தடைகள் இல்லை

தியானம்: 2026 மே 25 திங்கள் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 19:1-6

YouTube video

நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள் (யாத்.19:4).

எனது நண்பன் சிறுவனாக இருந்தபோது, ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தான். அவனது பாடசாலையோ நகரத்தின் அடுத்த எல்லையில் இருந்தது. நகருக்கு வெளியே இருந்த மாணவர்களுக்கு மட்டுமே பாடசாலை பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனவே எனது நண்பன் பாடசாலைக்குச் சென்று வர அதிகமான தூரம் நடக்கவேண்டியிருந்தது. பாடசாலை முடிந்து களைப்புடன் திரும்பும்போது, “எனக்கு மட்டும் பறவைபோல் செட்டைகளிருந்தால் இந்த மரங்கள், வீடுகள் இவைகளின் மீது பறந்து வீட்டிற்குச் சென்றிடுவேனே” என்று கற்பனை செய்தது உண்டு என்று அவன் என்னிடம் கூறினான்.

இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தாம் இவ்விதமான செட்டையாக இருப்பதாக தேவன் தம்மை கழுகுக்கு உருவகப்படுத்திக் கூறுகிறார். அவர் தாம் உருவகப்படுத்திய கழுகின் செட்டை அதிக பெலம் வாய்ந்தது. அப்படியானால் அந்தக் கழுகைப் படைத்தவருடைய பெலம் எவ்வளவாயிருக்கும் என்பதை நம்மால் கற்பனைசெய்து பார்க்க இயலுமோ! “தேவ மக்களாகிய இஸ்ரவேலருக்கு பார்வோன் ஏற்படுத்திய தடைகளிலும், கடந்துசெல்லக் கடினமான செங்கடல் நடுவிலும், வறண்டதும் விடாய்த்ததுமான பாலைவனத்திலும் தூக்கியெடுத்து, சுமந்து, அவர்கள் சேர வேண்டிய இடத்துக்குப் பத்திரமாய் தேவன் கொண்டுவந்து சேர்த்தார்” இதைப் பற்றி மோசேயிடம் கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு சொன்னார்.

தேவனுக்கும் அவர் நேசித்த மக்களுக்குமிடையில் எந்தத் தடையும் அனுமதிக்கப்படவில்லை. இன்று ஒரு கிறிஸ்தவனாக வாழ்வதினால் நமது மகிழ்ச்சிக்கு தடை ஏற்படுகின்றன என சிலர் உணர்வதுண்டு. உடல்நலக்குறைவு, பொருளாதார சிக்கல், குடும்ப உறவுகள் இவைகள் தடைகளாக அமையலாம். நமது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகளால் நாம் சோர்ந்துபோயிருக்கலாம். எனது நண்பனைப்போல கற்பனை உலகில் சஞ்சரிக்கவேண்டாம். யதார்த்தத்தில், நாம் இருக்கவேண்டிய இடத்துக்கு நம்மைத் தூக்கிச் சுமந்து செல்லும் ஆண்டவருடைய வல்லமையான செட்டைகளை நோக்கிப் பார்ப்போமாக. “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா.40:31) என்ற வாக்குத்தத்தத்தை நினைத்து அதை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்வோமாக. நம்மால் நடக்கமுடியாத நிலையிலும், நம்மைத் தூக்கி சுமக்கும் ஆண்டவர் நிச்சயம் நமக்கு உதவி செய்வார்.

ஜெபம்: உன்னதமான தேவனே, உமது செட்டைகளின் நிழலில் அடைக்கலமாய் வந்த எங்களை கைவிடாமல் அழகாய் நடத்தினீர்;. எங்களால் நடக்க இயலாத சூழ்நிலையில் எங்களை சுமந்துகொண்டீர். என் ஜீவகாலமெல்லாம் உம்மையேத் துதிப்பேன். ஆமென்.

பாரம் சுமப்பவர்கள்!

தியானம்: 2026 மே 24 ஞாயிறு | வேத வாசிப்பு: யாத்திராகமம் 18:22-27

YouTube video

இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும் (யாத். 18:22).

