ஆசிரியரிடமிருந்து…

(மார்ச்-ஏப்ரல் 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ், சத்தியவசனம் இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றின் வாயிலாக தியானங்களை தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் படித்து பிரயோஜன மடைகின்றனர். இத்தியானங்கள் சத்தியத்தை அறியாத இன்னும் அநேகருக்கு சென்றடைய ஜெபத்துடன் பிரயாசப்படுகிறோம். நீங்களும் தங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு இவ்விதழை பெற்றுத் தாருங்கள். இத்தியானங்களை எழுதுகிற சகோதர சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படியாகவும் இன்னும் வல்லமையாய் எடுத்து உபயோகப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம். இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். பள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 2020ஆம் வருட விசுவாசப்பங்காளர் சந்தாவை இதுவரைப் புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒலி(ளி)பரப்பின் தேவைகள் சந்திக்கப்படவும் நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியங்களைத் தாங்கவும் அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான தியானங்களை கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனடைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து…

(ஜனவரி-பிப்ரவரி 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்று வாக்குப்பண்ணின தேவாதி தேவனின் இனிய நாமத்தில் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கர்த்தர் நம்மேல் வைத்த இரக்கத்தினாலே இன்னுமொரு புதிய ஆண்டிற்குள்ளாக நாம் பிரவேசிக்க அவர் உதவி செய்துள்ளார். வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற தேவன் இப்புதிய வருடத்தின் ஒவ்வொரு நாளையும் தம்முடைய வாக்குத்தத்தத்தின்படியே ஆசீர்வாதமாய் நடத்துவார். நமது அன்றாட வாழ்க்கைக்குரிய அனைத்து தேவைகளிலும் கர்த்தர் நம்மோடிருப்பார். ஆகவே, நாம் அனுபவிக்கிறதற்கு சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்து முன்னேறிச் செல்வோம். இப்புதிய ஆண்டிலே நன்மையும் கிருபையும் உங்களைத் தொடர வேண்டுதல் செய்கிறோம்.

2020ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். கடந்த ஆண்டில் தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காதவர்களும் புதுப்பித்துக்கொண்டு இவ்வூழியத்தைத் தாங்க அன்புடன் நினைவூட்டுகிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.

ஜனவரி மாத தியானங்களை சகோதரி தர்ஷ்னி சேவியர் அவர்கள் புத்தாண்டுக்குள் பிரவேசித்திருக்கும் நம் ஒவ்வொருவரும் பிரயோஜனமடையும்படியாக தியானங்களை எழுதியுள்ளார்கள். பிப்ரவரி மாத தியானங்களை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் இரண்டாம் வருகைக்கு நாம் ஆயத்தமாகுபடியாக அருமையான தியானங்களை எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் உங்கள் யாவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம்.

பங்காளர்கள் வாசகர்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியர்கள் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர்-டிசம்பர் 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

அதிசயமான தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். வருடத்தின் இறுதி மாதங்களுக்குள் வந்திருக்கிறோம். இவ்வருடம் முழுவதும் கர்த்தர் போதுமானவராக இருந்து ஊழியத்தை ஆசீர்வதித்தார். தேவைகளை சந்தித்தார். தேவனுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விசுவாச பங்காளர் கூடுகை கர்த்தருடைய கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. சென்னையிலுள்ள பங்காளர்களும் நேயர்களும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தார்கள். சாட்சி வேளையிலும் சத்திய வசன ஊழியத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகளை ஆசீர்வாதங்களை அநேக பங்காளர்கள் பகிர்ந்துகொண்டது எங்களுக்கு அதிக ஊக்கத்தை அளித்தது. இக்கூட்டத்தின் மூலமாக சென்னையிலுள்ள பங்காளர்களையும் நேயர்களையும் சந்தித்தது எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. கலந்துகொண்ட யாவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2019ஆம் ஆண்டிலும் தியான புத்தகத்திலுள்ள வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடித்தவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பெயர்களை வரும் இதழில் பிரசுரிப்போம். வாசிக்க தவறியவர்கள் வரும் ஆண்டிலே வாசிப்பதற்கும் உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழில் சகோ.தர்மகுல சிங்கம் அவர்கள் பரிசுத்த வேதாகமத்தின் பலருடைய வாழ்க்கை அனுபவங்களை முன்நிறுத்தி அதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களைத் தியானித்து நவம்பர் மாதத்தில் எழுதியுள்ளார்கள். டிசம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதல் வருகையைக் கொண்டாடும் நாம் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவதைப் பற்றியும் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு கிறிஸ்துமஸ் தினத்தை அனுசரிப்பதைப்பற்றியும் தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்களினாலே நமது ஆத்துமாவிலே கர்த்தர் பெலன் தந்து தைரியப்படுத்துவார். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள்.

