாம் என்ன செய்கிறோம்? ஒருவர் பாவத்தில் விழுந்து விட்டார் என்று கேள்வியுற்றால் முன்பின் யோசனையின்றி, நமது நிலைமையை மறந்து, அவரைக் குற்றப்படுத்திப் பேசுகிறோம். விழுந்தவர் மீண்டும் எழும்பாதவாறு சொற்கள் என்னும் கல்லடி கொடுத்து அவரை ஒரேயடியாய் சாய்க்க முயலுகிறோம். இப்படிச் செய்யும் நாம் கிறிஸ்தவர்கள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளுகிறோம். இன்றைய நாளில் சற்றே ஒருகணம் நின்று சிந்திப்போம். மனந்திரும்புகிற ஒரு பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகிறதாம். அந்தச் சந்தோஷத்திற்கு நீங்களும் நானும் தடைக் கற்களாய் இருக்கலாமா? பாவத்தில் விழுந்தவர்களைத் தூக்கி நிறுத்துகின்ற மகத்தான ஊழியத்தைச் செய்ய முன்வருவோமாக.

ஜெபம்: “பாவத்தின் படுகுழியிலிருந்த என்னைத் தூக்கியெடுத்த தேவனே, சோதனையில் சிக்குண்டு பாவத்தில் விழுந்துபோன மற்றவர்களும் மீண்டும் எழும்பி நிற்க, நான் ஒரு ஊன்றுகோலாய் செயற்பட என்னை உருவாக்கியருளும். ஆமென்.”

அதிகாலை அணிவகுப்பு

அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2020)
– Dr.உட்ரோ குரோல்

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன்,  நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். (143:8)


இன்றைய நவீன உலகில் நாம் அதிகாலையில் எழுந்து நமது பணியிடத்துக்கு உரிய நேரத்தில் செல்ல அவசரமாக வேலைகளை முடித்துவிடுகிறோம். ஆனால் இந்த பணிகள் நம்முடைய அதிகாலை தியானத்தை அநேக நாட்களில் தடுத்துவிடுகின்றன. ஆனால் நியாயப் பிரமாண காலத்தில் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதிப்பது ஆசாரியர்களுடைய கடமையாயிருந்தது. (1 நாளா. 23:30).

இப்பொழுது நாம் நியாயப்பிரமாண காலத்தில்; வாழவில்லை எனினும் புதிய ஏற்பாட்டு; காலத்து ஆசாரியர்களாய் இருக்கிறோம் (1 பேதுரு 2:5,9). எனவே நாம் ஒவ்வொரு நாளையும் தேவனைப் புகழ்ந்து பாடி ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது அந்த நாள் முழுவதும் நமது அனுதின அலுவல்களின் மத்தியிலும்; தேவனுடைய பிரசன்னத்தை நம்மால் ஆழமாய் உணரமுடியும. இந்த பெரிய சத்தியத்தை தாவீது அறிந்திருந்தார். சங்கீதம் 143:8 இல் “அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் பாடுகிறார். இந்த அதி காலை ஜெபத்தில் தாவீது இரு விண்ணப்பங்களை வைக்கிறார்.

1. அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்;

2. நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;

இவ்விரு ஜெபங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன. தேவனுடைய கிருபை தன்னுடைய சிந்தையையும் விருப்பத்தையும் ஆண்டுகொள்ள தாவீது விரும்புகிறார். காலையில் மற்ற சிந்தைகள் நமது இருதயத்தில் தோன்றுமாயின் அதனை அந்த நாள் முழுவதும் ஒதுக்கிவைக்க இயலாது. துதித்தல், விண்ணப்பம், வேத வாசிப்பு மற்றும் தியானங்கள் ஒருநாள் முழுவதும் நமது சிந்தையை ஆட்கொள்ளவேண்டும்.

தேவனுடைய கிருபையைப் பாடி மகிழ்வது தாவீதுக்குப் பிடித்தமான தொன்று. கிருபை என்பது இரக்கத்துடன் காட்டும் பரிவு ஆகும். பாடுகள் நிறைந்த இவ்வுலகில் நமது சொல்லி லும் செயலிலும் தேவன் வெளிப்படுகிறார். இவ்வித வாழ்வையே தாவீது விரும்புகிறார். தேவனுடைய அன்பின் இரக்கமே நமது மகிழ்ச்சியின் ஊற்று. அதுவே யாவற்றுக்கும் போதுமானது. இந்த மகிழ்ச்சியை நாம் வேறு எங்கு தேடினாலும் பெற்றுக்கொள்ளமுடியாது. வாழ்வின் கசப்பான அனுபவங்களை மதுரமாக்குவது தெய்வீக மகிழ்ச்சியே. அது மகிழ்ச்சியான அனுபவங்களை இன்னும் அதிக மகிழ்ச்சியாக்கும். அனைத்து காயங்களையும் ஆற்றவல்லது; வேதனைகளைத் தீர்க்கும் வலிநிவாரணி. எனவேதான் தாவீது காலையிலேயே அந்த அனுபவத்தைத் தேடினார். அவ்விதமான ஆரம்பம் அந்த நாளின் மீதி வேளையையும் இன்பமாக்கிடும்.