அது ஒரு மதியவேளை. சூரியன் நடுவானில் சுட்டெரிக்கும் அந்த வேளையில், ஒரு குழுவினர் ஆல்பர்ட் ஸ்விட்சருடன் மலையின்மீது ஏறிக் கொண்டிருந்தனர். திடீரென்று ஆல்பர்ட் குழுவிலிருந்து விலகியோடினார். ஒகோவா நதியோரத்தில் தன் தலையில் விறகுகளுடன் தள்ளாடி ஏறிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்ணை நோக்கிச் சென்றார். அவளது விறகுச்சுமையை வாங்கிக் கொண்ட 85 வயது ஆல்பர்ட் மலையுச்சி வரை சுமந்துவந்து அவளுக்கு உதவினார். அப்பொழுது ஒருவர் ஆல்பர்ட் ஸ்விட்சரிடம், “இந்தக் கடுமையான வெயிலில் வயதில் முதியவரான நீர் அக்காரியத்தைச் செய்திருக்கக்கூடாது” என்று கடிந்துகொண்டார். ஆல்பர்ட் ஸ்விட்சரோ அமைதியாக, அச்சுமையை அப்பெண் மாத்திரமல்ல, யாருமே தனியாக சுமக்கக்கூடாது என்று பதிலளித்தார். மோசேயும் இதுபோலவே தனியாளாய் பாரத்தைச் சுமக்க முயன்றார். ஆனால், மற்றவர்களும் பாரத்தைச் சுமக்கவேண்டும் என்று மோசேயின் மாமன் எத்திரோ அவரிடம் ஞானமாய் எடுத்துக் கூறினார்.

தேவனுடைய மக்களும் தங்களுடைய பாரத்தைத் தனியே சுமக்கத் தேவையில்லை. நமக்கு உதவிக்கரமாக ஜெபம் உரிமையாக்கப்பட்டுள்ளது. “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1பேது.5:7) என்று பேதுரு நமக்கு ஆலோசனை கூறுகிறார். திருச்சபையாக, தேவனுடைய பிள்ளைகளாக நாம் இன்னொருவருடைய பாரத்தைச் சுமப்பது அவசியம். “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” (கலா.6:2) என்று பவுல் விசுவாசிகளுக்கு அறிவுரை கூறுகிறார்.

மற்றவர்களுடைய பாரத்தைச் சுமப்பதற்கு நீங்கள் ஆயத்தமா? ஒருவேளை இன்னுமொரு நபருடன் சேர்ந்து ஜெபிக்கவோ, உணவு சமைத்துக் கொடுக்கவோ, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அழைத்துச் செல்லவோ உங்கள் உதவி அவருக்குத் தேவைப்படலாம். நீங்கள் சுமக்கவேண்டிய பாரத்தைத் தேடுங்கள், அப்பொழுது அதை மிக எளிதாகக் கண்டுகொள்ளலாம். மற்றவர்களுடைய சுமையை இலகுவாக்குவதே நமது கடமை. தேவன் அதையே எதிர்பார்க்கின்றார். அது எந்தப் பணியாக இருந்தாலும் சரி, அந்தப் பொறுப்புணர்வு தற்காலத்தில் மிகுந்த மனநிறைவையும் எதிர்காலத்தில் நித்திய வெகுமதியையும் அளிக்கும். சுமையைப் பகிர்ந்துகொள்ளும் போது துன்பம் மெய்யாகவே பாதியாகக் குறையும். இன்று நமக்கும் பல்வேறு சுமைகள் இருக்கலாம்; என்றாலும் பிறர் பாரத்தைச் சுமப்பதில் உள்ள இன்பமும் மனநிறைவும் வேறெதிலும் காணமுடியாது.

ஜெபம்: எங்கள் நல்ல கர்த்தாவே, பாரச்சுமையோடு உள்ளவர்களது சுமைகளை இலகுவாக்க உதவும்படி எங்களுக்கு தேவபெலத்தையும் ஞானத்தையும் தந்தருளும். ஆமென்.

தலைவர்களைத் தெரிந்தெடுத்தல்

தியானம்: 2026 மே 23 சனி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 18:17-21

YouTube video

தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான … மனிதரைத் தெரிந்து கொண்டு … அதிபதிகளாக ஏற்படுத்தும் (யாத்.18:21).

1789ம் ஆண்டு பென்சில்வேனியா மாநில பிரதிநிதியாக இருந்த மோரிஸ் அவர்கள், அமெரிக்க அதிபர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயங்கிய ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களிடம் அப்பதவியைப் பொறுப்பேற்கும்படி உற்சாகப்படுத்தி எழுதிய கடிதத்தில், “ஒரு தலைவர் தன் அதிகாரத்தைச் சரியாக செயல்படுத்துவதும் அதைத் தவறாக செயல்படுத்துவதும் அவரது தனித்தன்மையைப் பொறுத்தே அமையும்” என்று எழுதினார்.

