நமது மேய்ப்பர்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம் 23

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங்.23:1)
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார் (வெளி.7:17).

நாம் நன்கு அறிந்த இந்த வார்த்தைகளை தாவீது எழுதியபோது, அவர் தன்னைப் பற்றியும் இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்துள்ள அனைவரையும் பற்றி தைரியமாக அறிக்கை செய்தார்.

நாமும் “கர்த்தர் என் மேய்ப்பர்”; என்ற அறிக்கையை நேர்மையுடன் சொல்ல இயலுமா? நாம் வழிதவறி அலைந்தோம். அவனவன் தன்தன் வழியிலே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார் (ஏசாயா 53:6). ஆனால், இயேசு நம்மைக் கண்டுபிடித்ததால் அவருடைய மந்தையின் ஆடுகளாயிருக்கிறோம். கிறிஸ்துவை நம்புவதற்கு முன்பு, “நாம் காணாமற்போயிருந்த ஆடுகள்.” “நம் அனைவரையும் தமது மந்தையின் ஒரு பகுதியாக மாற்றினார்.” அவர் மாத்திரமே நமது மேய்ப்பர். ஒரு சில கிறிஸ்தவர்களுக்கு தங்களை ‘ஆடுகள்’ என்று அழைப்பது சங்கடமாக உள்ளது. ஏனெனில், ஆடுகள் பாதுகாப்பற்றவை, அவைகளுக்குக் கண்பார்வை குறைவு, எனவே பாதை தெரியாது அலைந்து திரியும் வாய்ப்புகள் அதிகம். எனினும் வேதாகமம் நம்மை குதிரைகளுக்கோ, சிங்கங்களுக்கோ ஒப்பிடவில்லை. ஆடுகள் என்றே அழைக்கிறது. எனவே, நமக்கு ஒரு மேய்ப்பன் தேவை. “கர்த்தாவே, மனிதனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவதும் அவன் அதிகாரத்தில் இல்லை” (எரே. 10:23). இந்த உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

இயேசு நம்முடைய மேய்ப்பராக இருந்தால் நாம் அவருடைய குரலை அறிந்துகொள்ள வேண்டும்; அது மாத்திரமல்ல, அவருக்கு செவிகொடுக்க வேண்டும். அவரது ஆடுகள் அவர் சத்தத்துக்கு செவி கொடுக்கின்றன என்று மூன்று முறை யோவான் 10ம் அதிகாரத்தில் (வச. 3,16,27) இயேசு கூறியுள்ளார். அது மாத்திரமல்ல, கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களின் குரலையும் அவருடைய ஆடுகள் இனங்கண்டு கொள்வார்கள். பொய்யான போதகர்களின் குரல்களை அடையாளம் கண்டு அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் (வச.5). பாவங்கள் நிறைந்த உலகில் நல்லமேய்ப்பரின் குரல் அவருடைய ஆடுகளை வாழ்விக்கிறது. நல்லமேய்ப்பரின் குரல் என்பது தேவனுடைய வார்த்தையே. தேவனுடைய சத்தியத்தை அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுகிறார் (1 யோவான் 4:1-6). உங்கள் மேய்ப்பரை அறிந்துகொள்ளுங்கள்; அவருடன் நேரத்தை செலவிடுங்கள், சத்தியத்தை தியானியுங்கள். அவருடைய வார்த்தையைப் படிப்பதால் மட்டுமே அவருடைய குரலை நாம் இனம் காணமுடியும் (எபே.4:21).

நல்லமேய்ப்பன் நம்மை போஷித்து, தம்முடைய வார்த்தையின்படி நம்மை வழிநடத்துகிறார். வேதத்தை வாசிப்பதை வழக்கமாகக் கொள்ளாமல் அதனை ஆராய்ந்து அறிந்து, அதன்படி நடக்கவேண்டும். அவருடைய சத்தத்தை அறிந்திருப்பதால் ஆடுகள் அவரைப் பின்பற்றுகின்றன (யோவான் 10:4) “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்; (யாக். 1:22).” நாம் இயேசுவைப் பின்பற்றவேண்டும் என்பதை சங்கீதம் 23 அழகாகக் கூறுகிறது. அவ்வாறு இல்லையெனில் அவர் நமக்காக திட்டமிட்டுள்ள அனைத்தையும் இழக்கநேரிடும். பசுமையான புல்வெளிகள், தெளிவான நீரோடை, மந்தையின் கூட்டுறவு, இரவில் பாதுகாப்பு, நம்மை புத்துணர்ச்சியடையச் செய்யும் அபிஷேகம் மற்றும் இன்னும் பலவற்றை நமக்காக அவர் வைத்துள்ளார்.

