3. வேதாகமம் தவறில்லாதது. மாறாதது!
வேதாகமத்தின் தனிச்சிறப்பு (ஜனவரி – பிப்ரவரி 2025)
Dr.உட்ரோ குரோல்
வேதாகமத்தின் தனித்தன்மையைக் காட்டுவதற்கு ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகள் உண்டு. அவைகள்
1. INSPIRATION – அகத்தூண்டுதல் பெற்றது.
2. ILLUMINATION – உட்கருத்தை உணர்த்திக் காட்டுவது.
3. INERRANCY – தவறில்லாதது.
4. INFALLIBILITY – பிழையில்லாதது.
இந்த நான்கு வார்த்தைகளும் I என்னும் ஆங்கில எழுத்தில் தொடங்குவதைக் கவனிக்கவும். இவற்றில் முதலாவது வார்த்தை அகத்தூண்டல் (Inspiration) பற்றிப் பார்த்துவிட்டோம். மற்ற மூன்றையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அவற்றுக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பைச் சிந்திப்போம்.
2. உட்கருத்தை உணர்த்திக் காட்டுவது
அப்படி என்றால் என்ன?
கர்த்தரால் அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ள உதவுதல். அறிவு பூர்வமாக மட்டுமல்ல, சொற்பொருளின் படி மட்டுமல்ல, ஆவிக்குரிய பிரகாரமாக அந்த கருக்தை அறிந்துகொள்ளவும், அந்த பகுதி அல்லது வார்த்தையின் மூலம் தேவன் நமக்குத் தரும் செய்தி என்ன வென்று உணர்த்துவதும் ஆகும்.
பரிசுத்த ஆவியானவர் வேதவசனங்களை நமக்கு விளக்கிக்காட்டும்போது, புரிந்துகொள்ள உதவும்போது. அந்த வார்த்தையின் பொருள் என்ன? என்று கற்பிக்கிறார்.
அது நமது வாழ்க்கையை எப்படி மாற்றமுடியும்? என்று காட்டுகிறார்.
அது எப்படி நமக்கு வழிகாட்ட முடியும் என்றும் காட்டுகிறார்.
முந்தின அதிகாரத்தில் நாம் கண்ட உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளர், உலகத்துக்குச் சமாதானம் கொண்டுவர ஒரு திட்டத்தை உங்களிடம் விளக்கிக் கூறினார். நீங்கள் அதைக் கேட்டு, அந்தத் திட்டத்தை உங்கள் சொந்த வார்த்தையிலும், மொழிநடையிலும் எழுதினீர்கள். ஆனால், அவர் நீங்கள் எழுதுவது அவருடைய உள்ளத்திலிருந்த கருத்துத்தானா? அவர் தெரிவிக்க விரும்பிய செய்திதானா? என்று சரிபார்த்து, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், சரியான விளக்கம் கொடுக்கவும் உதவி செய்தார். தன் செய்தியை உறுதிசெய்து கொண்டார். அவர் உங்களை அழைத்துத் தன் அலுவலகத்தில் அமரச்செய்து உலக சமாதானத் திட்டத்தை உங்களிடம் விளக்கிக்கூறியதே வெளிப்படுத்துதல் ஆகும்.
பின்னர் நீங்கள் எழுதும்போது சரி யான பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், சரியான விளக்கத்தைக் கூறவும் உங்களுக்கு உதவியதே அகத் தூண்டுதல் ஆகும்.
இப்படி வெளிப்படுத்தல் பெற்று, அகத் தூண்டுதலின் உதவியுடன் நீங்கள் எழுதி முடித்ததன் கருத்து உங்களுக்குச் சரியாகப் புரிந்திருக்காது. எனவே அடுத்தபடியாக உட்கருத்தை உணர்ந்து கொள்ளுதல் (Illumination) தேவை.
பொதுச் செயலாளர் நீங்கள் எழுதிய தற்கு விளக்கம் தருகிறார். நீங்கள் எழுதியதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். நீங்கள் எழுதியதை நீங்கள் புரிந்துகொள்வதன்மூலம் அது உங்கள் இருதயத்துக்கும் உள்ளத்துக்கும் சென்று சேர்ந்துவிடுகிறது. அந்தச் சமாதானத்திட்டம் செயல்படுத்தப்படலாம். நீங்களும் அதற்கு உதவி செய்யமுடியும் என்று நீங்கள் அறியும்போது, இந்தச் செய்தி உங்கள் இருதயத்தில் சென்றடைந்துவிட்டது. உங்கள் உள்ளத்திலும் நிறைந்துவிட்டது! இதுதான் உட்கருத்தை உணர்ந்துகொள்வதின் பலன். இந்தச் செய்தி உங்கள் உள்ளம் வழியாகச் சென்று உங்கள் இருதயத்தை மாற்றிவிட்டது.
வேதாகமத்தை வாசிக்கும்போது இது நமக்கு மிகவும் தேவைப்படுகிறது. நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை வாசிக்கும்போது, நாம் அதைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து நன்மை பெறவும், நீங்கள் வாசிக்கும் பகுதியை தேவன் உங்களுக்கு உணர்த்திக்காட்ட வேண்டியது அவசியமாகும். அதற்கு இரண்டு பதில்கள் உள்ளன.
முதலாவதாக, நம்மிடம் இயற்கையாக இருக்கும் குருட்டுத்தன்மை, ஆவிக் குரிய காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாமற் செய்துவிடுகிறது. வேதாகமம் தேவனுடைய புத்தகம். வேறு எங்கும் நாம் காணமுடியாத ஆவிக்குரிய சத்தியங்கள் நிறைந்தது. ஆவிக்குரிய மனப்பான்மை இல்லாதவர்கள் வேதத்தை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாது.
கர்த்தருடைய வசனம் கூறுகிறது: ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான் (1கொரி. 2:214).
உலகம் அறியாத ஆவிக்குரிய சத்தி யங்களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றவர்கள் மட்டுமே, தேவவசனங்களில் உள்ள ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்து கொள்ளமுடியும். பேதுரு இயேசுவிடம், நீர் ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய கிறிஸ்து என்று கூறியபோது இயேசு என்ன சொன்னார்? இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை (மத்.16:17). இந்த உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த அறிவாளிகளால் கூடப் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் உண்டு. ஏனென்றால் அவர்கள் ஆவிக் குரியவர்கள்அல்ல. பரிசுத்த ஆவியானவர் தங்களுக்குள் வாசம் செய்யாவிட்டால் மிகச்சிறந்த அறிவாளிகள்கூட எளிய ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி பாவம் அவர்களுடைய கண் களை மறைத்துவிடுகிறது. எனவேதான் தேவஆவியால் உட்கருத்து உணர்த்தப்படுவது மிகவும் முக்கியமானது.
மக்கள் ஏன் வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாதபடி மாம்சக்கண்கள் குருடாக்கப்பட்டிருப்பது முதல் காரணம். அவர்கள் சாத்தானாலும் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிக் கூறினார்: எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால். கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2கொரி.4:3,4).
சாத்தானானவன் இப்பிரபஞ்சத்தின் தேவனாயிருக்கிறான். மக்கள் தேவனுடன் உறுதியான உறவுகொள்ள முடியும் என்ற சத்தியத்தை உணரமுடியாதபடி அவன் செய்துவிடுகிறான். இதைத்தான் சாத்தான் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான்.
வேதத்தின் உட்கருத்தை நாம் உணருதல் மிகவும் முக்கியம். உங்களுக்கு வேதாகமத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்குமானால், நீங்கள் உங்களைத் தற்பரிசோதனை செய்யுங்கள்.
நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம் செய்கிறாரா?
பரிசுத்தாவியானவர் உங்களுக்குள் இல்லையானால், அவர் வேதத்தின் உட் கருத்தை நீங்கள் புரிந்துகொள்ள உதவி செய்யமாட்டார். நீங்கள் ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாது. உங்களுக்குள் பரிசுத்தாவியானவர் இருப்பாரானால், நீங்கள் வேதத்தை வாசிக்கத் தொடங்கு முன் அமைதியாய்ச் சில நிமிடங்கள் ஜெபம் செய்யுங்கள். ஆவியானவர் உங்கள் ஆசிரியராயிருந்து வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ள உதவிசெய்யும்படி வேண்டுங்கள். ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று வேதம் கூறுகிறது.