“சிறந்த ஆரம்பம் பாதி முடித்ததற்கு சமம்” என்ற முதுமொழி இதற்கு மிகவும் பொருந்தும். தாவீது தேவனையும் அவருடைய அன்பான தயவையும் அதிகாலையில் தேடி ஆரம்பித்தார். அது ஒரு நாளின் போராட்டத்தின் பாதியை வென்றாகிவிட்டது. அன்றைய தினத்தில் தான் நடக்கவேண்டிய வழியைக் காட்டுமாறு தேவனிடம் கேட்டார். அநேக வேளைகளில் நாம் திட்டமிட்டுள்ள நமது பாதையானது தேவனால் தீர்மானிக்கப்பட்டதல்ல; அதிகாலையில் ஆரம்பிக்கும் தேவனுடனான பாதை ஒவ்வொரு மணி நேரமும் அதே நெருக்கத்துடன் இருக்கவேண்டும்.

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜார்ஜ்பேரல் சீவர் தமது மலையேறும் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். “அந்த பள்ளத்தாக்கு முழுவதும் செங்குத்தான பாறைகளால் நிறைந்திருந்தது. அந்த மலையோ அணுக முடியாததுபோல் இருந்தாலும் இறுதியில் அதற்கான பாதையை கண்டுபிடிக்க முடிந்தது. இதுவே வழி என நான் எண்ணியிருந்த பாதைக்கு மாறாக சூரியக்கதிர்கள் பிரதிபலித்த பனியாறின் எதிரான மலையிடுக்கில் என்னுடைய வழிகாட்டி அழைத்துச் சென்றார். நானோ நான் செல்லவேண்டிய பாதை இதுதான் என்று முடிவெடுத்திருந்த திசையில் ஒரு குறுக்குப் பாதையைத் தெரிந்தெடுத்தேன். அது என்னை அந்த மலையிடுக்குப் பனிப்பாறையின் சந்தில் கொண்டுவரும் என நினைத்தேன். ஆனால் அது, திசைதெரியாத ஊசி யிலை மரங்கள் நிறைந்திருந்த காட்டின் மத்தியில் கொண்டுபோய் விட்டது. ஒரு வழியாக எனது நண்பனுடன் சேர்ந்துவிட்டேன். என்னுடைய அறியாமையாலும் வழி தெரியாமையாலும் பெரிதும் அவதியுற்றேன்.

“நம்முடைய வாழ்வில் சரியான வழிநடத்துதல் இல்லையெனில் நாமும் சுயவழிகளில் நடக்கவே சோதனைகள் உண்டாகும். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவனுடைய வழிநடத்தும் அன்புக்கருணை நமக்கு உண்டு; நாம் அதனைத் தேடவேண்டும். நாள் முழுவதும் தன்னிச்சையாக நடக்க திட்டமிடக்கூடாது. காலைதோறும் அவரது கிருபை நமக்கு பரத்திலிருந்து அருளப் பட இருப்பதால், அதிகாலை ஆணைகளை நாம் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். அது எப்பொழுதும் வெற்றிப் பாதையை நோக்கியே நம்மை நடத்திச்செல்லும். அதிகாலையில் தேவனைத் தேடாமல் மீதி நேரத்தை நாம் செலவழிப்போமானால் அது மதியீனமாகும். அது அழிவுக்கு நேராக நம்மைக் கொண்டு செல்வது நிச்சயம்.


அதிகாலைப் பாடல்:

இரட்சகா, நீரே நண்பனிலும் வாழ் விலும் மேலான நித்திய பங்கு
என்னுடைய மோட்சப் பிரயாணத்தில் துணையாக என்னுடன் வாரும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

ஆசிரியரிடமிருந்து…

(மே-ஜுன் 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

கொரோனா வைரஸ் தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அனுதினமும் மரித்துவருவதை காண்கிறோம். மேலும் தற்போது உலக நாடுகளில் அனைத்திலும் மக்களுடைய இயல்பு வாழ்வு பாதிப்புக்குள்ளாயிருக்கிறது.. ஊரடங்கு அமுலில் இருப்பதால் நம் தேசத்தில் அநேக மக்கள் வருமானமின்றி பசியினாலும் வறுமையாயினாலும் வாடிவருகின்றனர். இந்த வாதை நிறுத்தப்படவும் தேவன் மனுக்குலத்தின் மேல் இரக்கம் பாராட்டவும் நாம் திறப்பின் வாசலில் நின்று மன்றாடுவோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூல் வாயிலாக அநேகர் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பெற்றுவரும் நன்மைகளுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழிலுள்ள வேதாகம வாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2020ஆம் ஆண்டு முழுவதும் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களுடைய பெயர்களின் தொடர்ச்சியை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்குகிற ஆதரவாளர்களுக்காக, பங்காளர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம். கர்த்தர் இன்னும் அநேக ஆதரவாளர்களைத் தந்தருளவும் வேண்டுதல் செய்கிறோம்.

இவ்விதழில் மே மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் நமது அன்றாடக வாழ்க்கைப்பயணத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய அநேக காரியங்களை தியானங்களாக தொகுத்துத் தந்துள்ளார்கள். ஜூன் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் கலாத்தியர் நிருபத்திலிருந்தும் மேலும் பல தலைப்புகளிலும் எழுதிய தியானங்களையும் பிரசுரித்துள்ளோம். இத்தியானங்கள் யாவும் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அதிக ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம். கர்த்தர்தாமே இத்தியானங் களின் வாயிலாக தங்களை ஆசீர்வதித்து பெலப்படுத்துவாராக!

கே.ப.ஆபிரகாம்