3. வேதாகமம் தவறில்லாதது. மாறாதது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (ஜனவரி – பிப்ரவரி 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தின் தனித்தன்மையைக் காட்டுவதற்கு ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகள் உண்டு. அவைகள்

1. INSPIRATION – அகத்தூண்டுதல் பெற்றது.

2. ILLUMINATION – உட்கருத்தை உணர்த்திக் காட்டுவது.

3. INERRANCY – தவறில்லாதது.

4. INFALLIBILITY – பிழையில்லாதது.

இந்த நான்கு வார்த்தைகளும் I என்னும் ஆங்கில எழுத்தில் தொடங்குவதைக் கவனிக்கவும். இவற்றில் முதலாவது வார்த்தை அகத்தூண்டல் (Inspiration) பற்றிப் பார்த்துவிட்டோம். மற்ற மூன்றையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அவற்றுக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பைச் சிந்திப்போம்.

2. உட்கருத்தை உணர்த்திக் காட்டுவது

அப்படி என்றால் என்ன?

கர்த்தரால் அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ள உதவுதல். அறிவு பூர்வமாக மட்டுமல்ல, சொற்பொருளின் படி மட்டுமல்ல, ஆவிக்குரிய பிரகாரமாக அந்த கருக்தை அறிந்துகொள்ளவும், அந்த பகுதி அல்லது வார்த்தையின் மூலம் தேவன் நமக்குத் தரும் செய்தி என்ன வென்று உணர்த்துவதும் ஆகும்.

பரிசுத்த ஆவியானவர் வேதவசனங்களை நமக்கு விளக்கிக்காட்டும்போது, புரிந்துகொள்ள உதவும்போது. அந்த வார்த்தையின் பொருள் என்ன? என்று கற்பிக்கிறார்.

அது நமது வாழ்க்கையை எப்படி மாற்றமுடியும்? என்று காட்டுகிறார்.

அது எப்படி நமக்கு வழிகாட்ட முடியும் என்றும் காட்டுகிறார்.

முந்தின அதிகாரத்தில் நாம் கண்ட உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளர், உலகத்துக்குச் சமாதானம் கொண்டுவர ஒரு திட்டத்தை உங்களிடம் விளக்கிக் கூறினார். நீங்கள் அதைக் கேட்டு, அந்தத் திட்டத்தை உங்கள் சொந்த வார்த்தையிலும், மொழிநடையிலும் எழுதினீர்கள். ஆனால், அவர் நீங்கள் எழுதுவது அவருடைய உள்ளத்திலிருந்த கருத்துத்தானா? அவர் தெரிவிக்க விரும்பிய செய்திதானா? என்று சரிபார்த்து, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், சரியான விளக்கம் கொடுக்கவும் உதவி செய்தார். தன் செய்தியை உறுதிசெய்து கொண்டார். அவர் உங்களை அழைத்துத் தன் அலுவலகத்தில் அமரச்செய்து உலக சமாதானத் திட்டத்தை உங்களிடம் விளக்கிக்கூறியதே வெளிப்படுத்துதல் ஆகும்.

பின்னர் நீங்கள் எழுதும்போது சரி யான பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், சரியான விளக்கத்தைக் கூறவும் உங்களுக்கு உதவியதே அகத் தூண்டுதல் ஆகும்.

இப்படி வெளிப்படுத்தல் பெற்று, அகத் தூண்டுதலின் உதவியுடன் நீங்கள் எழுதி முடித்ததன் கருத்து உங்களுக்குச் சரியாகப் புரிந்திருக்காது. எனவே அடுத்தபடியாக உட்கருத்தை உணர்ந்து கொள்ளுதல் (Illumination) தேவை.

பொதுச் செயலாளர் நீங்கள் எழுதிய தற்கு விளக்கம் தருகிறார். நீங்கள் எழுதியதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். நீங்கள் எழுதியதை நீங்கள் புரிந்துகொள்வதன்மூலம் அது உங்கள் இருதயத்துக்கும் உள்ளத்துக்கும் சென்று சேர்ந்துவிடுகிறது. அந்தச் சமாதானத்திட்டம் செயல்படுத்தப்படலாம். நீங்களும் அதற்கு உதவி செய்யமுடியும் என்று நீங்கள் அறியும்போது, இந்தச் செய்தி உங்கள் இருதயத்தில் சென்றடைந்துவிட்டது. உங்கள் உள்ளத்திலும் நிறைந்துவிட்டது! இதுதான் உட்கருத்தை உணர்ந்துகொள்வதின் பலன். இந்தச் செய்தி உங்கள் உள்ளம் வழியாகச் சென்று உங்கள் இருதயத்தை மாற்றிவிட்டது.

வேதாகமத்தை வாசிக்கும்போது இது நமக்கு மிகவும் தேவைப்படுகிறது. நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை வாசிக்கும்போது, நாம் அதைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து நன்மை பெறவும், நீங்கள் வாசிக்கும் பகுதியை தேவன் உங்களுக்கு உணர்த்திக்காட்ட வேண்டியது அவசியமாகும். அதற்கு இரண்டு பதில்கள் உள்ளன.

முதலாவதாக, நம்மிடம் இயற்கையாக இருக்கும் குருட்டுத்தன்மை, ஆவிக் குரிய காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாமற் செய்துவிடுகிறது. வேதாகமம் தேவனுடைய புத்தகம். வேறு எங்கும் நாம் காணமுடியாத ஆவிக்குரிய சத்தியங்கள் நிறைந்தது. ஆவிக்குரிய மனப்பான்மை இல்லாதவர்கள் வேதத்தை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாது.

கர்த்தருடைய வசனம் கூறுகிறது: ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான் (1கொரி. 2:214).

உலகம் அறியாத ஆவிக்குரிய சத்தி யங்களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றவர்கள் மட்டுமே, தேவவசனங்களில் உள்ள ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்து கொள்ளமுடியும். பேதுரு இயேசுவிடம், நீர் ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய கிறிஸ்து என்று கூறியபோது இயேசு என்ன சொன்னார்? இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை (மத்.16:17). இந்த உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த அறிவாளிகளால் கூடப் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் உண்டு. ஏனென்றால் அவர்கள் ஆவிக் குரியவர்கள்அல்ல. பரிசுத்த ஆவியானவர் தங்களுக்குள் வாசம் செய்யாவிட்டால் மிகச்சிறந்த அறிவாளிகள்கூட எளிய ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி பாவம் அவர்களுடைய கண் களை மறைத்துவிடுகிறது. எனவேதான் தேவஆவியால் உட்கருத்து உணர்த்தப்படுவது மிகவும் முக்கியமானது.

