ஆசிரியரிடமிருந்து…

(மே-ஜுன் 2021)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் யாவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கர்த்தரின் பெரிதான கிருபையாலும் தேவ பெலத்தாலும் நான்கு மாதங்களை கடந்து வந்துள்ளோம். சட்டமன்றத் தேர்தல் நல்லவிதமாக முடிய தயை செய்தக் கர்த்தரைத் துதிப்போம். தேர்தல் முடிவுகளுக்காகவும் கருத்தாய் ஜெபிப்போம். கொரோனா இரண்டாவது அலையினால் தேசமெங்கும் நிறைந்துள்ள அச்சம் நீங்கவும், இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவாதபடியும் உயிர்ச்சேதங்கள் அதிகரிக்காதபடி காப்பதற்கும், லூக்கா 10:19 இல் ஆண்டவர் கொடுத்த அதிகாரத்தின்படி சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளும்படிக்கு தேசத்திற்காக, அகில உலகத்தின் நன்மைக்காய் இடைவிடாமல் மன்றாடுவோம்.

சத்தியவசன அனைத்து ஊழியப்பணிகளுக்காகவும் ஜெபித்துவருகிற ஜெப பங்காளர்கள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் நன்றி கூறுகிறோம். 2019ஆம் ஆண்டிலே நிறுத்தம் செய்திருந்த சத்தியம் டிவி நிகழ்ச்சிகள் பிப்ரவரி மாதத்திலிருந்து மறுபடியும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதை தெரியப்படுத்துகிறோம். அனைவரும் குடும்பமாக நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள்.

2020ஆம் ஆண்டில் பரி. வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பட்டியலின் தொடர்ச் சியை 6ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளோம். பங்காளர் குடும்பங்களிலே பிளஸ் டூ தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்வுகளை நன்கு எழுதி சிறந்த விதத்தில் தேர்ச்சியடைய கர்த்தர் உதவி செய்ய வேண்டுமென்றே வேண்டுதல் செய்துவருகிறோம்.

இவ்விதழின் மே மாதத்தில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் தீர்க்கதரிசி எலியாவைக் குறித்து எழுதிய தியானங்கள் இடம்பெற்றுள்ளது. இத்தியானங்களை சகோ.வில்சன் அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார். ஜுன் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தேவன் அருளிய கற்பனைகளைக் குறித்த தெளிவான விளக்கங்களை தியானங்களாக எழுதியுள்ளார்கள். தியானங்கள் எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். தாங்கள் பெற்ற நன்மைகளையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

கே.ப.ஆபிரகாம்