பலியின் இரத்தம்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2023)
Dr. உட்ரோ குரோல்

வேதபகுதி: யாத்திராகமம் 12:12-51

 நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களை கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும் (யாத்தி.12:13).

பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பலிகளின் இரத்தத்தின் அவசியத்தை சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது. சில முற்போக்கு இறையியலாளர்கள் நற்செய்தி கிறிஸ்தவத்தை “கசாப்புக்கூடம் மதம்” என்று அழைக்கின்றனர். அநேக மக்கள் கிறிஸ்துவின் சிலுவையை நிராகரித்து, அவருடைய நன்னெறிக் கொள்கைகளை மட்டும் பின்பற்ற முயற்சிக்கின்றனர் (1கொரி.1:18). இரத்தத்தை நிராகரிப்பது இயேசுவையும் அவர் தரும் நித்திய இரட்சிப்பையும் புறக்கணித்தலுக்கு சமமாகும்.

1. தேவன் கதவு நிலைகளின் மீதிருந்த இரத்தத்தைக் கண்டார்.

கதவு நிலைகளிலும் மேல் சட்டத்தி லும் பூசப்படும் இரத்தமானது “நியாயத் தீர்ப்பு வந்துகொண்டிருக்கிறது” என்று எகிப்தியருக்கு எச்சரிப்பாக அமைந்தது. ஆனால், கதவுக்கு பின்னாலிருந்த யூதர்களுக்கு அது நம்பிக்கையையும் சமாதானத்தையும் தந்தது. அவர்கள் தங்களுடைய வீட்டை சங்காரத்தூதன் கடந்து சென்றுவிடுவார்; தலைமகன் இறப்பதில்லை என்பதை அறிந்து கொண்டனர். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை பக்கத்து வீட்டின் கதவு நிலைகளில் பூசுவதால் பலனில்லை; ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டுக் கதவு நிலைகளில் பூச வேண்டும். யாத்திராகமம் 12:3-5இல் “ஒவ்வொரு ஆட்டுக்குட்டி,… ஒரு ஆட்டுக்குட்டி,… அந்த ஆட்டுக்குட்டி” என்ற சொற்கள் காணப்படுகின்றன. இந்த ஆட்டுக்குட்டி உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவை உருவகப்படுத்துகிறது (யோவான்1:29; 1பேதுரு 1:18-19).

2. தேவன் உடன்படிக்கைப் பெட்டியின் மீதிருந்த இரத்தத்தைக் கண்டார்.

யூதர்களின் நாட்காட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை பிரதான ஆசாரியன் மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து மக்களுக்காக பாவநிவாரணம் செய்த நாள் மிக முக்கியமான நாளாகும். முதலாவது அவன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவ நிவிர்த்தி செய்ய ஒரு காளையைக் கொன்று அதன் இரத்தத்தை மகாபரிசுத்த ஸ்தலத்திலுள்ள கிருபாசனத்தின்மேல் தெளித்தான். பின்னர் ஜனங்களின் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று அதன் இரத்தத்தையும் கிருபாசனத்தின் மேல் தெளித்தான். பின்னர் உயிரோடிருக்கும் வெள்ளாட்டுக்கடாவின்மேல் தன் கைகளை வைத்து அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிட்டான் (வச.21). உடன்படிக்கைப் பெட்டிக்குள் கற்பனைப் பலகைகளும் இருந்தன. ஆண்டவர் உன்னதத்திலிருந்து கீழே நோக்கும் பொழுது அவர் மீறப்பட்ட கற்பனைகளையல்ல, கிருபாசனத்தின்மேல் தெளிக்கப்பட்டிருந்த இரத்தத்தையே கண்ணோக்கினார். அல்லேலூயா!

3. தேவன் மனித சரீரங்களின் மேலிருந்த இரத்தத்தைக் கண்டார் (யாத். 29:20; லேவி.14:14,26-28).

ஆரோனும் அவனுடைய குமாரர்களும் ஆசாரியர்களாய் அபிஷேகம் பண்ணப்பட்டபொழுது, மோசே அவர்களது வலது காதின் மடலிலும், அவர்களது வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் குற்ற நிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பூசினான். இது தேவனுக்கு முற்றும் அர்ப்பணிப்பதற்கு அடையாளம். இதே முறைதான் சுகமான குஷ்டரோகிகள் பாளையத்திற்குத் திரும்பும்பொழுதும் பின்பற்றப்பட்டது (லேவி.1 4:14). ஒரு பாவி இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்பொழுது ஆவியானவர் அவன்மீது இரத்தத்தைத் தெளிக்கிறார்; அவன் இரட்சிக்கப்படுகிறான். ஒரு விசுவாசி தன்னுடைய பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கையிடும்பொழுது இரத்தம் பூசப்பட்டு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (1யோவான் 1:6-8).