ஆம், மோசேயின் மாமன் எத்திரோவும் இந்த உண்மையை நன்கறிந்திருந்தார். தனது மருமகனின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குத் தான் வகுத்த திட்டமானது, அதைச் செயல்படுத்தப்போகும் மனிதர்களின் பண்புகளைப் பொறுத்தே அமையும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். எனவேதான், தெரிந்தெடுக்கப்படும் தலைவர்கள் திறமைசாலிகளாய் மாத்திரமல்ல, தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். பொருளாசைக்காரர்களாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தார்.

ஆனால் அநேகமாக இந்த அடிப்படைத் தத்துவம் பெரும்பாலும் கடை பிடிக்கப்படுவதில்லை. இன்று திருச்சபைகளிலும் அரசியலிலும் தனி மனிதனின் குணங்களைவிட அவர்களது திறமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு தலைமைத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு கருத்துக்கணிப்பு, ஒரு அரசியல் தலைவர் குணத்தில் குறைவுடையவராய் இருந்தாலும் நாட்டைச் சிறப்பாக நிர்வகிக்கமுடியும் என்று கூறுகிறது. ஆனால் இது வேதத்துக்கும் நடைமுறைக்கும் முரணானாது.

நம்மடைய திருச்சபையிலோ, அல்லது தேர்தலிலோ தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் நாம் இருக்கிறோமென்றால், அவர்களது குணநலனுக்கு முக்கியத்துவம் கொடுப்போமாக. திறமைசாலிகளாய் இருந்தால் மாத்திரம் போதாது. தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகவும், உண்மையை நிலைநிறுத்துகிறவர்களாகவும், பேராசை இல்லாதவர்களாகவும் இருக்கவேண்டும்.

ஒருவருக்குச் சிறந்த தலைமைத்துவத் திறமை இருந்தாலும் நற்குணத்தில் குறைபாடு உள்ளவர்கள் மோசமான தலைவர்களாக, தங்களது தீய பண்பின்படியே மக்களை நடத்துவார்கள்; அது நிச்சயமாக தேவனுடைய வழியாக அமையாது என்பது உறுதி. ஒரு மனிதனின் பண்புகளை அவனது செயல்கள் வெளிப்படுத்திவிடும். ஆகவே இப்படியான பொறுப்பில் இருக்கின்ற தலைவர்களும் தங்களை ஆராய்வது நல்லது.

ஜெபம்: நல்ல ஆண்டவரே, தலைவர்களை தெரிந்தெடுக்கும் பொறுப்பிலே தேவ கிருபையால் சரியான தெரிவை செய்வதற்கும், தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் தங்களது பொறுப்புகளிலே உண்மைத்துவத்தோடு காணப்படவும் ஜெபிக்கிறோம். ஆமென்.

உண்மை நண்பன்

தியானம்: 2026 மே 22 வெள்ளி | வேத வாசிப்பு: நீதிமொழிகள் 27:5-6

YouTube video

ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? … என்றான் (யாத்.18:14).

“உன்னைப்பற்றிய உண்மையினை இருவர் மாத்திரமே சரியாகச் சொல்லமுடியும். ஒன்று, கோபத்தில் தன்னிலை மறந்த எதிரி; இரண்டாவது, உன்னை உண்மையாய் நேசிக்கும் உன் ஆருயிர் நண்பன்” என்று அந்திஸ்தெனெஸ் என்ற தத்துவஞானி அடிக்கடி கூறுவாராம். ஒரு நண்பன் எவ்வளவு நேரம் உன்னருகில் இருக்கின்றான் என்பதைவிட எவ்வளவு உண்மையாய் இருக்கிறான் என்பதே ஒரு நல்ல நண்பனின் அடையாளம்.

மாமன் எத்திரோ மோசேக்கு ஒரு மெய் நண்பனாக விளங்கினார். பிறரால் செய்யக்கூடிய சிறிய காரியங்களையும் மோசே தனியாளாய் செய்து களைத்து விடுவதைக் கண்டார். மோசேயின் உடல்நலத்திலிருந்த அக்கறையினால் அவரால் அமைதியாயிருக்க முடியவில்லை. உடனே அவர், “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல” என்று வெளிப்படையாகக் கூறிவிடுகிறார். நமது நண்பர்களிடம் உண்மைகளை எடுத்துக்கூறுவதில் ஆபத்துகளும் உண்டு. ஏனெனில் உண்மை பலநேரங்களில் சுடும். அதைக் கேட்டதும் அவர்களது எதிர்மறையான செயல்பாடே வெளிப்படும். ஆனாலும் வேதம் கூறுகிறது: சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள். சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள் (நீதி.27:6) உண்மையான நண்பனாகப் பழகுவது மிகக் கடினமான விஷயம்தான்.

நம்முடைய நண்பனுக்கு ஒரு கசப்பான உண்மையை எடுத்துக் கூறவேண்டிய நிலை வந்தால், அதை அவரிடம் சொல்லுமுன் தேவனிடம் ஜெபிப்போமாக. மிகுந்த தாழ்மையுடனும் அன்புடனும் அவருக்கு எடுத்துக் கூறுவோம். அந்த உண்மையை சரியான முறையில் நண்பனிடம் கூறுவதற்கு ஏற்ற சூழ்நிலையை தேவன் உருவாக்கித் தர வேண்டுமாய் அவரிடம் கேட்போம். பவுல் எப்பொழுதும் வெளிப்படையாக ஆனால் கவனமாகவே காரியங்களை எடுத்துக் கூறினார். “நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகள்” என்று சொல்லி சரிபிழைகளைச் சுட்டிக்காட்டினார். அதுபோலவே நாம் கூறும் காரியத்தை மற்றவர்கள் எதிர்மறையாக எடுத்துக்கொள்ளாமல் சிறந்த அறிவுரையாகக் கருதும்படி பக்குவமாக எடுத்துரைப்போமாக. ஜெபிப்போம், தயாராகுவோம், பின்னர் செயல்படுத்துவோம். நம்முடைய நோக்கம் அல்ல, நம்முடைய செயற்பாடே உண்மை நண்பன் என்பதை வெளிப்படுத்துகிறது. நமது நல்ல நோக்கம் செயலில் வெளிப்படும்போதுதான் அது சிறந்த பலனைத்தரும். எனது நண்பன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், நான், எனது நண்பனுக்கு வெறும் நண்பனாய் இருக்கிறேனா? அல்லது உண்மை நண்பனாய் இருக்கிறேனா?

ஜெபம்: “அன்பின் பிதாவே, பொய்யான, மாயையான சிநேகத்தை வெறுத்து கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் உண்மை நண்பனாக நாங்கள் காணப்பட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.”

எல்ஷடாய்

தியானம்: 2026 மே 21 வியாழன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 18:8-12

YouTube video

உன்னை…. பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (யாத்;. 18:10).

“சோவியத் நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் 1965ம் வருடத்துக்குள் தமது நாட்டிலுள்ள கடைசி கிறிஸ்தவரையும் அழித்துவிடுவேன்” என்று அந்நாட்டு பிரதமமந்திரியாய் இருந்த நிகிதா குருச்ஷேவ் சவால்விட்டார். அவர் இறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்பொழுது முன்பைவிட அங்கு அதிகமான கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். கார்ல் மார்க்ஸ் என்பவர், “தேவன்மீது நம்பிக்கை வைப்பது நசுக்கப்பட்டவர்களின் அடையாளம், மக்களின் போதைப்பொருள்” என்றார். அவரும் மரித்துவிட்டார். ஆனால் அவர் எதிர்த்த நம்பிக்கையானது உலகம் முழுவதும் பரவிவருகின்றது. ஆம், தலைவர்கள் பலர் எழும்புகின்றனர், தேவனுக்கு விரோதமாகக் குரல் கொடுக்கின்றனர், ஆனாலும் அவர்கள் அனைவரும் மரித்து மறக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் அதேவேளையில், தமக்கு எதிராக எழும்பும் செயல்களைப் பொருட்படுத்தாது, இவ்வுலகிற்கான தம்முடைய காரியங்களை தேவன் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறார். அந்த எதிர்ப்புகள் அவரை இம்மியளவேனும் பாதிப்பதில்லை.

எகிப்திய கடவுள்களைக் குறித்தும், பார்வோனைக் குறித்தும் இதுபோன்றே எத்திரோ எண்ணியிருந்தார். அவர்கள் தங்கள் முஷ்டியை தேவனுக்கு விரோதமாக உயர்த்தினார்கள். ஆனால் தேவன் அவர்களை விடப் பெரியவர். ஒரு ரயிலை நிறுத்த முயன்ற எறும்புபோல சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எதிராக எழும்பிய அவர்கள் அழிந்து போனார்கள். கர்த்தர், தாமே எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை மீண்டுமாக நிரூபித்தார். வரலாற்றுச் சுவடிகளைத் திருப்பிப் பார்க்கும்போது, நம் தேவன் அனைத்து மக்களுக்கும், அனைத்து இயக்கங்களுக்கும், அனைத்து சூழ்நிலைகளுக்கும் மேலானவராக தம்மைக் காண்பித்திருக்கிறார். எனவேதான் சங்கீதக்காரனும், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங்.121:1,2) என்று பாராட்டியதில் வியப்பில்லை. “இதோ நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” என்று தேவனும் சவால் விடுக்கிறார்(எரே.32:27).