I – வரிசையில் அடுத்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. Inerrancy and Infalliability தவறாதது, பிழை இல்லாதது. பலர் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒரேபொருள் உள்ளதுபோலப் பயன்படுத்துவர். ஆனால், அவற்றின் கருத்து வித்தியாசமானது. ஒரு பழமொழி கூறப்படுவதை அறிவோம். தவறுவது மனித இயற்கை; மன்னிப்பது தேவனின் இயற்கை. தவறுவது (Inerrancy) என்றால் ஒரு தவறைச் செய்தல். தவறாதது என்று ஒன்று இருக்குமானால் அதில் தவறு ஏதும் இருக்காது. இதை ஆங்கிலத்தில் Error Free என்பார்கள். அதைத்தான் தவறில்லாதது என்று பதில் கூறுகிறோம்.
வேதாகம நூல்களை முதன்முதலில் எழுதியவர்கள் அவற்றில் ஒரு பிழையும் இல்லாதமுறையில் எழுதினார்கள். அவற்றில் தவறுகளோ, முரண்பாடுகளோ இல்லாதவகையில் எழுதியிருந்தார்கள். தோற்சுருள்களிலும் பாப்பிரஸ் தகடுகளிலும் எழுதப்பட்ட மூலப்பிரதிகள் தவறில்லாதவைகளாய் இருந்தன.
அடுத்த வார்த்தை Infallible – பிழை யில்லாதது. இதன்பொருள் வேதாகமத்தில் தவறு இருக்கமுடியாது என்பதாகும். வேதாகமம் தவறில்லாததாய் இருப்பது மட்டுமல்ல; அது தவறு எதையும் வைத்துக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் எந்தத் தவறும் இருக்கமுடியாது. சரியில்லாத எதுவும் வேதாகமத்தில் இடம்பெறமுடியாது. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியம் என்றென்றும் நிலைத்து நிற்கும். எக்காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் அதில் எவ்வித மாறுதலும் ஏற்படாது.
வேதாகமம் தேவனால் தரப்பட்டுள்ளது. எனவே அதில் தவறு இல்லை, தவறு இருக்கவும் முடியாது. இப்படித் தவறில்லாத புத்தகம் வேதாகமம் மட்டுமே. நான் பல டஜன் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், அவற்றில் தவறில்லாத புத்தகங்கள் ஏதும் இல்லை.
வேறு எந்தப் புத்தகமும் தவறே இல்லாதது என்று கூறப்பட முடியாது. வேதாகமம் இப்படித் தவறில்லாததாகவும் பிழை இல்லாததாகவும் இருக்கக் காரணம் என்ன? தேவனுடைய குணாதிசயமே அதற்குக் காரணம். அவரிடம் தவறு அல்லது பிழை எப்படி இருக்கமுடியும்?
பொய்யுரையாத தேவன் (தீத்து 1:3) என்று பவுல் குறிப்பிடுகிறார். தேவன் உண்மையில்லாத எதையும், சரியில்லாத எதையும், தவறான எதையும், பிழையான எதையும் வேதபுத்தகத்தில் அனுமதிக்கமாட்டார்.
உதாரணமாக, பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் ஒரு தவறான செய்தியை எழுதுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தேவனுக்கு அனைத்தும் தெரியும். பவுல் எழுதியிருப்பது தவறு என்றும் தெரியும். நீதியுள்ள தேவன் இதைக்கண்ட பின்னரும் ஒன்றும் செய்யாமல் இருப்பாரா? நான் வணங்கும் பரிபூரண தேவன் அப்படிச் செய்யமாட்டார்.
வேதாகமம் தவறில்லாதது. வேதாகமத்தில் எந்தப் பிழையும் இருக்கமுடியாது. ஏனெனில் அது வேனுடைய வார்த்தை.
வேதாகமம் தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையது. உலக வரலாற்றில் எல்லாப் புத்தகங்களிலிருந்து வேதாகமம் மட்டும் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது மற்ற எல்லா எழுத்துக்களைப் பார்க்கிலும் வித்தியாசமானது. ஏன்? ஏனெனில் இது தேவனுக்குச் சொந்தமானது. இது தேவனுடைய குணாதிசயத்தைப் பிரதிபலிக்கிறது. உலகமக்கள்மீது தேவன் வைத்திருக்கும் அன்பை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.
உங்கள் வேதாகமத்தை வாசித்துச் சந்தோஷப்படுங்கள். சத்தியத்தை வாசிக்கிறோம் என்று நிச்சயம் கொள்ளக்கூடிய இடம் அது ஒன்றே.
(தொடரும்)
மொழியாக்கம்: ஜி.வில்சன்