4. தேவன் சிலுவையின் மேலிருந்த இரத்தத்தைக் கண்டார்.

“நமது ஆண்டவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ.1:20). இயேசு தமது இரத்தத்தால் உண்டாக்கிய புது உடன்படிக்கையை நினைப்பூட்ட திருவிருந்தை நிறுவினார் (லூக்கா 22:20). இயேசு சிலுவையில் ஏற்பட்ட தமது காயங்களை (தழும்புகளையல்ல) பரலோகத்துக்கு எடுத்துச்சென்றார். நம்மை இரட்சிப்பதற்காக அவர் செலுத்திய கிரயத்தை அவருடைய பிள்ளைகளுக்கு அது நினைவூட்டுகிறது. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டோம் (1 பேதுரு 1:19).

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1யோவான் 1:9) என்ற வாக்குறுதி மாறாதது.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

சகலமும் நன்மைக்கே!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ஆதியாகமம் 50:14-20

யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார் (ஆதியாகமம் 50:19, 20).

இவ்வசனமானது ரோமர் 8:28இல் காணப்படும் “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிற தென்று அறிந்திருக்கிறோம்” என்ற பவுலடியாரின் கூற்றுக்கு ஒத்துள்ளது. நம்முடைய கண்ணோட்டத்தில் மனிதர்கள், சூழ்நிலைகள், நமது ஆண்டவரும்கூட நமக்கு எதிர்த்து நிற்பதாகத் தோன்றும். ஆனால், நமது பரமபிதா அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என அவருடைய பிள்ளைகளாகிய நாம் நன்கு அறிந்துள்ளோம். அவர் நம்மை நேசிக்கிறார்; நமக்கு நன்மை இன்னதென்று அவர் அறிந்திருக்கிறார் என்று நாம் நிச்சயமாகக் கூறமுடியும். இதற்கு யோசேப்பின் வாழ்க்கை மிகச்சிறந்த ஓர் உதாரணமாகும்.

அவனது தந்தை யாக்கோபு அவனை அதிகமாக நேசித்தார். அதினால் அவனுடைய பத்து அண்ணன்மார்களாலும்; வெறுக்கப்பட்டான். அவனுடைய பதினேழாவது வயதில் அவர்கள் மீதியானியரிடத்தில் அவனை விற்றுப்போட்டார்கள். எகிப்துக்குச் சென்ற அவன் அவனுடைய எஜமானனின் மனைவியால் தவறான நடத்தைக்கு வற்புறுத்தப்பட்டான். அவன் இணங்காததால்; வீண்பழி சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்றான். ஆனால் முப்பதாவது வயதில் சிறையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையானான். பார்வோன் அவனை எகிப்தின் இரண்டாவது அதிகாரியாக உயர்த்தினான். யோசேப்பின் சகோதரர்கள் இருமுறை எகிப்துக்கு வந்து தானியம் வாங்கிச்சென்றனர். அந்த சந்தர்ப்பங்களை அவர்கள் மனம் வருந்தவும், மனந்திரும்பவும் யோசேப்பு நன்கு பயன்படுத்திக் கொண்டான். அவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி, மன்னிப்பை அருளி, தன் தகப்பன் யாக்கோபையும் தன் சகோதரர்கள் குடும்பத்தார் அனைவரையும் தான் பராமரிப்பதாகக் கூறி எகிப்துக்கு அவர்களை வரவழைத்தான். பதினேழு ஆண்டுகள் கழித்து யாக்கோபு இறந்தபின்னர், யோசேப்பு தங்களை பழிவாங்குவான் என அவனுடைய சகோதரர்கள் பயந்தனர்.

ஆனால் யோசேப்போ நடந்தவை யாவும் தேவனுடைய செயலேயாகும்; சகலமும் நன்மைக்கே என்று அவர்களுக்கு உறுதியளித்தார். எபிரெய மக்களினம் அழிந்துபோகாதபடிக்கு தேவன் யோசேப்பை எகிப்து தேசத்தில் ஒரு கருவியாக உபயோகித்தார்.

யோசேப்புக்கு நிகழ்ந்த யாவும் அவரை ஒரு சிறந்த தலைவனாக உருவாக்க தேவன் அனுமதித்திருந்தார். ஒருவேளை யோசேப்பு தனது தகப்பனுடனே தங்கியிருந்தால், அளவுக்கு மீறிய தகப்பனுடைய பாசத்தால் அவன் சீரழிந்திருப்பான். “தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது” (புலம்பல் 3:27). யோசேப்பின் துன்பங்கள் யாவும் அவனை ஒரு தேவ மனிதனாக்கியது. இயேசுகிறிஸ்துவுக்கு நிழலாக வேதாகமம் சுட்டிக்காட்டும் உன்னத மனிதர்களுள் ஒருவராக யோசேப்பு அமைந்தான். தேவனுடைய திட்டம் அவனுடைய சகோதரர்களுக்கும் நன்மையாக அமைந்தது. அவர்களுடைய சதித்திட்டங்களிலிருந்து மனந்திரும்புவதற்கு ஏதுவானது. யாக்கோபும் தனது இளவயதில் சூழ்ச்சி செய்து தனது தகப்பனை ஏமாற்றினவரே. அதற்கான பலனையும் அவர் அனுபவித்தார். ஆனால், பிற்காலத்தில் தேவன் 17 ஆண்டுகள் தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாயும் சமாதானமாயும் வாழும் ஆசீர்வாதத்தையும் அருளினார். யோசேப் பின் மூலமாக முழு எகிப்துக்கும் உணவு அருளி நன்மை செய்தார். யோவான் 4:22 இன்படி இரட்சிப்பு யூதர்கள் வழியாய் இன்றைய நம்முடைய உலகத்திற்கும் வந்தது.

நீங்களும் யாக்கோபைப்போல “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” (ஆதியாகமம் 42:36) என்று அங்கலாய்க்கிறீர்களா? உண்மையில் யோசேப்புக்கும் அவனுடைய குடும்பத்தாருக்கும் நடந்ததைப்போலவே நமக்கும் நடக்கிறது. அடுத்த முறை நீங்கள் ஆண்டவரிடம் வாழ்வு கடினமாக இருக்கிறதே என கேள்வி கேட்கும்பொழுது, அவருடைய வழிகளை நாம் அறியாதிருக்கும்பொழுது, யோசேப் பின் இளவயதில் நடந்த சோதனைகளையும் தேவனுடைய இரக்கங்களையும் நாம் நினைவுகூருவோம். அனைத்தும் சர்வவல்ல தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தேவன் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார் என்பதை நாம் பார்க்கவோ உணரவோ அவசியமில்லை. ஏனெனில் தேவன் நமக்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல் லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (சங்.119: 71).

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன் (ஏசா.12:2).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

ஆசீர்வாதத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2022)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ஆதியாகமம் 12:1-8; கலாத்தியர் 3:6-9

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதியாகமம் 12:2).

பரிசுத்த வேதாகமத்தில் 400 தடவைகளுக்கு மேலாக “ஆசீர்வாதம்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய ஊழியங்களிலும், உரையாடல்களிலும், ஜெபங்களிலும் அடிக்கடி நாமும் இச்சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். தேவன் ஆசீர்வாதத்தின் ஊற்றாய் இருக்கிறார்; நமக்கு ஆசீர்வாதங்களை அருளுகிறார். தம் மக்களை சீர்ப்படுத்தவும் அவர்கள் தம்மை மகிமைப்படுத்தவும் அதனைச் செய்கிறார். அப்.பவுல் தன்னுடைய சரீரத்தில் தரப்பட்ட முள்ளை ஆசீர்வாதமாக எண்ணவில்லை. அதை நீக்கும்படியாக மூன்று முறை தேவனை வேண்டிக்கொண்டார். ஆனால், அது பவுலுக்கும் சபைக்கும் ஆசீர்வாதமாக மாறியது (2 கொரி.12:7-10). சிலுவை மரணத்தைத் தவிர்ப்பதற்கு இயேசுவுக்கு பேதுரு ஆலோசனை கூறினார் (மத்.16:21-28). ஆனால், இயேசு அதனை நிராகரித்து கல்வாரியில் தன்னை பலியாக்கி உலகத்தின் பல சந்ததிக்கு ஆசீர்வாதத்தை அருளினார். மேலும் எதிர்காலத்தில் தம்முடைய ஜனங்களுக்கு நித்திய ஆசீர்வாதத்தையும் தருவார்.

தேவன் நமக்குத் தரும் ஆசீர்வாதம் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாற வேண்டும். ஏனெனில் கிறிஸ்தவர்கள் தேக்கிவைப்பவர்களாக அல்ல, பகிர்வாளர்களாக இருக்கவேண்டும். ஏனெனில் கிறிஸ்தவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று அதனை சுயநலமாய் தங்களுக்கென்று வைத்துக்கொள்வது, கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகும். “உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (நீதி.11:25). நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காகவே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்.

