ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 26 திங்கள்

“பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம் பண்ணி கோடைகாலத்தையும் மாரி காலத்தையும் உண்டாக்கின தேவன்” (சங்.74:17) தாமே இவ்வருடத்தின் கோடைகாலத்தை ஆசீர்வதித்திட, விவசாயத்தை மாத்திரமே நம்பியுள்ள விவசாயிகளின் பிரயாசங்கள் நல்ல பலனைத் தர இயற்கை சூழ்நிலைகளை கர்த்தர் ஆண்டு வழிநடத்த ஜெபிப்போம்.

அதிக பேச்சு ஆபத்து!

தியானம்: 2018 பிப்ரவரி 26 திங்கள்; வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:1-7

“சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்” (நீதிமொழிகள் 10:19).

உணர்ச்சிவசப்பட்டு அதிகம் வார்த்தைகளைக் கொட்டி, பின்னர் அதுவே பிரச்சனையாகிவிட்ட அனுபவம் நமக்கு ஏற்பட்டிருக்கும். அதிக பேச்சு உறவையும் கெடுக்கும்; மனதையும் கெடுக்கும்.

ஏதேனிலே மகிழ்ச்சியோடிருந்த தம்பதிகள் நடுவே ஒருவன் வஞ்சக எண்ணத்துடன் புகுந்தான். அவனது ஒரே கேள்வியில் மனித சரித்திரமே மாறியது; உறவுகள் சின்னாபின்னமாயின. கேள்வி கேட்பவன் கேட்பான்; தேவையற்றவர்களின் தேவையற்ற கேள்விகளுக்கு தேவையற்ற பதில்களை நாம் ஏன் தரவேண்டும்? தேவனுடைய சந்நிதானத்திலிருந்து கீழே விழத்தள்ளப்பட்ட சாத்தான், தேவனுக்கு விரோதமாக எழுந்து, தேவதிட்டத்தைக் கெடுப்பதையே நோக்காகக் கொண்டவன். தினமும் தன் புருஷனாகிய ஆதாமின் சத்தத்தையும், தேவனுடைய சத்தத்தையும் மாத்திரம் கேட்டுப் பழகிய ஏவாள், ஒரு புதிய குரல் பேசியபோது விழித்திருக்கவேண்டும். “தேவன் சொன்னதுண்டோ” என்று கேள்வி எழுந்தபோதே உஷாராகியிருக்கவேண்டும். அவளோ விளக்கம் சொன்னாள். அவன் அதற்கு விளக்கம் சொன்னான். அதிக பேச்சு, அதிக விளக்கம், ஏவாளது மனதைக் கலைத்தது. இதுவரை தேவதிட்டத்துக்குள் இருந்தவள், இப்போது தனக்குத்தானே திட்டம் போட்டாள். இதுவரை தன் கண்முன் இருந்தும் காணாத கனியை அவள் கண்கள் கண்டது. அதைக் கண்டதால் ஏற்பட்ட விபரீதத்தால், இதுவரை நிர்வாணமாகத் தெரியாதது இப்போது அவளுக்கே வெட்கமானது. நாவில் ஆரம்பித்து, செவிகளில் விழுந்து, கண்களில் தொடர்ந்து, செயலில் முடிந்த நாடகம், மனிதனுக்கும் தேவனுக்குமான உறவைக் கிழித்துப்போட்டது.

இன்று நாம் இதையே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. கிறிஸ்துவின் பலியினாலே நாம் புதிதாக்கப்பட்டிருக்கிறோம். நமது வெட்கத்தையும், குற்ற உணர்வையும் இயேசு சிலுவையில் நீக்கிப்போட்டார். நாம் இன்று கிறிஸ்துவுக்குள் புதியவர்கள். அப்படியிருக்க, இன்னமும் ஏவாளைக் குற்றப்படுத்துவதைச் சாக்காக்கி, நம் இஷ்டப்படி நடப்பது முறையல்ல. வீண் வார்த்தைகள், வீண் தர்க்கங்கள் நம்மை மறுபடியும் தேவனைவிட்டுத் திசை திருப்பிப்போடும். அன்று தேவனுக்கு விரோதமான செயலில் மனிதனும் சாத்தானுக்குத் துணைபோனான். ஆனால் இன்று சாத்தான் நமக்கு தோற்றுப்போன எதிரி. ஆகையால் கிறிஸ்து சம்பாதித்துக் கொடுத்த தேவனுடனான உறவைக் கறைப்படுத்தாதிருப்போமாக. தேவசத்தத்தைத் தவிர நமக்கு வேறெதுவும் வேண்டாமே.

“…பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே” (கொலோ.3:9,10).

