ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2025)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திக்க தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். ஒவ்வொரு நாளின் தியானங்களும் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
அக்டோபர் மாதம் மதுரை திருநகர் சி.எஸ்.ஐ ஆலயத்திலும், ஏழாயிரம் பண்ணை சி.எஸ்.ஐ ஆலயத்திலும் சத்தியவசன முன்னேற்றப்பணிகளை செய்ய கர்த்தர் கிருபை செய்தார். சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபை செய்து வருகிறார். இவ்வூழியங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தை அறியவும் ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தப்படவும் வேண்டுதல் செய்கிறோம். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம்.
இத்தியானபுத்தகத்தில் வெளியாகிவரும் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடிக்கிறவர்கள் வழக்கம்போல் பெயர்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். அவர்கள் பெயர்களை அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் பிரசுரிப்போம்.
நவம்பர் மாதத்தில் இராஜாக்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களையும், டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்கள் தங்களது ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர. சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
ஆ.ஜான் துரை