ஆபிரகாமும் சாராளும் தேவனை விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிந்ததினால் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்; முழு உலகத்துக்கும் அத்தம்பதியரை ஆசீர்வாதமாக மாற்றினார். அவர்கள் மூலமாக இஸ்ரவேல் கோத்திரமும், தேசமும் உருவானது. இஸ்ரவேலரே உலகத்திற்கு உண்மையான ஜீவனுள்ள தேவனைப்பற்றிய ஞானத்தைத் தந்தனர். இஸ்ரவேலர் மூலமாகவே நாம் வேதாகமத்தையும் இயேசு கிறிஸ்துவையும் பெற்றுக்கொண்டோம். இஸ்ரவேலரின் சாட்சி இல்லாவிட்டால் இன்றைய புறஜாதிகள் மெய்தேவனை அறியாதவர்களாயும், விக்கிரக ஆராதனைக்காரராயும் வாழ்ந்துகொண்டிருப்பர். “நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்கள்” (எபே.2:12). மாறாக, “அந்தப் படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்” (கலா.3:9).

ஆபிரகாம் தனது சகோதரன் மகனை ஆசீர்வதித்து கானான் தேசத்தின் நிலப்பகுதியின் தெரிந்தெடுப்பைக் கொடுத்தான் (ஆதி.13). லோத்து போர்க் கைதியாகச் சென்ற பின் அவனை மீட்டு வந்தான் (ஆதி.14). சோதோம் அழிக்கப்படும்பொழுது ஆபிரகாமின் மன்றாட்டினால் லோத்து காப்பாற்றப்பட்டான் (ஆதி.19:1-29). ஆனால், துரதிர்ஷ்டவசமாக லோத்து ஆபிரகாமின் விசுவாச மாதிரியைப் பின்பற்றவில்லை. எனவே அவன் ஒரு குகையில், குடிவெறியில் முறையற்ற பாலியல் தொடர்புகொண்டான் (ஆதி.19:30-38). லோத்தும் அவனுடைய சந்ததியினரும் எதிர்காலத்தில் இஸ்ரவேலுக்குத் துன்பத்தையே கொண்டுவந்தனர்.

பக்திமானாகிய ஆபிரகாமும் மூன்று நிகழ்வுகளில் ஆசீர்வாதமாக இருக்க தவறிவிட்டார். பஞ்சகாலத்தில் தேவனை நம்புவதற்குப் பதிலாக எகிப்துக்குத் தப்பியோடினார், அங்கு அவர் பொய்யுரைத்து அம்மக்களுக்கு வாதை உண்டாகக் காரணமானார் (ஆதி. 12:10-20). கேராரின் அரசரிடமும் பொய்யுரைத்தார் (ஆதி.20:1-18). வாக்குத்தத்தத்தின் மகனைப் பெற்றுக்கொள்ள தன்னுடைய வழியில் செல்ல முயற்சித்தான்; ஆனால் அது, அவனுடைய குடும்பத்தில் ஒரு பெரும் பிளவை உண்டுபண்ணியது (ஆதி.16). நாம் தேவனோடு நடக்காவிட்டால் நமது குடும்பத்திலும் வெளியிலும் ஆசீர்வாதம் இருக்காது.

நாம் அனைவரும் தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறோம். ஆனால் அனைவரும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க விரும்புவதில்லை. இதுதான் ஒரு நதிக்கும் குட்டைக்கும் உள்ள வேறுபாடு. சங்கீதம் 1 இல் காணப்படும் பக்தியுள்ள விசுவாசி தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்று, கனிதரும் ஒரு மரமாக மற்றவர்களுக்கு தனது ஆசீர்வாதத்தை பகிர்ந்து கொள்கிறான். “மரத்தை நடுகிறவன் தன்னையும் மற்றவர்களையும் நேசிக்கிறான்” என்று ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. கனிதரும் மரமாக வாழ்ந்து ஆசீர்வாதத்தைப் பகிரவேண்டிய கிறிஸ்தவர்களுக்கும் இது பொருந்தும்.

இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள் (மத்.10:8).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

சகோதர அன்பு!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2022)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ஆதியாகமம் 4:1-10; 1யோவான் 3:11,12

கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான் (ஆதியாகமம் 4:9).

நாம் இவ்வுலகத்தில் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றலாகப் பிறந்தோம். நமக்கு முன்பிறந்த ஒவ்வொரு குழந்தையைப்போலவே நாமும் சிலவற்றை நமது பெற்றோரிடமிருந்து பெற்றிருக்கிறோம். நம்முடைய உடற்கூறு மற்றும் மரபியல் அமைப்புகள் நமது மூதாதை யரிடமிருந்து நம்முடைய ஆண்டவரால் நமக்குத் தரப்பட்டுள்ளன (சங்கீதம் 139: 13-16). ஆனால், நாம் சுபாவப்படி கோபாக்கியினையின் பிள்ளைகளாகப் பிறந்தோம்; நாம் வளரவளர கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாக மாறினோம் (எபே.2:1-3). இயற்கையின்படி நாம் அனைவரும் பாவிகள். நாம் அவ்வாறு இருப்பதாலும் நம்முடைய செயல்களினாலும் நமக்கு ஒரு இரட்சகர் தேவை.

