ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2026)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
“நம்முடைய பாவங்களையும் சாபங்களையும் சுமந்து தீர்த்த” இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கிறிஸ்துவின் பாடுமரணங்களை அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில் இந்த தியானங்கள் அனைவருக்கும் அதிக ஆசீர்வாதமாக இருக்கும் என்றே கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களை கர்த்தர் நாம மகிமைக்காக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் தியானபுத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.
நமது தேசத்துக்காகவும், மே மாதத்திற்குள்ளாக தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தொடர்ந்து ஜெபிப்போம். நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந் தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசேக்கி.22:30). திறப்பிலே நின்று தேசத்தில் கர்த்தருக்கு பயந்த ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு சுபிட்சமடைய கருத்தாய் வேண்டுதல் செய்வோம்.
சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.
மார்ச் 1-28 மற்றும் ஏப்ரல் 18 -30 ஆகிய நாட்களில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் லெந்து நாட்களுக்கான தியானங்களாகவும், கர்த்தருக்குப் பயப்படுதலைக் குறித்தும் எழுதியுள்ளார்கள். மார்ச் 29-31, ஏப்ரல் மாதம் 1-17 ஆகிய நாட்களில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றியும், பின்பு அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்ததையும் தியானித்து எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
ஆ.ஜான் துரை
