அலுப்பான வாழ்வும் அர்த்தம் பெறும்!

தியானம்: 2025 அக்டோபர் 14 செவ்வாய் | வேதவாசிப்பு: பிரசங்கி 1:3-11

YouTube video

இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? (பிரசங்கி 1:10).

ஒடுக்கமான வாடகை அறையிலே உட்கார்ந்து, அறையின் கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சகோதரியிடம், ‘ஏன் இப்படி இருக்கிறீர்’ என்று கேட்டேன். ‘இந்த வாழ்க்கை வெறுப்பாய் இருக்கிறது. ஏதோ காலையில் எழும்பி, சமையல் செய்து, வேலைக்குப்போய், அங்கேயும் ஒரே முகங்களைப் பார்த்து, களைத்துப்போய், வீடு வந்து, திரும்பவும் அதே சாப்பாடு நித்திரை. விடியுது இருளுது, வாழ்வும் உருளுது. மனதிலேயோ ஆறுதலில்லை’ என்றாள் அவள். இப்படியே, நமக்கும் சிலசமயம் வாழ்க்கையே அலுத்துப்போனதுபோல தோன்றக்கூடும். தினம்தினம் நடப்பவையே பின்னும் தொடருகின்றன. எதிலும் திருப்தியில்லை. எதுவுமே புதினமானதாக இல்லை. இன்று எந்த நாளும் கொலை செய்திகளை கேட்டே வாழ்க்கை வெறுத்துவிடும் போலிருக்கிறது. மாத்திரமல்ல, திரும்பத்திரும்ப ஒரே கஷ்டங்கள்தான். மாற்றம் வேண்டும் என்பதற்காக எத்தனை பேர் வெளியூர் வெளிநாடு என்று போகிறார்கள். ஆனால், பின்னர் திரும்பி அதே இடத்திற்குத்தானே வரவேண்டும்; எங்கேமாற்றம்? அதுமாத்திரமல்ல, இதுவரை நாம் வாழ்ந்து முடிந்துவிட்ட நாட்கள் யாவும் நமது மனதில் இருக்கிறதா? அதுவும் இல்லை. இதைத்தான் சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமே இல்லை என்று பிரசங்கி எழுதுகிறார்.

ஒரு மனிதன் இருந்தான். படிப்பு, செல்வம், நல்ல தொழில், கௌரவம், எல்லாம் இருந்தது. ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைக் கவனிப்பதுதான் அவனது பிரதான தொழில். காலையில் எழுந்தால் கிறிஸ்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி, அவர்களை அடித்து, கட்டி இழுத்து வரவேண்டும். இவனுடைய வாழ்வில் மாற்றம் வந்தபோது, துன்பப்படுத்துவதற்காக கிறிஸ்தவர்களைத் தேடினவன் இப்போது கிறிஸ்துவுக்காகத் துன்பப்பட தைரியமாய் அவர்களிடமே சேர்ந்துகொண்டான். “கிறிஸ்துவே தேவன்” என்று தைரியமாக பிரசங்கித்தான். மாத்திரமல்ல, இதுவரை சவுல் என்று அழைக்கப்பட்ட அந்த மனிதன் இப்போது பவுல் என்று அழைக்கப்படுகிறான். வாழ்வில் ஒரு மாற்றம். வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான செயல்கள். பவுல் தன் வாழ்வுக்குரிய புதிய அர்த்தத்தைப் புரிந்துகொண்டார். இடையில் நடந்ததென்ன? அவருடைய வாழ்விலே உயிர்த்த இயேசு வந்தார். எல்லாம் மாற்றமடைந்தது, எல்லாம் புதிதானது!

தேவபிள்ளையே, நம் வாழ்வில் ஆண்டவரை வரவழைப்போமாக. அவரை அறிந்திருந்தால் போதாது. கடமை ஜெபமும் போதாது. ஆண்டவர் பார்க்கும் கண்களால் நாமும் பார்க்கப் பழகவேண்டும். உடனே புதினமான காரியங்கள் எதுவும் நடக்காது. எனினும், நமக்கு அலுப்புத் தந்த அத்தனையும் அர்த்தமுள்ளதாக மாறும்.

ஜெபம்: அன்பின் பிதாவே, கடமைக்காக கிறிஸ்தவ வாழ்வு, ஜெபம் என்றில்லாமல் கிறிஸ்துவின் சிந்தையால் நிரப்பப்பட்டு அர்த்தமுள்ள வாழ்வு வாழ எங்கள்மேல் கிருபையாயிரும். ஆமென்.

நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு!

தியானம்: 2025 அக்டோபர் 13 திங்கள் | வேதவாசிப்பு: ரோமர் 8:19-25

YouTube video

அந்தச் சிருஷ்டியானது … மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது (ரோமர் 8:21).

பிரசங்கி நூலில் குறிப்பிடப்பட்ட ‘மாயை’ என்ற சொல்லின் பொருள், “குளிர் காலத்தில் தென்பட்டு மறையும் சுவாசம்” என்பதாகும். நமது கடந்த காலங்களைச் சற்று சிந்தித்துப்பார்த்தால், எல்லாமே தோன்றி மறைந்துவிட்ட மாயையாகத்தானே தெரியும்! ஏன் இந்த நிலைமை? இதற்கு ஒரே பதில், “பாவம்”. தேவன் சிருஷ்டித்த பூரண நிலைமையிலிருந்து சகல சிருஷ்டியையும் பாவமானது கீழே தள்ளிவிட்டது. அதனால் முழுஉலகமும் தன் மீட்புக்காக தவிக்கிறது.

உலகமே தன் மீட்புக்காகத் தவிக்கும்போது, அதே உலகம் நமது தேவையைப் பூர்த்தியாக்குவது எப்படி? ஆவியானவருக்குள்ளான சகல ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கின்ற நாமும்கூட பாவஉலகின் வேதனைகளிலிருந்து வெளிவரவும், ஆவியின் நிறைவை அடைந்து, கிறிஸ்துவோடு வாழும் வாழ்க்கைக்காகவும் தவிக்கிறோம். இந்தத் தவிப்பானது, நமது உள்ளுணர்வில் கலந்திருக்கும்போது இந்த உலக காரியங்கள் வேறு எவ்விதத்தில் நமக்கு திருப்தியளிக்கக்கூடும்?

கிறிஸ்தவர்களாகிய நாம், இவ்வுலகையும் அதன் காரியங்களையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதிலேதான் நமது வாழ்வின் வெற்றி தோல்வி தங்கியிருக்கிறது. தோற்றத்தில் அழிவுக்குள்ளானதும் ஆவிக்குரிய விதத்தில் பாவத்தால் கறைப்பட்டதுமான இந்த உலகைப் பார்த்து நாம் சோர்ந்துபோக வேண்டியதில்லை. ஏனெனில் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஏற்கனவே நாம் தியானித்தபடி நாம் எதையும் நித்தியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகவேண்டும். தேவனுடைய அநாதி திட்டம், புதியவானம், புதிய பூமி, பாவம் துன்பம், வியாதி கண்ணீர், தீமை எதுவுமற்ற ஒரு புதிய வாழ்வு நமக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், கிறிஸ்துவைக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகில் வாழும்வரைக்கும், என்றும் கிறிஸ்துவோடு வாழுவோம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு வாழவும், நம்பிக்கையற்ற மக்கள் மத்தியில், தீமையோடு எதிர்த்துப் போராடவும் கிருபை பெற்றிருக்கிறோம்.

தேவபிள்ளையே, நம்பிக்கையற்ற உலகுக்கு நம்பிக்கை கொடுக்கவேண்டிய நாமே, இவ்வுலகத்தின் அற்பமான பயமுறுத்தல்களையும் மாயைகளையும் கண்டு நம்பிக்கையற்றுப் போகலாமா? எல்லாவற்றுக்கும் நல்ல முடிவு உண்டு என்ற நம்பிக்கையோடே எழுந்து நிற்போம். பிசாசானவன் கொண்டுவரும் எந்தக் காரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. நமக்குள் இருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துபோகக்கூடாது. அப்போது மாயையாகத் தோன்றுவதெல்லாம் நமக்கு அர்த்தமுள்ளதாக மாறுவது நிச்சயம்!

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, அநித்தியமான உலகில் முடிந்துபோகக்கூடிய மாயை ஏற்படுத்தும் பயங்களுக்கு எங்களை நீங்கலாக்கி உமக்குள்ளான நம்பிக்கையிலே எங்களை திடப்படுத்தும். ஆமென்.

மூத்தோரின் அறிவுரைகள்!

தியானம்: 2025 அக்டோபர் 12 ஞாயிறு | வேதவாசிப்பு: சங்கீதம் 39:1-13

YouTube video

எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம் (சங்கீதம் 39:5).

“நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே; உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது?” “அது புகையைப்போன்றது” என்று யாக்கோபு அன்று எழுதினார். ஆனால், இன்றைய சூழ்நிலையில், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியாத நிலையில் நாம் வாழுகிறோம். அப்படியானால் இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டா? வாழ்ந்தென்ன, வாழ்வில் எதை அனுபவித்தென்ன என்று மனம்சோர்ந்து போய் இருக்கும் சகோதரனே, சகோதரியே, உன்னுடைய இந்த மனநிலை ஏதோ புதினமானதல்ல. அன்று தாவீதுக்கும் இதே சோர்வு உண்டாயிருந்தது. ராஜாவாய் கெம்பீரமாய் வீற்றிருக்கவேண்டிய அவர், ஜீவனுக்குத் தப்ப, காடுமேடு என்று அலைந்து திரிந்தால் யாருக்குத்தான் வெறுப்பு வராது! ஆனால், தாவீது தேவனுக்குள் தன்னைத் திடப்படுத்த அறிந்திருந்தார். 39ஆம் சங்கீதத்தில் தாவீ துக்கு வியாதி கண்டிருக்கலாம் என்று விளங்குகிறது (சங்.39:10). எனினும் அந்த நிலையிலும் தன் நம்பிக்கை தேவனே என்று பாடியது, அவர் தேவனையே சார்ந்துநின்று தன்னைத் திடப்படுத்தினார் என்பதை நமக்கு காட்டுகிறது.

சாலொமோன் ராஜாவின் அரசாட்சிக்காலம் சரித்திரத்திலே ஒரு பொற்காலமாகும். ஞானம், அதிகாரம், வல்லமை, செல்வம், நற்கீர்த்தி, தேவ அநுக்கிரகம் ஆகிய எல்லாமே ஒருங்கிணைந்து விளங்கியவர் தாவீதின் மகன் சாலொமோனே! இவரது அரசாட்சிக்காலத்திலே தேசமும் அமைதியாயிருந்தது. அப்படியிருக்க, உலகம் தரும் எல்லாவற்றின் முடிவும் வெறுமையே என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தவரும் இந்த சாலொமோனே. ஆனால் தாவீது, ஏற்கனவே அறிந்துகொண்டிருந்த இதே விஷயத்தை, மகன் சாலொமோன் அறிந்துகொள்ள, முதிர்வயது வரைக்கும் காலத்தை வீணாக்கவேண்டியிருந்தது. என்றாலும் உணர்ந்து கொண்டதும் அதனை அவர் மறைத்து வைக்கவில்லை. தான் தன் தகப்பனின் அனுபவத்தை அறியாதிருந்த மாதிரி, பின்வரும் சந்ததியும் இருந்துவிடாமல், சுய முயற்சியும் சுயநீதியும் அல்ல, தேவனைச் சார்ந்து வாழுவதே வாழ்வுக்கு அர்த்தத்தைத் தரும் என்ற உண்மையை முக்கியமாக வாலிப வயதினருக்கு உணர்த்த மிகுந்த முயற்சி எடுத்தார் இந்த சாலொமோன்.

தேவபிள்ளையே, அனுபவப்பட்டவர்கள் புத்தி சொல்லி எச்சரித்தாலும் நாம் கேட்டு நடப்பது மிகக் குறைவு. பின்னர் நாம் அனுபவப்படும்போதுதான் புத்தி தெளிகின்றது. சாலொமோனாவது தன் முதிர்வயதிலே உண்மையைக் கண்டறிந்தார். நாம் காணாமலேயே அழிந்துபோக நேர்ந்தால் எத்தனை பரிதாபம். ஆகவே, நமக்கு முன்னே வாழ்ந்தவர்களின் அனுபவங்களை, அறிவுரைகளை கவனத்தில் எடுத்து நமது வாழ்வை இப்போதே சீர்ப்படுத்திக்கொள்வோமாக.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான் என்ற வாக்குப்படி எங்களது முன்னே வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களையும் அறிவுரைகளையும் சொல்லும்போது ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை எங்களுக்குத் தாரும். ஆமென்.

ஞானியாக வேண்டுமா? பைத்தியமாகு!

தியானம்: 2025 அக்டோபர் 11 சனி | வேதவாசிப்பு: 1கொரிந்தியர் 3:18-23

YouTube video

இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது (1கொரிந்தியர் 3:19).

“சந்தோஷமாயிருக்கிறீர்களா” என்று யாராவது கேட்டால் உங்கள் பதில் என்ன? ஒருவிதத்தில் நாம் யாவருமே வாழ்வோடு போராடுகிறோம் என்பதுதான் உண்மை. “சந்தோஷம் பொங்குதே” என்று பாடுவோம். பாட்டு முடிந்ததும் சந்தோஷம் மறைந்துவிடுகிறது. மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஆரம்பிக்கும் பல விருந்துக் கொண்டாட்டங்கள் குழப்பத்திலே முடிகிறதை கண்டதுண்டா? நமக்கு ஏன் இத்தகைய தத்தளிப்பு? கர்த்தருக்குள் சந்தோஷம், கர்த்தருக்குள் வாழ்வு, கர்த்தருக்குள் நிறைவு என இவற்றை அறிந்திருந்தால் மட்டும் போதாது; அதன் அடிப்படையில் வாழ்வை அமைக்கத் தவறும்போதுதான் தத்தளிப்பு ஏற்படுகிறது.

அறிவு, ஞானம், உறவு, வேலை, வருமானம், கொண்டாட்டம் இவை யாவும் நல்லதுதான். ஆனால், வாழ்வின் உயரிய நோக்கத்தின் அஸ்திபாரத்தை இவை தகர்க்க முடியும் என்ற உண்மையை மறக்கக்கூடாது. ஒருவன் தன்னை ஞானவான் என்று எண்ணினால் அவன் தானே பைத்தியக்காரனாய் மாறக்கடவன் என்கிறார் பவுல். ஏன் தெரியுமா? இவ்வுலக ஞானம் தேவனுக்கு முன்னே பைத்தியமாயிருக்கிறது. ஆம், மனிதன் எதையெதையோ கண்டுபிடிக்கிறான். வானத்தை எட்டுவேன் என்று சவால் விடுவதுபோல நடக்கிறான். ஆனால், மனிதனால் தேவனோடு போராட முடிவதில்லை. பெரிய பெரிய காரியங்களை தன் ஞான அறிவினால் சாதித்த எந்தவொரு மனிதனாவது படுக்கையில் விழும்போது, அவனது ஞானம் அவனைக் காப்பாற்றுமா? இந்த உலக ஞானம் நம்மைத் தேவனிடத்திலிருந்து பிரித்துப்போடுமானால் அது ஞானமே அல்ல. தேவனுடைய வழிகளும் சிந்தனைகளும் இந்த உலகத்திற்கு பைத்தியமாகத் தெரியலாம்; ஆனால் அவற்றின் பெறுமதியை யாரால் அளவிடக்கூடும்? தேவஞானம் உலகிற்குரியதல்ல; அது நித்தியத்திற்குரியது. ஆகவே ஞானியாவதற்கு, நாம் இந்த உலகிற்குப் பைத்தியமாகவேண்டும்.

அன்பானவர்களே, நாம் உண்மையான மகிழ்ச்சியை எங்கே காணலாம்? கர்த்தருக்குள்ளானவற்றிலேயே காணலாம். நமது நம்பிக்கையை நாம் எங்கே வைக்கலாம்? அதனை முழுமையாக நிறைவேற்றுபவரிடத்திலேயே வைக்கலாம். அறிவு, ஞானம், உறவுகள், வேலை, பணம், பொருள், சந்தோஷங்கள் இவற்றை நாம் எப்படி தகுதியாக அனுபவிக்கலாம்? இவற்றுக்கெல்லாம் ஊற்றுக்காரணராகிய கர்த்தருக்குள் இவை வைக்கப்பட்டால் மாத்திரமே அவற்றை சிறப்பாக அனுபவிக்கலாம். தேவன் இல்லாத எதுவும் ஒன்றுமேயில்லை. ஆகவே, நம்முடைய மகிழ்ச்சி, நம்பிக்கை, மற்றும் நமக்கிருக்கும் சகலத்தையும் சோதித்துப் பார்ப்போமாக. நாம் தேவ ஞானத்தில் வளரவேண்டுமானால் உலகிற்குப் பைத்தியமாக வேண்டியது அவசியம்.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நவீன கண்டுபிடிப்புகளும் விஞ்ஞான வளர்ச்சிகளும் எங்களை தேவனைவிட்டுப் பிரித்துப்போடாதவாறு நாங்கள் தேவஞானத்தில் வளர கிருபை செய்யும். ஆமென்.

