ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை-ஆகஸ்டு 2017)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நீதியுள்ள நியாயாதிபதியாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின்  வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

நமது தேசம் 71-வது சுதந்திரதினத்தை கொண்டாட இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தீவிரவாதங்களும், போராட்டங்களும், பஞ்சங்களும், வறட்சிகளும் மிகவும் பெருகி இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். மதசார்புள்ள ஆட்சி மத்தியில் இருப்பதால் ஆங்காங்கே மத கலவரங்களும் மோதல்களும் நிலவிவருகிறதை அறிகிறோம். “அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு திறப்பின் வாயிலில் நின்ற” (சங்.106:23) மோசேயைப்போல இந்நாட்களில் நம்முடைய தேசத்திற்காக திறப்பிலே நிற்போம். கர்த்தர் நம்முடைய தேசத்திற்கு மெய்யான சுதந்தரத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்கள் நன்மைகளை எங்களுக்கு எழுதுங்கள். இதுவரையிலும் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் பங்காளர் சந்தாவைப் புதுப்பித்து தொடர்ந்து ஊழியத்தைத் தாங்க அன்பாய் வேண்டுகிறோம்.

நீதிமொழிகள் 1-31 வரையிலான அதிகாரங்களை ஒவ்வொரு நாளும் தியானிக்கும் வண்ணமும், அன்றாட வாழ்க்கைக்கான ஆலோசனைகளாகவும் ஜூலை மாத தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். தேவன் நம்மேல் வைத்த அன்பு பராமரிப்பு, அனுதின வாழ்க்கையில் சந்திக்கிற கஷ்டங்கள் கவலைகளில் அவருடைய ஆறுதல்களை தியானிக்கும்படியாக சங்கீத புஸ்தகத்திலிருந்து சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலனடைய அதிக உறுதுணையாக இருக்கும் என்றே விசுவாசிக்கிறோம். தேவன்தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

கே.ப.ஆபிரகாம்