சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜூலை-ஆகஸ்டு 2018

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இக்கடைசி நாட்களில் ராஜ்யத்தின் சுவிசேஷத்தை இந்த தேசமக்களுக்கு அறிவிப்பதற்கு எமக்கு உறுதுணையாய் இருந்து ஆதரவு தரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

வெகு ஜன ஊடகம் வாயிலாக நாங்கள் ஆற்றிவரும் தேவபணியின் மூலமாக அநேக ஆயிரமான ஆத்துமாக்கள் பிரயோஜனமடைய தேவன் கிருபை செய்து வருகிறார். Rev.தியோடர் எச்.எஃப். அவர்களுக்கு கர்த்தர் தந்த தரிசனமானது தொடர்ந்து நிறைவேறவும் அவருடைய வருகைக்கு முன்பாக இன்னும் பல ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்கும் வேண்டுதல் செய்வோம். தொடர்ந்து இவ்வூழியங்களுக்காக ஜெபியுங்கள்.

சத்தியவசன ஊழியத்திலிருந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது SW 9610 Khz 31 meter அலைவரிசையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒலிபரப்பாகி வரும் தமிழ் நிகழ்ச்சிகளை கேட்டு பயனடையுங்கள். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஆதரவாளர் திட்டத்தில் இணைந்தும் ஜெபத்தோடு தாங்கிவர அன்புடன் வேண்டுகிறோம். மேலும் விசுவாச பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காத பங்காளர்கள் புதுப்பித்துக்கொள்வதற்கும் நினைவூட்டுகிறோம்.

சத்தியவசனத்திலிருந்து நடத்தப்பட்டுவரும் Whatsapp ஊழியத்தில் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து எமது தின செய்திகளைப் பெற்றுவரும் அன்பர்கள்,  இனி தொடர்ந்து அவைகளைப் பெற சத்தியவசன கைபேசி எண். 6380692034 ஐ உங்கள் மொபைல் போன் Contact இல் பதிவுசெய்து கொள்ள  அன்புடன் தெரிவிக்கிறோம்.

இவ்விதழில் நல்ல மேய்ப்பன் எவ்விதமாய் தன் ஆடுகளின் மேல் உள்ள கரிசனையோடும் ஆடுகளின் நிலையை அறிந்தும் நடத்துகிறான் என்பதை விளக்கி நானே நல்ல மேய்ப்பன் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய கட்டுரையும், நம்முடைய ஜெப நேரம் இன்ப நேரமே என்பதை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் பல அனுபவங்களோடு எழுதிய கட்டுரையும், விசுவாசி அணிந்துகொள்ள வேண்டிய ‘ஆவியின் பட்டயத்தை’க் குறித்து Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதிய கட்டுரையின் தொடர்ச்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும் சகோ.ஆ.பிரேம் குமார் அவர்கள் எழுதிய மிஷனெரிக்கான கரிசனை என்ற கட்டுரையின் தொடர்செய்தியும் இடம் பெற்றுள்ளது.

நற்செய்தியை கொண்டாடுவோம் என்ற கருப்பொருளில் நாம் பார்த்துவரும் அருட்பணியாளர்களின் வாழ்க்கை வரலாற்று தொடரில், இவ்விதழில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் அருட்பணியாற்றிய மிஷனெரி வீரர் டேவிட் பிரெய்னார்ட் மற்றும், இருண்டகண்டம் என்று அழைக்கப்பெற்ற ஆப்பிரிக்காவில் அருட்பணியாற்றிய மேரி ஸ்லேசர் ஆகிய இருவரைப்பற்றியும் சுருக்கமாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

இச்செய்திகள் ஒவ்வொன்றும் உங்கள் யாவருக்கும் அதிக பிரயோஜனமுள்ளவையாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்