ஆவிக்குரிய ஞானம்

தியானம்: 2025 அக்டோபர் 10 வெள்ளி | வேதவாசிப்பு: சங்கீதம் 33:1-22

YouTube video

ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன் (பிலிப்பியர் 3:7).

“மனமகிழ்ச்சிக்கு முக்கிய தேவை பணம்”, ஆராய்ச்சி செய்து இதனைக் கண்டுபிடித்துள்ளார்கள் என ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதைக் கண்டுபிடித்தவர் சமகால சாலொமோனோ என்று எண்ணத் தோன்றியது. நேற்று பிரசங்கி புத்தகத்தில் நடைமுறை ஞானத்தைக் குறித்து கவனித்தோம். அடுத்ததாக, இப்புத்தகத்தில் “ஆவிக்குரிய ஞானம்” நிறைந்துள்ளதை நாம் கவனிக்கலாம். அதாவது, நித்தியத்தின் பெறுமதியைக் குறித்த ஞானம் அது.

பிரசங்கி3:11 இல் “உலகத்தையும் அவர்கள் உள்ளத்தில் வைத்திருக்கிறார்” என்று படிக்கிறோம். “காலத்தைப் பற்றிய உணர்வை தேவன் மனிதருக்குத் தந்திருக்கிறார்” என்று திருவிவிலிய மொழிபெயர்ப்பு கூறுகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பிலே, “மனிதருடைய இருதயத்திலே நித்தியத்தை வைத்திருக்கிறார்” என எழுதப்பட்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும், நமக்குள் தேவன் நித்தியத்தின் வாஞ்சையை வைத்திருக்கிறார் என்பதே வெளிச்சம். உலகில் பெறும் அனைத்தையும் நித்தியத்தின் வெளிச்சத்தில் வைத்துப்பார்க்கும் வரை, எதுவும் நமக்குத் திருப்தி தராது.

நித்தியத்தின் பெறுமதிப்பை அறியவேண்டுமானால் இவ்வுலகின் காரியங்களை நாம் நித்திய மகிமை நிறைந்த வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். “நித்தியத்தின் வெளிச்சத்தில்” ஜீவிக்கும்போது காரியங்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புக்கள் மாறுகின்றன. நேரம், பணம் என்பவற்றை மிகவும் ஞானமாக உபயோகிப்பார்கள். புகழ், செல்வம், சாதனை, பொழுதுபோக்கு போன்றவற்றைப் பார்க்கிலும், உறவுகளுக்கும் குணாதிசய வளர்ச்சிக்குமே உயரிய மதிப்பைக் கொடுப்பீர்கள். அதாவது எவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்னும் பட்டியலின் வரிசைக் கிரமம் மாற்றமடையும். நவீன பாங்குகளையோ, ஆடை அலங்காரங்களையோ, பிரசித்தமான நவீன பாணிகளையோ பின்பற்றுவது இப்போது முக்கியமற்றுப்போகும்.” இப்படியாக றிக் வாரன் அவர்கள் தமது நூலில் எழுதுகிறார்.

நித்தியத்தோடு ஒப்பிடும்போது, இவ்வுலக வாழ்நாட்கள் ஒரு சில மணித் துளிகளே! நித்திய வாழ்வை இலகுவில் நாம் புரிந்துகொள்ள அதன் நிச்சயத்தைத் தேவன் தருகிறார். அந்த நிச்சயம் பவுலுக்கு இருந்ததால்தான் தனக்கிருந்த சகலத்தையும் குப்பையாக எண்ணினார். இவ்வுலகத்தின் பெரிய காரியங்களை பார்க்கிலும், தேவன் நமக்காக வைத்திருக்கும் நித்தியம் மிக விசாலமானது! கர்த்தருடைய ஆலோசனை நித்திய நித்திய காலமாக உள்ளது (சங்.33:11). இந்தப் பெரிய பெறுமதிப்பை நாம் கண்டறிய வேண்டாமா?

ஜெபம்: அன்பின் பிதாவே, காலத்தைப் பற்றிய உணர்வை, நித்தியத்தைக் குறித்த நம்பிக்கையை எங்கள் உள்ளத்திற்குள்ளே வைத்திருக்கிறீர். உலக காரியங்களை குப்பையாக எண்ணவும் நித்தியத்தைக் குறித்தே அதிகமாக சிந்திக்கவும் எங்களுக்கு உதவும். ஆமென்.

நடைமுறை ஞானம்!

தியானம்: 2025 அக்டோபர் 9 வியாழன் | வேதவாசிப்பு: பிரசங்கி 7:20-23

YouTube video

சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே (பிரசங்கி 7:21).

சில வாரங்களுக்கு முன்னே ஒரு பழைய பத்திரிகையில் சிறுவருக்கான பக்கத்தில் தற்சமயமாக வாசித்த ஒரு வார்த்தை என் மனதிலே அப்படியே பதிந்துவிட்டது.“கேட்கிற யாவையும் நம்பாதே; நம்புகிற யாவையும் சொல்லாதே!” காது இருந்தால் கேட்கத்தான் செய்யும். கேட்கிறதை அடுத்தவனுக்குச் சொல்லாமல் இருப்பது நம்மில் பலருக்கு இயலாத காரியம். அப்படிச் சொல்லி நம்மில் எத்தனைபேர் எத்தனை பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்திருக்கிறோம்! ஆம், நாம் வாழவும் வேண்டும்; அதேசமயம் இந்த வாழ்வில் வரும் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து தப்பவும்வேண்டும், இல்லையா? யாரோ எழுதிய ஒரு வரி வாழ்வில் நமக்கு தப்பிக்கொள்ள வழிகாட்டுமானால், ஞானம் அறிவு என்பவற்றின் இருப்பிடமாகிய தேவாதி தேவனுடைய ஜீவவார்த்தைகள் நமக்கு என்னவாயிருக்கும் என்பதை நாம் ஏன் சிந்திப்பதில்லை? பிரசங்கியின் வார்த்தைகள், எதிரிடையாகவும், சலிப்பு தொனிக்கும் வார்த்தைகளாகவும், நம்பிக்கையின்மையாகவும் தெரிந்தாலும், அப்படியல்ல; மாறாக, வாழ்வுக்கு பெரிய அர்த்தத்தை விளங்க வைக்கும் ஒரு புத்தகமாகவே அது இருக்கிறது.

இந்நூலின் ஆங்காங்கே சில வார்த்தைகளும், கடைசி அதிகாரமுமே வாசிக்க ஏற்புடையதாக இருக்கிறது என்று பலர் நினைக்கலாம். ஆனால், அப்படி அல்ல; புத்தகம் முழுவதுமே மனுஷன் தன் அன்றாட வாழ்வில் சாதாரணமாக சந்திக்கக் கூடிய நிகழ்வுகளையே சித்தரிக்கிறது. இந்தப் புத்தகத்தில் முக்கியமாக இரு காரியங்கள் காணப்படுகிறது. ஒன்று, “நடைமுறை ஞானம்.” அதில், இவ்வுலக காரியங்களை நாம் எப்படி நிறைவேற்றவேண்டும்; அதேசமயம், அதனால் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு எப்படி விலகி நடக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தரும்; இது மிக முக்கியமான பாடமாகும். உதாரணத்திற்கு, பேசப்படும் வார்த்தைகள் காதிலே கேட்கத்தான் செய்யும். ஆக, எல்லாவற்றையும் கவனத்துக்கு எடுத்தால், வேலைக்காரன் நிந்திப்பதையும் நாம் கேட்க நேரிடும் என்று பிரசங்கி எழுதுகிறார். அதைக் கவனத்திற்கு எடுத்தால் என்னவாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தேவபிள்ளையே, நாம் உலகில் வாழத்தான் பிறந்திருக்கிறோம். இந்த வாழ்வுக்கு பணம் அவசியம், வசிக்க வீடு அவசியம். பொருட்கள் அவசியம். ஆனால், நம் நடைமுறை வாழ்வில் இவை நமக்குப் பிரச்சனைகளாகிவிட இடமளிக்கக்கூடாது. நாம் பேசிப் பழகத்தான் வேண்டும், உதவி செய்யத்தான் வேண்டும். ஆனால், உபத்திரவங்களைச் சம்பாதிக்கக்கூடாது. நடைமுறை ஞானத்தைக் கற்றுத்தரும் பிரசங்கி நூலைத் தொடர்ந்தும் படிப்போமாக.

ஜெபம்: கிருபையுள்ள கர்த்தாவே, எங்கள் அனுதினவாழ்வில் ஞானமாய் காரியங்களை நிறைவேற்றுவதற்கும், பிரச்சனைகளுக்கு விலகி ஜீவிப்பதற்கும் சாலொமோன் ஞானியின் அனுபவத்திலிருந்து கற்றுதருகிற உமது ஆலோசனைகளுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்.