என் ஒருவனுக்காகவா!

தியானம்: 2026 ஜூலை 14 செவ்வாய் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:25-34

YouTube video

தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான் (அப்;.16:34).

சிலசமயங்களில் கர்த்தருடைய வழிநடத்துதல்கள் நமக்கு ஆச்சரியமாகவும், நம்பமுடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. ஆனால் சகலவற்றையும் அறிந்திருக்கிற கர்த்தர் சகலத்தையும் அந்தந்தக் காலத்தில் நேர்த்தியாகவே செய்வார், செய்கிறார், இதுவரையும் அப்படித்தான் செய்தார்! பெரிய காரியங்களை எதிர்நோக்கும்போது, நாம் ஏமாறும்வண்ணம் வேறொன்று நடக்கும். ஆனால் அமர்ந்திருந்து சிந்தித்தால் கர்த்தர் ஒரு நோக்கமின்றி எதுவும் செய்யமாட்டார் என்பது விளங்கும். ஒரு சுவிசேஷக் கூட்டம் ஒழுங்குசெய்யும்போது அநேகர் மனந்திரும்பவேண்டும் என்று நாம் எதிர் பார்க்கிறோம். ஆனால் ஒரு சிலர், அல்லது ஒரு தனி மனிதனின் மனந்திரும்புதலுக்காகவும் கர்த்தர் ஒரு பெரிய கூட்டத்தையே நடத்த அனுமதிப்பார் என்பதையும் நாம் மறுக்கமுடியாது.

ஒரு பெண்ணுக்காக இயேசு, யூதர் வெறுக்கின்ற சமாரியா நாட்டுக்குள் நடந்துசென்றாரே! ஒரு சகேயுவுக்காக எரிகோவின் வழியாக நடந்தாரல்லவா! இப்படி எத்தனை! ஏன், நம் ஒருவருக்காக இயேசு செய்த பெரிய காரியங்களை எண்ணிப்பார்ப்போமா! இங்கே, பவுலின் ஊழியப் பாதையையே ஆவியானவர் தடைபண்ணி பிலிப்பி பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார். அங்கே ஒரு லீதியாள்; அவளும் அவள் வீட்டாரும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். மேலும், ஒரு சிறைச்சாலைக்காரனும் அவன் வீட்டாரும் இரட்சிக்கப்படும்படிக்கு பவுலையும் சீலாவையும் கர்த்தர் சிறைக்காவலுக்கே அனுமதித்தார் என்பது எத்தனை பெரிய ஆச்சரியம்! பவுலும் சீலாவும் கர்த்தருடைய அன்பை உணர்ந்தவர்களாய் சிறைக்காவலிலும் பாடி தேவனைத் துதித்தார்கள். அந்தத் துதிப்பாடல் மகாபெரிய விடுதலையை அந்தச் சிறைக்காவலனுக்கும் அவன் வீட்டாருக்கும் கொடுத்தது! பவுலும் சீலாவும் தேவனைத்துதிக்க, சிறைக் கதவுகள் திறக்க, கட்டுகளெல்லாம் அவிழ, கைதிகள் தப்பித்து விட்டார்களோ என்று சிறைக்காவலன் தன்னை மாய்த்துக்கொள்ளப்போக, பவுல் அதைத் தடுக்க, எல்லாமே தேவதிட்டப்படி நடந்தேறியது. சிறைக்காவலன் அந்த இராத்திரியிலேயே அந்த நேரத்திலேயே தன் வீட்டாருடன் வசனத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றான்.

என் ஒருவனுடைய, என் ஒருத்தியுடைய இரட்சிப்புக்காக நமது இரட்சகர் என்ன செய்தார் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஏராளமான பக்தர்களும் இரத்தசாட்சிகளும் அவருக்காக இருக்கும்போது, நம்மை ஒரு பொருட்டாக எண்ணி கர்த்தர் நம்மையும் தேடிவந்து இரட்சித்தாரே. என் ஒருவனுக்காகவா! என் ஒருத்திக்காகவா! சிந்திப்போம்.

ஜெபம்: “தகப்பனே, எவ்வளவேனும் தகுதியில்லாத என்னைத் தேடிவந்து இரட்சித்தீரே. என்னில் இவ்வளவாய் அன்புகூர நான் எம்மாத்திரம்? இந்த அன்பிற்கு உண்மையாய் சாட்சியாய் நான் வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.