ஆனால், நாமும் மறுபடியும் பிறந்து தேவனுடைய பிள்ளைகளாக விசுவாசிகளாக ஆபேலைப்போல மாறமுடியும். தான் ஒரு பாவி என்பதை அவன் ஒத்துக்கொண்டு, விசுவாசத்தினாலே இரத்தப் பலியை ஆண்டவருக்குக் கொண்டு வந்தான் (எபி.11:4). நம்முடைய பிறப்பினாலே மனிதவாழ்வைப் பெற்றுக் கொண்டதுபோல, நம்முடைய பாவங்களுக்காகத் தன்னையே பலியாக ஈந்த இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினாலே நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். காயீனுக்கு அந்த விசுவாசம் இல்லை. அவன் தான் ஒரு பாவியென்று அறிக்கையிடவில்லை. எனவே அவன் இரத்தப்பலியைக் கொண்டுவரவில்லை. பூமியிலே தனது சொந்தக் கைகளின் பிரயாசத்தையே கொண்டு வந்தான். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல (எபேசி. 2:8,9).

காயீன் ஒரு விசுவாசியல்ல, அவன் ஏமாற்றுக்காரன், பிசாசின் மகன். “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்” (1யோவான் 3: 11-12). இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்து விட்டு, அதற்கு பதிலாகப் போலியான மார்க்கத்தைப் பின்பற்றுபவனே பிசாசின் மகன். சாத்தானுக்கு ஒரு குடும்பம் உண்டு (ஆதி.3:15). யோவான் ஸ்நானனும் இயேசுவும் பரிசேயர்களை “விரியன் பாம்புகளே” என்று அழைத்தனர். சாத்தான் ஒரு பாம்பு (மத்.3:7-9; 12:34;23:33). இயேசு அவர்களை நரகத்தின் பிள்ளைகள் என்று குறிப்பிட்டார் (மத்.23:15). இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் பரிசேயர்களே. அப். பவுலும் கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களை அனுபவித்தார் (2கொரி.11:26; அப்.20:29,31; 1யோவான் 2:18-23). அனுபவமிக்க ஒரு தேவ நற்செய்தியாளர் “ஒருவரையொருவர் நேசிப்பது, விசுவாசிகளின் அடையாளம் என்றால் நம்முடைய உள்ளுர் சபையைச் சார்ந்த எவருமே உண்மையிலேயே மறுபடி பிறந்தவர்கள் அல்லர் என்று நான் எண்ணுகிறேன்” என்றார்.

“என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்ற காயீனின் கேள்விக்கு வருவோம். அதில் ஒரு சிறிய கிண்டல் மறைந்திருக்கிறதல்லவா? அவன் சகோதரன் ஒரு மந்தை மேய்ப்பவன் (ஆதி.4:2), “மந்தையைக் காக்கிறவனுக்கு நான் காவலாளியோ?” என்று அவன் கேட்டிருக்கலாம். இதற்கான பதில் “ஆம்! “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூருவதும், உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவதும் இரு பெரிய கட்டளைகள் என்றும், நம்முடைய உதவி யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களே நமக்குப் பிறன் என்றும் இயேசு கூறியுள்ளார் (லூக்கா 10: 25-37).

மனுக்குலத்தின் உறுப்பினர்களாகிய நாம், ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும். தேவனுடைய குடும்பத்தின் உறுப்பினர்களாகிய நாம் ஒருவரையொருவர் நேசித்து ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யவேண்டும் (கலா.5:13). சாத்தான் பொய்யனும் மனுஷ கொலை பாதகனுமாயிருக்கிறான் (யோவான் 8: 37-45) அவனுடைய பிள்ளையான காயீனும் தகப்பனைப்போலவே இருந்தான்.

“ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” (கலாத்தியர் 6:10).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

சாத்தானை முறியடிப்போம்!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்ட் 2022)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: யோபு 7:1-21


அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை … என்றது (ஆதியாகமம் 3:4).


தேவன் தாம் உருவாக்கின நம்முடைய ஆதி பெற்றோரை ஏதேன் என்னும் ஓர் அழகிய தோட்டத்தில் வைத்தார். அங்கே அவர்களுடைய சகல தேவைகளும் சந்திக்கப்பட்டன. தேவனோடு ஐக்கியம் கொள்ளவும், உறவாடவும் அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தன. எப்பொழுதும் எதிர்த்து நிற்கும் எதிரியான சாத்தானும் அவர்களைத் தாக்குவதற்கு ஆயத்தமானாான். இந்த நிகழ்விலிருந்து அவனைத் தோற்கடிக்கத் தேவையான அறிவுரைகளைப் பெற்றுக்கொள்கிறோம்.

சாத்தானுக்கு இடம் கொடாதிருங்கள்:

ஏதேன் தோட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது, ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பு (2:15), அதாவது அவன் அதனைப் பாதுகாக்கவேண்டும். “ஜீவ விருட்சத்துக்குப்போம் வழியைக் காவல் செய்ய” என்ற வசனத்தில் உள்ள “காவல்” என்ற சொல்லே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதாம் தன் மனைவியுடன் இல்லாத வேளையிலே பிசாசானவன் எளிதாக ஏவாளைக் குறி வைத்துவிட்டான். “பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” என்று எபேசியர் 4:27 நம்மை எச்சரிக்கின்றது. ஒரு சிறிய இடுக்கு கிடைத்தாலும் அவன் அதனூடாக நுழைந்து ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிடுவான். இன்றும்கூட அவனது கூட்டாளிகள் இரகசியமாக நம் எண்ணங்களில் நுழைந்து தொல்லைகள் தருகின்றனர் (2 தீமோ.3:6;யூதா-4). தேவையற்ற இச்சைகளை உருவாக்கிக் கொள்வதோ அல்லது இரக்கமற்ற எண்ணங்களோ தேவனுடைய சித்தத்தைச் செய்ய மறுப்பதற்கு இடமளித்துவிடும்.

சாத்தானின் சலுகைகளுக்கு மயங்காதேயுங்கள்:

பிசாசானவன் ஒரு எத்தன்; தனது இயற்கையான உருவத்தை வெளியே காட்டாத வேஷக்காரன். “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வான்” (2 கொரி.11:14) நம்மை வழி விலகச் செய்வான். தேவனுடைய வார்த்தைக்கு சந்தேகக் கேள்விகள் எழுப்பும்பொழுதும் வேத எழுத்துக்களின் ஆதாரத்தை மறுப்பதற்கு நம்மை ஊக்கப்படுத்தும்பொழுதும் சாத்தான் கிரியை செய்கிறான் என்று நாம் உறுதியாய்க் கூறமுடியும். நம்மையும் அவன் பார்த்து “தேவன் சொன்னது உண்டோ?” என்று தேவனுடைய வார்த்தையில் சந்தேக வினா எழுப்புவான்; பின்னர் தேவவார்த்தையை மறுதலிப்பான். பின்னர் தனது பொய்யை அதில் புகுத்துவான். ஆனால் நாமோ, “ஆம் தேவன் அவ்வாறுதான் சொன்னார்; நான் அதை மதிக்கிறேன்” என்று கூறவேண்டும். உடனடியாக தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணி அவரது ஞானத்தைத் தேடவேண்டும். நாம் அறிந்த வேதவாக்கியங்களை அவர் நமக்கு நினைவூட்டுவார். எனவே சாத்தானை எதிர்க்க ஆவியின் பட்டயத்தை நாம் உபயோகிக்க முடியும். பிசாசு இயேசுவை சோதித்தபொழுது அவரும் வேத வசனத்தையே பயன்படுத்தினார் (எபே.6:17; மத். 4:1-11). எனவே நம் இருதயத்தில் தேவ வார்த்தையை வைத்திருத்தல் மிக அவசியம்; அப்பொழுது அவனை நிச்சயமாக நாம் மேற்கொள்ள முடியும் (சங். 119:11).

தேவன் அருளிய ஈவுகளை எண்ணிப் பாருங்கள்:

தேவன் இதுவரை தராத ஒன்றை நமக்குத் தருவதாக சில சலுகைகளை அறிவிப்பதே சாத்தானுடைய சோதனையாகும். இயேசுவை பிசாசு சோதிக்கும்பொழுது, “நீர் அவருடைய நேச குமாரன் என்று தேவன் சொன்னார் அல்லவா? அவர் உம்மை நேசித்தால் நீர் ஏன் பசியாயிருக்கவேண்டும்” என்று ஆலோசனை கூறினான். சோதனைகளுக்கு எதிரான எச்சரிக்கைகளை யாக்கோபு 1:12-15 இல் நாம் வாசிக்கலாம். … சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

இதனைத் தொடர்ந்து நாம் தேவனு டைய நன்மையும் பரிபூரணமான ஈவுகளைப் பெற்றவர்கள் என்பதை நினைவூட் டிக்கொள்ள வேண்டும் (வசனம் 16-18).

… நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜநிப்பித்தார்.

பரலோகப்பிதாவின் சிறப்பான ஆசீர்வாதங்களுக்குப் பதிலாக சாத்தான் மிக மலிவான நன்மைகளை அளிப்பதே அவன் அளிக்கும் சோதனை. இயேசு பசியாறுவதற்கு அங்குள்ள கல்லுகளை அப்பங்களாக மாற்றக் கோரினான். ஆனால் இயேசுவோ அதைவிட ஊட்டச் சத்துமிக்க ஜீவஅப்பமான தேவனுடைய வார்த்தையையே விரும்பினார் (மத். 4:4).

ஏவாள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டாள் என்று 1தீமோத்தேயு 2:14 கூறுகிறது. ஆனால், ஆதாமோ தெரிந்தே பாவஞ்செய்தான்; ஏனெனில் அவன் தன் மனைவியுடன் ஒத்துப்போக விரும்பினான். அவனது பிடிவாதமான கீழ்ப்படியாமையினால் முழுமனுக்குலமும் பாவத்தில் விழுந்து நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானது (ரோமர் 5: 12-21). ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலும் சிலுவை மரணமும் நம்மை ஆக்கினையிலிருந்து இரட்சித்து நம்மை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றியது.

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் (யாக்கோபு 4:7).

தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 6:17).

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

மறைவான சுத்தியல்!

அதிகாலை வேளையில்…
(மே-ஜுன் 2022)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோபு 7:1-21


 என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது  என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே
என்னைத் தேடுவீரானால் நான் இரேன் (யோபு 7:21).


யோபுடைய வாழ்வின் அஸ்திபாரம் ஆட்டம் கண்டது. அவருடைய ஆஸ்திகள் யாவும் அழிந்தன; அவனுடைய பிள்ளைகள் அனைவரும் மாண்டனர். வழித்தோன்றல்களுக்கு வாய்ப்பு அற்றுப்போனது. கர்த்தர் யோபுவை சாத்தானுடைய கரத்தில் கொடுத்துவிட்டார். இவற்றின் காரணம் யோபுடன் தொடர்புடையவர்களுக்கு புரியவில்லை. அவரது மனைவியும் “தேவனை தூஷித்து ஜீவனை விடும்” என்று அவருக்கு ஆலோசனை கொடுத்தாள். ஆனால் யோபுவோ “இத்தீங்குகளை தேவன் அனுமதித்தாரானால் அது தனக்கு நன்மையாகவே முடியும்” என முழுவதும் நம்பினார்.

மற்றவர்களுக்கு புத்தி சொல்லி ஆறுதல் அளித்து வந்த யோபு, தற்சமயம் துன்பத்தில் கலங்குவதற்கு இடம் தருவதை கண்டு யோபுடைய நண்பரான எலிப்பாஸ் வியப்படைந்தார். யோபுடைய வழிகள் உத்தமமாய் இருந்தது எனில் அவர் கலங்க வேண்டிய அவசியமில்லை என்ற தவறான முடிவுக்கு வந்தார். பாவத்தின் விளைவே அனைத்து இடர்பாடுகளுக்குக் காரணம் என அவர் புரிந்துகொண்டார். எனவே யோபினுடைய பாவத்தின் விளைவே அவருடைய இத்துன்பங்களுக்குக் காரணம்; வேறு விளக்கங்கள் தேவையல்ல; இதற்குத் தப்பி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள, கசப்புடன் முறையிடாமல் பாவத்தை அறிக்கையிட வேண்டும் என்று அவர் கூறினார். யோபு தன் நண்பரின் பேச்சினால் மன வருத்தம் அடைந்தார். எலிப்பாஸ் யோபுடைய வழக்கைப் பெரியதாக்கி அவருடைய நிலையை இன்னும் மோசமாக்கினார். எவ்வித காரணமும் இல்லாமல் தன்னைச் சுற்றிலும் வாழ்க்கை தரைமட்டமானதை அறிந்த யோபுவின் நிலையை சற்றே சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய சூழலை எலிப்பாஸ் தவறாகக் கணித்துவிட்டார் என்பதை யோபு நன்கு உணர்ந்துகொண்டார்.