மக்கள் ஏன் வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாதபடி மாம்சக்கண்கள் குருடாக்கப்பட்டிருப்பது முதல் காரணம். அவர்கள் சாத்தானாலும் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிக் கூறினார்: எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால். கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2கொரி.4:3,4).

சாத்தானானவன் இப்பிரபஞ்சத்தின் தேவனாயிருக்கிறான். மக்கள் தேவனுடன் உறுதியான உறவுகொள்ள முடியும் என்ற சத்தியத்தை உணரமுடியாதபடி அவன் செய்துவிடுகிறான். இதைத்தான் சாத்தான் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான்.

வேதத்தின் உட்கருத்தை நாம் உணருதல் மிகவும் முக்கியம். உங்களுக்கு வேதாகமத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்குமானால், நீங்கள் உங்களைத் தற்பரிசோதனை செய்யுங்கள்.

நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம் செய்கிறாரா?

பரிசுத்தாவியானவர் உங்களுக்குள் இல்லையானால், அவர் வேதத்தின் உட் கருத்தை நீங்கள் புரிந்துகொள்ள உதவி செய்யமாட்டார். நீங்கள் ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாது. உங்களுக்குள் பரிசுத்தாவியானவர் இருப்பாரானால், நீங்கள் வேதத்தை வாசிக்கத் தொடங்கு முன் அமைதியாய்ச் சில நிமிடங்கள் ஜெபம் செய்யுங்கள். ஆவியானவர் உங்கள் ஆசிரியராயிருந்து வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ள உதவிசெய்யும்படி வேண்டுங்கள். ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று வேதம் கூறுகிறது.

I – வரிசையில் அடுத்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. Inerrancy and Infalliability தவறாதது, பிழை இல்லாதது. பலர் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒரேபொருள் உள்ளதுபோலப் பயன்படுத்துவர். ஆனால், அவற்றின் கருத்து வித்தியாசமானது. ஒரு பழமொழி கூறப்படுவதை அறிவோம். தவறுவது மனித இயற்கை; மன்னிப்பது தேவனின் இயற்கை. தவறுவது (Inerrancy) என்றால் ஒரு தவறைச் செய்தல். தவறாதது என்று ஒன்று இருக்குமானால் அதில் தவறு ஏதும் இருக்காது. இதை ஆங்கிலத்தில் Error Free என்பார்கள். அதைத்தான் தவறில்லாதது என்று பதில் கூறுகிறோம்.

வேதாகம நூல்களை முதன்முதலில் எழுதியவர்கள் அவற்றில் ஒரு பிழையும் இல்லாதமுறையில் எழுதினார்கள். அவற்றில் தவறுகளோ, முரண்பாடுகளோ இல்லாதவகையில் எழுதியிருந்தார்கள். தோற்சுருள்களிலும் பாப்பிரஸ் தகடுகளிலும் எழுதப்பட்ட மூலப்பிரதிகள் தவறில்லாதவைகளாய் இருந்தன.

அடுத்த வார்த்தை Infallible – பிழை யில்லாதது. இதன்பொருள் வேதாகமத்தில் தவறு இருக்கமுடியாது என்பதாகும். வேதாகமம் தவறில்லாததாய் இருப்பது மட்டுமல்ல; அது தவறு எதையும் வைத்துக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் எந்தத் தவறும் இருக்கமுடியாது. சரியில்லாத எதுவும் வேதாகமத்தில் இடம்பெறமுடியாது. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியம் என்றென்றும் நிலைத்து நிற்கும். எக்காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் அதில் எவ்வித மாறுதலும் ஏற்படாது.

வேதாகமம் தேவனால் தரப்பட்டுள்ளது. எனவே அதில் தவறு இல்லை, தவறு இருக்கவும் முடியாது. இப்படித் தவறில்லாத புத்தகம் வேதாகமம் மட்டுமே. நான் பல டஜன் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், அவற்றில் தவறில்லாத புத்தகங்கள் ஏதும் இல்லை.

வேறு எந்தப் புத்தகமும் தவறே இல்லாதது என்று கூறப்பட முடியாது. வேதாகமம் இப்படித் தவறில்லாததாகவும் பிழை இல்லாததாகவும் இருக்கக் காரணம் என்ன? தேவனுடைய குணாதிசயமே அதற்குக் காரணம். அவரிடம் தவறு அல்லது பிழை எப்படி இருக்கமுடியும்?

பொய்யுரையாத தேவன் (தீத்து 1:3) என்று பவுல் குறிப்பிடுகிறார். தேவன் உண்மையில்லாத எதையும், சரியில்லாத எதையும், தவறான எதையும், பிழையான எதையும் வேதபுத்தகத்தில் அனுமதிக்கமாட்டார்.

உதாரணமாக, பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் ஒரு தவறான செய்தியை எழுதுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தேவனுக்கு அனைத்தும் தெரியும். பவுல் எழுதியிருப்பது தவறு என்றும் தெரியும். நீதியுள்ள தேவன் இதைக்கண்ட பின்னரும் ஒன்றும் செய்யாமல் இருப்பாரா? நான் வணங்கும் பரிபூரண தேவன் அப்படிச் செய்யமாட்டார்.

வேதாகமம் தவறில்லாதது. வேதாகமத்தில் எந்தப் பிழையும் இருக்கமுடியாது. ஏனெனில் அது வேனுடைய வார்த்தை.

வேதாகமம் தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையது. உலக வரலாற்றில் எல்லாப் புத்தகங்களிலிருந்து வேதாகமம் மட்டும் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது மற்ற எல்லா எழுத்துக்களைப் பார்க்கிலும் வித்தியாசமானது. ஏன்? ஏனெனில் இது தேவனுக்குச் சொந்தமானது. இது தேவனுடைய குணாதிசயத்தைப் பிரதிபலிக்கிறது. உலகமக்கள்மீது தேவன் வைத்திருக்கும் அன்பை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

உங்கள் வேதாகமத்தை வாசித்துச் சந்தோஷப்படுங்கள். சத்தியத்தை வாசிக்கிறோம் என்று நிச்சயம் கொள்ளக்கூடிய இடம் அது ஒன்றே.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

2.வேதாகமம் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (நவம்பர் – டிசம்பர் 2024)
Dr.உட்ரோ குரோல்

3. அகத்தூண்டல் பற்றிய கருத்துக் கொள்கை

இந்தக் கொள்கைக்காரர்கள் வேத வசனங்களை அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்டவை அல்ல. எழுதப்பட்டிருப்பவைகளின் பொதுக்கருத்து மட்டுமே அகத்தூண்டல் பெற்றவை. வேதாகம நூல்களை எழுதியவர்கள் தேவனுடைய கருத்துத் தொகுதிகளைத் தெரிந்துகொண்டு வந்து அந்த மூலக் கருத்துக்களை விளக்கித் தங்களாகவே தங்கள் சொந்த வார்த்தைகளில், மொழிநடையில் எழுதினர். அவர்கள் தேவனுடைய கருத்துக்களை எப்படிப்புரிந்து கொண்டிருந்தார்களோ, நினைவில் வைத்திருந்தார்களோ, அவற்றின் அடிப்படையில் எழுதினார்கள். இப்படி மனிதர்கள் வேதாகமத்தை எழுதியிருந்தார்களானால், அது தெய்வீகமாய் இருக்க முடியாது. மனுஷீகமாகத்தான் இருக்கும். இந்தக் கருத்து வேதாகமத்தில் உள்ள பல வசனங்களுக்கு முரணாய் இருக்கிறது (2 பேதுரு 1:20; கலா.3:16 1 கொரி.2:12,13 மத்.5:18).

4. அகத்தூண்டுதல் மாறுபடும் கொள்கை

இந்தக்கொள்கை வேதாகமத்தில் சில பகுதிகள் தேவஆவியினால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை. மற்றவை அப்படி அல்ல என்பது.

முற்போக்குக் கொள்கையுள்ள பல சபைப் பிரிவுகளும், இறையியற் கல்லூரிகளும் இறையியலாளர்களும் வேதாகமத்தில் சிலபகுதிகள் மட்டும் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று போதிக்கிறார்கள். அவர்களுக்குச் சம்மதம் இல்லாத மீதிப்பகுதிகள் தேவனால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவைகள் அல்ல என்கிறார்கள். அவர்கள் பாவம், இரத்தத்தின் மூலம் பிராயச்சித்தம் செய்தல், எதிர்கால நியாயத்தீர்ப்பு இவைக் குறித்த வேதப்பகுதிகள் அவர்களுக்குப் பிரியம் இல்லாதவை. எனவே இப்பகுதிகளைப் புறக்கணித்துத் தள்ளிவிடுகின்றனர். இவை தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை அல்ல என்று கூறுகிறார்கள். எனவே வேதாகமம் அரைகுறையாக அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது என்று வாதிடுகிறார்கள். அவர்கள் தாங்களே வேதாகமத்தில் இன்னின்ன பகுதிகள் எல்லாம் அகத் தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை; இந்த இந்தப் பகுதிகள் எல்லாம் தேவனுடைய தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை அல்ல என்று தீர்ப்பு கூறுகிறார்கள். இது எவ்வளவு முடடாள்தனம்!

5. அகத்தூண்டுதல் பற்றிய R E M S கொள்கை

REMS என்பது ஒரு சுருக்க வார்த்தை. நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் சேர்ந்து உருவானது.

R – Religious – சமய சம்பந்தமான

E – Ethical – நீதி ஒழுக்கம் சார்ந்த

M – Moral – அறநெறி சார்ந்த

S – Spiritual – ஆவிக்குரிய

இந்தக் கொள்கைக்காரர்கள் இந்தக் குறிப்பிட்ட நான்கு தலைப்புகளிலும் உள்ள வேதப்பகுதிகள்மட்டும் தேவனால் அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்டவை. மற்றப்படி, வரலாறு சம்பந்தப்பட்டவைகளையும் அறிவியல் விஞ்ஞானம் சம்பந்தப்பட்டவைகளையும் கல்வி அறிவூட்டுதல் சம்பந்தப்பட்டவைகளையும் உலகப் பொருட்கள் சம்பந்தப்பட்டவைகளையும் பற்றிக் கூறும் வேதப்பகுதிகள் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. இந்தக் கொள்கைக்காரர்கள் கூறுவதுயென்னவென்றால் வேதாகமம் ஒரு புவியியல் பாடப்புத்தகமாகவோ, அறிவியல் பாடப்புத்தகமாகவோ இருக்கப் போவதில்லை. எனவே அப்பகுதிகளில் எல்லாம் விளக்கக் குறிப்புகள் சரியாக இருக்காது. ஆனால் இயேசு கூறுகிறார்: பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12).

இந்தப் பூமிக்கடுத்த காரியங்களில் நாம் தேவனையும், அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கவில்லையானால், நித்திய காரியங்களைக் குறித்து அவர் கூறும்போது எப்படி விசுவாசிப்போம்?

இல்லை, வேதாகமம் சிலபகுதிகளில் மட்டும், அல்லது ஆவிக்குரிய காரியங்களைப் போதிக்கும் இடங்களில் மட்டும் தேவஆவியினால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டதல்ல. “அகத்தூண்டல்” என்பது இருந்தால் முழுவதிலும் இருக்கும், இல்லையேல் ஒன்றிலும் இருக்காது என்பது அவர்களின் வாதம்.

தேவன் கூறுகிறார்: வேதாகமம் முழுவதும் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது. நூறுசதவீதம் ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதுதான். தேவனுடைய ஆவியானவர் சில மானிட எழுத்தாளர்களை தேவனுடைய சிறப்பான வெளிப்பாடுகளை அறிந்துகொள்ள உதவினார். இப்படி தேவவெளிப்பாடு பெற்று, தேவஆவியானவரின் அகத்தூண்டுதலுடன் எந்தத் தவறும் இல்லாமல், எதுவும் விடுபடாமல் வேத நூல்களை எழுதினார்கள்.

அகத்தூண்டுதல் பற்றிக் குறிப்பிடும் போது, இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுவதுண்டு அவை:

1. Plenaryமுழுமையான, குறைவற்ற என்று பொருள்.

2. Verbalஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமாகச் சரியாக அமைதல்.

இவற்றில் முழுமையான அகத் தூண்டுதல் என்பது வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களும் தேவஆவியினால் தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது என்பதைக் குறிக்கும்.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது (1 தீமோ.3:16). வார்த்தைகளின் அகத்தூண்டுதல் என்பது, வேதநூல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்திலும்-புவியில் சம்பந்தப்பட்டவைகள், அறிவியல் சம்பந்தப்பட்டவைகள், வானவியல் சம்பந்தப்பட்டவைகள் போன்ற வார்த்தைகளைச் சரியானதாகவும், பொருத்தமானதாகவும், இலக்கண முறைப்படி சரியான அமைப்பிலும் வரும்படியாக எழுதும்படி தேவன் தமது ஆவியானவர் மூலம் உதவி செய்வார்.

தேவன் எல்லா வேதநூல் எழுத்தாளர்களையும் சமமான அளவில் அகத்தூண்டுதல் கொடுத்து எழுத உதவினார். தேவன் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சரியாக அமையும் படி உதவினார். அவர் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சரியாக அமையும்படி உதவினார்.

பவுல், பேதுரு, மோசே மற்றும் எல்லா வேதாகமப்புத்தக எழுத்தாளர்களும் எழுத வேண்டிய காரியங்களை தேவ ஆவியினால் அருளிச்செய்தார். இந்த அகத்தூண்டுதல் வேதாகமத்தை மற்ற எல்லாப் புத்தகங்களையும்விட வித்தியாசமானதாகக் காட்டுகிறதா? ஆம்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் வரம் பெற்ற நாடகாசிரியராய் இருக்கலாம். அவர் சரியான வார்த்தைகளைத் தெரிந்தெடுக்கவும். தான் வெளிப்படுத்த விரும்பியதைச் சரியாக வெளிப்படுத்தவும் தேவஆவி யானவர் அவருக்கு உதவி செய்யவில்லை.

பரதேசியின் மோட்ச பிரயாணம் என்னும் அற்புதமான நூலை ஜாண் பனியன் எழுதினார். அவருக்கும் எசேக்கியேல், தாவீது, மோசே, மத்தேயு போன்றவர்களுக்கு தேவஆவியானவரின் தூண்டுதல் கிடைத்ததுபோல அகத்தூண்டுதல் கிடைக்கவில்லை.

வேதாகமம் தேவனால் தூண்டப்பட்டு எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவனுடைய வாயினால் பேசப்பட்டவைகளாய் இருக்கிறபடியால் இது உலகில் வெளியிடப்பட்ட மற்ற எல்லாப் புத்தகங்களிலிருந்தும் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் புத்தகங்களிலெல்லாம் உலகெங்கும் அதிகம் விற்பனையாகும் புத்தகமாக வேதாகமம் காணப்படுகிறது. வாழ்க்கையை மாற்றும் ஒரே புத்தகம் இதுவே. இதைப் போன்று வேறு புத்தகம் எதுவும் இல்லை.

வேதாகமத்தை இன்றே வாசித்து, அதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள். அப்பொழுது வேதாகமத்தை எழுதிய ஆக்கியோன் தேவனையும் கண்டுகொள்வீர்கள். அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளுவீர்கள்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

2.வேதாகமம் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (செப்டம்பர் – அக்டோபர் 2024)
Dr.உட்ரோ குரோல்

தம்முடைய வார்த்தை எழுதப்படும் போது தேவாவியானவர் எழுதுபவர்களின் உள்ளத்திலிருந்து எழுதத் தூண்டிக்கொண்டிருந்தார். அந்த எழுத்தாளர்கள் எழுதினர். எழுதும்படி பொருளைத் தூண்டிக்கொண்டிருந்தவர் தேவஆவியானவரே!

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2தீமோ. 3:16,17).

எரேமியா தீர்க்கதரிசி இப்படி எழுதியிருக்கிறார். நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக (எரே.1:7.). கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது (2 சாமு.23:2).

இந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எழுதும் செயலைத் தொடங்கிவைத்தவர் தேவனே. தேவன்தான் பேசினார். தேவன்தான் செய்தியைக் கொடுத்தார். தேவன் தான் எழுதவேண்டியதைக் கொடுத்தார். அவர்கள் எழுதினார்கள். தாவீது, எரேமியா போன்ற எல்லா வேதாகம புத்தக எழுத்தாளர்களும் தேவனுடைய வெளிப்படுத்தலை முதலில் பெற்றுக்கொள்ளுவார்கள். தேவன் வெளிப்படுத்திய செய்தியை அவர்கள் எழுதும்போது, வார்த்தைகள் தெய்வீகமாக அவர்கள் உள்ளத்தில் தூண்டப்பட்டன. அவர்கள் ஆவியானவரின் உதவியுடன் தங்களுக்குத் தரப்பட்ட செய்திகளை எழுதி வைத்தார்கள்.

இது எப்படி நடந்தது? பவுலும், பேதுருவும், யோவானும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் இருந்தும் எழுதும்போது அவை எப்படி தேவசெய்தியாக மாறியது? அவர்கள் எழுதியது தேவன் அவர்கள் மூலம் எழுத விரும்பிய செய்திதானா என்று உறுதி செய்வது எப்படி? எது நடக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டால் ஆவியானவரின் அகத்தூண்டுதல் எப்படி நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

தேவன் தம்முடைய வார்த்தைகளை எவ்வாறு எழுதச்செய்தார் என்பது குறித்து ஐந்து தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவை ஒன்றின் மூலமும் ஆவியானவரின் அகத்தூண்டுதல் நடந்திருக்க முடியாது. அந்தப் புனைவுக் கருத்துக்களைக் காண்போம்.

1. அகத்தூண்டுதல் குறித்த இயற்கைக் கொள்கை

வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர். அவர் நாடகங்களை எழுதும்போது, ஒருமுறை கூட தாம் எழுதிய ஒரு வரியை அடித்ததில்லையாம். அவர் ஒரு அகத்தூண்டுதல் பெற்றுத்தான் அந்த நாடகங்களை எழுதினார்.

அதுபோலவே வேதாகமப் புத்தக எழுத்தாளர்களும் இயற்கையான ஒரு அகத்தூண்டுதலைப் பெற்று எழுதியிருக்கலாம். நம் எல்லாரிடமும் ஒரு தெய்வீகப் பொறி உண்டு. இந்த எழுத்தாளர்களிடம் அது சற்று அதிகமாக இருந்திருக்கும்; எனவே அவர்கள் எழுதினர்.

இந்தக் கொள்கையின்படி இத்தகைய அகத்தூண்டுதல் அறிவுத்திறன்மிக்க மேதைகள், கவிஞர்கள். பாடகர்கள் போன்ற தனித்திறமையும் படைப்பாற்றலும் உள்ளவர்களிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், மனிதனின் மன உந்துதலும் தூண்டுதலும் தேவனுடைய தூண்டுதல் அல்ல. மனிதனுடைய ஆவியின் தூண்டுதலால் ஒரு கிரியையை அவன் செய்வானானால் இயல்பாகவே அவனிடம் உள்ள தவறு செய்யும் தன்மை அவனுடைய எழுத்தில் பிரதிபலிக்கும்.

வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடைய தாயிராதென்று நீங்கள் முந்தி அறிய வேண்டியது (2பேது.1:20). எனவே வேதாகமத்தில் உள்ள எந்தக் காரியமும் ஒரு மனிதனிடத்தில் இயற்கையாக உள்ள உந்துதலினால் எழுதப்பட முடியாது.

2. சொல்வதைக் கேட்டெழுதும் அகத் தூண்டுதல் கொள்கை

இந்தக் கொள்கையின்படி வேதாகமத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் தேவனால் கூறப்பட்டவை. இதை எழுதினவர்கள் தேவன் கூறியதைக் கேட்டு அலுவலகங்களில் எழுத்தர்கள் எழுதுவதுபோல எழுதிவைத்தனர் என்பதாம்.

ஜமைக்காவில் உள்ள வேதாகமத்துக்குத் திரும்புக ஊழியத்தின் தலைவர் சாமுவேல் பிட்ஸ் ஹென்றி என்பவர் ஜமைக்கா முழுவதும் பல இடங்களில் “நிர்வாகப்யிற்சிக்கல்லூரி” நடத்தி வருகிறார். இந்தச் சாமுவேலின் தகப்பனார் ஒரு அற்புதமான இயந்திர அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் புத்தகப் பகுதிகள் தெளிவாகவும், வேகமாகவும் வாசிக்கப்பட்டன. சாமுவேல் எட்டுவயதாய் இருக்கும்போதே இந்த இயந்திரத்தின் உதவியுடன் மிக வேகமாகச் செய்திகளைப் பதிவு செய்யப் பழகிவிட்டார். சாமு வேலுக்கு வயது 8 இருக்கும்போதே இதைச் செய்தார். இவர் தன்னைக் காட்டிலும் 3 அல்லது 4 மடங்கு அதிகமான வயதுள்ளவர்களைக் காட்டிலும் அதிகத் திறமையாகச் செய்துமுடித்துவிட்டார். சாமுவேல் பிட்ஸ் ஹென்றிக்கு இந்த முறையில் தேவன் கூறுவதை எழுதிவிட முடியும். ஆனால், தெக்கோவா ஊர் மேய்ப்பனான ஆமோஸ்-க்கும், கப்பர்நகூமில் உள்ள மீன்பிடிக்கும் தொழில் செய்துவந்த பேதுருவுக்கும் சுலபமாய் இருக்குமா? நிச்சயமாக அவர்களால் முடி யாது. அவர்கள் எழுதும்படி தேவன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருத்திருக்க முடியாது.

வேதாகமம் தெய்வீக அன்பின் சரிதையைக் கூறும் ஒரு புத்தகம். நம்மை அதிகமாக நேசித்ததால் நமக்காக மரிக்கும்படி தமது குமாரனையே அனுப்பித்தந்த தேவன் வெறும் ஒரு இயந்திரம் அல்ல.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

2.வேதாகமம் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (ஜூலை – ஆகஸ்டு 2024)
Dr.உட்ரோ குரோல்

தேவன் தம்மையும், படைப்புகளுக்கான தமது திட்டத்தையும் நமக்கு வெளிப்படுத்தத் தீர்மானித்தார். இது நம்மைப் பிரமிக்கவைக்காமல், நாம் அறிய வேண்டிய அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்திக் காட்டவேண்டும். என்று திட்டமிட்டார். அதற்கு அவர் தெரிந்து கொண்ட மார்க்கம் “அகத்தூண்டுதல்” ஆங்கிலத்தில் இதை “INSPIRATION” என்பர். வேதாகம நூல்களை எழுதுகிற வர்களின் உள்ளத்தில் இதை எழுது, இப்படி எழுது என்று தேவஆவியானவர் தூண்டிக்கொண்டே இருப்பார். நூல்களை எழுதுகிறவர்கள், தேவசித்தத்தின்படி அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ஜெபசிந்தையுடனும், பயபக்தியுடனும் அமர்ந்து எழுதுவார்கள்.

“அகத்தூண்டுதல்” என்பது வேறு. “வெளிப்படுத்துதல்” என்பது வேறு. இதை இப்படி சிந்தித்துப்பாருங்கள்.

“ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைவர் நியூயார்க்கில் உள்ள அவர்களுடைய அலுவலகத்துக்கு வரும்படி உங்களை அழைக்கிறார். அவரிடம் உங்களுக்குத் தெரிவிக்கும்படி ஒரு செய்தி உள்ளது. அது முக்கியமானது. இந்தப் பூமியையே குலுங்கச்செய்யும் தன்மை உள்ளது.

நீங்கள் அவருடைய அலுவலகத்துக்குள் நுழையும்போது, அவர் உங்களிடம் இப்படிச் சொல்கிறார். “தயவுசெய்து உட்காருங்கள். இந்த உலகத்தில் இருக்கும் வேறு எவருக்கும் தெரியாத ஒரு செய்தியை நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.” பின்னர் அவர் என்றென்றும் இந்த உலகத்தில் சமாதானம் ஏற்படக்கூடிய ஒரு திட்டத்தைத் தெரிவிக்கிறார்.

சிறப்பான அவருடைய திட்டத்தை அவர் உங்களிடம் விளக்கிக் கூறிக் கொண்டிருக்கும்போது, அவர் கூறுகிறார். “பொறுங்கள்; நான் கூறுவதையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் கம்பியூட்டரிடம் சென்று நான் உங்களிடம் கூறிய செய்தி அனைத்தையும் உங்கள் சொந்த வார்த்தைகளில் அதில் பதிவு செய்யுங்கள். நீங்கள் பதிவு செய்து அச்சு நகல் எடுத்து என்னிடம் காட்டுங்கள். நீங்கள் கூறுவது நான் எதிர்பார்க்கும் செய்திதானாவென்று நான் உறுதி செய்யவேண்டும்” என்கிறார்.

நீங்கள் எழுதத் தொடங்குகிறீர்கள்; தலைவர் உங்களிடம் கூறிய செய்தியை மாறாமல் அப்படியே நீங்கள் எழுத செயலாளர் வார்த்தைகளைத் தெரிந்தெடுத்துத் தந்து உதவுகிறார். நீங்கள் உங்கள் மொழிநடையில் உங்கள் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுத அனுமதிக்கிறார். அந்தப் பொதுச்செயலாளர் உங்கள் சிந்தனையை ஒருமுகப் படுத்துகிறார். அதை எழுதவும், சரியான வார்த்தைகளைத் தந்து எழுதவும் உதவுகிறார். இது ஒருவேளை வெளிப்படுத்து தலையும், அகத்தூண்டுதலையும் விளக்கப் போதுமான உதாரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் புரிந்துகொண்டபடி உங்களுக்கு விளக்கம் கூறுகிறேன்.

அந்தப் பொதுச்செயலாளர் உங்களை அழைத்து, உலக சமாதானத்துக்கான திட்டத்தை உங்களிடம் விளக்கிக் கூறினாரே, அதுதான் “வெளிப்படுத்துதல்” ஆகும். அவர் உங்களுக்கு வெளிப்படுத்தின செய்தியை நீங்கள் எழுதும்போது, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி, கருத்தைச் சரியாக எழுதுவதற்கு வழிகாட்டுகிறாரே, அதுதான் “அகத்தூண்டுதல்” ஆகும்” வேதாகமமானது தேவனுடைய உள்ளத்தை மனிதனின் உள்ளத்துக்கு வெளிப்படுத்துகிறது. மட்டுமல்ல, அது தேவனால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது. தேவன் வெளிப் படுத்தினதை மனிதர்கள் எழுதும்போது, அது தேவன் விரும்பியபடியே இருந்தது. தேவன் அப்படி இருக்கும்படி தமது அகத் தூண்டுதலால் அவர்களுக்கு உதவினார்.

வேதாகமம் “அகத்தூண்டுதல்” என்று கூறும்போது, அதன் பொருள் என்ன? வார்த்தைகளின் பொருள் எப்போதும் தெளிவாய் இருப்பதில்லை. இன்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் பொருள் வித்தியாசமாயிருக்கும். எனவே வேதாகமத்தில் “அகத்தூண்டுதல்” என்று மொழி பெயர்க்கத்தக்கதாக தேவன் என்ன கருத்தில் கூறினார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

“அகத்தூண்டுதல்” “தேவஆவி” “INSPIRATION” என்பது மூலபாஷையாகிய கிரேக்க மொழியில் “THEOPNE USTOS” என்று உள்ளது. இது இரண்டு சொற்கள் சேர்ந்த ஒருசொல், முதற்பகுதி “THEOS” என்பது தேவனைக் குறிக்கிறது. “PNEO” என்பது ஊதுதல், வெளி சுவாசம் விடுதல், சுவாசித்தல் என்று பொருள்படும். எனவே சொல் பொருளின்படி இதன் பொருள் “தேவனால் ஊதப்பட்டது” என்று பொருள். வேதாகமம் தேவனுடைய வாயிலிருந்து ஊதப்பட்டுப் புறப்பட்டு வந்தது. இதுவொரு முக்கியமான கருத்து. தேவனால் ஊதப்பட்டு, தூண்டப்பட்டு எழுதப்பட்டது என்று பொருள். இன்னொருவர் எழுதியதை தேவன் ஆசீர்வதிக்கவில்லை. தேவன் பவுல், யோவான், பேதுரு, ஏசாயா, மோசே போன்றவர்கள் எழுதிய புத்தகங்களைப் பார்த்துவிட்டு, “நல்லது இந்த புத்தகங்கள் நன்றாக எழுதப்பட்டது போல் தெரிகின்றன. நான் அவற்றை அங்கீகரித்து, அவற்றின்மீது என்னுடைய முத்திரையைப் பதிக்கிறேன் என்று கூறவில்லை. அப்படி இல்லவே இல்லை.

எழுதிமுடிக்கப்பட்ட புத்தகங்களை தேவன் ஆசீர்வதிக்கவில்லை. தம்முடைய வார்த்தை எழுதப்படும்போது தேவாவியானவர் எழுதுபவர்களின் உள்ளத்திலிருந்து எழுதத் தூண்டிக்கொண்டிருந்தார். அந்த எழுத்தாளர்கள் எழுதினார்கள். எழுதும்படி பொருளைத் தூண்டிக்கொண்டிருந்தவர் தேவஆவியானவரே!

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

1.வேதாகமம் தேவனின் வெளிப்பாடாகும்!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (மே – ஜுன் 2024)
Dr.உட்ரோ குரோல்

2. மிகச் சிறப்பான வெளிப்பாடு

தேவனால் எழுதப்பட்ட புத்தகம் வேதாகமம்மட்டுமே! அது தனித்தன்மை வாய்ந்தது. அதைப்போல வேறொரு புத்தகமும் இல்லை. அதற்கு இணை ஏதுமில்லை. அந்த இனத்தில் அதுமட்டுமே உலகில் உள்ளது; தெய்வீக அதிகாரம் கொண்டது. வெளிப்படுத்துவதிலோ, அதி காரத்திலோ, மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமையிலோ, வேறு எந்தப் புத்தகமும் இதற்கு இணையில்லை.

தேவனுடைய உள்ளத்தில் இருப்பவை களைச் சிறப்பாக நமக்கு வெளிப்படுத்தும் புத்தகமாக வேதாகமம் இருக்கிறது. உண்மையில் நமக்குக் கிடைத்திருக்கும் அரிதான பொக்கிஷம் அதுவே.

சிலர் தேவனிடமிருந்து தரிசனங்களைப் பெற்றதாகக் கூறுகின்றனர்.

சிலர் சொப்பணங்களைக் கண்ட தாகக் கூறுகின்றனர்.

கர்த்தரிடமிருந்து “ஒரு வார்த்தை”யைப் பெற்றதாகக் கூறுகின்றனர்.

ஆனால், இவற்றில் எதுவும் வேதாகமத்தில் தேவனுடைய வசனத்தில் இருக்கும் “அதிகாரம்” இல்லை என்று நம்புகிறேன். “தங்களுடைய வார்த்தை தேவனுடைய வார்த்தைக்குச் சமம்” என்று கூறுகிறவர்கள் வேதாகமத்திலேயே கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைக் குறித்து அநேக எச்சரிக்கைகள் உண்டு.

தேவன் இஸ்ரவேலரிடத்தில், நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம் என்று எச்சரித்தார் (உபா. 4:2).

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்… அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்து கொள்ளுவார், நீ பொய்யனாவாய் (நீதி. 30:5,6).

மிகவும் கடினமான எச்சரிக்கை வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் உள்ளது.

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது; ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன் மேல் கூட்டுவார் (வெளி.22:18).

தேவன் தம்மை இயேசுகிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்துவது பரிபூரணமாக வேதாகமத்தில் காணப்படுகிறது. மேலும் இந்த உலகத்தில் படைப்புகள் மூலமும் தேவன் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் அறியவேண்டிய அனைத்துக்கும் தேவனோடு ஒரு சிறப்பான தொடர்பு இருப்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும்.

இயேசுகிறிஸ்துவின் மூலமாக நாம் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என் னும் இரகசியம் வேதாகமத்தில் உள்ளது (2தீமோ.3:15). நம்மை நேசிக்கும் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேதம் கூறுகிறது (2தீமோ. 3:16,17).

வேதவசனங்கள்மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தி, நாம் அவரைப் பற்றி அறிந்துகொள்ள செய்யவில்லை. அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பு, அவர் தமது ஒரேபேறான குமாரனை நம்மை இரட்சிப்பதற்காக அனுப்பியதையும், அவரை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிப்படையலாம் என்றும், தேவனை அப்பா, பிதாவே என்று அழைக்கும் உரிமையைப் பெற்று அவரது பிள்ளைகளாக வாழலாம் என்றும் வேதம் நமக்குக் கற்பிக்கிறது. தேவன் மனிதனோடு பேசுகிறார் என்னும் புத்தகத்தில் ஜேம்ஸ் 1 பேக்கர் இப்படிக் கூறுகிறார்.

“ஒரு பொருளைக் கண்டுபிடிப்பது போலவோ, ஒரு உட்கருத்தை அறிந்து கொள்வதுபோலவோ உள்ளதல்ல வெளிப்பாடு; ஒரு சிறந்த கருத்து நமது உள்ளத்தில் தோன்றுவதும் வெளிப்பாடு அல்ல. மனிதன் தேவனைக் கண்டுபிடித்தல் வெளிப்பாடு அல்ல. தேவன் மனிதனைக் கண்டுபிடிப்பதும், தேவன் தம்மை மனிதனுக்குக் காட்டுவதுமே வெளிப்பாடு ஆகும்”.

தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிற படியால், நம்மை இந்த உலகத்தில் அமைதியாக அமர்ந்திருக்க விடமாட்டார். அவரைக் குறித்து சிந்தித்து, அதிசயித்துக் கொண்டு இருக்க விடமாட்டார்! உண்மை யிலேயே தேவன் என்மீது கரிசனை கொண்டுள்ளாரா? என்று அவனைக் கவலைப்படவும் அனுமதிக்கமாட்டார்.

தேவன் தமது வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். தமது திட்டத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் வேதாகமத்தை வாசித்து, தேவனைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ளும்போது, நாம் நித்திய ஜீவனுக்குள்ள வழியை அறிந்துகொள்ளுவோம்.

வேதாகமத்தை வாசிப்பதன் மூலம் நாம் தேவனைப்பற்றி அறிந்துகொள்ளலாம். தேவன் தம்மை வெளிப்படுத்தியிருப்பதைக் கண்டுகொள்வோம். உங்களுக்கு தேவனைப்பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தால், உங்களுக்கு அவரைப்பற்றி அறிய விருப்பம் இருக்கு மானால், இன்றே வேதாகமத்தை வாசிக்க ஆரம்பியுங்கள்.

ஜெபத்துடன், கவனமாக வேதாகமத்தை வாசியுங்கள்.

நேரம் கிடைக்கும்போது, கடமைக்காக ஏதோ கொஞ்சம் என்று வாசிக்காதேயுங்கள், நீங்கள் அடிக்கடி சாப்பிடுவதுபோல, அடிக்கடி வேதாகமத்தையும் வாசியுங்கள். ஆவிக்குரிய நிலையில் நீங்கள் வளர்ந்து, கொழுத்துப் புஷ்டியாகி விடுவீர்கள்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

1.வேதாகமம் தேவனின் வெளிப்பாடாகும்!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (மார்ச் – ஏப்ரல் 2024)
Dr.உட்ரோ குரோல்

2. மிகச் சிறப்பான வெளிப்பாடு

இது மூன்று வகைகளில் நடைபெறுகிறது.

i. ஆரம்ப காலத்தில் தேவன் மக்களோடு நேரடியாகப் பேசினார். சிலவேளைகளில் அது பரலோகத்திலிருந்து வெளிப்படும் சத்தமாயிருந்தது.

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, நீ எங்கே இருக்கிறாய்? என்றார் (ஆதி.3:9). சில தடவைகளில் தேவன் மக்களோடு சொப்பனத்தின் மூலமாகப் பேசினார்.

யாக்கோபு தான் கண்ட தரிசனத்தில் வானத்துக்கும் பூமிக்கும் வைக்கப்பட்டிருந்த ஏணியில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களுமாய், இறங்குகிறவர்களுமாய் இருக்கக் கண்டான். அப்பொழுது யாக்கோபு தேவனுடைய சத்தத்தைக் கேட்டான் ( ஆதி.28:12-17).

தரிசனஙகளின் மூலம் தேவன் அடிக்கடி மக்களுடன் பேசினார். அப்பொழுது தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். தேவன் எசேக்கியேல் தீர்க்க தரிசியைப் பலதடவைகளில் கிரியை செய்யும்படி தூண்ட வேண்டியதாயிற்று (எசேக்.43:3). அப்போதும் கூட இத்தகைய நிகழ்ச்சிகள் சாதாரணமாக நடை பெறவில்லை. புதிய ஏற்பாட்டு காலத்தில் இது மிக மிகக் குறைவு.

ii. இரண்டாவதாக, இயேசு இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, வாழும் வார்த்தையாக இருந்த அவர் தேவனை நமக்கு வெளிப்படுத்தினார்.

அவர் பிதாவாகிய தேவனின் வார்த் தைகளை உலகில் பேசினார். “பூர்வ காலங்களில் பங்குபங்காகவும், வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்” (எபி. 1:1,2).

தம்முடைய பிதாவாகிய தேவனைக் குறித்து இயேசு கூறும்போது, “என்னை அனுப்பினவர் (தேவன்) சத்தியமுள்ளவர் அவனிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்” என்றார் (யோவான் 8:26).

தேவனுடைய நித்திய தன்மையையும், திட்டத்தையும் வெளிப்படுத்த தேவனுடைய நித்தியகுமாரன் வந்தார். எனினும் உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை. உலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கோ, தேவனுடைய பிள்ளைகளாகும் உரிமை கொடுக்கப்பட்டது.

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).

தேவகுமாரன் இப்போது பரலோகத்தில் தம் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். அப்படியானால் நாம் தேவனைப்பற்றிய எந்த சிறப்பான வெளிப்பாடும் இல்லாமல் விடப்பட்டிருக்கிறோம் என்று பொருளா? அவருடைய அன்பையும், கரிசனையையும் குறித்து நாம் அறிந்துகொள்ள ஒரு இடம் இல்லையா?

தேவன் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார்? என்று அறிய ஒரு மார்க்கமும் இல்லையா? நிச்சயமாக இருக்கிறது! ஜாண்பர்ட்டன் எழுதிய பழைய பாடலைப் பாருங்கள்.

பரிசுத்த வேதம், தெய்வீக புத்தகம் விலையேறப்பெற்ற பொக்கிஷம்!
நீ என்னுடையதே! எங்கிருந்து வந்தேன்? நான் யார்? என்று நீ எனக்குப் போதிக்கிறாய்.
வனாந்தரப் பாடுகளிலும் துன்பத்திலும் எனக்கு ஆறுதல் நீயே!
மனிதன் மரணத்தை வெல்லலாம் என்று ஜீவனுள்ள விசுவாசத்தின் மூலம் காட்டுகிறாய் எனக்கு நீயே!

iii. மூன்றாவதாக, தேவன் தம்மை இன்னொரு சிறந்த வழியின் மூலம் வெளிப்படுத்த விரும்பினார். அது தான் எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தை, வேதவசனம் அடங்கிய பரிசுத்த வேதாகமம் அது ஒரு தெய்வீகபுத்தகம்.

வேறு எல்லாப் புத்தகங்களையும் விட வேதாகமத்தைப் பிரித்துக்காட்டுவது எது? அது ஏன் வித்தியாசமாகக் காணப்படுகிறது? ஏனென்றால், இது தேவனுடைய புத்தகம். அந்தப் புத்தகத்தின் ஆக்கியோன், தேவனே! அதைத் தோற்றுவித்தவர் அவரே. இந்த வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் அனைத்துக்கும் மூல கர்த்தா அவரே!

தேவன் ஆசிரியராய் இருந்து எழுதிய புத்தகம் ஒன்றே. அதுவே வேதாகமம்! அது ஒன்றே தேவனுடைய உள்ளத்தின் சிந்தனைகளை மனிதனின் உள்ளத்துக்குக் கொடுக்கிறது. இது ஒன்றே தேவனுடைய குணாதிசயத்தையும், மனிதனுடைய எதிர்கால வாழ்வின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அந்தத் திட்டம் நேரடியாக ஆக்கியோனாகிய அவரிடமிருந்தே வருகிறது.

புகழ்பெற்ற சில புத்தகங்களைப் பாருங்கள். வெப்ஸ்டர் அகராதி, ஜோசப் ஸ்மித் எழுதிய “மார்மன் பற்றிய புத்தகம்”, மேரி பேக்கர் எடி எழுதிய “வேதாகம வெளிச்சத்தில் விஞ்ஞானமும், ஆரோக்கியமும்”, L.ரான் ஹப்பார்டு எழுதிய “டயனெட்டிக்ஸ்” (சிந்தனை) இந்தப் புத்தகங்கள் எல்லாம் தேவனால் எழுதப்பட்டவை அல்ல.

தேவனால் எழுதப்பட்ட புத்தகம் வேதாகமம்மட்டுமே! அது தனித்தன்மை வாய்ந்தது. அதைப்போல வேறொரு புத்தகமும் இல்லை. அதற்கு இணை ஏதும் இல்லை. அந்த இனத்தில் அது மட்டுமே உலகில் உள்ளது; தெய்வீக அதிகாரம் கொண்டது. வெளிப்படுத்துவதிலோ, அதிகாரத்திலோ, மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமையிலோ, வேறு எந்தப் புத்தகமும் இதற்கு இணை இல்லை.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

page 1 of 2