ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 25 புதன்

… என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் (வெளி.3:8) இவ்வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜசிங், சகோ.சைலஸ் இவர்களது ஊழியங்களில் கர்த்தர் திறந்தவாசலைத் தந்து நல்ல சுகத்தோடு பணி செய்ய தேவன் கிருபை பாராட்ட ஜெபிப்போம்.

உனது தெரிந்தெடுப்பு

தியானம்: 2021 ஆகஸ்ட் 25 புதன் | வேத வாசிப்பு: எரேமியா 21:4-10

“…ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு…” (உபா.30:19).

“மாறி மாறி பிரச்சனைகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையே சலித்துவிட்டது” என்று ஒரு குடும்பத் தலைவன் அலுத்துக்கொண்டார். நமது கண்களுக்கு பிரச்சனைகளும் கஷ்டங்களும் மாத்திரமே தெரிகிறது என்பதுதான் நமது பிரதான பிரச்சனை என்று நான் கருதுகிறேன். உலகம் பாவத்துள் விழுந்துபோனாலும், நமக்காக வைக்கப்பட்ட நன்மைகள் எதையும் தேவன் அகற்றிப்போடவில்லை. அப்படியானால் நமது பிரச்சனைகளுக்கும் தோல்விகளுக்கும் முக்கிய காரணம் நமது தவறான தெரிந்தெடுப்பே என்றால் மிகையாகாது. எந்தவொரு விஷயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இதில் நமது தெரிந்தெடுப்பு எது? வெளிநாடு போவதற்கு முழுமூச்சாகப் பிரயாசப்பட்ட ஒருவன், அது கிடைக்காததால் மனமுடைந்து, மறுபடியும் பல இலட்சங்களைச் செலவு செய்ய தயாராகிறான். இன்னொருவன், வெளிநாடு மறுக்கப்பட்டதும், உள்நாட்டிலுள்ள நல்லதும் தனக்குத் தகுந்ததுமான ஒரு வழியைத் தெரிந்துகொண்டு முயற்சித்தான். நல்ல நிலைக்கு உயர்ந்தான். வித்தியாசத்தைக் கவனித்தீர்களா!

நமது வாழ்க்கைப் பாதையில் நாம் தோல்விகளைச் சந்திக்கலாம். ஆனால் அதற்குள் மாண்டுபோகக்கூடாது. நமது தெரிந்தெடுப்பிலுள்ள சிறிய, பெரிய தவறுகளைச் சரி செய்து முன்னேறிச் செல்லுவதுதான் வாழ்வில் வெற்றியைத் தருகிறது. நன்மை – தீமை, ஜீவன் – மரணம் இப்படி ஜோடி ஜோடியாக நமக்கு முன் தேவன் வைத்திருந்தாலும், தெரிந்தெடுக்கும் உரிமையை அவர் நம்மிடம் விட்டுவிட்டாலும், அவர் நம்மேல் கண்ணை வைத்து நமக்கு ஆலோசனை சொல்லும் தேவன். நீயும் உன் சந்ததியும் நன்றாய் வாழ்வதற்கு நன்மையை, ஜீவனைத் தெரிந்தெடு என்று நமக்கு நல்ஆலோசனை தருகிறார்.

அன்று யூதாவுக்கு, தேவன் ஒரு தெரிந்தெடுப்பையும் கூடவே நல் ஆலோசனையையும் கொடுத்தார். பாபிலோன் ராஜா சிறைபிடிக்கும்போது, அவனோடு புறப்பட்டுப் போகிறவன் பிழைப்பான்; மாட்டேன் என்று நகரத்திலே தங்கிவிடுபவன் அழிவான். இதிலே எதைத் தெரிந்தெடுப்பது? சிறைபிடிக்கப்படுதல் தோற்றுப்போன மனநிலையைக் கொடுக்கிறது. மனுஷீகம் அதற்கு இடங்கொடாது. ஆனால் கர்த்தரோ அதுவே ‘பிழைக்கும் வழி’ என்றார். அப்படியே சிறை பிடிக்கப்பட்டபோது எதிர்ப்புத் தெரிவிக்காமல் போனவர்கள் திரும்பவும் யூதாவுக்குள் வந்தார்கள். தவறான தெரிந்தெடுப்பைச் செய்தவர்களோ அழிந்து போனார்கள். தேவபிள்ளையே, கர்த்தருடைய வார்த்தை எதைச் சொல்கிறதோ அதைச் செய்யவேண்டியதே நமது தெரிந்தெடுப்பாக இருக்கட்டும். சுயமாக வழிகளைத் தெரிந்துகொண்டு இதுவரை அனுபவித்த இன்னல்கள் போதும்.

ஜெபம்: கர்த்தாவே, உமது வார்த்தை சத்தியம். அது தீமைபோல தெரிந்தாலும்கூட உமக்கே கீழ்ப்படிவதைத் தெரிந்தெடுக்க அருள் செய்யும். ஆமென்.