ஏழாம் அதிகாரத்தில் யோபு மனித வாழ்வைப் பற்றிய தத்துவங்களைத் தெரிவிக்கிறார். இப்பூமியில் மனித வாழ்வு குறைந்த எண்ணிக்கையுடையது. அது கடந்து போகும் மேகத்துக்கு ஒப்பானது. இக்குறுகிய காலத்தில் தனது வாழ்வு வேதனையும் துயரும் நிறைந்துள்ளது. யேகோவா தன்னைப் பற்றி ஏன் கரிசனையுடையவராய் இருக்க வேண்டும்? பின் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவரை விசாரிக்கவும் நிமிஷந்தோறும் அவனை சோதிக்கவும் வேண்டும்? இந்நிலையில் “வாழ்வு இறப்புக்கு ஒத்தது. விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன்” என்று விரும்பினார். யோபுவை சாத்தானின் கையில் ஒப்புக்கொடுக்க தேவன் அனுமதித்தது ஓர் இரக்கமில்லாத செயல். தனது வாழ்வு உத்தமும் நேர்மையுமாய் இருக்கும்பொழுது தேவன் ஏன் இதனை அனுமதித்தார்?

சாமுவேல் சாண்ட்விக் தன்னுடைய இளம்பிராயத்தில் உள்ளூரிலுள்ள ஒரு கொல்லரின் கடைக்குச் செல்வது வழக்கம். அக்கொல்லர் ஒரு பெரிய இரும்புத் துண்டினை இடுக்கியில் பிடித்து, அது வெண்மையாகும்வரை துருத்தியை உபயோகித்து நெருப்பில் வைப்பார். பின்னர் அவ்விரும்புத் துண்டை எடுத்து ஒரு பட்டைக்கல்லின் மீது வைத்து ஒரு சிறு சுத்தியால் தட்டுவார்; அவரது உதவியாளரான மற்றொருவர், அக்கொல்லர் அடித்த அதே இடத்தில் மற்றொரு சுத்தியால் ஓங்கி அடிப்பான். அந்தத் துண்டு அழகாக உடைந்துவிடும். அதனைக் கண்ட சாண்ட்விக் ஆர்வத்துடன், “நீங்கள் அந்த சிறு சுத்திக்கு அதிக வேலை கொடுப்பதில்லையே” என்று கேட்டான். அதற்கு அந்தக் கொல்லர் சிரிப்புடன், “தம்பி, அடுத்த மனிதர் எங்கு அடிக்க வேண்டும் என்று காட்டுவதற்கே நான் தட்டுவேன்” என்று கூறினார்.

யோபுடைய வாழ்வின் அனைத்து ஆதாரங்களும் அழிந்து போயின. அவனுடைய நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர். இந்த பேரிடர்கள் யாவும் பரலோகில் திட்டமிடப்பட்டது என்பதை அவர்கள் அறியவில்லை. யோபுவை உபத்திரவப்படுத்த சாத்தானுக்கு தேவன் அதிகாரம் கொடுத்ததையும், சாத்தான் தன்னுடைய சுத்தியலை வைத்து யோபுவை அடித்த பொழுது அவை யாவும் பரலோகப் பிதாவின் அன்பின் வழிகாட்டுதலின்படியே நடந்தது என்பதையும் அவர்கள் அறியவில்லை. இரும்பினை எங்கு அடிக்கவேண்டும் என்று கொல்லர் குறிப்பிடுகிறாரோ அதுபோலவே யோபுவையும் எங்கு தாக்க வேண்டுமென்றும் தேவன் கட்டளையிட்டார்.

இன்று நீங்களும் அநியாயமான விமரிசனம், தேவையில்லாத உபத்திரவங்கள், திருப்பித்தரப்படாத அன்பு இவற்றை அனுப வித்துக்கொண்டிருக்கிறீர்களா? தேவன் அனுமதிக்கும் எல்லையை மீறி சாத்தான் தேவனுடைய பிள்ளைகளை உபத்திரவப்படுத்தமாட்டான். தேவன் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். நண்பர்கள் அநியாயமாய் நம்மைக் குற்றப்படுத்தினாலும் நமது வாழ்வு தேவனுக்கு முன்பாக நீதியாக இருப்பின் சாத்தானின் எதிர்ப்புகளுக்கு நாம் கவலைப்படத் தேவையில்லை.


அதிகாலைப் பாடல்:

அனுதினமும் ஒவ்வொரு நொடியும் தேவகிருபை என்னைத் தாங்கிட,
எந்தன் துன்பத்தை சகிக்க, என் பிதாவின் ஞான நன்மையை நம்புவேன்.
அவருடைய இதயம் அளவில்லா அன்பால் நிறைந்தது.
தமக்கு சிறந்ததெனத் தோன்றியதை ஒவ்வொரு நாளிலும் தருகிறார்.
அதில் இன்பமோ, துன்பமோ, பாடுகள் இருந்தாலும்
நாம் எதைப் பற்றியும் கவலைப்படக் காரணமில்லை

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை