ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 26 வியாழன்

ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும் சாலொமோனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளின (1இரா.3:9) தேவன்தாமே நம்முடைய தேசத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் இராணுவத் தலைவர்கள், அனைத்து மாநிலத்தின் முதன்மந்திரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள் யாவருக்கும் விசேஷித்த கிருபையையும் பாதுகாப்பையும் தந்து கர்த்தரே வழிநடத்த ஜெபிப்போம்.

கேட்டால் போதாது!

தியானம்: 2019 செப்டம்பர் 26 வியாழன் | வேத வாசிப்பு: யோனா 1:1-3; நாகூம் 3:1-6

”அப்பொழுது யோனா… தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி…’’ (யோனா 1:3).

வீட்டிலே கீழ்ப்படிதலுள்ள நல்ல பிள்ளைகள்போல இருந்துவிட்டு, வீட்டுக்கு வெளியே, வீதியில் தங்கள் இஷ்டப்படி நடக்கின்ற வேறுபிள்ளைகளைக் குறித்து நீங்கள் துக்கப்பட்டுள்ளீர்களா? இப்படியேதான் நாமும் நமது பரமபிதாவை பல தடவைகளில் துக்கப்படுத்தி இருக்கிறோம்.

தேவனிடத்தில் கேட்டு, அதை அப்படியே செய்கின்ற தீர்க்கதரிசிகளில் ஒருவன் யோனா. நினிவே பட்டணத்தாருக்கு வரப்போகும் பெரும் அழிவைப்பற்றி அறிவிப்பதற்காக நினிவேக்குப் போக தேவ கட்டளையைப் பெற்றான் யோனா. அசீரியரின் ஆட்சிக்குட்பட்ட நினிவே பட்டணம் மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால், அங்குள்ள மக்கள் கர்த்தருக்கு விரோதமாகவே நடந்தனர். அனாதையாக உள்ளவர்களைத் துன்பப்படுத்தி யுத்தங்களை நடப்பித்தனர். வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நினிவே நிறைந்திருந்தது. இஸ்ரவேலுக்கும் நினிவேக்கும் ஆகாதிருந்தது. இந்த இடத்திற்கு கட்டாயம் யோனா சென்றிட வேண்டும். அவன், அசீரியரில் கொண்ட வெறுப்பினாலோ, தேவ அநுக்கிரகம் இஸ்ரவேலுக்கு மாத்திரம்தான் என்று நினைத்ததாலோ, அந்தப் பட்டணத்தார் மனந்திரும்பி விட்டாலோ என்றோ, யோனா, தேவ கட்டளையை மீறி எதிர்திசைக்குப் போகும் கப்பலிலே ஏறி, தப்பிக்கொள்ள எண்ணி, அப்படியே ஏறிப் போனான்.

நாம் தீர்க்கதரிசிகள் அல்ல; ஆனாலும், தம்முடைய வார்த்தைக்கூடாக இன்றும் கர்த்தர் நம்முடன் பேசுகிறார். வார்த்தைமூலம் பணிகளையும் கொடுக்கிறார். அவரது வார்த்தைக்கு நாம் எவ்வளவாகக் கீழ்ப்படிகிறோம்? நம் பெலத்துக்கு மிஞ்சியதைக் கர்த்தர் கேட்கிறார் என்று சாக்குச் சொல்லிக்கொண்டு பயத்தினாலோ அல்லது பிடிவாதக் குணத்தினாலோ எதிர்திசையிலே ஓடிப்போகிறோமா? யோனா கர்த்தருடைய வார்த்தையை விட்டு ஓடியதால் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், தேவன் அவரை விடவில்லை.

கர்த்தருடைய வார்த்தையை வாசிப்பதற்கு நாம் முதலிடம் கொடுத்திருக்கலாம். அவருடைய சித்தம் செய்ய ஒப்புக்கொடுத்து ஜெபிக்கலாம். ஆனால், அதை முழு மனதுடன் நிறைவேற்றுகிறோமா? சில சமயம் நமக்குப் பிடிக்காத காரியங்களுக்காக நாம் அனுப்பப்படலாம். ஆனால் அனுப்புகிறவர் தேவன் அல்லவா! அவர் நம்மோடு இருப்பாரல்லவா! நம்மை வெறுக்கிறவர்களைச் சந்திக்க வேண்டுமென்றாலும் அதற்குரிய கிருபையைத் தேவன் தருவாரே! கீழ்ப்படியாத யோனாவுக்கு மீன் காத்திருந்தது. நாம் கீழ்ப்படியாவிட்டால் காரியம் என்னவாகுமோ யாரறிவார்?

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? (சங்.139:7).

ஜெபம்: எங்களை அழைத்த ஆண்டவரே, முழுமனதோடே உம் சித்தத்தை நிறைவேற்றவும், வழிவிலகிப் போய்விடாதபடியும் எங்களைக் காத்தருளும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 25 புதன்

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் (சங்.91:11) இவ்வாக்குப்படியே சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் ஆகியோரது பணிகளில் அவர்களுக்கு வேண்டிய பெலனை கர்த்தர் தந்தருளவும், புதிய நபர்களைச் சந்திக்கும் பணிகளுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.

தெரிந்துகொண்ட துக்கம்

தியானம்: 2019 செப்டம்பர் 25 புதன் | வேத வாசிப்பு: மாற்கு 10:17-24

ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது! (மாற்கு 10:24).

அவன் ஒரு பணக்கார வாலிபன். மிகவும் கவனமாக கற்பனைகளைக் கைக் கொண்டு வாழ்ந்தவன். வாலிப வயதிலும் அப்படியொரு கட்டுப்பாடு. அவனுக்குள்ளும் ஒரு தாகம். அதற்குப் பதில் இயேசுதான் என்று நம்பி, இயேசுவிடம் ஓடி வந்தான். வந்தவன் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டான். அவன் கேட்ட கேள்வியோ இயேசுவையே அசைத்திருக்கும். வாலிபனுடைய மனதிலே இருந்த நித்திய ஜீவனைக் குறித்த வாஞ்சை அவனது கேள்வியிலே வெளிவந்தது. ஆண்டவர் அவனை அன்போடு பார்த்தார். அவனது தாகம் உண்மையாயினும், அதற்குத்தடையாக அவனுக்குள்ளே மறைந்திருந்த மற்றொரு உண்மையை அவனுக்கு உணர்த்தினார். செல்வத்தின் மீது இருந்த பற்றுதல் அவனுக்குள் ஆழமாக இருந்ததை வெளிப்படுத்தினார். ஆனால் அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நித்திய சந்தோஷத்தை நாடித்தேடி வந்தவன், தனக்குத்தானே துக்கத்தைத் தெரிந்துகொண்டு திரும்பிப்போனான்.

இந்த வாலிபன் தன்னுடைய முக்கிய தேவையை அடைய முடியாதபடி முக்கியமானதொன்று அவனைத் தடுத்துவிட்டது. அவன் நினைத்திருந்தால் அக்குறையைத் தீர்த்து, தான் விரும்பிய சந்தோஷத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவனது வாழ்வில் அவனுடைய விருப்பத்தைப் பார்க்கிலும், முக்கியம் என்று அவன் எண்ணிய ஐசுவரியம் அவனுக்கு முக்கியம் வாய்ந்ததாய் இருந்தது.

இந்த வாலிபனைப்போல இன்றும் பல வாலிபர்களும் பெரியவர்களும் உன்னதமான நோக்கங்களோடுதான் வாழுகிறோம். இயேசுவிடம் வந்து முழங்காற்படியிடுகிறோம். எப்படியாவது பரலோக ராஜ்யத்தை அடையவேண்டுமென்று தீராத தாகம் நமக்குண்டு! யார்தான் நரகத்திற்குப் போக விரும்புவர்? ஆனால் இன்று அதிகமானோரின் வாழ்வு, நித்தியத்தில் நிலைத்திராத பல நிச்சயமற்ற உலக காரியங்களில் மூழ்கிப்போயிருக்கிறது. உலகம் காட்டும் பலவித சந்தோஷங்களை நாடித் தேடுவதை நிறுத்த முடியாமல் தவிக்கிறது. இதனாலேதான் நம்மில் அநேகர் துக்கத்தை நாமேதான் தெரிந்தெடுத்துக்கொண்டு, துக்கத்தோடே ஜீவிக்கிறோம். ஒருவேளை, நம்மிடம் ஐசுவரியம் இல்லாதிருக்கலாம். ஆனால் வேறு பல இருக்கலாமே! அவற்றை இனங்கண்டுகொள்ளக்கூட நாம் தயங்குகிறோம். இதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறித்தும் அறிவற்றவர்களாக இருக்கிறோம். நாமே நமக்கு ஏன் துக்கத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்?

தேவனுக்கேற்ற துக்கம்… மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ, மரணத்தை உண்டாக்குகிறது (2கொரி. 7:10).

ஜெபம்: அன்பின் தேவனே, லெளகீக துக்கத்தினாலே நாங்கள் நித்திய சந்தோஷத்தையும் நித்திய ஜீவனையும் இழந்திடாதபடி, எங்களுடைய எல்லா தேவைகளுக்கும் உம்மை நம்பி வாழ எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.