ஆசிரியரிடமிருந்து…
(மார்ச்-ஏப்ரல் 2020)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ், சத்தியவசனம் இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றின் வாயிலாக தியானங்களை தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் படித்து பிரயோஜன மடைகின்றனர். இத்தியானங்கள் சத்தியத்தை அறியாத இன்னும் அநேகருக்கு சென்றடைய ஜெபத்துடன் பிரயாசப்படுகிறோம். நீங்களும் தங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு இவ்விதழை பெற்றுத் தாருங்கள். இத்தியானங்களை எழுதுகிற சகோதர சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படியாகவும் இன்னும் வல்லமையாய் எடுத்து உபயோகப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம். இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். பள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.
சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 2020ஆம் வருட விசுவாசப்பங்காளர் சந்தாவை இதுவரைப் புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒலி(ளி)பரப்பின் தேவைகள் சந்திக்கப்படவும் நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியங்களைத் தாங்கவும் அன்பாய் கேட்கிறோம்.
இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான தியானங்களை கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனடைய வேண்டுதல் செய்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்