அவர் நமது மேய்ப்பராக இருந்தால் அவருக்கு மந்தைகளாகிய நாம் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும். மந்தைகள் பால், கம்பளி, இறைச்சி, ஆட்டுக்குட்டிகள் மற்றும் வருடாந்தர விருந்துகள் இவைகளால் மேய்ப்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பயன்பட்டன. சிறப்பு வழிபாட்டிற்காக பலிகளாகவும் உதவின. யூத மேய்ப்பர் தங்கள் ஆடுகளை நோக்கமின்றி கொல்லவில்லை. ஏனெனில், ஆன்மா மிகவும் மதிப்புடையது. எனவே கர்த்தருக்குக் காணிக்கையாக தங்களிடமிருந்த சிறப்பானதைக் கொடுத்தார்கள். இறைவனின் பிள்ளைகளாகிய நாம் “ஜீவனுள்ள பலிகளாக இருக்கவேண்டும்; (ரோமர்12:1,2),” அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படியவேண்டும். நற்செய்தியை அறிவித்து மற்றவர்களை இரட்சகரிடம் கொண்டு வரவேண்டும். நம்மை அவருடைய ஆடுகளாக மாற்றியதற்கு அவர் செலுத்தின கிரயத்தை கருத்தில் கொண்டு, நம்முடைய அனைத்தையும், சிறந்ததையும் அவருக்குக் கொடுக்கவேண்டும்.

இறுதியாக நாம் அவருடைய ஆடுகளாக இருந்தால் மாத்திரமே, பரலோகத்திற்குச் செல்லமுடியும் என்பதை நாம் நன்கு அறிவோம். “நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்; (சங். 23:6).” “என் பிதாவின் வீட்டில் அநேக மாளிகைகள் உள்ளன. உங்களுக்காக ஓர் இடத்தை ஆயத்தம் பண்ண நான் செல்கிறேன்” (யோவான் 14:1-3) என்று இயேசு சொன்னார். நாம் பரலோகம் சென்றாலும் அங்கும் நமது மேய்ப்பர் நம்மை கவனித்துக்கொள்வார். கர்த்தர் நமது மேய்ப்பர் என்று நமது வாயினால் மாத்திரம் சொல்வது சரியல்ல. நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்ல வேண்டும். அவர் தம்முடைய இரத்தத்தால் அவருடைய ஜனங்களை வாங்கினதால் “என் ஆடுகள்” என்று அழைக்கிறார். நாமும் அவரை நம்புவதால் “நமது மேய்ப்பர்” என்று சொல்லுகிறோம்.

சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி.7:17).

(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)

செட்டைகளின் நிழல்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம் 17

உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும். உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும் (சங்கீதம் 17:4). (பொது மொழிபெயர்ப்பு)

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சிறகுகள் கோழியின் செட்டைகளைக் குறிக்காது (மத். 23:37). ஆனால், அவை தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள கேருபீன்களின் செட்டைகளைக் குறிக்கிறது. (யாத். 25:10-22). பிரதான ஆசாரியரைத் தவிர வேறு எவரும் இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையமுடியாது. அவரும் ஆண்டுக்கு ஒருமுறை பாவநிவிர்த்தி நாளில் மட்டுமே பிரவேசிக்கலாம் (லேவி.16). அவர் பலியின் இரத்தத்தை இரு கேருபீன்களின் செட்டைகளுக்கு கீழே கிருபாசனத்தின்மீது தெளிக்கவேண்டும். இந்த உருவகம் வேதாகமத்தில் எட்டுமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. தேவனின் செட்டைகளின் கீழ் இருப்பவர்களுக்கு செய்யும் காரியங்களை சங்கீதம் 17 இல் நாம் வாசிக்கிறோம். அவர் அவர்களை இரட்சிக்கிறார், பராமரிக்கிறார், திருப்திப்படுத்துகிறார்.

அவர் இரட்சிக்கிறார் (சங்கீதம் 17:7).

நாம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறினதால் நியாயத்தீர்ப்புக்கு தகுதியானவர்கள். எனவே நாம் இரட்சிக்கப்படவேண்டும். கேருபீன்களுடன் கூடிய கிருபாசனம், நியாயப்பிரமாணப்பலகைகள் இருந்த பெட்டியை மறைப்பதாக இருந்தது. இஸ்ரவேலரைப் போலவே நாமும் நியாயப் பிரமாணத்தை மீறுகிறோம். “ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்வது இரத்தமே” (லேவி.17:11). ஆசாரியன் கிருபாசனத்தின் மீது இரத்தத்தைத் தெளித்தார். தேவனுடைய பார்வையில் மீறப்பட்ட பிரமாணங்களல்ல, பாவநிவிர்த்திக்கான இரத்தம் மட்டுமே காணப்பட்டது. இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தபோது அவருடைய இரத்தம் நமது இரட்சிப்புக்கான கிரயத்தை செலுத்தியது. “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே.1:7). மோவாபிய பெண்ணான ரூத், உண்மையான ஜீவனுள்ள தேவனாகிய யேகோவாவில் விசுவாசம் வைக்கும்வரை, இஸ்ரவேலின் உடன்படிக்கை ஆசீர்வாதங்களுக்கு வெளியே இருந்தாள் (ரூத்.1:16,17). விளைவு? “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைக்கட்டும்” (2:12) என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டாள்.

