ஆசிரியரிடமிருந்து…

(மார்ச் – ஏப்ரல் 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

மரணத்தை ஜெயமாக விழுங்கின ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 2017ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.

பள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள்  எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

மார்ச் மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதியில் கோவை மணிகூண்டு அருகில் உள்ள T.E.L.C ஆலயத்திலும், 26,27,28 திங்கள்-புதன் ஆகிய பரிசுத்த வாரத்தின் நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருச்சி பொன்மலைபட்டி C.S.I. Christ Church – லும் நடக்கவுள்ள லெந்துகால சிறப்புக் கூட்டங்களில் வானொலி செய்தியாளர் பேராசிரியர் எடிசன் அவர்கள் செய்தி வழங்க இருக்கிறார்கள். அப்பகுதியிலுள்ள பங்காளர்கள் இக்கூட்டங்களில் பங்குபெற்று ஆசீர்வாதம் பெற அன்பாய் அழைக்கிறோம்.

சத்தியவசன ஊழியத்தை  தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்த விரும்பும் பங்காளர்கள் அவர்களது விலாசத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 2018ஆம் வருட காலண்டரை அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பித் தருகிறோம்.

இவ்விதழில் மார்ச் 1 – 16 வரையுள்ள தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். மார்ச் 16 முதல் ஏப்ரல் 15 வரையுள்ள தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். ஏப்ரல் 16-30 நாட்களுக்கான தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் இருப்பதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்