ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“அண்டசராசரங்களையும் படைத்து ஆண்டு நடத்திவருகிற தேவாதிதேவனின்” நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

ஜூலை-ஆகஸ்டு தியானபுத்தகத்தின் வாயிலாக பங்காளர்கள் வாசகர்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உலகநாடுகளுக்கிடையே அமைதி இல்லை. அரசியல் குழப்பங்கள், கொடிய நோய் பரவலுக்கான செய்திகள், கால சூழ்நிலைகளில் வேறுபட்ட நிலை இவைகளே அன்றாடம் நாம் கேள்விப்படுகிற செய்திகள். எசேக்கியேல் 9:4ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறபடி இதுபோன்ற எல்லா காரியங்களுக்காகவும் மேலும் தேசத்தில் காணப்படும் அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டெழுது திறப்பிலே நின்று ஜெபிக்கிறவர்களாக இருக்க நம்மை அர்ப்பணிப்போம். நம்மனைவரின் ஒருமனப்பட்ட ஜெபத்திற்கு நல்ல பலனை நாம் நிச்சயம் காண்போம்.

சத்தியவசன தொலைக்காட்சி, வாட்ஸ்அப், இணையதளம், YouTube ஊடகங்கள் மூலமாகவும் மாதாந்திர பத்திரிக்கை, இலக்கியபணி வாயிலாகவும் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழில் ஜூலை மாத தியானங்களில் கிறிஸ்துவை நமது வாழ்வில் பிரதிபலிப்பதைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் ஆழமான சத்தியங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். ஆகஸ்டு மாதம் யோசுவா, நியாயாதிபதிகளின் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருநாளின் தியானங்களும் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு அதிக பிரயோஜனமுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம்.

ஆ.ஜான் துரை

ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.”

அனுதினமும் கிறிஸ்துவுடன் மே-ஜுன் மாத இதழ் வெளிவர கிருபை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடுகளை நாம் அன்றாட செய்திகளில் கேட்டு ஜெபித்துவருகிறோம். அதற்குப் பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார் (2சாமுவேல் 21:14). நம் அனைவரின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டு சீக்கிரமாகவே யுத்தங்களை ஓயப்பண்ணுவார்.

சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

பேப்பர் மற்றும் அச்சுக்கூலி உயர்வுகளினால் வருடாந்திர விசுவாசபங்காளர் காணிக்கை ரூ.1000/- ஆகவும், அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தின் வருடசந்தா ரூ.400/- ஆகவும் உயர்த்தவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகி இருக்கிறோம். பங்காளர்களும் சந்தாதாரர்களும் இதைக் கவனத்தில் கொள்ளவும் அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் மே மாதம் யாத்திராகமம் புத்தகத்தில் மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் எல்லாச் சூழ்நிலையிலும் ஜனங்களுடைய மனப் பாங்கையும், மோசேயின் உயரிய குணங்களையும் தியானிக்கும் தியானங்கள் இடம் பெற்றுள்ளன. ஜுன் மாதம் யோசேப்பின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள் இடம் பெற்றுள்ளது. இரண்டு மாத தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். சகோதரி அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தியானங்கள் அனுதின வாழ்வில் அதிக பயனுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம்.

ஆ.ஜான் துரை

ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“நம்முடைய பாவங்களையும் சாபங்களையும் சுமந்து தீர்த்த” இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கிறிஸ்துவின் பாடுமரணங்களை அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில் இந்த தியானங்கள் அனைவருக்கும் அதிக ஆசீர்வாதமாக இருக்கும் என்றே கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களை கர்த்தர் நாம மகிமைக்காக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் தியானபுத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.