சத்தியவசன பங்காளர்கள் நேயர்கள் வாசகர்கள் யாவருக்கும் அன்பின்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர்-அக்டோபர் 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை நீதியின் பாதையில் நடத்துகிற நல்ல மேய்ப்பனாம் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்திய வசன வானொலி நிகழ்ச்சிகள், தொலைகாட்சி நிகழ்ச்சி, இணையதளம், மற்றும் Whatsapp/SMS ஆகியவற்றின் மூலமாக அநேகர் பிரயோஜனமடைந்து வருவதை அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். உங்கள் ஆவிக்குரிய நண்பர்களுக்கும் சக விசுவாசிகளுக்கும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வையுங்கள். வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு தேவன் தந்துள்ள ஆதரவாளர்களுக்காக (Sponsors) அவரை ஸ்தோத்திரிக்கிறோம்.

ஈரோட்டில் அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சி.எஸ்.ஐ., பிரப் தேவாலாய Parish Hall இல் சத்தியவசன விசுவாச பங்காளர் கூடுகையையும் 27ஆம் தேதி ஞாயிறு காலை பிரப் ஆலய ஆராதனையில் முன்னேற்ற பணியையும் ஒழுங்கு செய்துள்ளோம். இது தொடர்பான மேலதிகமான விவரங்களையும் அழைப்பிதழையும் ஈரோட்டிலுள்ள பங்காளர்களுக்கு அனுப்பிவைப்போம். இக் கூட்டங்கள் சிறப்பாய் நடைபெற தங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

தற்போது கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் நீலகிரி மாவட்டத்திலும் மழையினால் ஏற்பட்ட இயற்கை பேரழிவிலிருந்து மக்கள் மீட்கப்படவும் மீண்டும் அந்த இடங்களில் பேராபத்து வராதபடிக்கும் தேவனிடம் மன்றாடுவோம்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தேவசமுகத்தில் காத்திருத்தல், தேவசித்தத்தோடு இணைந்து சுவிசேஷப்பணியில் நமது பங்கு போன்ற பல காரியங்களை தியானிக்கும் வண்ணம் செப்டம்பர் மாதத்தில் தியானங்களை எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் சகோதரி ஜெபி பீடில் அவர்கள் கர்த்தருடைய நாமங்களை தியானித்து எழுதியுள்ளார்கள். தியானங்கள் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும், கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தில் ஊன்ற கட்டுகிறதாயும் இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் மறவாதீர்கள். தேவனுடைய நன்மையும் கிருபையும் உங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து வர ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை-ஆகஸ்டு 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

என்றென்றும் மாறாத நேசர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

2019 ஆம் ஆண்டின் பாதிவருடத்தை கடந்துவர கர்த்தர் கிருபை செய்துள்ளார். சத்திய வசன பங்காளர்கள் நேயர்கள் வாசகர்கள் யாவரது குடும்பங்களிலும் இக்கல்வியாண்டின் தேவைகளைக் கர்த்தர் சந்திக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். இவ்வூழியங்களுக்கு தங்களது அன்பின் பிரயாசங்களை காண்பித்துவரும் அனைத்து ஜெபபங்காளர்களுக்காக, ஆதரவாளர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சென்னையிலும் கடுமையாக நிலவிவரும் தண்ணீர் பஞ்சம் நீங்க கர்த்தர் ஒரு வழியை திறந்துதர மன்றாடுவோம். அதிக உஷ்ணத்தினால் பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகி உள்ளதை அறிவோம். இப்படிப்பட்ட சாவுகள் இனியும் தொடராதபடியும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் விரைவில் சுகம் பெறவும், தேவனுடைய அற்புத கிரியை அங்கே விளங்கவும் உஷ்ணத்தின் கடுமை குறைவதற்கும் ஜெபிப்போம்.

கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாய் உள்ள இந்நாட்களில் பரிசுத்த வேதாகமத்தை கருத்தாய் வாசித்து கைக்கொள்வோம். தியான புத்தகத்தில் இடம்பெறும் அட்டவணையைப் பயன்படுத்தி ஒரு வருடத்திற்குள் வேதாகமத்தை அனைவரும் வாசித்து முடிப்பதற்கும் தொடர்ந்து உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் நமது கிறிஸ்தவ வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளவேண்டிய மேன்மையான அனுபவங்களை ஜூலை மாதத்தில் தியானங்களாக எழுதியியுள்ளார்கள். ஆகஸ்டு மாதத்தில் சகோ. வர்ஷினி ஏர்னஸ்ட் அவர்கள் 23 ஆம் சங்கீதம் முழுவதையும் தியானங்களாக எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு நாளின் தியானங்களும் நமது வாழ்வை செப்பனிடுகிறதாகவும், கிறிஸ்துவோடு உள்ள உறவில் பெலப்படுத்துகிறதாயும், இக்கட்டு நெருக்கமான சூழ்நிலைகளில் ஆறுதலையும் திடநம்பிக்கையையும் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. நீங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் மறவாதீர்கள். தேவனுடைய நன்மையும் கிருபையும் உங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து வர ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசிரியரிடமிருந்து…

(மே – ஜுன் 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

பிதாவின் வலதுபாரிசத்தில் நமது மத்தியஸ்தராக அமர்ந்து நமக்காக பரிந்துபேசும் மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழை ஜெபத்துடனும் தேவன் இத்தியானங்கள் வாயிலாக கிரியை செய்து வருகிறார் என்ற விசுவாசத்துடனும் வெளியிடுகிறோம். இத்தியானங்கள் வாயிலாக அநேகருடைய ஆவிக்குரிய வாழ்வு கட்டப்பட்டு வருவதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கும் படியாக தேவன் தந்த அன்பான பங்காளர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம்.

தற்போது இந்திய தேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்காக தேவ பிள்ளைகளாக இணைந்து நம் தேச முழுவதும் வேண்டுதல் செய்து வருகிறோம். தேவன் நமது தேசத்தின்மேல் தமது கண்ணை வைத்திருக்கிறார். யாரும் எதிர்பாராத விதத்தில் அதிசயத்தக்க மாறுதல்களை இந்திய அரசியலில் நம் தேவன் கொண்டு வருவார். நாம் சோர்ந்து போகாமல் ஒருமனபட்டவர்களாக திறப்பின் வாசலில் நிற்போம்.

கடந்த இதழில் நாங்கள் பிரசுரித்திருந்தபடி திருச்சபைகளில நடைபெற்ற லெந்து கால சிறப்புக் கூட்டங்கள் ஆசீர்வாதமாக நடைபெற கர்த்தர் கிருபை செய்தார். இக்கூட்டங்களை ஆயத்தம் செய்தவர்கள் உதவி புரிந்தவர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். உங்கள் மனபாரங்களையும் ஜெபத்தேவைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்காக பாரத்தோடு வேண்டுதல் செய்வோம். இத்தியானங்கள் வாயிலாக நீங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் மே மாதம் 1-20 நாட்களுக்குரிய தியானங்களையும், ஜுன் மாதத்தின் தியானங்களையும் எழுதியுள்ளார்கள். மே 21-31 வரையிலான தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். மே மாத தியானங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நமக்கு கிடைத்த நன்மை களையும் கிருபை வரங்களைப் பற்றி அறிந்துகொள்கிறதாயும், ஜுன் மாத தியானங்கள் பிரசங்கி புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அரிய தியானங்களாகவும் உள்ளன. தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்