அவர் காக்கிறார் (சங்கீதம் 17:8).

“எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” (57:1). தாவீது இதை எழுதினபோது அவருடைய உயிருக்கு ஆபத்து இருந்தது. அவர் ஒரு குகையில் ஒளித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய விசுவாசம் தேவன் மீது இருந்தது. சங்கீதம் 61ம் இதைப் போன்றதொரு ஜெபமாகும்.

“நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வசனம் 4). தேவனுடைய பிள்ளைகளுக்கு மிகப் பாதுகாப்பான இடம் அவருடைய மகா பரிசுத்த ஸ்தலமாகும். உன்னதமானவரின் மறைவில் வசிப்பவர் சர்வவல்லவரின் நிழலில் தங்குவார் (சங்.91:1). இதுவே புதிய ஏற்பாட்டில் “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்“ (யோவான் 15:4) என்று காணப்படுகிறது.

அவர் திருப்திப்படுத்துகிறார் (சங்கீதம் 17:15)

“அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்; (36:7-8). “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்” (63:7). என்னே ஒரு வாழ்க்கை! நிறைவு, மிகுதி, முழுமை, மற்றும் மகிழ்ச்சி, இவை அனைத்தும் தேவனுடைய இதயத்திலிருந்து வருகிறது! “என் ஆத்துமா திருப்தியாகும்” (வச.5). இது தாவீதின் சாட்சியாகும்.

பழைய ஏற்பாட்டில், நியாயப்பிரமாணம் பரிசுத்த ஸ்தானத்துக்கு எல்லை களை நிர்ணயித்தது (யாத் 21:12,19-21), மேலும் பரிசுத்த எல்லைக்குள் ஜனங்கள் வரக்கூடாது என்றும் எச்சரித்தது. ஆனால் தேவனுடைய கிருபையோ பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து எறிகிறது (எபே. 2:14), திரையைக் கிழிக்கிறது (மத்.27:51), மேலும் கர்த்தரிடம் நெருங்கி வர நம்மை அழைக்கிறது. “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார்” (யாக்.4:8).

“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பததற்கு இயேசு வானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், ….தேவனுடைய வீட்டின் மேல்அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும்; விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக் கடவோம் (எபி. 10:19,21-22). நாம் “அவருடைய செட்டைகளின் கீழ் இருப்பதால் நமக்கு இரட்சிப்பு, பாதுகாப்பு மற்றும் நிறைவு ஆகிய அனைத்தும் கிடைக்கின்றன.

“ஆகையால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்பவர்களுக்கு இனி தண்டனைத் தீர்ப்பு கிடையாது” (ரோமர் 8:1)

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

மெளன மொழிகள்!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: யோபு 14: 1-14

அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன் (யோபு 42:3).

யோபுவின் புத்தகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவைகள் தேவன், யோபு மற்றும் யோபுவின் நண்பகளால் பேசப்பட்டவை. யோபு ஒரு முன்மாதிரியான விசுவாசி. ஆனால், “யோபுவை நீர் ஆசீர்வதித்ததால் மாத்திரமே அவர் உம்மை வணங்குகிறான் என்று சாத்தான் தேவனோடு வாதாடினான். அவனது செல்வத்தையும், உடல்நலம், பத்து குழந்தைகளையும் எடுத்துவிட சாத்தானுக்கு தேவன் அனுமதி கொடுத்தார். யோபு நகரத்துக்கு வெளியே சாம்பலில் அமர்ந்து துக்கித்துக்கொண்டிருந்தான். அவனது துயர நிலையைக் கேள்விப்பட்ட அவனது நண்பர்கள் அவனைக் காணவந்தனர். பல நாட்களாக அவர்கள் வாதிட்டு கடவுளின் செயல்களை விளக்கமுயன்றனர். ஆனாலும் அவர்களால் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. இப்புத்தகத்தில் “மூன்று மெளனங்கள்” காணப்படுகின்றன. அவைகளை தியானிப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அனுதாபத்தில் மெளனம் (யோபு 2:11-13)

யோபுவின் நண்பர்கள் நெடுந்தூரம் பயணம் செய்து யோபுவை சந்திக்க வந்தனர். யோபுவின் நிலையைக் கண்டு துயரப்பட்டு சத்தமாய் அழவும், தங்கள் ஆடைகளைக் கிழிக்கவும் தங்கள் தலைகள் மேல் புழுதியை தூற்றிக் கொண்டும், ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் ஒரு வாரம் அவனுடன் அமைதியாக இருந்தனர். “அவனது துக்கம் மிகப்பெரியது என்று அவர்கள் கண்டார்கள்”; (2:13). அவரது துயரத்தைப் போக்கும் வழியறியாமல் அமைதியாய் இருந்தனர். அவர்களிடம் தேற்றும் வார்த்தைகள் இல்லை. ஆறுதலளிக்கும் வார்த்தைகளைவிட, சில நேரங்களில் மெளனமொழி தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்து நல்ல தாக்கத்தை உண்டாக்கும்.

அதிகாரத்தில் மெளனம்

நான்கு நண்பர்களின் அறிவுரைகளை நீங்கள் படிக்கும்பொழுது கர்த்தர் ஏன் தனது தெய்வீக அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களைக் கண்டிக்கவில்லை என ஆச்சரியப்படலாம். ஆனால் தேவன் அமைதியாக இருந்தார். யோபு புத்தகத்தில் 329 வினாக்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொருவரும் தமது கருத்துகளே சரி என எண்ணினர். அவை அனைத்துக்கும் விடைகள் இல்லை. ஆனால் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். சோப்பார் எழுப்பிய கேள்விகள் (11:7,8) அவர்களை உலுக்கியது. தேவனுடைய ஆழமான காரியங்களை உங்களால் ஆராயமுடியுமா? சர்வவல்லவரின் பிரகாரங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அவை வானத்தைவிட உயர்ந்தவை, உங்களால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்திலும் ஆழமானவை. உங்களால் எதுவும் அறியமுடியாது. நமது அறிவு குறைவுள்ளது” (1 கொரி. 13:9) என்று அப். பவுலும் தெளிவாகக் கூறியுள்ளார். பொருத்துக படப்புதிரில் (Zig Zag Puzzle) நமக்கு அனைத்துப் பகுதிகளும் புரியவில்லை என்றால் நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும் புதிரை விடுவிக்கமுடியாது. இவ்விவாதத்தின்பொழுது தேவனின் மெளனம், உண்மையை மறைத்து சொற்களைப் பயன்படுத்தி செயலைப் புறக்கணிக்க மனிதர்களை அனுமதித்தது. வாழ்க்கையின் பல புத்திசாலித்தனமான விவாதங்கள் செயல்களுக்கு மாற்றாக அமையாது. அரசியல்வாதிகளும் தலைவர்களும் தங்கள் வார்த்தையினால் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாது. அவை பிரச்சனைகளை மேலும் மோசமாக்குகின்றன. ‘சொற்கள் யதார்த்தத்தின் மிகப்பெரிய எதிரிகள்’ என்று நாவலாசிரியர் ஜோசப் கான்ராட் என்பவர் எழுதியுள்ளார்.

அறிதலில் மெளனம் (யோபு 42:1-6)

தேவனுடைய சொற்பொழிவிலிருந்து யோபு தன்னைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்டார். “அறிவற்ற சொற்களால் தேவனுடைய ஆலோசனையை இருட்டடிப்பு செய்தார்; (38:2). மேலும் தேவன் தன்னைப் பாதுகாக்க அனுமதி கேட்டார். ஆனால் தேவன் தோன்றியபோது, யோபு அமைதியானார், கையால் வாயைப் பொத்தினார் (40:3-5). இறுதியில் யோபு தனது அறியாமையால் பேசியதை ஒப்புக்கொண்டார். தேவனைப் பார்த்தவுடன் அவர் செய்யக்கூடிய ஒரே விஷயம் மனந்திரும்புவதுதான் . தேவனும் யோபுவை நியாயப்படுத்தினர். தாவீது அரசரும் இதுபோன்ற ஒரு விழிப்புணர்வை அனுபவித்தார் (சங்.131).

இன்றைய உலகில் ஆரவாரங்களும் சத்தங்களும் நிறைந்துள்ளன. இறைவனின் அமைதியான குரலைக் கேட்க விரும்பினால், நாம் மெளன ஊழியத்திற்கு நேரம் ஒதுக்கவேண்டும். நமது வார்த்தைகளை நாம் கவனிப்பது போல நமது மெளனங்களையும் கவனிக்கவேண்டும். இல்லையெனில் நம்மையும் தேவனையும் நாம் அறியமுடியாது.

இதோ கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று: பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று (1இராஜா.19:11-12).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வரையறுக்கப்பட்ட வாழ்நாட்கள்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: யோபு 14: 1-14

அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர் (யோபு 14:5).