நமது தேசத்துக்காகவும், மே மாதத்திற்குள்ளாக தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தொடர்ந்து ஜெபிப்போம். நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந் தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசேக்கி.22:30). திறப்பிலே நின்று தேசத்தில் கர்த்தருக்கு பயந்த ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு சுபிட்சமடைய கருத்தாய் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

மார்ச் 1-28 மற்றும் ஏப்ரல் 18 -30 ஆகிய நாட்களில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் லெந்து நாட்களுக்கான தியானங்களாகவும், கர்த்தருக்குப் பயப்படுதலைக் குறித்தும் எழுதியுள்ளார்கள். மார்ச் 29-31, ஏப்ரல் மாதம் 1-17 ஆகிய நாட்களில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றியும், பின்பு அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்ததையும் தியானித்து எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆ.ஜான் துரை

ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

புத்தாண்டில் இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திக்க தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். கடந்த நாட்களில் எல்லாம் கர்த்தர் தமது மிகுந்த தயையினாலே நம்மை போஷித்து பராமரித்து நம்மேல் கரிசனையுள்ளவ ராயிருந்து வழிநடத்தி வந்திருக்கிறார். அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்தியபுயங்கள் உனக்கு ஆதாரம் (உபா.33:27). இப்புதிய வருடத்திலும் கர்த்தர் புதிய காரியங்களை செய்யவும் உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றி, குடும்பங்களில் தேவசமாதானத்தை தந்தருளி ஒவ்வொரு குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து வழிநடத்த ஜெபிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் ஜெபத்தினாலும் உதாரத்துவமான காணிக்கையினாலும் தாங்கிவந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

2026ஆம் வருட சத்தியவசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபை செய்துவருகிறார். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் தொடர்ந்து இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம். வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடித்தவர்கள் பெயர்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.

ஜனவரி மாதத்தில் தேவனோடு நெருங்கி ஜீவிக்க அருமையான தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், பிப்ரவரி மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ள தியானங்கள் இடம்பெற்றுள்ளது. தியானங்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர. சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஆ.ஜான் துரை

ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திக்க தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். ஒவ்வொரு நாளின் தியானங்களும் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

அக்டோபர் மாதம் மதுரை திருநகர் சி.எஸ்.ஐ ஆலயத்திலும், ஏழாயிரம் பண்ணை சி.எஸ்.ஐ ஆலயத்திலும் சத்தியவசன முன்னேற்றப்பணிகளை செய்ய கர்த்தர் கிருபை செய்தார். சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபை செய்து வருகிறார். இவ்வூழியங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தை அறியவும் ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தப்படவும் வேண்டுதல் செய்கிறோம். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம்.

இத்தியானபுத்தகத்தில் வெளியாகிவரும் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடிக்கிறவர்கள் வழக்கம்போல் பெயர்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். அவர்கள் பெயர்களை அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் பிரசுரிப்போம்.

நவம்பர் மாதத்தில் இராஜாக்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களையும், டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்கள் தங்களது ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர. சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஆ.ஜான் துரை

ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை வழுவாது பாதுகாத்து வழிநடத்திவரும் அன்பின் தேவன் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வெளிவர தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இத்தியானங்கள் வாயிலாக அநேகமாயிரமான மக்களது வாழ்க்கையிலே கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்யும்படியாக உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள். தங்கள் ஆவிக்குரிய நண்பர்கள் விசுவாசிகளுக்கும் தியான நூலை அறிமுகம் செய்துவையுங்கள்.

ஜூலை மாதம் 15ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று சென்னையில் நடை பெற்ற போதகர்கள் விசுவாச பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்றது. இதில் உபயோகிக்கப்பட்ட கையேடு விநியோகத்திற்கு உள்ளது. தேவைபட்டோர் எழுதி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபைசெய்து வருகிறார். இவ்வூழி யங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தை அறியவும் ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தப்படவும் வேண்டுதல் செய்கிறோம். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம்.

செப்டம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் தாழ்மையைப் பற்றி நாம் தியானிக்கும்படியாக எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் பிரசங்கியின் புத்தகத்திலிருந்து தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்கள் தங்களது ஆவிக்குரிய வாழ்வுக்கு பேருதவியாக இருக்க ஜெபிக்கிறோம். சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்