ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திக்க தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். ஒவ்வொரு நாளின் தியானங்களும் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

அக்டோபர் மாதம் மதுரை திருநகர் சி.எஸ்.ஐ ஆலயத்திலும், ஏழாயிரம் பண்ணை சி.எஸ்.ஐ ஆலயத்திலும் சத்தியவசன முன்னேற்றப்பணிகளை செய்ய கர்த்தர் கிருபை செய்தார். சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபை செய்து வருகிறார். இவ்வூழியங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தை அறியவும் ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தப்படவும் வேண்டுதல் செய்கிறோம். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம்.

இத்தியானபுத்தகத்தில் வெளியாகிவரும் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடிக்கிறவர்கள் வழக்கம்போல் பெயர்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். அவர்கள் பெயர்களை அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் பிரசுரிப்போம்.

நவம்பர் மாதத்தில் இராஜாக்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களையும், டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்கள் தங்களது ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர. சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஆ.ஜான் துரை

ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை வழுவாது பாதுகாத்து வழிநடத்திவரும் அன்பின் தேவன் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வெளிவர தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இத்தியானங்கள் வாயிலாக அநேகமாயிரமான மக்களது வாழ்க்கையிலே கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்யும்படியாக உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள். தங்கள் ஆவிக்குரிய நண்பர்கள் விசுவாசிகளுக்கும் தியான நூலை அறிமுகம் செய்துவையுங்கள்.

ஜூலை மாதம் 15ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று சென்னையில் நடை பெற்ற போதகர்கள் விசுவாச பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்றது. இதில் உபயோகிக்கப்பட்ட கையேடு விநியோகத்திற்கு உள்ளது. தேவைபட்டோர் எழுதி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபைசெய்து வருகிறார். இவ்வூழி யங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தை அறியவும் ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தப்படவும் வேண்டுதல் செய்கிறோம். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம்.

செப்டம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் தாழ்மையைப் பற்றி நாம் தியானிக்கும்படியாக எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் பிரசங்கியின் புத்தகத்திலிருந்து தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்கள் தங்களது ஆவிக்குரிய வாழ்வுக்கு பேருதவியாக இருக்க ஜெபிக்கிறோம். சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை பாதுகாத்து வழிநடத்திவரும் அன்பின் தேவன் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்வருடத்திலும் நாம் ஆறு மாதங்களைக் கடந்துவர தேவன் நமக்கு கிருபை செய்துள்ளார். அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை நாம் ஏறெடுப்போம். இவ்விதழில் இடம்பெற்றுள்ள தியானங்கள் அனைத்தும் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

நமது தேசத்திலும் உலகத்தின் பல பகுதிகளிலும் யுத்தங்களையும் போர் சூழல் மூண்டு வருவதை நாம் காணமுடிகிறது. இவைகளெல்லாம் இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு நாம் சமீபமாக இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆனபடியால் நாம் யாவரும் இயேசுகிறிஸ்து மாற்கு 13:37இல் நமக்கு அறிவுறுத்தினபடியே நாம் விழித்திருப்பது அவசியமாயிருக்கிறது.

ஜூலை மாதம் 15ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று சென்னை வேப்பேரியில் உள்ள அனிதா மெதடிஸ்ட் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் போதகர்கள் விசுவாச பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்படும். சென்னையிலுள்ள பங்காளர்கள் இந்த கருத்தரங்கில் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்பட அன்பாய் அழைக்கிறோம். இதைக்குறித்த விபரங்கள் 7ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் விபரங்களுக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி தொடரில் வேதாகமம் எவ்வாறு உருவானது என்ற புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது. அதை வாசித்து ஆசீர்வாதமடையுங்கள். ஜூலை மாதத்தில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து எழுதிய தியானங்களின் இரண்டாம் பகுதியின் மொழியாக்கத்தையும், ஆகஸ்டு மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் பலவிதமான தலைப்புகளில் எழுதியுள்ள தியானங்களையும் பிரசுரித்துள்ளோம் வாசித்து ஆசீர்வாதமடையுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நமக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து இன்றைக்கும் ஜீவிக்கின்ற அன்பின் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழை உங்களுக்கு அனுப்பி வைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இத்தியானங்கள் அனைத்தும் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

இன்றைய நாட்களில் தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களும் தேவ பயமற்ற செயல்களும் கர்த்தருக்கு அவகீர்த்தியைக் கொண்டுவருகிற காரியங்களும் கிறிஸ்தவ சமுதாயத்தில் நடைபெற்று வருகிறதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனபடியால் நாம் விழிப்புள்ளவர்களாக இருந்து எச்சரிக்கையோடு தேவனிடத்தில் மன்றாடுவோம். பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும் (2 பேதுரு 1:19).

சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான காரியங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தாங்கள் பெற்று வரும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம். தொடர்ந்து சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள். இந்நிகழ்ச்சிகள் வாயிலாக அநேகர் மனந்திரும்பவும் சத்தியத்தை அறிந்துகொள்ளவும் வேண்டுதல் செய்யுங்கள்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr. உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் தொடராக பிரசுரித்து வருகிறோம். அதை வாசித்து ஆசீர்வாதமடையுங்கள். மே மாதத்தில் Dr. உட்ரோ குரோல் அவர்கள் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து எழுதிய தியானத்தின் மொழியாக்கத்தையும், ஜுன் மாதத்தில் சகோதரி ஜெபி பிடில் அவர்கள் பலவிதமான தலைப்புகளில் எழுதியுள்ள தியானங்களையும் பிரசுரித்துள்ளோம். வாசித்து ஆசீர்வாதமடையுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான காரியங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். இவ்வூழியத்தை காணிக்கையாலும் ஜெபத்தினாலும் தாங்கும் அன்பர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

ஓராண்டிற்குள் வேதாகமத்தை வாசிப்பதற்கான அட்டவணைப்படி 2024ஆம் ஆண்டு வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். இவ்வாண்டிலும் இன்னும் அநேகர் வேதாகமத்தை வாசிக்க உற்சாகப் படுத்துகிறோம். சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாரத்தில் மூன்று நாட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அநேகமாயிரமான மக்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து சத்தியங்களை கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் பயனடைந்து வருகின்றனர். தாங்களும் குடும்பமாக நிகழ்ச்சியில் பங்கெடுத்து ஆசீர்வாதமடையுங்கள். தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளே இடம்பெற்றுள்ளது. சத்தியவசன தொலைக் காட்சி ஆதரவாளர்கள் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க உங்களை அன்பாய் அழைக்கிறோம். YouTube சேனலில் வெளிவரும் Audio version அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களையும் குடும்பமாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். இதற்கான Link தேவைப்படுவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் தொடராக பிரசுரித்து வருகிறோம். அதை வாசித்து ஆசீர்வாதமடையுங்கள். லெந்துநாட்களுக்கான சிறப்பு செய்திகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. மார்ச் மாதத்தில் 5-18 நாட்களுக்கு தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களும் 19-31 ஆகிய நாட்களுககு சகோ.தர்மகுல சிங்கம் அவர்களும் எழுதியுள்ளார்கள். ஏப்ரல் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் கிறிஸ்துவின் பாடு மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் தெரிந்தெடுப்புகளை குறித்தும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு புத்தாண்டிற்குள் தேவன் நம்மை பிரவேசிக்க கிருபை செய்தபடியால் தேவனைத் துதிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் தேவன் நம்மை பாதுகாத்து நம் தேவைகளையெல்லாம் சந்தித்து வழிநடத்தினபடியால் அவருக்கு நன்றி பலிகளை ஏறெடுப்போம். இப்புதிய ஆண்டிலே உங்கள் ஒவ்வொருவரையும் குடும்பமாக ஆசீர்வதிக்க தேவனிடம் வேண்டுதல் செய்கிறோம். இவ்வாண்டில் தேவசமாதானமும் சுகமும் உங்கள் இல்லத்தில் நிறைவாய் தங்கியிருக்க தேவன் கிருபை செய்வாராக! 2025ஆம் ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள சத்தியவசன ஊழியப்பணிகளை தேவன் தாமே ஆசீர்வதிக்கவும் தொலைக்காட்சி ஊழியம், இலக்கிய பணி, இணைய தளம் மற்றும் சோஷியல் மீடியா ஊழியங்கள் ஆகியவற்றிற்கான தேவைகள் அனைத்தையும் தேவன் சந்திக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வூழியங்கள் வாயிலாக நற் செய்தி அறிவிக்கப்படவும் பங்காளர்கள் வேண்டுதல் செய்ய அன்போடு கேட்கிறோம்.

சத்தியவசன ஊழியத்தைக் கடந்தாண்டு முழுவதும் ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றிகூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம். தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2024ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும். 2025ஆம் வருட சத்தியவசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர் கள் 82ஆம் பக்கத்திலுள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும்.

ஜனவரி மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இப்புதியவருடத்தில் நாம் காட்டவேண்டிய அன்பைக்குறித்து எழுதியுள்ள தியானங்களையும், பிப்ரவரி மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோஸ் அவர்கள் பலதலைப்புகளில் எழுதியுள்ள தியானங்களையும் பிரசுரித்துள்ளோம். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபியுங்கள்.

கே.ப.ஆபிரகாம்