தேவன் தமது ஞானத்தால் மனிதனாகிய நம் மீதும் அவர் நம்மை வைத்துள்ள இவ்வுலகின் மீதும் விதித்த வரம்புகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் கடலுக்கு எல்லையை வைத்துள்ளார் (யோபு 38:10-11); சாத்தானையும் மட்டுப்படுத்தியுள்ளார் (1:12;2:6), தேசங்களுக்கு எல்லைகளை வரையறுக்கிறார் (அப்.17:26). ஏதேன் தோட்டத்திலிருந்த ஆதி பெற்றோர்களும் அவர்களுக்குரிய காரியங்களில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களது வரம்புகளை மீறியதால் வெளியேற்றப்பட்டனர் (ஆதி.3). நமது வாய்ப்புகள், வளங்கள் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றில் நீங்களும் நானும் தனித்தனியாக மட்டுப்பட்டவர்கள். தேவனே அவைகளுக்கு வரம்புகளை விதித்துள்ளார். நமது ஆயுசு நாட்கள் எண்ணப்பட்டுள்ளன. அந்த இறுதி நாளைத் தாண்டி நாம் செல்லக்கூடாது. அதை அவசரப்படுத்தினால் அது முட்டாள்தனம்.

சட்டத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமம். ஆனால் வாழ்க்கையில் நாம் அனைவரும் சமமல்ல; மனித வாழ்க்கை தனிப்பட்ட வரம்புகளை உள்ளடக்கியது. ஆனால், வரம்புகள் நமக்கு சுதந்திரத்தை அளிக்கின்றன. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அது பொதுசாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் வாகனம் ஓட்டுவதற்கு எனக்கு சுதந்திரத்தைத் தருகிறது. நானும் எனது மனைவியும் கடவுச்சீட்டு வைத்திருப்பதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததால், நாங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கும். ஊழியம் செய்வதற்கும் உதவி செய்கிறது.

அதுபோல நமது ஜெபத்திற்கு பதில் பெற விரும்பினால் நாம் சில நிபந்தனைகளுக்குட்பட வேண்டும். அவைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால் தேவன் நமது தேவைகளை அருளுவார். இதுவே சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்றாகும். நாம் செய்ய விரும்பும் காரியங்களை செய்வது சுதந்திரம் ஆகாது; தேவன் குறித்திருப்பதை நான் செய்வதே மெய்யான சுதந்திரம்; என்னுடைய கீழ்ப்படிதல் எனக்கு ஆசீர்வாதத்தின் வழியைத் திறக்கும்.

உண்மையான சுதந்திரம் ஐக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஏனெனில் நமது திறமைகளும் உடைமைகளும் வரம்புகளுக்குரியவை. அநேக காரியங்கள் எனக்குத் தெரியாதவை; என்னால் செய்ய இயலாதவை. எனவே மற்றவர்களது உதவி எனக்குத் தேவை. தேவன் ஆதாமின் தனிமை நல்லதல்ல என்று கண்டார். எனவே அவனுக்கு உதவ ஏற்ற துணையை உண்டாக்கினார் (ஆதி.2:18-25). திருமணம், குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்றவை தேவன் நமக்குத் தந்த பரிசுகள். இவ்வுலகில் நம்மால் இயலாதவற்றுக்கு உதவ தேவனுடைய இருதயத்திலிருந்து இவை நமக்குத் தரப்பட்டவையாகும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். குடும்பம், சமுதாயம் மற்றும் சபை ஆகியனவும் ஒத்தவை. நாம் ஒருவரையொருவர் சார்ந்து ஒருவருக்கொருவர் உதவவேண்டும்.

வாழ்க்கை சில வரம்புகளுக்குட்பட்டது, அவை நமக்கு சுதந்திரத்தைத் தந்து ஐக்கியத்தில் முடிகிறது. இந்த ஐக்கியமானது வாழ்வை தீவிரமாகக் கண்ணோக்க வைக்கிறது. நமது வாழ்வு மற்றவர்களுடன் அன்புடன் இணைந்தால் அவர்கள் சிறப்பானவர்களாக மாறுகிறார்கள், அவர்களை இழக்க நாம் விரும்புவதில்லை. “ஆகவே நாங்கள் ஞானமுள்ள இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்.90:12) தேவன் நமது நாட்களைக் குறித்துள்ளார். ஆனால், அது நமக்குத் தெரியாது. நம்முடைய நாட்களையும் காரியங்களையும் அவர் தமது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஆனால், நம்மால் அந்த பக்கங்களைப் பார்க்க இயலாது (சங்.139:15-16).

காரியங்களின் தொகையாவது: நம்முடைய வாழ்க்கை குறுகினது! எனவே நாம் நமது வாழ்வையும் மற்றவர்களின் வாழ்வையும் மதிக்கவேண்டும். ஏனெனில் அவை வரம்புகளுக்குட்பட்டவை. தேவன் நமது வரம்புகளைக் குறித்துள்ளார். குறிப்பாக நமது ஆயுட்காலம்; எனவே தேவன் நமக்குக் கொடுக்கும் மணி நேரங்களையும், நாட்களையும் நாம் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். அதாவது தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்யவேண்டும். “பகற்கால மிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவான் 9:4).

