அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2020)
– Dr.உட்ரோ குரோல்
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். (143:8)
இன்றைய நவீன உலகில் நாம் அதிகாலையில் எழுந்து நமது பணியிடத்துக்கு உரிய நேரத்தில் செல்ல அவசரமாக வேலைகளை முடித்துவிடுகிறோம். ஆனால் இந்த பணிகள் நம்முடைய அதிகாலை தியானத்தை அநேக நாட்களில் தடுத்துவிடுகின்றன. ஆனால் நியாயப் பிரமாண காலத்தில் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதிப்பது ஆசாரியர்களுடைய கடமையாயிருந்தது. (1 நாளா. 23:30).
இப்பொழுது நாம் நியாயப்பிரமாண காலத்தில்; வாழவில்லை எனினும் புதிய ஏற்பாட்டு; காலத்து ஆசாரியர்களாய் இருக்கிறோம் (1 பேதுரு 2:5,9). எனவே நாம் ஒவ்வொரு நாளையும் தேவனைப் புகழ்ந்து பாடி ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது அந்த நாள் முழுவதும் நமது அனுதின அலுவல்களின் மத்தியிலும்; தேவனுடைய பிரசன்னத்தை நம்மால் ஆழமாய் உணரமுடியும. இந்த பெரிய சத்தியத்தை தாவீது அறிந்திருந்தார். சங்கீதம் 143:8 இல் “அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் பாடுகிறார். இந்த அதி காலை ஜெபத்தில் தாவீது இரு விண்ணப்பங்களை வைக்கிறார்.
1. அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்;
2. நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;
இவ்விரு ஜெபங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன. தேவனுடைய கிருபை தன்னுடைய சிந்தையையும் விருப்பத்தையும் ஆண்டுகொள்ள தாவீது விரும்புகிறார். காலையில் மற்ற சிந்தைகள் நமது இருதயத்தில் தோன்றுமாயின் அதனை அந்த நாள் முழுவதும் ஒதுக்கிவைக்க இயலாது. துதித்தல், விண்ணப்பம், வேத வாசிப்பு மற்றும் தியானங்கள் ஒருநாள் முழுவதும் நமது சிந்தையை ஆட்கொள்ளவேண்டும்.
தேவனுடைய கிருபையைப் பாடி மகிழ்வது தாவீதுக்குப் பிடித்தமான தொன்று. கிருபை என்பது இரக்கத்துடன் காட்டும் பரிவு ஆகும். பாடுகள் நிறைந்த இவ்வுலகில் நமது சொல்லி லும் செயலிலும் தேவன் வெளிப்படுகிறார். இவ்வித வாழ்வையே தாவீது விரும்புகிறார். தேவனுடைய அன்பின் இரக்கமே நமது மகிழ்ச்சியின் ஊற்று. அதுவே யாவற்றுக்கும் போதுமானது. இந்த மகிழ்ச்சியை நாம் வேறு எங்கு தேடினாலும் பெற்றுக்கொள்ளமுடியாது. வாழ்வின் கசப்பான அனுபவங்களை மதுரமாக்குவது தெய்வீக மகிழ்ச்சியே. அது மகிழ்ச்சியான அனுபவங்களை இன்னும் அதிக மகிழ்ச்சியாக்கும். அனைத்து காயங்களையும் ஆற்றவல்லது; வேதனைகளைத் தீர்க்கும் வலிநிவாரணி. எனவேதான் தாவீது காலையிலேயே அந்த அனுபவத்தைத் தேடினார். அவ்விதமான ஆரம்பம் அந்த நாளின் மீதி வேளையையும் இன்பமாக்கிடும்.
“சிறந்த ஆரம்பம் பாதி முடித்ததற்கு சமம்” என்ற முதுமொழி இதற்கு மிகவும் பொருந்தும். தாவீது தேவனையும் அவருடைய அன்பான தயவையும் அதிகாலையில் தேடி ஆரம்பித்தார். அது ஒரு நாளின் போராட்டத்தின் பாதியை வென்றாகிவிட்டது. அன்றைய தினத்தில் தான் நடக்கவேண்டிய வழியைக் காட்டுமாறு தேவனிடம் கேட்டார். அநேக வேளைகளில் நாம் திட்டமிட்டுள்ள நமது பாதையானது தேவனால் தீர்மானிக்கப்பட்டதல்ல; அதிகாலையில் ஆரம்பிக்கும் தேவனுடனான பாதை ஒவ்வொரு மணி நேரமும் அதே நெருக்கத்துடன் இருக்கவேண்டும்.
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜார்ஜ்பேரல் சீவர் தமது மலையேறும் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். “அந்த பள்ளத்தாக்கு முழுவதும் செங்குத்தான பாறைகளால் நிறைந்திருந்தது. அந்த மலையோ அணுக முடியாததுபோல் இருந்தாலும் இறுதியில் அதற்கான பாதையை கண்டுபிடிக்க முடிந்தது. இதுவே வழி என நான் எண்ணியிருந்த பாதைக்கு மாறாக சூரியக்கதிர்கள் பிரதிபலித்த பனியாறின் எதிரான மலையிடுக்கில் என்னுடைய வழிகாட்டி அழைத்துச் சென்றார். நானோ நான் செல்லவேண்டிய பாதை இதுதான் என்று முடிவெடுத்திருந்த திசையில் ஒரு குறுக்குப் பாதையைத் தெரிந்தெடுத்தேன். அது என்னை அந்த மலையிடுக்குப் பனிப்பாறையின் சந்தில் கொண்டுவரும் என நினைத்தேன். ஆனால் அது, திசைதெரியாத ஊசி யிலை மரங்கள் நிறைந்திருந்த காட்டின் மத்தியில் கொண்டுபோய் விட்டது. ஒரு வழியாக எனது நண்பனுடன் சேர்ந்துவிட்டேன். என்னுடைய அறியாமையாலும் வழி தெரியாமையாலும் பெரிதும் அவதியுற்றேன்.
“நம்முடைய வாழ்வில் சரியான வழிநடத்துதல் இல்லையெனில் நாமும் சுயவழிகளில் நடக்கவே சோதனைகள் உண்டாகும். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவனுடைய வழிநடத்தும் அன்புக்கருணை நமக்கு உண்டு; நாம் அதனைத் தேடவேண்டும். நாள் முழுவதும் தன்னிச்சையாக நடக்க திட்டமிடக்கூடாது. காலைதோறும் அவரது கிருபை நமக்கு பரத்திலிருந்து அருளப் பட இருப்பதால், அதிகாலை ஆணைகளை நாம் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். அது எப்பொழுதும் வெற்றிப் பாதையை நோக்கியே நம்மை நடத்திச்செல்லும். அதிகாலையில் தேவனைத் தேடாமல் மீதி நேரத்தை நாம் செலவழிப்போமானால் அது மதியீனமாகும். அது அழிவுக்கு நேராக நம்மைக் கொண்டு செல்வது நிச்சயம்.
அதிகாலைப் பாடல்:
இரட்சகா, நீரே நண்பனிலும் வாழ் விலும் மேலான நித்திய பங்கு
என்னுடைய மோட்சப் பிரயாணத்தில் துணையாக என்னுடன் வாரும்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை