பாவமன்னிப்பு

தியானம்: 2026 ஆகஸ்டு 29 சனி | வேத வாசிப்பு: 1யோவான் 1:1-10

YouTube video

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (1யோவான் 1:7).

பாவிக்குத்தான் மன்னிப்புத் தேவையே தவிர பரிசுத்தவானுக்கல்ல. அதிலும், எவன் தன்னை பாவி என்று ஒப்புக்கொள்ளுகிறானோ அவனுக்கே மன்னிப்புக்கிடைக்கும். ஆனால் நாம் எல்லாருமே பாவிகள் என வேதம் சொல்லுகிறது. எல்லாரும் பாவம் செய்து தேவமகிமை அற்றவர்களானார்கள் என்றாலும் (ரோம.3:23), நமது பாவங்களை நாம் உணர்ந்து அறிக்கையிட்டால் எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார் (1யோவா.1:9).

காணாமற்போன மகன் பன்றியின் தவிட்டினால் தன் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தபோது, தனது பழைய வாழ்வை நினைத்துப் பார்த்தான். தனது தந்தையின் அன்பு, தான் அவருடன் வாழ்ந்த நிலை, இப்போது அவரது வேலையாட்களைவிடக் கேவலமான நிலைமையில் இருப்பது யாவையும் எண்ணிப்பார்த்தான். இப்போதுள்ள நிலையிலிருந்து எழுந்து அவரிடத்திற்குப் போகத் தீர்மானித்தான். பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்ததாகச் சொல்லி அவரிடத்தில் மன்னிப்புக் கேட்கின்ற ஒரு தீர்மானத்தோடு செல்லுவதை நாம் காணலாம். இதேபோலத்தான் பாவத்தில் இருக்கும் ஒருவர் அல்லது பாவத்தில் வீழ்ந்த ஒருவர் முதலாவது, தான் பாவி என்பதை உண்மையாகவே உணர்ந்து, தான் விழுந்த நிலைமையிலிருந்து எழுந்திருக்கவேண்டும். பின்னர் அவர் பாவமன்னிப்பைப் பெறவேண்டும். தனது பாவத்தை உணராது கேட்கும் மன்னிப்பு பாவமன்னிப்பாகாது. அது வெறும் பகட்டுவேஷமே. அடுத்தது, தான் செய்த பாவத்தை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு பாவமன்னிப்பு கேட்கவேண்டும். அப்போதுதான் அதிலிருந்து விடுதலை பெறுவதும் இலகுவாய் இருக்கும். அந்த விடுதலையும் உண்மையானதாய் இருக்கும்.

நாம் ஆலயம் சென்று புத்தகத்தை வாசித்து, நாங்கள் பாவிகள், எங்களுக்கு மன்னிப்பைத் தாரும் என்று கேட்பது நமக்குப் பழகிப்போன ஒரு பல்லவிபோல் ஆகிவிட்டது. நான் பாவி என்னும் உணர்வு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரவேண்டுமே தவிர, வெறும் உதட்டு வார்த்தைகளிலிருந்து வரக்கூடாது. அவ்விதமாக உள்ளுணர்வுடன் பாவமன்னிப்புக் கேட்பவர்களின் பாவத்தை மன்னித்து, அவர்களைச் சுத்திகரித்து, தமது பிள்ளைகளாக்க தேவன் ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். இப்படியாக பாவமன்னிப்புப் பெறுபவர்களே உண்மையாய் மனந்திரும்பி புது வாழ்வு வாழமுடியும். நானும் நீங்களும் எந்த நிலையில் உள்ளோம் என்று நம்மை நாமே கேட்டுப்பார்ப்போம். நம்மிடம் உண்மையான மனந்திரும்புதல் உண்டா?

ஜெபம்: “அன்புள்ள தகப்பனே, எங்கள் பாவங்களை உணர்ந்து உண்மையாய் மனந்திரும்பி உமது அன்புக்கு கட்டுப்பட்டு வாழ உமது கிருபையைத் தாரும். ஆமென்.”

பாவத்தின் தன்மை

தியானம்: 2026 ஆகஸ்டு 28 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 13:16-30

YouTube video

… அவரை காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு …. (யோவான் 13:2)

அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்துப் புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள் (ஆதி.3:6). பாவம், பார்ப்பதற்கு இன்பமாகவேத் தோன்றும். அதில் ஈடுபடும்போதும் சந்தோஷமாகவே இருக்கும். முடிவிலோ கட்டுவிரியன்போலக் கடிக்கும். நம்மைப் பாதாளத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். பாவம் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ளும். பாவத்திற்கு இடம் கொடுத்தால் அது நம்மைத் தனக்கு அடிமையாக்கிவிடும்.

யூதாசின் நடவடிக்கைகளைச் சற்றே கண்ணோக்குவோம். அவன் எப்போதும் பணப்பையுடன் திரிவதால் ஒருவேளை அவனுக்குப் பணஆசை இருந்திருக்கலாம். அத்தோடு இயேசுவின் பாதத்தில் மரியாள் ஊற்றிய நறுமண தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்றுத் தரித்திருக்குக் கொடுத்திருக்கலாமே; வீணாக ஏன் இயேசுவின் பாதத்தில் ஊற்றவேண்டும் என ஆலோசனை கூறியவனும் இதே யூதாஸ்தான் (யோவான் 12:5). இவனுக்கிருந்த இந்த அளவுக்கதிகமான பண ஆசையை பிசாசானவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி யூதாஸின் இருதயத்தைத் தூண்டினான் (யோவான் 13:2). அவன் அத்தூண்டுதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இடம் கொடுத்ததால் சாத்தான் அவனுக்குள் புகுந்துவிட்டான் (லூக்.22:3).

இவ்விதமாகத்தான் பாவம் நம்மை அடிமைகளாக்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது நமது வாழ்வைத் தனது ஆளுகைக்குள் கொண்டுவரும். இதற்கு மூலக்காரணமானவன் சாத்தானே. நமது பெலவீனங்களை அவன் அறிந்து அதனூடாக நம்மை வீழ்த்த முயற்சிப்பான். அதற்கு நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். பாவம் என்று தெரிந்ததும் அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். அதாவது பிசாசு கொண்டுவரும் ஆசைகளுக்கும், பாவசோதனைகளுக்கும் நாம் எதிர்த்து நிற்க பழகிக் கொள்ளவேண்டும் (யாக்.4:7). எதிர்த்துநின்றால் அவன் நம்மைவிட்டு ஓடி விடுவான். பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு (2தீமோத்.2:22) என்று பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதுகிறார். ஆகவே பாவம் நம்மைப் பிடிக்கும் தன்மை கொண்டதால், அதற்கு விலகி ஓடுவதே அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கச் சிறந்த வழியாகும். நமது பெலவீனங்களை எண்ணிப் பார்க்காமல், நமக்குள்ளே இருக்கும் பெலத்தை எண்ணிப்பார்த்தால் பாவம் நமக்கு முன்னே நடுங்கும்.

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, சாத்தானின் தந்திரங்களை அறிந்து ஜாக்கிரதையுள்ளவர்களாய் எங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளவும், அவனுடைய மாயவலையில் சிக்கிடாது அதற்கு விலகி ஜீவிக்க உமதருள் தாரும் . ஆமென்.

எது பாவம்?

தியானம்: 2026 ஆகஸ்டு 27 வியாழன் | வேத வாசிப்பு: ஆதியாகமம்; 1:1-13

YouTube video

அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள் (ரோமர் 5:19).

ஆதியிலே பாவம் எப்படி உலகத்திலே நுழைந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. கீழ்ப்படியாமையினாலேயே பாவம் பிறந்தது. ஒரு மரத்தில் இருக்கும் கனியைப் புசித்தது பாவமல்ல; ஆனால் தேவன் புசிக்க வேண்டாம் என்று சொல்லிய கனியைப் புசித்ததே அவர்கள் செய்த பாவம். பாவத்தைச் செய்யத் தூண்டியவன் பிசாசானவன். அவனது ஆசை வார்த்தையில் மயங்கி விழுந்துபோனாள் ஏவாள். தான் சாப்பிட்ட பழத்தை ஆதாமுக்கும் கொடுத்தபோது (அவனை, ஏவாளே பாவத்தில் வீழ்த்தினாள் என்று கூறிவிடமுடியாது. ஏனெனில் அவனுக்கும் சிந்திக்கும் ஆற்றல் இருந்தது) அவனும் பழத்தில் ஆசைகொண்டே ஏவாளிடம் வாங்கிப் புசித்தான். இருவரும் பாவத்தில் வீழ்ந்ததால் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டும் அவர்கள் ஒளிந்துகொண்டார்கள்.

தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக நாம் செய்யும் எந்தக் காரியமும் நம்மைப் பாவத்தில் தள்ளிவிடுகிறது. பாவம் நம்மைத் தேவனிடமிருந்து பிரிக்கிறது. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே, அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது என்று வாசிக்கிறோம் (ஏசா.59:2). ஒரே மனுஷனாலே பாவம் உலகத்தில் பிரவேசித்தாலும், எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள். எனவே ஒரு குழந்தை, பாவமான உலகில் பிறக்கும்போது அது பாவ சுபாவத்துடனேயே பிறக்கின்றது. தாவீது, என் தாய் என்னைப் பாவத்திலே கர்ப்பந்தரித்தாள் என கூறுகிறார் (சங்.51:5). இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் உண்டு. ஆனால் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் வேதம் கூறுகிறதே (ரோம.6:23). இது நித்தியமான மரணத்தைக் குறிக்கின்றது. எல்லோரும் பாவிகள். ஆதலால் எல்லோருக்கும் மீட்பு அவசியம். நான் பாவி அல்ல, நான் பரிசுத்தவான் என்று எவருமே பெருமை பேசமுடியாது.

இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது என்பது தேவனுடைய நியமம் (எபி.9:22). எனவே தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை இவ்வுலகத்திற்கு அனுப்பி, அவரைச் சிலுவையிலே இரத்தம் சிந்தவைத்து நமக்குப் பாவ விமோசனம் தந்தார். ஆகவே, எல்லோருமே பாவிகளானாலும், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொன்ன இயேசுவை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் நிச்சயமாகவே பாவவிமோசனம் உண்டு.

ஜெபம்: “அன்பின் பிதாவே, உமது சமுகத்தைவிட்டு எங்களைப் பிரித்துப்போட்ட பாவத்திலிருந்து எங்;களை விடுவிக்கும்படியாக, நீர் சிலுவையில் இரத்தஞ்சிந்தி, மீட்டுக் கொண்ட மகா மேன்மையான இரட்சிப்பிற்காக, மன்னிப்புக்காக உமக்கு நன்றி. ஆமென்.

சம்பூரணமாய் கொடுப்பார்

தியானம்: 2026 ஆகஸ்டு 26 புதன் | வேத வாசிப்பு: யாக்கோபு 1:1-8

YouTube video

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் …. தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் (யாக். 1:5).

நாம் வாழுகிற இந்தப் பொல்லாத உலகத்திலே அனைத்தையும் நிதானித்து அறிந்துகொள்வதற்கு நமக்கு ஞானம் அவசியம். ஏனெனில், இன்று பாவம் எது என்று தெரியாத அளவுக்குப் பிசாசானவன் மனிதனுடைய மனதைக் குருடாக்கிவிட்டான். கண்ணை மூடிக்கொண்டு நடப்பதுபோல நாம் இன்று நடந்துகொண்டிருக்கிறோம். எப்போது, எங்கே பள்ளத்திலே விழுவோம் என்றே தெரியாது. இதற்கு ஜாக்கிரதை அவசியம் என்றாலும், ஞானம் மிக மிக அவசியம். தேவன் ஞானத்தைக் கேட்கிறவர்களுக்கு சம்பூரணமாய்க் கொடுக்கிறவர் என்று யாக்கோபு 1:5ஆம் வசனத்தில் தெளிவாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நாம் கொஞ்சமேனும் சந்தேகங் கொள்ளாமல் முழு விசுவாசத்தோடு கேட்கவேண்டும் என்கிறார் யாக்கோபு. சந்தேகப்படுகிறவன் காற்றினால் அலசடிப்படுகிற அலைகளுக்கு ஒப்பாயிருப்பான் என்றும் எழுதுகிறார். நாம் சரியான தீர்மானங்களை எடுக்கவும், எது சரி, எது பிழையென்பதை நிதானிக்கவும் நமக்கு ஞானம் அவசியம்.

அறிவு நல்லது; அதைப் பலவழிகளில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அறிவினால் பெற்றுக்கொண்டதைச் சரியாகச் செயற்படுத்த நமக்கு ஞானம் அவசியம். ஆகவே நாம் எப்போதும் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். பணம், பொருள், வசதி, வாய்ப்புக்களை நாம் அடிக்கடி கர்த்தரிடம் கேட்கிறோம். ஆனால் எப்போதாவது “ஆண்டவரே எனக்கு ஞானத்தைத் தாரும்; நான் சரியான பாதையிலே செல்ல, தீர்மானங்களைச் சரிவர எடுக்க ஞானத்தைத் தாரும்” என்று கேட்டிருக்கிறோமா? தேவன் பணத்தைக் கேட்டால் அதைச் சம்பூரணமாய்க் கொடுக்கமாட்டார்; ஏனெனில் அதனால் நாம் பாவத்தில் சுலபமாய் விழுந்துவிடுவோம் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஞானம் அப்படியல்ல, தேவன் தம்முடைய பிள்ளைகள் அனைவருமே ஞானமாய் நடக்கவேண்டும், விழுந்துபோகக் கூடாது என்று நம்மில் கரிசனைகொண்ட கர்த்தர் அவர். எனவே நாம் சந்தேகப்படாமல் கேட்டால் அவர் ஞானத்தைச் சம்பூரணமாய்க் கொடுப்பார்.

“தேவனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்று நீதிமொழிகள் கூறுகிறது. நாம் தேவனுக்கு உண்மையாய் பயந்து அவரைக் கனப்படுத்துவோமானால் நிச்சயம் நமக்குள் ஞானம் ஊற்றெடுக்கும். ஆகவே, கர்த்தர் நமக்குச் சம்பூரணமாய் கொடுக்க ஆயத்தமுள்ளவராயிருக்கும்போது, ஞானத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு, தேவனுடைய பார்வையிலும், மனுஷருடைய பார்வையிலும் ஞானவான்களாய் நடந்துகொள்வோம். பொல்லாத இந்த உலகத்திலே வஞ்சகத்துக்கு நாம் தப்பி வாழ தேவன் தரும் ஞானம் அவசியம்.

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, ஒரு காரியத்தை செவ்வையாய் செய்வதற்கு ஞானமே பிரதானம் என்ற வேதவசனத்திற்கேற்ப எங்களுக்கு வேண்டிய ஞானத்தை கிருபையாய்த் தந்தருளும். ஆமென்.

வெற்றி கர்த்தருடையதே

தியானம்: 2026 ஆகஸ்டு 25 செவ்வாய் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 12:1-7

YouTube video

நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு … போனேன் (நியாயா.12:3).

யெப்தா வெற்றியடைந்து வந்ததைக் கண்ட எப்பிராயீம் மக்கள், தங்களை ஏன் யுத்தத்திற்கு அழைக்கவில்லை என்று சொல்லி யெப்தாவோடு வாக்குவாதம் செய்தனர். “அதற்கு யெப்தா: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன்புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கவில்லை; எனவே நான் எனது ஜீவனைக் கையிலே பிடித்துக்கொண்டு புறப்பட்டுப் போனேன்; கர்த்தரே எனக்கு ஜெயத்தைத் தந்தார்” என்று தைரியமாகச் சொல்லுகிறான்.

யெப்தா ஒரு பராக்கிரமசாலி என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் ஒவ்வொருவிசையும் யெப்தா தனது பலத்தை நம்பாமல், தேவனையே உயர்த்திப் பேசுவதைக் காண்கிறோம். யுத்தத்திற்கு போகும் முன்பும் சரி, வெற்றி கொண்டு வந்த பின்னரும் சரி, அவனது வார்த்தைகளும், அவனது நம்பிக்கையும் மாறவேயில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். யுத்தத்திற்குத் தன்னை வந்து கூப்பிட்டபோது அனைத்தையும் மிஸ்பாவிலே தேவனிடம் கூறிவிட்டுத்தான் புறப்பட்டு வந்தான். யுத்தத்திற்குப் போகும் முன்பு பொருத்தனைபண்ணி ஜெபித்தான். பின்பு யுத்தம் முடிந்ததும்கூட எப்பிராயீம் மக்கள் வந்தபோது, “கர்த்தரே வெற்றி சிறக்கச் செய்தார்” என்று சொல்கிறான்.

பரஸ்திரீயின் மகன் என்று சொல்லி தள்ளப்பட்ட நிலையில் இருந்த யெப்தாவுக்கு அந்நிலையில் இருந்து இஸ்ரவேலின் நியாயாதிபதியாக வரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வந்ததை அவன் எண்ணிப் பார்க்கும்போது, இது கர்த்தரால் தனக்கு வந்த காரியம் என்பதை அவன் கடைசிவரைக்கும் மறக்காதவனாய் இருந்தான். அவன் அம்மோன் புத்திரரை வெற்றிகொண்டால் அவனை நியாயாதிபதியாக ஏற்றுக்கொள்வதாக சொல்லப்பட்டபோதிலும், அவன் சொன்னவர்களின் வார்த்தையை நம்பாமல் யாவற்றையும் மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் சொல்லிவிட்டுப் புறப்படுகிறான்.

தேவன்மீது உண்மையான நம்பிக்கையை வைத்து தனது பொறுப்பைத் தொடங்கிய யெப்தா, இஸ்ரவேலரை ஆறு வருடங்கள் ஆண்டுவிட்டு பின்னர் மரித்துப்போனான். நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் இதுபோன்றதான நம்பிக்கையை நாம் கர்த்தரிடத்தில் கொண்டிருக்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். நம்முடைய வாழ்வில் எல்லாப் பகுதிகளிலும் நம்மை வழிநடத்த தேவன் வல்லமையுள்ளவராக இருக்கிறார் என்ற நம்பிக்கையும், உறுதியும் நமக்கு எப்போதும் மிகவும் அவசியம். மனுஷரின் பேச்சை நம்பி, நாம் வாழுகிறோமா அல்லது தேவனை உறுதியாய் பற்றியிருக்கிறோமா? இதுதான் இன்று நம்மை நாமே கேட்கவேண்டிய கேள்வி. இதற்கான பதில்தான் என்ன?

ஜெபம்: “தகப்பனே, யுத்தத்திற்கு போகுமுன்பு ஜெபித்த யெப்தா, யுத்தத்தில் வெற்றி பெற்றபின்பும் பெருமிதம்கொள்ளாமல் கர்த்தருக்கு முன் தாழ்மையாய் நடந்தாரே; நாங்களும் அவ்விதம் செயல்பட எங்களுக்கு உதவும். ஆமென்.”

பொருத்தனை ஜெபம்

தியானம்: 2026 ஆகஸ்டு 24 திங்கள் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 11:29-40

YouTube video

இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பி வந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான் (நியா.11:39).

நமக்குத் தேவைகள் வரும்போது முன்பின் யோசிக்காமல் வாயைத் திறந்து ஏதாவது சொல்லிவிடுவோம். அந்த நேரத்தில் காரியம் நடந்தால் போதும் என்று எண்ணுவோம். ஆனால் தேவைகள் முடிந்ததும் நாம் சொன்னதையும் மறந்து விடுவோம். இப்படியே, ஜெபிக்கும்போதும் நாம் கர்த்தரிடமும் எதையாவது சொல்லிவிட்டு பின்னர் மறந்துவிடுவதுண்டு அல்லவா! ஆனால் இங்கே யெப்தாவின் ஜெபமோ உறுதியானதாய் இருந்தது. அவன் ஜெபிக்கும்போது யோசிக்காமல் சொல்லியிருக்கலாம். ஆனால் அவன் வெற்றி சிறந்து வந்தபோது, தேவனுடைய சந்நிதியில் சொன்ன வார்த்தையை நிறைவேற்றவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான். அவன் குமாரத்தியோ ஒரு கன்னியாக இருந்தாள். அவள் வாழ்க்கையில் பார்க்க வேண்டிய காரியங்கள் ஏராளமாய் இருந்திருக்கலாம். ஆனாலும் அவள் தன் தகப்பன் தேவனுக்கு முன்பாக செய்த பொருத்தனையை நிறைவேற்றவேண்டும் என்பதில் அவளும் அதிக உறுதியோடு இருந்தாள். தன்னுடைய வாழ்வுக்காக இரு மாதங்கள் அவள் துக்கம் கொண்டாடிவிட்டு, திரும்பி வந்தாள். யெப்தா தனது பொருத்தனையின்படியே அவளுக்குச் செய்தான்.

பராக்கிரமசாலியான யெப்தா தனது பெலத்தை நம்பி யுத்தத்திற்குப் போகவில்லை. தேவனை நம்பியே போனான். தேவன் அமலேக்கியரைத் தன் கையில் கொடுக்காவிட்டால் தான் வெற்றிகொள்ள முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். அதனால் தான் ஜெபித்து, தேவனோடு பொருத்தனையும் பண்ணி, பிற்பாடுதான் புறப்பட்டுப் போனான். நமது வாழ்விலும்கூட, நாம் நம்மால் முடியாத காரியங்களுக்குத்தான் தேவனைத் தேடி வருவோம். நம்மால் முடியும் என்று எண்ணுகிற காரியங்களில் நமது பெலத்தோடு செய்யலாம் என்று நினைத்து இறங்குவோம். பிறகு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால், “ஆண்டவரே” என்று தேவனிடம் ஓடிவருவோம். பிரியமானவர்களே, எப்படிப்பட்ட காரியமாக இருந்தாலும், முதலில் நாம் தேவனைத் தேடுவோம். நமது உள்ளத்துக்குள் எப்பொழுதும் ஜெபமும் துதியும் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இடைவிடாது ஜெபிப்பது என்பது அதுவேதான். தேவனோடுள்ள உறவு என்பதுவும் அதுவேதான்.

நமக்கு ஜெபநேரம், தியானநேரம் என்று வேறுபட்ட நேரங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றைவிட எப்போதும் உள்ளத்துக்குள் ஜெபத்தால் நிறைந்திருப்போம். அப்போது வீண் சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ளாது. எப்போதும் தேவனின் பிரசன்னத்துக்குள் இருப்போம். அப்போது கர்த்தருக்கு நாம் செய்த பொருத்தனைகளிலும் தவற மாட்டோம். கர்த்தரிடம் ஜெபித்துவிட்டு மறந்து விடவும் மாட்டோம்.

ஜெபம்: “ஆண்டவரே, வீண் சிந்தனைகளை வெறுத்து உமது வேதத்தில் பிரியமாயிருந்து, இடைவிடாத ஜெபவாழ்வில் நாங்கள் காணப்பட எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.”