நமக்கு தரப்பட்டுள்ள வரம்புகள் தடைகள் அல்ல; அவை வாய்ப்புகள். நாம் என்ன செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதில் கவனம் செலுத்துவோம். “என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியாது, ஆனால், என்னாலும் ஏதாவது செய்யமுடியும். என்னால் இயலும்வரை தேவன் எனக்கு கொடுத்துள்ள காரியங்களில் உண்மையாக இருக்கவேண்டும்”.

“ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” (எபேசியர் 5:15-16).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

உண்மையுள்ளவர்!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நெகேமியா 9:31-38

எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம் (நெகே.9:33).

இச்சங்கீதம் எருசலேமின் அலங்கம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், கூடாரப்பண்டிகையின்பொழுது யூதர்களால் பாடப்பட்டது. மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு தேவனுக்கு தங்களை அர்ப்பணித்தனர். இது கடவுளின் பல பண்புகளை விவரிக்கிறது. ஆனால் நாம் அவருடைய உண்மைத்துவத்தை வலியுறுத்த விரும்புகிறோம்.

1. உண்மையுள்ள சிருஷ்டிகர் (1 பேதுரு 4:9)

ரோமப்பேரரசில் உள்ள விசுவாசிகளை துன்புறுத்தலுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்ள பேதுரு இக்கடிதத்தை எழுதினார். விரைவில் அக்கினி சோதனை நடக்கவிருந்தது (வச.12-19). எனவே இதுவரையில்லாத வகையில் உண்மையான சிருஷ்டிகராகிய தேவனிடம் தங்களை அவர்கள் ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது. அவர் நம்முடைய பிரபஞ்சத்தை உருவாக்கி பராமரிக்க முடியுமானால், நிச்சயமாக தமது மக்களைக் கவனித்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவரால் முடியும். சூழ்நிலைகள் உங்களை கதிகலங்கச் செய்யும்பொழுது, உண்மையுள்ள நம் சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்; அவர் அனைத்தையும் பொறுப்பெடுத்துக்கொள்ளுவார்.

2. உண்மையுள்ள பிரதான ஆசாரியர் (எபி.2:17-18)

இயேசுகிறிஸ்து இன்று பரலோகத்தில் அரசராகவும், ஆசாரியராகவும் இருக்கிறார். நாம் சோதிக்கப்படும்போதெல்லாம் அவர் நமக்குத் தேவையான கிருபையை அளிக்க வல்லவராய் இருக்கிறார் (14-16). “எனது உணர்வுகள் யாருக்கும் தெரியாது” என்று தேவபிள்ளைகள் ஒருபோதும் கூறக்கூடாது. ஏனெனில் தேவன் நம்மை முழு மையாகப் புரிந்துகொள்பவர். நமது தேவைகளை அவர் அறிவார். நமக்கு அனுதாபம் காட்டுகிறார். அவர் பூமியில் வாழ்ந்தபோது இன்று நாம் அனுபவிக்கும் சோதனைகளையும் பாடுகளையும் அவர் அனுபவித்தார். நாம் நமது எதிரிகளை வெற்றிகொள்ளத் தேவையான கிருபையை அவர் ஒருவரே நமக்கு அருளமுடியும்.

3. உண்மையுள்ள வழக்கறிஞர் (1 யோவான் 1:9-2:1).

நமக்குத் தேவையான கிருபைக்காக நாம் தேவனிடம் திரும்பாவிட்டால் என்ன நடக்கும்? எதிரியின் பேச்சைக்கேட்டு தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனால் என்ன ஆகும்? சாத்தான் நம்மைக் குற்றஞ்சாட்டி நம்முடைய தோல்விகளைக் கூறி நிலைமையை இன்னும் மோசமாக்குவான். ஆனால், இயேசு நம்மைக் கைவிடமாட்டார். நமது பாவங்களுக்காக அவர் மரித்து, தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக அவர் ஏற்கனவே மரித்துவிட்டார்; பிதாவானவர் தம்முடைய பிள்ளைகள் பாவங்களை அறிக்கையிட்டால் அவர்களை மன்னிப்பதற்கு தயை பெருத்தவராய் இருக்கிறார். இந்த அனுபவத்தை விளங்கிக்கொள்வதற்கு சகரியா 3ஆம் அதிகாரத்தை வாசித்து அதை நம்புங்கள்.

4. உண்மையுள்ள சாட்சி (வெளி. 1:5; 3:14).

இயேசு இவ்வுலகில் ஊழியம் செய்தபோது தேவனுடைய வார்த்தையைத் தெளிவாகப் பேசினார். அவருடைய வார்த்தைகள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கண்டதையும், கேட்டதையும் சாட்சியாக அறிவிக்கிறார் என்று யோவான் ஸ்நானன் கூறியுள்ளார். தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், ஏனெனில் தேவன் அவருக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார் (யோவான் 3:32,34; 18:37) தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் அதை நடைமுறைப்படுத்தவும் தூயஆவியானவர் நமக்கு உதவுகிறார். இவ்வாறே நாம் “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் வளர்கிறோம்” (2 பேதுரு 3:18).

5. உண்மையுள்ள வெற்றி வீரர் (வெளி.19:11).

இயேசு சமாதான பிரபு; ஆனால், அவர் அனைத்து எதிரிகளையும் வென்று தமது அரசை நிறுவும் வெற்றி வீரர் (2 தெச.1;: 7-10). இன்று, விசுவாசிகளாகிய நாம், “நம்மில் அன்புகூருகிறவராலே நாம் முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் (ரோமர் 8:37). ஒருநாள் அவர் கெர்ச்சிக்கும் சிங்கம்போல வருவார்; ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்ற பெயரை அணிந்திருப்பார் (வெளி.19:16). நமக்கான போர்களில் இன்று அவர் வெற்றி பெறட்டும்!

கர்த்தர் உண்மையுள்ளவர்; எனவே அவர்மீது நாம் நம்பிக்கை வைப்போம். நம் முடைய சொந்த விசுவாசத்தில் நம்பிக்கை வைப்பதால் நாம் வெற்றியாளராக முடியாது. ஆனால், நம்மோடு என்றும் உண்மையாக இருக்கும் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாலேயே அது நிறைவேறும்; நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்துவது? “விசுவாசத்துக்காகப் போரிடுவது அல்ல, உண்மையான ஒருவரைச் சார்ந்திருப்பதாலேயே நம்முடைய விசுவாசம் வளரும்” என்று சீனாவுக்கான முன்னோடி மிஷனரி ஜே.ஹட்சன் டெய்லர் எழுதியுள்ளார். “நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்” 2 தீமோ.2:13ஐ அவர் மேற்கோள் காட்டுகிறார். உண்மையான அவரையே எப்பொழுதும் சார்ந்திருப்போமாக!

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது (புலம்பல் 3:22-23).

மொழியாக்கம்: திருமதி அகஸ்டா மங்களதுரை

சமநிலை ஊழியம்!

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நெகேமியா 6:1-15

அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந் தேதியிலே முடிந்தது (நெகே.6:15).

ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதன் முடிவு சிறப்பாக அமைய வேண்டும். ஒரு செயலை உருவாக்குவது வேறு; அதை வெற்றியாக முடிப்பது வேறு. நெகேமியாவும் அவரது உடன்வேலையாட்களும் தங்களது காரியத்தை வெற்றிகரமாக முடித்தார்கள். எருசலேமின் அலங்கமும் வாசல்களும் பலப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டது. எதிரிகள் யூதர்களைப் பார்த்து சிரித்தனர். அது இயலாத காரியம் என்று கேலி செய்தனர். ஆனால், அது செவ்வனே நிறைவேறி முடிந்தது. இத்திட்டத்தைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் சமநிலை; நாம் செய்கின்ற ஒவ்வொரு தேவஊழியத்துக்கும் இது தேவை.

முன்னேறுதலும் பின்பற்றுதலும்:

எருசலேம் நகரம் அவமானமான குழப்பத்தில் இருப்பதாகவும், புறஜாதியினரின் கேலிக்குரியதாகவும் இருக்கிறது என்பதை தனது சகோதரன் மூலமாகக் கேட்டவுடன் நெகேமியாவின் இதயம் உடைந்தது (நெகே.1). தேவனுடைய உதவிக்காக அவர் அழுது துக்கித்து ஜெபித்தார். அரசரின் அனுமதியுடன் வசதியான அரண்மனையைவிட்டு அவர் வெளியேறி, எருசலேமுக்குச் சென்று அதன் நிலையை ஆய்வுசெய்தார். தனது பாரத்தை அங்கிருந்த தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டார். 3ஆம் அதிகாரத்தில் தலைவர்கள் என்ற வார்த்தை 8 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகரம் செவ்வனே ஒழுங்கமைக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் நெகேமியா தனது பணிக்குழுக்களை மேலும் சீரமைத்தார். பெரிய ஒரு தரிசனத்தை கவனமான மேற்பார்வையுடன் செயல்படுத்தினால் மற்றவர்களது ஏளனத்தை தவிர்க்கமுடியும். அதிகாரம் 3இல் அனைவரும் வேலைசெய்ய முன்வரவில்லை என்பதையும் வாசிக்கிறோம் (வச.5), மேலும் இப்பணிக்குழுவில் ஆசாரியர்கள் (வச.1) திறமையான கைவினைஞர்கள் (வச.8, 32), மகளிர் மற்றும் எருசலேமுக்கு வெளியே வசித்தவர்களும் இருந்தனர் (வச. 2, 5,7). சிலர் மற்றவர்களைவிட அதிக வேலை செய்தனர் (வச.11,19, 21,24, 27,30).

உருவாக்குதலும் போரிடுதலும் (நெகே.4:18):

கிறிஸ்தவ வாழ்வில் உருவாக்குவதும் எதிர்ப்பைச் சந்திப்பதும் இணைந்தே செல்கின்றன (லூக்கா 14:25:33); நாம் ஆயுதம் ஏந்தவில்லையெனில் கட்டப் பட்டதைப் பாதுகாப்பது இயலாத காரியம். நமது பாதுகாப்பு ஆயுதங்கள் எபேசி யர் 6:10-20இல் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் விசுவாசத்தோடு நாம் அதை அணிந்துகொள்ள வேண்டும். ஆவிக்குரிய வாழ்வில் நமது பேராயுதங்கள் தேவனுடைய வார்த்தையும் ஜெபமுமே ஆகும். நமது செய்கைகளின் பலனை இழந்துபோகாதபடி பாதுகாப்பதில் எச்சரிக்கையாயிருக்கவேண்டும் (2 யோவான் 8). இல்லையெனில் நாம் போராடுவதில் ஈடுபட்டு, உருவாக்குவதை மறந்துவிடுவோம்! தேவனுடைய போராளிகளும் ஊழியக்காரர்களும் சமநிலையைப் பின்பற்றவேண்டும்.

விழித்திருப்பதும் ஜெபிப்பதும் (நெகே.4:9):

ஊழியம் செய்தல், விழித்திருத்தல் (எச்சரிப்புடன் இருத்தல்), ஜெபித்தல் மற்றும் போராடுதல் ஆகியவை எவருக்கும் சவாலாக அமையவேண்டும். “விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற கட்டளை மாற்கு 11:11 மற்றும் 14:38இல் தரப்பட்டுள்ளது. எபேசியர் 6:18 மற்றும் கொலொசேயர் 4: 2-4 ஆகிய பகுதிகளையும் தியானிப்பது நல்லது. நாம் விழித்திருந்து ஊக்கமாக உழைக்கும்பொழுது நம்மை திசைதிருப்பிவிட அநேக கரியங்கள் உண்டு. எனவே அது அதிக கடினமாக உள்ளது. பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் மறு ரூபமலையில் உறங்கிவிட்டனர் (லூக்கா 9:32); கெத்செமனே தோட்டத்திலும் அவர்கள் நித்திரையாயிருந்தனர் (லூக்கா22:45). உறங்கும் விசுவாசிகள் பாதிக்கப்படுவார்கள் அவர்கள் வெற்றியாளர்கள் அல்லர்!

விசுவாசித்தலும் சேவித்தலும் (யாக்கோபு 2:14-26).

நமது ஊழியங்களுக்காக நாம் ஜெபிப்பது மட்டும் போதாது. நாம் உழைக்கவும் வேண்டும். ஆவியில்லாத சரீரம் செத்தது. அதுபோல கிரியை இல்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கும் (யாக்.2:26). நாம் தேவனுடைய திறமைமிக்க ஊழியர்களாக இருப்பதற்கான சமநிலை ஊழியமுறையை நெகேமியாவும் அவருடைய வேலையாட்களும் அழகாக விளக்குகின்றனர். நம்முடைய விசுவாசம் உண்மையானதாக இருந்தால், அது தேவனுடைய ஊழியத்தை செய்வதற்கான தூண்டுதலைத் தரும். நகரத்தின் அலங்கம் திரும்பக் கட்டப்படவேண்டும் என்றும், அதின் கதவுகள் சீர் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படவேண்டும் என்பதற்கான காரியத்தைத் தானே முன்னெடுத்துச் செயல்படுத்தவேண்டும் என்பதை நெகேமியா நன்கு அறிந்திருந்தார். தேவனுடைய அழைப்பு என்றால் அவர் அதனை செயல்படுத்துவார். நாம் அவரை நம்பி கீழ்ப்படியவேண்டும் என்பதே நமது பொறுப்பு ஆகும்.

மகிமையில் பிரவேசித்துள்ள எனது நண்பர் “சமநிலையுள்ள மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று அடிக்கடி சொல்லுவார். அந்த ஆசீர்வாதத்தை நானும் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவு கூருகிறோம் (1 தெச.1:2).

மொழியாக்கம்: திருமதி அகஸ்டா மங்களதுரை