தேவ பக்தியில்லாத மனிதருக்கோ, அமைப்புகளுக்கோ, பயமுறுத்தும் சூழ்நிலைகளுக்கோ நாம் பயப்படுகிறோமா? நமக்கு உதவ முன்வரும் கன்மலையை நினைத்துக் கொள்ளுவோம். வானமும் வையமும் படைத்த வரான அவருக்கு நமது துன்பங்கள் ஒரு பொருட்டு அல்ல. மோசேயை விடுவித்த அவர் நம்மையும் விடுவிப்பார். கலங்கவேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய தேவன் சர்வ வல்லவர். இவ்வுலக இன்னல்கள் தேவனை ஒருபோதும் துன்பப்படுத்தாது.

ஜெபம்: அன்பின் பிதாவே, எங்களுக்கு வரும் இன்னல் மற்றும் துன்பங்களினால் வீண் கலக்கம் அடையாதவாறு கர்த்தருக்குமுன் அவைகள் அனைத்தும் ஒன்றுமில்லையென உதறித்தள்ள கிருபை தாரும். ஆமென்.

இணைந்த குடும்பம்

தியானம்: 2026 மே 20 புதன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 18:2-5

YouTube video

மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமார ரோடும் அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளைய மிறங்கியிருந்த …வனாந்தரத்துக்கு வந்து.. (யாத்.18:5).

பியூ ஆர்செனியுக்ஸ் 15 மாதக்குழந்தையாய் இருந்தபொழுது, தன் தந்தையால் லூசியானாவிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஆஸ்டின் என்ற நகரத்துக்குக் கடத்தப்பட்டான். ஆண்டுகள் பல கழிந்தன. ஒருநாள் ஒரு தம்பதியர் அச் சிறுவனோடு இடைபட்டனர். அவன் தன் தாயாருடன் பல ஆண்டுகளாக தொடர்புகொண்டிராததை அறிந்து அவன்மேல் அக்கறை கொண்டு, அச்சிறுவனைப்பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 1995ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் தீர விசாரித்த உளவுத்துறையினர் அவனது தாயார் கடந்த 12 வருடங்களாக அவனைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறி அவர்களை ஒன்றுசேர்க்க முயற்சிகளை எடுத்தனர். அவ்வருடம் டிசம்பர் 20ஆம் தேதி தாயும் மகனும் மகிழ்ச்சியுடன் இணைந்தனர்.

நீங்கள் எப்பொழுதாவது உங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கிறீர்களா? சில நாட்கள் பிரிந்திருந்தாலும் அந்த நாட்கள் மிகக் கடினமான நாட்களாகவே இருந்திருக்கும். நான் என் குடும்பத்தினரைப் பிரிந்து பிரான்ஸ் தேசத்துக்கு வேதப்படிப்புக்காகச் சென்றிருந்தேன். பல மாதங்கள் அவர்களைப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தோடு, ஆயிரம் மைல்கள் கடந்து ஒரு புதிய தேசத்தில் வாழ்வது எளிதான காரியம் அல்ல என்பதை உணர்ந்தேன்.

மோசேயும் சிறிது காலம் தன் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியதாக இருந்தது. இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து விடுதலை செய்து நடத்திச் செல்லும் மாபெரும் பணியில் ஈடுபட்டிருந்ததால் மோசே, தன் மனைவியான சிப்போராளையும் தனது இரு மகன்களையும் மீதியான் தேசத்துக்கு அனுப்பிவிட்டார். தனது முயற்சியில் வெற்றியடைந்த பின்னர் தனது அன்பு குடும்பத்தினருடன் இணைய ஆவலாயிருந்தார். அவருடைய மாமன் எத்திரோ அக்குடும்பத்தினர் இணைய உதவினார். கிறிஸ்தவர்களாகிய நாமும் ஒன்றுசேரும் ஒருநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். “அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1தெச.4:16-17). இது ஒரு குடும்பத்தின் இணைவு. ஒருநாள் நாமும் இதுபோன்ற நித்திய இணைதலை அனுபவிப்போம். எனக்காய் தமது ஜீவனைக்கொடுத்து என்னை மீட்ட இயேசுவை நான் முகமுகமாய் தரிசித்து அவரோடு என்றென்றும் வாழ ஆவலோடு காத்திருப்பேனா!

ஜெபம்: கர்த்தாவே, இவ்வுலகில் தங்கள் உறவுகளை இழந்து தவிக்கும் மக்களை திடப்படுத்தும். மீண்டும் ஒருநாள் கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சந்திப்போம் என்ற நிச்சயத்தை தந்திருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.