ஜெபம்: ஆண்டவரே, எங்கள் வாழ்வில் உம்மைவிட்டுத் தூரம்போகத்தக்கதாக வீண்பேச்சுகளுக்கு இடமளித்ததை எங்களுக்கு மன்னியும். இனி அவற்றிற்கு நாங்கள் இடமளிக்காமல் உம்மையே மகிமைப்படுத்த உதவி செய்யும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 25 ஞாயிறு

தமக்கு விரோதமாய் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் (எபி.12:3) என்ற வாக்குப்படி கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றும் நாமும்  இந்த ஆராதனை நாளில்  அவரையே நமக்கு மாதிரியாக முன்வைத்து வாழ அர்ப்பணித்து ஜெபிப்போம்.

நல்ல உறவுகள்

தியானம்: 2018 பிப்ரவரி 25 ஞாயிறு; வேத வாசிப்பு: 1சாமுவேல் 18:1-4

“…யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்” (1சாமு. 18:1).

“தகப்பனை இழந்த எங்களை பள்ளி விடுதியில் சேர்த்துவிட்டுப் போய்விட்டார் அம்மா. இனி யாரும் இல்லையே என்று அழுதோம். விடுதியிலிருந்த ஒரு அக்கா, தான் இருப்பதாகச் சொன்னார். அதை மறக்கவே முடியாது.” தன் இளவயது நினைவுகளை மீட்டிப்பார்த்தார் ஒருவர்.

பெற்றோர் சகோதரர் உற்றார் என்று பலரை இழந்து தனிமரமாய் பலர் ஜீவிக்கிறார்கள். என்றாலும் அவர்களுக்கும் தேவன் உறவுகளை அருளியிருக்கிறார். ஏனெனில் இரத்த சம்பந்தமான உறவுகளைவிட, இரத்த சம்பந்தம் அற்ற அதாவது நட்பு, அயலவர், ஆசிரியர் மாணவர், மருத்துவர் நோயாளி, என்று பல உறவுகளைத் தேவன் தந்திருக்கிறார். விசேஷமாக நட்புறவு மிக முக்கியமானது. நல்ல நண்பர்கள் இல்லாதவர்கள் வாழ்வில் பெரிய வெறுமையை உணருவார்கள். (நட்பு சரியாய் அமையாவிட்டாலும் கெடுதிதான்.)

கோலியாத்தைக் கொன்று வீழ்த்தி வெற்றிவீரனாய் வந்த தாவீது, சவுலின் குமாரனாகிய யோனத்தானைக் கவர்ந்தான். அது வெறும் ஈர்ப்பு அல்ல; அது ஆத்மார்த்தமான சிநேகம். சிநேகித உறவுக்கு வரைவிலக்கணமே இந்த இருவருமே என்றால் மிகையாகாது. சவுல், தாவீதில் எரிச்சலும் பழியுணர்வும் கொண்டு, தாவீதைக் கொன்றுபோட பல தடவைகள் முயற்சித்தபோதும், யோனத்தான் தன் நண்பனுக்காக தன் தகப்பனையும் எதிர்த்து நின்று தாவீதைக் காப்பாற்றிய பல சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன. சவுலின் திட்டங்களை யோனத்தான் தாவீதுக்கு அறிவித்தான் (1சாமு.19:2). பல தடவைகள் யோனத்தான் சவுலின் கோபத்திற்கு ஆளானான் (1சாமு.20:30). யோனத்தான் போரில் மடிந்தபோது, தாவீது அவனைக் குறித்து: “…நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய். உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது. ஸ்திரீகளின் சிநேகத்தைப் பார்க்கிலும் அதிகமாயிருந்தது” (2சாமு.1:26) என்றான். என்ன ஆச்சரியமான நட்பு!

சகோதரர் பெற்றோரிடம் திறக்காத நமது மனம் அன்பான நண்பர்களிடம் திறப்பதும் ஏன்? அந்தளவுக்கு நட்புறவு ஒரு நல்ல உறவு. இன்னும் பலபல உறவுகளைத் தேவன் நமக்குத் தந்திருக்கிறார். என்றாலும், ஆண்டவர், ‘சிநேகிதனே’ என்று யூதாஸை அழைத்திருக்க, நம்மை விட்டுவிடுவாரா? ஆகவே, தேவன் தந்த அனைத்து உறவுகளுக்காகவும், முக்கியமாக நமது நண்பர்களுக்காகவும் தேவனுக்கு நன்றி சொல்லுவோம். நாமும் பிறருடன் கபட நினைவுடன் அல்ல, நல்ல மனமுள்ள உண்மையுள்ள நண்பர்களாக இருந்து, அவர்களுடன் இசைந்திருப்போம்.

“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நாங்கள் கபடற்றவர்களாகவும் உண்மை சிநேகத்துடன் காணப்படவும், நல்லமனமுள்ள உண்மை நண்பர்களே எங்களுக்கு கிடைப்பதற்கும் நீரே உதவி செய்யும். ஆமென்.