நமது மேய்ப்பர்!
அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி
வேதபகுதி: சங்கீதம் 23
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங்.23:1)
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார் (வெளி.7:17).
நாம் நன்கு அறிந்த இந்த வார்த்தைகளை தாவீது எழுதியபோது, அவர் தன்னைப் பற்றியும் இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்துள்ள அனைவரையும் பற்றி தைரியமாக அறிக்கை செய்தார்.
நாமும் “கர்த்தர் என் மேய்ப்பர்”; என்ற அறிக்கையை நேர்மையுடன் சொல்ல இயலுமா? நாம் வழிதவறி அலைந்தோம். அவனவன் தன்தன் வழியிலே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார் (ஏசாயா 53:6). ஆனால், இயேசு நம்மைக் கண்டுபிடித்ததால் அவருடைய மந்தையின் ஆடுகளாயிருக்கிறோம். கிறிஸ்துவை நம்புவதற்கு முன்பு, “நாம் காணாமற்போயிருந்த ஆடுகள்.” “நம் அனைவரையும் தமது மந்தையின் ஒரு பகுதியாக மாற்றினார்.” அவர் மாத்திரமே நமது மேய்ப்பர். ஒரு சில கிறிஸ்தவர்களுக்கு தங்களை ‘ஆடுகள்’ என்று அழைப்பது சங்கடமாக உள்ளது. ஏனெனில், ஆடுகள் பாதுகாப்பற்றவை, அவைகளுக்குக் கண்பார்வை குறைவு, எனவே பாதை தெரியாது அலைந்து திரியும் வாய்ப்புகள் அதிகம். எனினும் வேதாகமம் நம்மை குதிரைகளுக்கோ, சிங்கங்களுக்கோ ஒப்பிடவில்லை. ஆடுகள் என்றே அழைக்கிறது. எனவே, நமக்கு ஒரு மேய்ப்பன் தேவை. “கர்த்தாவே, மனிதனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவதும் அவன் அதிகாரத்தில் இல்லை” (எரே. 10:23). இந்த உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
இயேசு நம்முடைய மேய்ப்பராக இருந்தால் நாம் அவருடைய குரலை அறிந்துகொள்ள வேண்டும்; அது மாத்திரமல்ல, அவருக்கு செவிகொடுக்க வேண்டும். அவரது ஆடுகள் அவர் சத்தத்துக்கு செவி கொடுக்கின்றன என்று மூன்று முறை யோவான் 10ம் அதிகாரத்தில் (வச. 3,16,27) இயேசு கூறியுள்ளார். அது மாத்திரமல்ல, கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களின் குரலையும் அவருடைய ஆடுகள் இனங்கண்டு கொள்வார்கள். பொய்யான போதகர்களின் குரல்களை அடையாளம் கண்டு அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் (வச.5). பாவங்கள் நிறைந்த உலகில் நல்லமேய்ப்பரின் குரல் அவருடைய ஆடுகளை வாழ்விக்கிறது. நல்லமேய்ப்பரின் குரல் என்பது தேவனுடைய வார்த்தையே. தேவனுடைய சத்தியத்தை அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுகிறார் (1 யோவான் 4:1-6). உங்கள் மேய்ப்பரை அறிந்துகொள்ளுங்கள்; அவருடன் நேரத்தை செலவிடுங்கள், சத்தியத்தை தியானியுங்கள். அவருடைய வார்த்தையைப் படிப்பதால் மட்டுமே அவருடைய குரலை நாம் இனம் காணமுடியும் (எபே.4:21).
நல்லமேய்ப்பன் நம்மை போஷித்து, தம்முடைய வார்த்தையின்படி நம்மை வழிநடத்துகிறார். வேதத்தை வாசிப்பதை வழக்கமாகக் கொள்ளாமல் அதனை ஆராய்ந்து அறிந்து, அதன்படி நடக்கவேண்டும். அவருடைய சத்தத்தை அறிந்திருப்பதால் ஆடுகள் அவரைப் பின்பற்றுகின்றன (யோவான் 10:4) “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்; (யாக். 1:22).” நாம் இயேசுவைப் பின்பற்றவேண்டும் என்பதை சங்கீதம் 23 அழகாகக் கூறுகிறது. அவ்வாறு இல்லையெனில் அவர் நமக்காக திட்டமிட்டுள்ள அனைத்தையும் இழக்கநேரிடும். பசுமையான புல்வெளிகள், தெளிவான நீரோடை, மந்தையின் கூட்டுறவு, இரவில் பாதுகாப்பு, நம்மை புத்துணர்ச்சியடையச் செய்யும் அபிஷேகம் மற்றும் இன்னும் பலவற்றை நமக்காக அவர் வைத்துள்ளார்.
அவர் நமது மேய்ப்பராக இருந்தால் அவருக்கு மந்தைகளாகிய நாம் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும். மந்தைகள் பால், கம்பளி, இறைச்சி, ஆட்டுக்குட்டிகள் மற்றும் வருடாந்தர விருந்துகள் இவைகளால் மேய்ப்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பயன்பட்டன. சிறப்பு வழிபாட்டிற்காக பலிகளாகவும் உதவின. யூத மேய்ப்பர் தங்கள் ஆடுகளை நோக்கமின்றி கொல்லவில்லை. ஏனெனில், ஆன்மா மிகவும் மதிப்புடையது. எனவே கர்த்தருக்குக் காணிக்கையாக தங்களிடமிருந்த சிறப்பானதைக் கொடுத்தார்கள். இறைவனின் பிள்ளைகளாகிய நாம் “ஜீவனுள்ள பலிகளாக இருக்கவேண்டும்; (ரோமர்12:1,2),” அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படியவேண்டும். நற்செய்தியை அறிவித்து மற்றவர்களை இரட்சகரிடம் கொண்டு வரவேண்டும். நம்மை அவருடைய ஆடுகளாக மாற்றியதற்கு அவர் செலுத்தின கிரயத்தை கருத்தில் கொண்டு, நம்முடைய அனைத்தையும், சிறந்ததையும் அவருக்குக் கொடுக்கவேண்டும்.
இறுதியாக நாம் அவருடைய ஆடுகளாக இருந்தால் மாத்திரமே, பரலோகத்திற்குச் செல்லமுடியும் என்பதை நாம் நன்கு அறிவோம். “நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்; (சங். 23:6).” “என் பிதாவின் வீட்டில் அநேக மாளிகைகள் உள்ளன. உங்களுக்காக ஓர் இடத்தை ஆயத்தம் பண்ண நான் செல்கிறேன்” (யோவான் 14:1-3) என்று இயேசு சொன்னார். நாம் பரலோகம் சென்றாலும் அங்கும் நமது மேய்ப்பர் நம்மை கவனித்துக்கொள்வார். கர்த்தர் நமது மேய்ப்பர் என்று நமது வாயினால் மாத்திரம் சொல்வது சரியல்ல. நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்ல வேண்டும். அவர் தம்முடைய இரத்தத்தால் அவருடைய ஜனங்களை வாங்கினதால் “என் ஆடுகள்” என்று அழைக்கிறார். நாமும் அவரை நம்புவதால் “நமது மேய்ப்பர்” என்று சொல்லுகிறோம்.
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி.7:17).
(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)