துன்பத்திலும் பாடுவேன்

தியானம்: 2026 ஜூலை 13 திங்கள் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:16-25

YouTube video

துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும் … எங்களை விளங்கப்பண்ணுகிறோம் (2கொரி.6:10).

நம்முடைய வாழ்வைக் கட்டுப்படுத்துவது யார், அல்லது எது? அடுத்தவர் என்ன சொல்லுவார், உலகம் என்ன சொல்லும் என்று சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வாழுகிறோமா? இதுவே நமது வாழ்வில் அதிகமாக துயரத்தை விளைவிக்கிறது. ஆனால் பவுலின் வாழ்வில், அவர்தான் “எப்பொழுதும்” சந்தோஷமாய் இருப்பதாக எழுதினாரே, அது எப்படி?

கர்த்தருடைய பணிதான் பவுலின் ஒரே நோக்கம். இருந்தும் கர்த்தர் அவருடைய திட்டத்தை மாற்றி, வேறு திசையில் அனுப்புகிறார். அப்படியே பவுலும் சீலாவும், பிலிப்பு பட்டணத்தில் வந்திறங்கினார்கள். கர்த்தரே நடத்தினார் என்பதற்காக காரியங்கள் இலகுவாக இருந்தனவா? இல்லை. குறி சொல்லி தன் எஜமான்களுக்கு ஆதாயம் தேடிக்கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் இவர்களைச் சந்திக்க, பவுல் அவளைப்பிடித்திருந்த ஆவியைத் துரத்த, தங்கள் ஆதாயம் கெட்டுவிட்டதே என்று கோபங்கொண்ட அந்த மனிதர் பவுலையும் சீலாவையும் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்புவித்தனர். அவர்கள் இவர்களை அடித்து வதைத்து, சிறையில் பத்திரமாக அடைக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டனர். அவனும் உட்காவலறையில் இவர்களது கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவிட்டான். சுவிசேஷம் அறிவிக்க, ஆவியானவராலே நடத்தப்பட்டு இங்கே வந்தவர்களுக்கு இப்படி ஆக வேண்டுமா? ஆயிற்றே! அதற்காக அவர்கள் கர்த்தரை நொந்துகொண்டனரா? இல்லை; பதிலுக்கு நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள், மற்ற கைதிகளும் இதைக் கேட்டார்கள். சிறைச் சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படி பூமி அதிர்ந்தது. சிறைக்கதவுகள் திறந்தன. கட்டுகளும் கழன்றன. என்ன அதிசயம்!

“துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்” என்று பவுலினால் எப்படி எழுத முடிந்தது என்று இப்போது விளங்கும். தன்னை அழைத்தவர் யார் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார். தேவன் நடத்துகின்ற வழி ஒருபோதும் பிசகாது என்பது பவுலுக்குத் தெரியும். உட்காவலறையில் தொழுமரத்தில் கால்கள் மாட்டப்பட்டு அசைய முடியாதிருந்த ஒருவரால், நடுராத்திரியில் தேவனைத் துதித்துப் பாடமுடியுமானால், நாளை மாறிப்போகின்ற அற்பத்தனமான துயரங்கள் நேரிடும்போது நாம் ஏன் துக்கப்பட்டு புலம்பவேண்டும்? நாம் கர்த்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது மெய்யானால், எத் துன்பம் நேரிட்டாலும் அவர் அந்த இடத்திலும் நம்முடன் இருக்கிறார் என்ற விசுவாசம் நமக்கு அவசியம். அப்பொழுது தானாகவே துதி கீதம் நமது இருதயத்திலிருந்து நிச்சயம் எழும்பும்.

ஜெபம்: “கர்த்தாவே, சகலமும் நன்றாயிருக்கும்போது மட்டுமல்ல, பாதகமான சூழ்நிலையிலும், வியாதியின் நேரத்திலும், துக்கநேரத்திலும் கர்த்தரின் துதி எங்கள் வாயில் எப்போதும் காணப்பட எங்களை உமதாவியால் நிரப்பும். ஆமென்”.

ஆவியானவரால் தடைபண்ணப்பட்டு…

தியானம்: 2026 ஜூலை 12 ஞாயிறு | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:6-12

YouTube video

ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்; (அப்போஸ்தலர் 16:7).

ஜெபங்களுக்கு எப்போதும் நேர்மறையான பதில்கள்தான் கிடைக்கும் என்பதல்ல. அதற்கு எதிர்மறையாகவும் கர்த்தர் நடத்துவார். ஆனால் அது தப்பாகாது. நம்மில் நற்காரியங்களைச் செய்வதற்கு, கர்த்தருடைய ஊழியத்தைச் செய்வதற்கு ஒழுங்கு செய்கையில் பலத்த தடைகள் வந்து நம்மைத் திகைக்க வைப்பதுமுண்டு.

பல வருடங்களுக்கு முன்னர், தொடர்மாடிக் கட்டடங்களால் நிறைந்த ஒரு இடத்தில் கிறிஸ்துமஸ் நாட்களில், அனுமதி பெற்று, ஒரு குறிப்பிட்ட இரவு வேளையில் மெழுகுவர்த்திகளும் விளக்குகளும் கொண்டு, அந்த இடத்திலுள்ள வீதிகளில் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி, தெருச்சந்திகளில் சுவிசேஷம் சொல்வதற்குத் திட்டமிட்டோம்; அப்படியே ஆரம்பித்தோம். யாரும் நம்மை எதிர்க்கவுமில்லை, நமக்கும் மிகுந்த சந்தோஷம். ஆனால் நடந்தது என்ன? ஒரு சிறிது நேரத்தில் திடீரென சோ என்று மழை பெய்ய ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கட்டடத்துக்குள் புகுந்தோம். அது அந்தப் பகுதியின் சமூக மண்டபமாயிருந்தது. அதிகாரிகள் வந்து, அதற்குள் கூட்டம் நடத்த அனுமதி தந்தார்கள். கர்த்தருக்கே நன்றி! ஒரு பெரிய கூட்டம் அந்த மழையின் மத்தியிலும் அந்த மண்டபத்துக்குள் கூடினார்கள். நாங்களும் சந்தோஷமாக சுவிசேஷத்தை அறிவித்துவிட்டுத் திரும்பினோம். கர்த்தருக்கே துதி.

பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரிப் பயணத்தை சீலாவுடன் தொடர்ந்தபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லத் திட்டமிட்டிருக்க, “பரிசுத்த ஆவியினாலே அவர்கள் தடைபண்ணப்பட்டார்கள்.” பின்னர் பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினபோது, “ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.” திரும்பும் பக்கம் தெரியாதிருக்க, மக்கெதோனியாவிலிருந்து ஒருவன் வந்து நின்று தங்களுக்கு உதவி செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டதாக பவுல் ஒரு தரிசனம் காண்கிறார். இப்போது செல்ல வேண்டிய திசை தெளிவாயிற்று. அங்கே அவர்களுக்கு என்ன வைக்கப்பட்டிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்தத் தரிசனத்தின்படி, கர்த்தர் தங்களை அழைத்தார் என்று நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போக ஆயத்தமானார்கள்.

கர்த்தருடைய ஊழியத்திட்டத்தையே ஆவியானவர் தடுத்து, வேறுபக்கம் திருப்பிய போது, பவுலும் சீலாவும் மனதார ஏற்றுக்கொண்டார்கள். நம்மால் இது முடியுமா? வார்த்தையின்படி திட்டங்களைப் போடும்போதும், ஆவியானவர் தடை பண்ணலாம், மறுபக்கத்தில் அவர் தமது திட்டத்தை நமக்குள் வைப்பார். அதற்கு நாம் நம்மைத் தரவேண்டுமே! விசுவாசத்துடன் கர்த்தர் உணர்த்தும் வழியில் நமது கால்களை வைப்போமாக? அவர் நடத்துவார்.

ஜெபம்: “அன்பின் பிதாவே, சுவிசேஷப்பணிகளின் செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் ஆவியானவரின் வழிநடத்துதலைத் தெளிவாக அறிந்துகொள்ள உதவி செய்யும். ஆமென்.”

இயேசுவின் பாதையில்

தியானம்: 2026 ஜூலை 11 சனி | வேத வாசிப்பு: மாற்கு 15:1-5

YouTube video

அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. … இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான் (மாற்கு 15:3,5).

நம்மை அநியாயத்திற்குக் குற்றப்படுத்துகிறவர்கள் விஷயத்தில் எப்படிப் பதிலுரை கொடுக்கிறோம்? நமக்கு உடனே கோபம் வரும்; நமது நீதியை நாமே நிலைநாட்ட முயலுவோம், பலரிடம் முறையிடுவோம். இதுதான் இயல்பாக நடக்கின்ற விஷயம். நமக்காக போராடி நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாமே முயற்சி செய்வதால், ஆண்டவருடைய உதவியை நாம் இழந்துபோக நேரிடலாம் என்பதை அநேகமாக மறந்துவிடுகிறோம். பிறர் நம்மைத் தவறாக நினைத்துக் குறைகூறினாலும், அதைக் கர்த்தர் கரத்தில் விட்டுவிட்டு அமைதியாயிருக்க நம்மால் முடியாதிருப்பது ஏன்?

நமது வாழ்வின் சகல பகுதிக்கும் மாதிரியாக இயேசு ஒருவரே நமக்கு இருக்கிறார். அவர் நடந்தபடி நாமும் நடந்தால் நிச்சயம் நம்மால் இந்த உலகை ஜெயிக்க முடியும். இயேசு நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார்; நன்மைகளை மாத்திரமே செய்த அவரை அதே யூத மக்கள் குற்றப்படுத்தி, பிலாத்துவின் முன்னிலையில் குற்றவாளியைப்போல நிறுத்தினார்கள். பிரதான ஆசாரியர்கள்கூட அவர்மேல் குற்றங்களைச் சாட்டிக்கொண்டே இருந்தார்கள். நியாயமாக அவருக்குக் கோபம் வந்திருக்கவேண்டும். தமது தெய்வீக வல்லமையைப் பிரயோகித்து, ஒரு நொடிப்பொழுதில் தம்முடைய பார்வையாலேயே எல்லோரையும் கீழே வீழ்த்தியிருக்கலாம். வானத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தேவதூதர்களை இறக்கியிருக்கலாம். ஆனால் இயேசுவோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்ததே வேதாகமத்தில் உன்னதமான ஒரு காட்சியாக அமைந்திருக்கிறது. அவர் கோபம் கொள்ளவுமில்லை; அவர்களுக்கு எதிராக மனதிலேகூட ஆத்திரம் கொள்ளவுமில்லை. ஏன்? இது எப்படி? இது முடிகின்ற காரியமா? முடியும்; எப்போது? ஆம், இயேசு தாம் பிதாவின் கரத்தில் இருப்பதை முற்றிலுமாக அறிந்திருந்தார். இதுதான் அந்த இரகசியம்.

இயேசுவை அவர்கள் கொடுமையாய் நடத்தினர், முகத்திலே துப்பினர், கேலிபண்ணினர், கசை அடி கொடுத்தனர். ஆனால் நமது ஆண்டவரோ வாய் திறவாதிருந்தார் என்று காண்கிறோம். நடந்தது அநீதி. ஆனாலும் நமது ஆண்டவர் மௌனமாகவே யாவையும் சகித்தார். அதனால்தான் அவர் இன்று ஜீவனுள்ள தேவனாக நமக்குள் இருக்கிறார். எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் மௌனமாக இருந்து கர்த்தர் நமக்காக யாவையும் செய்துமுடிக்க விட்டு விடுவோமாக. நியாயம் நம் பக்கம் என்று நியாயம் பேசுவதை விட்டுவிட்டு, தேவன் தமது நித்திய அன்பினால் பதிலளிக்க அர்ப்பணிப்போம். முடிவில் நீதி நிச்சயம் விளங்கும். அது இன்பமான முடிவாகவே இருக்கும்.

ஜெபம்: “கர்த்தாவே, எங்கள் வாழ்விலும் நியாயம் புரட்டப்படுகிறது என்பதை அறிந்து எங்களுக்காக நாங்களே வழக்காடுகிறவர்களாக இராமல், உமது நீதி வெளிப்பட பொறுமையோடே காத்திருக்கிறவர்களாக காணப்பட எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.

நன்மைகளின் பிதா

தியானம்: 2026 ஜூலை 10 வெள்ளி | வேத வாசிப்பு: ரோமர் 8: 26-29; யாக்கோபு 1:17-18

YouTube video

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் (2கொரிந்தியர் 9:15).

