பலியின் இரத்தம்!
அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2023)
Dr. உட்ரோ குரோல்
வேதபகுதி: யாத்திராகமம் 12:12-51
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களை கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும் (யாத்தி.12:13).
பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பலிகளின் இரத்தத்தின் அவசியத்தை சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது. சில முற்போக்கு இறையியலாளர்கள் நற்செய்தி கிறிஸ்தவத்தை “கசாப்புக்கூடம் மதம்” என்று அழைக்கின்றனர். அநேக மக்கள் கிறிஸ்துவின் சிலுவையை நிராகரித்து, அவருடைய நன்னெறிக் கொள்கைகளை மட்டும் பின்பற்ற முயற்சிக்கின்றனர் (1கொரி.1:18). இரத்தத்தை நிராகரிப்பது இயேசுவையும் அவர் தரும் நித்திய இரட்சிப்பையும் புறக்கணித்தலுக்கு சமமாகும்.
1. தேவன் கதவு நிலைகளின் மீதிருந்த இரத்தத்தைக் கண்டார்.
கதவு நிலைகளிலும் மேல் சட்டத்தி லும் பூசப்படும் இரத்தமானது “நியாயத் தீர்ப்பு வந்துகொண்டிருக்கிறது” என்று எகிப்தியருக்கு எச்சரிப்பாக அமைந்தது. ஆனால், கதவுக்கு பின்னாலிருந்த யூதர்களுக்கு அது நம்பிக்கையையும் சமாதானத்தையும் தந்தது. அவர்கள் தங்களுடைய வீட்டை சங்காரத்தூதன் கடந்து சென்றுவிடுவார்; தலைமகன் இறப்பதில்லை என்பதை அறிந்து கொண்டனர். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை பக்கத்து வீட்டின் கதவு நிலைகளில் பூசுவதால் பலனில்லை; ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டுக் கதவு நிலைகளில் பூச வேண்டும். யாத்திராகமம் 12:3-5இல் “ஒவ்வொரு ஆட்டுக்குட்டி,… ஒரு ஆட்டுக்குட்டி,… அந்த ஆட்டுக்குட்டி” என்ற சொற்கள் காணப்படுகின்றன. இந்த ஆட்டுக்குட்டி உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவை உருவகப்படுத்துகிறது (யோவான்1:29; 1பேதுரு 1:18-19).
2. தேவன் உடன்படிக்கைப் பெட்டியின் மீதிருந்த இரத்தத்தைக் கண்டார்.
யூதர்களின் நாட்காட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை பிரதான ஆசாரியன் மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து மக்களுக்காக பாவநிவாரணம் செய்த நாள் மிக முக்கியமான நாளாகும். முதலாவது அவன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவ நிவிர்த்தி செய்ய ஒரு காளையைக் கொன்று அதன் இரத்தத்தை மகாபரிசுத்த ஸ்தலத்திலுள்ள கிருபாசனத்தின்மேல் தெளித்தான். பின்னர் ஜனங்களின் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று அதன் இரத்தத்தையும் கிருபாசனத்தின் மேல் தெளித்தான். பின்னர் உயிரோடிருக்கும் வெள்ளாட்டுக்கடாவின்மேல் தன் கைகளை வைத்து அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிட்டான் (வச.21). உடன்படிக்கைப் பெட்டிக்குள் கற்பனைப் பலகைகளும் இருந்தன. ஆண்டவர் உன்னதத்திலிருந்து கீழே நோக்கும் பொழுது அவர் மீறப்பட்ட கற்பனைகளையல்ல, கிருபாசனத்தின்மேல் தெளிக்கப்பட்டிருந்த இரத்தத்தையே கண்ணோக்கினார். அல்லேலூயா!
3. தேவன் மனித சரீரங்களின் மேலிருந்த இரத்தத்தைக் கண்டார் (யாத். 29:20; லேவி.14:14,26-28).
ஆரோனும் அவனுடைய குமாரர்களும் ஆசாரியர்களாய் அபிஷேகம் பண்ணப்பட்டபொழுது, மோசே அவர்களது வலது காதின் மடலிலும், அவர்களது வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் குற்ற நிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பூசினான். இது தேவனுக்கு முற்றும் அர்ப்பணிப்பதற்கு அடையாளம். இதே முறைதான் சுகமான குஷ்டரோகிகள் பாளையத்திற்குத் திரும்பும்பொழுதும் பின்பற்றப்பட்டது (லேவி.1 4:14). ஒரு பாவி இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்பொழுது ஆவியானவர் அவன்மீது இரத்தத்தைத் தெளிக்கிறார்; அவன் இரட்சிக்கப்படுகிறான். ஒரு விசுவாசி தன்னுடைய பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கையிடும்பொழுது இரத்தம் பூசப்பட்டு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (1யோவான் 1:6-8).
4. தேவன் சிலுவையின் மேலிருந்த இரத்தத்தைக் கண்டார்.
“நமது ஆண்டவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ.1:20). இயேசு தமது இரத்தத்தால் உண்டாக்கிய புது உடன்படிக்கையை நினைப்பூட்ட திருவிருந்தை நிறுவினார் (லூக்கா 22:20). இயேசு சிலுவையில் ஏற்பட்ட தமது காயங்களை (தழும்புகளையல்ல) பரலோகத்துக்கு எடுத்துச்சென்றார். நம்மை இரட்சிப்பதற்காக அவர் செலுத்திய கிரயத்தை அவருடைய பிள்ளைகளுக்கு அது நினைவூட்டுகிறது. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டோம் (1 பேதுரு 1:19).
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1யோவான் 1:9) என்ற வாக்குறுதி மாறாதது.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை