வாக்குத்தத்தம்: 2018 ஜனவரி 27 சனி

நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். (யாத்.14:13)
வேதவாசிப்பு: யாத்.13,14 | மத்தேயு.19

ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 27 சனி

“அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்” (ரோம.10:14) இந்த தரிசனத்தோடு இயங்கிவரும் அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களுக்காகவும், இயக்குநர்களுக்காக, அனுப்பப்பட்டுள்ள மிஷனரி குடும்பங்களுக்காக, அவர்களை ஜெபத்தில் தாங்கும் விசுவாச குடும்பங்களுக்காக வேண்டுதல் செய்வோம்.

ஒற்றுமையோடு முன்செல்ல…

தியானம்: 2018 ஜனவரி 27 சனி; வேத வாசிப்பு: ரோமர் 12:1-21

“ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள். மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்” (ரோமர் 12:16).

இன்று சபைகள் பிளவுபடுவது சாதாரண விஷயமாகிவிட்டது என்பது உண்மையிலேயே துக்கத்துக்குரிய விஷயமாகும். இப்பிளவுகளுக்கு முக்கிய காரணம் கருத்து வேறுபாடு அல்ல; அது இருந்தால் அதைச் சரிப்படுத்தலாம். ‘ஒருமனம்’ இதுதான் இன்று அரிதாகிவிட்டது. இந்த ஒருமனம் இல்லாததால், சபைகள் உடைந்து சிதறுகிறது. இப்படிப்பட்ட காரியங்களில் நாம் கரம் கோர்க்காதிருப்போம்.

ஆரம்ப சபைகளிலும் இந்தப் பிரச்சனை இருந்தது. ஆனால், அவை திருத்தி அமைக்கப்பட்ட சம்பவங்களை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம். குறிப்பாக, எருசலேமிலே சுவிசேஷம் விரைவாகப் பரவி, சீஷர்கள் பெருகிய காலகட்டத்தில், விதவைகளைக் குறித்து ஒரு முறுமுறுக்கும் நிலை உண்டானது. தங்கள் விதவைகள் சரியாய் விசாரிக்கப்படவில்லை என்று கிரேக்கர், யூதருக்கு அதாவது எபிரெயருக்கு விரோதமாக முறுமுறுக்க தொடங்கினர். இதை அறிந்த பன்னிரு சீஷர்களும் பிரச்சனையை முழுமையாய் அறிந்து, ஞானமும் நியாயமுமாய் தீர்த்து வைத்தார்கள் (அப்.6:1-7). இதனால் இருபிரிவினரும் தொடர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள். இந்த ஒருமைப்பாட்டை வலியுறுத்திய பவுலடியார், ஒரு சரீரத்தையும் அதன் அவயவங்களின் செயற்பாடுகளையும் உதாரணப்படுத்தி தெளிவுபடுத்தினார். சரீரம் ஒன்றாயினும் அனைத்து அவயவங்களும் தன்தன் தொழிலை ஒன்றிணைந்து செயற்படுத்துவதாலேயே சரீரம் இயங்குகிறது; வளர்ச்சியடைகிறது, வாழுகின்றது. இந்த ஒருமனம் சபையில் மாத்திரமல்ல, நமது குடும்பத்தில், வேலை ஸ்தலத்தில், எல்லா இடத்திலும் அவசியமானது.

இந்த ஒருமைப்பாடு இன்று காணப்படுகிறதா? அல்லது, இந்த ஒருமைப்பாட்டைக் குலைத்து, குழப்பங்களையும் பிரிவினைகளையும் தோற்றுவிக்கிறோமா? நாமனைவரும் ஒரே சரீரத்தின் அவயவங்கள் என்பதை மறந்துவிடாதிருப்போம். பிரிவினைகளைக் கொண்டுவருகின்ற காரியங்களை தவிர்த்து, நம்மை நல்வழிப்படுத்துவோம். ஆராய்ந்து பார்த்து நம்மைச் சீர்ப்படுத்தி, ஒற்றுமையாக முன்செல்ல நம்மை ஒப்புவிப்போமாக.

“சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏக மனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்” (1கொரி. 1:10).

ஜெபம்: அன்பின் தேவனே, வீட்டிலோ வெளியிலோ சபையிலோ, ஒருமனம் ஒற்றுமைக்கு என்னால் பங்கம் ஏற்படாதபடியும், பிரிவினைகள் நீங்கி இசைந்த ஆத்துமாக்களாய் உம்மை மகிமைப்படுத்த உதவி செய்யும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 26 வெள்ளி

“தேசமே பயப்படாதே .. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்” (யோவேல் 2:21) என்ற வாக்குப்படியே இன்று குடியரசுதினத்தை அனுசரித்துக்கொண்டிருக்கும்  நம்முடைய தேசத்தில் கர்த்தர் பெரிய காரியங்களை இவ்வாண்டில் செய்யவும், சுவிசேஷ ஒளி எங்கும் பரவவும் பாரத்துடன் ஜெபிப்போம்.

தூங்காது முன்செல்ல…

தியானம்: 2018 ஜனவரி 26 வெள்ளி; வேத வாசிப்பு: மாற்கு 13:1-37

“எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, … விழித்துக்கொண்டிருங்கள்” (எபே.6:18).

69ஆவது குடியரசு தினத்தை இன்று கொண்டாடும் நமது தேசத்திற்காக நாம் நன்றி செலுத்தவும் ஜெபிக்கவும் கடமைப்பட்டுள்ளோம். தேசத்தின் நன்மையை அனுபவிக்கும்படியாகவும் விடுதலையோடு தேவனை ஆராதிக்கும்படியாகவும் தேவன் அருளிய கிருபைகளுக்காக கர்த்தரைத் துதிப்போம். தேசத்தலைவர்கள் இயேசுவைக் கண்டுகொள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும் சோர்ந்துபோகாமல் விழித்திருந்து அதிக ஊக்கத்தோடே ஜெபிப்போம்.

ஒரு போர்வீரன் சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொண்டால் மாத்திரம் போதாது. அவன் எப்போதும் விழிப்போடு செயற்படவேண்டும். இல்லையானால் எதிரி அணுகுவதை அறிந்துகொள்ளவோ, அவனை அடையாளம் காணவோ, அவனுடன் போராடவோ, முறியடிக்கவோ அவனால் முடியாது போய்விடும். இதனால்தான் கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவின் சீஷர்கள் தோற்றுப்போனார்கள்.

சிலுவைக்குப் போகுமுன்பதாக, தமது சீஷரோடு கெத்சமெனே தோட்டத்திற்குச் சென்ற இயேசு, தாம் தனித்து ஜெபிக்கும்படி செல்லுவதற்கு முன்பதாக, தமக்கு நெருங்கிய மூன்று சீஷரையும் அழைத்துச்சென்று, தாம் திரும்பி வரும் வரைக்கும், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” (மத்.26:41) என்று கூறி, தாம் தனித்து ஜெபிக்கச் சென்றார். ஆனால் சீடர்களோ தூங்கிவிட்டார்கள். இதனால் ரோமப் போர்வீரர்கள் இயேசுவைப் பிடிக்க வந்தபோது, இயேசுவோடுகூட அங்கே நிற்க அவர்களால் முடியவில்லை; பெலனற்றுச் சிதறி ஓடிவிட்டனர். நமது விசுவாச வாழ்வில் நாம் சந்திக்கின்ற ஒரே எதிரி சாத்தானும் அவனுடைய தந்திரங்களுமே! இவனுடைய தந்திரங்கள், சூழ்ச்சிகளை அறிந்து, எதிர்த்துப்போராடி மேற்கொண்டு முன்செல்லவேண்டுமானால், ஆயுதங்களைத் தரித்துக்கொண்டால் மாத்திரம் போதாது. அவற்றைத் தரித்தும், தூங்கிவிட்டால் சத்துருவால் தோற்கடிக்கப்பட்டுவிடுவோம். ஆகையால்தான், சர்வாயுத வர்க்கத்தைக் குறித்து எழுதிய பவுல், தொடர்ந்து ஜெபத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார்.

இயேசுவின் இரண்டாம் வருகை நெருங்கியிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில், இயேசு நமக்குக் கற்பித்ததை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. “அக்காலத்தை நீங்கள் அறியாதிருப்பதால் விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” (மாற்.13:33) என இயேசுதாமே எச்சரித்துள்ளார். இன்றைய சம்பவங்கள் அந்த இரண்டாம் வருகை நெருங்கிவிட்டதை நமக்கு அறிவித்தபடியே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். ஆகவே, நாம் சோதனைக்குட்படாதபடி நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் மாத்திரமல்ல, சரீர தூக்கத்தையும் அர்ப்பணிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். விழிப்புடன் மாத்திரமல்ல, விழித்திருந்து ஜெபிக்கிறவர்களாகவும் முன்செல்வோம்.

“மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்”
(லூக்கா 21:36).

ஜெபம்: நல்ல ஆண்டவரே, சோர்ந்துபோகாமல் ஆவியிலே உற்சாகமாய் ஜெபிக்க, விழித்திருக்க உமது வல்லமையைத் தந்தருளும். ஆமென்.