இருக்கின்ற நன்மைகளை நினைத்து மகிழுகிறவர்கள் சிலர், இருக்கிறதை மறந்து இல்லாததைக் குறித்து முறுமுறுக்கிறவர்கள் சிலர்; நன்மைகள் நிகழும்போது துள்ளிக் குதிக்கிறவர்கள் பலர்; துக்கம் நேரிட்டால் சோர்ந்து போய் தவிக்கிறவர்களும் பலர். இவர்களில் நீங்கள் யார்? இவர்களைவிட மனுஷரில் இன்னுமொரு ரகம் இருக்கிறார்கள். இவர்கள் யார்?

உலகரீதியாக “நன்மை” என்று நாம் எதைக் கருதுகிறோம்? வியாதி வந்தால், அது நன்மையா? இல்லை. ஆனால் அதே வியாதி குணமடைந்தால் அது நன்மையா? ஆம். அதற்காக நாம் மகிழ்ந்து, கொண்டாடவும் செய்கிறோம். இது இயல்பு. ஆனால் அதேசமயம், நமக்கு நன்மை அல்ல என்று நாம் கருதுகின்ற சந்தர்ப்பங்களில், “இதுவும் தேவன் எனக்கு அருளிய சொல்லி முடியாத மிகச் சிறந்த ஈவு” என்று ஏற்றுக்கொண்டு, அந்த நிலையிலும் கர்த்தருக்குத் துதி ஸ்தோத்திரம் செலுத்தமுடியுமா? “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோம. 8:28). இந்த நன்மை என்ன? “நன்மையான எந்த ஈவும் …ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து வருகிறது” (யாக்.1:17). இந்த ஈவு தான் என்ன? கர்த்தர் தீமை தருவாரா? இல்லை. சிலநேரம் அனுமதிப்பார், அதுவும் நமது திராணிக்குத்தக்க அளவுதான் (1கொரி.10:13). அதிலும் அவர் நம்மைத் தனித்து விடுகிறவர் அல்ல. ஆண்டவராகிய இயேசுவை நமக்கான ஏகபலியாகத் தந்து, நித்திய நரகத்திலிருந்து நம்மைக் காத்து, அந்த “கிருபை” வரத்தைத் தந்தவர் நமக்குத் தீமைகளைத் தருவாரா? ஆக, ரோமர் 8:28 ன் நன்மை எதுவென்று 29ம் வசனத்தில் இருக்கிறது. அதுவே, “இயேசுவின் சாயல்”. யாக்கோபில் குறிப்பிடப்பட்ட ஈவு, அடுத்த வசனத்தின்படி “இரட்சிப்பு”. ஆக, நமக்கு நேரிடுகின்ற ஒவ்வொன்றிலும், தேவன் நித்தியத்திற்குரிய ஒரு காரணத்தை வைத்திருக்கிறார், அவர் நம்மை உருவாக்குகிற தேவன் என்பதை விசுவாசிக்கும்போது, துன்ப துயரத்திலும் நமக்குள்ளாக இன்ப ஊற்று நிச்சயம் பாய்ந்தோட வேண்டுமே!

ஆண்டவரின் பிள்ளைகள் நாம் என்றால், ஆண்டவர் அறியாமல் நமக்கு எதுவும் நேரிடாது என்ற உறுதியான விசுவாசம் உண்டென்றால், நமக்கு நன்மை என்று நாம் நினைக்கிறவைகளில் மாத்திரமல்ல, நமக்கு நன்மை இல்லையென்று நாம் நினைக்கிறவைகளைக் குறித்தும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்போம். அவை நன்மை இல்லை என்று நமது மனுஷீகத்தில் நாம் கருதலாம்; ஆனால், அவையே நம்மை உடைத்து உருவாக்கி இயேசுவைப்போல மாற்றுகின்ற படிமுறையின் முக்கியபடிகளாகக் கர்த்தர் உபயோகிக்கிறார். அப்போது, என்ன நேரிட்டாலும் கர்த்தருக்குள்ளான மனமகிழ்ச்சியை யாராலும் எதனாலும் பறித்துவிட முடியாது.

ஜெபம்: அன்பின் தகப்பனே, நீர் அறியாமல் எதுவும் எங்களுக்கு நேரிடவில்லை. எங்கள் பார்வைக்கு தீமைபோன்று தோன்றினாலும் உமதுகரம் அவற்றிலும் இருப்பதற்காக நன்றி. ஆமென்.

நாம் அல்ல, கர்த்தரே!

தியானம்: 2026 ஜூலை 9 வியாழன் | வேத வாசிப்பு: 2நாளாகமம் 20:1-19

YouTube video

இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல …. புறப்படுங்கள் (2நாளாகமம் 20:17).

அநேகர் ஒன்றுதிரண்டு, தனித்து நிற்கும் உங்களைச் சூழ்ந்து, உங்களைக் குற்றஞ்சாட்டி, தலைகுனிய வைத்திருக்கிறார்களா? அதிலும் என்ன தவறு செய்தோம் என்பது கூட நமக்கு விளங்காதபோதும், நாம் தாக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் நிச்சயம் நேரிடலாம். இது நேரடியாகவும் சம்பவிக்கலாம்; அல்லது எப்பக்கமும் திரும்பமுடியாதபடி பல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து நம்மைத் திகைக்கவும் வைக்கலாம். இது மிகவும் கடினமான நேரம்.

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி பிரயாணமாய் வந்தபோது, அம்மோனியர் மோவாபியர் வாழ்ந்த தேசத்தின் வழியாய்ப் போக கர்த்தர் உத்தரவு கொடுக்கவில்லை. இவர்களும் அப்படியே விலகியே போனார்கள். இந்த நன்மையையெல்லாம் மறந்து இப்போது மோவாபியருடன், அம்மோனியருடன், சுற்றிலும் இருந்தவர்கள் யோசபாத் ராஜாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ண வந்தார்கள். அப்போது யோசபாத் செய்தது ஒன்றுதான்; யூதா எங்கும் உபவாசத்தைக் கூறுவித்து, கர்த்தரைத் தேடுவதற்கு சகலரையும் ஒன்றுகூட்டினான். அப்போது யோசபாத், “இந்த ஏராளமான கூட்டத்துக்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை. செய்வது என்னவென்றும் தெரியவில்லை. எங்களது கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது” என்று ஜெபித்தான். அதற்கு யகாசியேல் மூலமாக கர்த்தருடைய ஆவி பதிலுரைத்ததாவது: “கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள். யுத்தம் உங்களுடையது அல்ல; தேவனுடையது. நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” என்பதே (2நாளா.20:17). யோசபாத்தும் மக்களும் கர்த்தருக்கு முன்பாகத் தாழ விழுந்தார்கள். யூதா மனுஷர் ஒன்றும் செய்யவில்லை. அடுத்த நாளிலே யூதாவுக்கு விரோதமாக வந்த அத்தனை மனிதரும் தரையிலே செத்துக் கிடந்தார்கள். இது சத்தியம்.

இந்த தேவனே இன்று நம்முடைய தேவனும். “எப்பக்கம் நெருக்கப்பட்டும் நாம் ஒடுங்கிப்போவதில்லை” என்று பவுல் எப்படிச் சொன்னார்? இன்று நாம் மோவாபியரையும் அம்மோனியரையும் சந்திக்கப்போவதில்லை. மாறாக, நாட்டில் நடக்கக்கூடிய யுத்தங்களை சந்திக்க நேரிட்டாலும், இதற்கும் மேலாக, நமது தனிப்பட்ட அன்றாட வாழ்விலே நமக்கு எதிராக எழும்புகின்ற ஆயுதங்கள் அநேகத்தை சந்திக்கவும் நேரிடலாம். எல்லாப் பக்கமும் நெருக்கப்படலாம். நாம் நேசித்தவர்கள், நம்மிடம் நன்மை பெற்றவர்கள்கூட நமக்கு எதிராக எழும்பலாம். நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். “கர்த்தர் எனக்கு உதவி செய்வார்” என்று சொல்லி தேவனுடைய பாதம் சரணடைய வேண்டியதுதான். அப்போது கர்த்தர் நமது யுத்தங்களை ஆச்சரியமான விதத்தில் நடத்துவார். சகலமும் முறியடிக்கப்படும். கர்த்தரை நம்புவோமா?

ஜெபம்: ஆண்டவரே, எங்களுடைய இக்கட்டான நேரங்களில் நாங்கள் நம்பினவர்கள் உடன் இராமற்போனாலும் நீர் எங்களோடுகூடவே இருக்கிறீர். உமக்கு நன்றி. ஆமென்.