உண்மையுள்ளவர்!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நெகேமியா 9:31-38

எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம் (நெகே.9:33).

இச்சங்கீதம் எருசலேமின் அலங்கம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், கூடாரப்பண்டிகையின்பொழுது யூதர்களால் பாடப்பட்டது. மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு தேவனுக்கு தங்களை அர்ப்பணித்தனர். இது கடவுளின் பல பண்புகளை விவரிக்கிறது. ஆனால் நாம் அவருடைய உண்மைத்துவத்தை வலியுறுத்த விரும்புகிறோம்.

1. உண்மையுள்ள சிருஷ்டிகர் (1 பேதுரு 4:9)

ரோமப்பேரரசில் உள்ள விசுவாசிகளை துன்புறுத்தலுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்ள பேதுரு இக்கடிதத்தை எழுதினார். விரைவில் அக்கினி சோதனை நடக்கவிருந்தது (வச.12-19). எனவே இதுவரையில்லாத வகையில் உண்மையான சிருஷ்டிகராகிய தேவனிடம் தங்களை அவர்கள் ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது. அவர் நம்முடைய பிரபஞ்சத்தை உருவாக்கி பராமரிக்க முடியுமானால், நிச்சயமாக தமது மக்களைக் கவனித்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவரால் முடியும். சூழ்நிலைகள் உங்களை கதிகலங்கச் செய்யும்பொழுது, உண்மையுள்ள நம் சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்; அவர் அனைத்தையும் பொறுப்பெடுத்துக்கொள்ளுவார்.

2. உண்மையுள்ள பிரதான ஆசாரியர் (எபி.2:17-18)

இயேசுகிறிஸ்து இன்று பரலோகத்தில் அரசராகவும், ஆசாரியராகவும் இருக்கிறார். நாம் சோதிக்கப்படும்போதெல்லாம் அவர் நமக்குத் தேவையான கிருபையை அளிக்க வல்லவராய் இருக்கிறார் (14-16). “எனது உணர்வுகள் யாருக்கும் தெரியாது” என்று தேவபிள்ளைகள் ஒருபோதும் கூறக்கூடாது. ஏனெனில் தேவன் நம்மை முழு மையாகப் புரிந்துகொள்பவர். நமது தேவைகளை அவர் அறிவார். நமக்கு அனுதாபம் காட்டுகிறார். அவர் பூமியில் வாழ்ந்தபோது இன்று நாம் அனுபவிக்கும் சோதனைகளையும் பாடுகளையும் அவர் அனுபவித்தார். நாம் நமது எதிரிகளை வெற்றிகொள்ளத் தேவையான கிருபையை அவர் ஒருவரே நமக்கு அருளமுடியும்.

3. உண்மையுள்ள வழக்கறிஞர் (1 யோவான் 1:9-2:1).

நமக்குத் தேவையான கிருபைக்காக நாம் தேவனிடம் திரும்பாவிட்டால் என்ன நடக்கும்? எதிரியின் பேச்சைக்கேட்டு தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனால் என்ன ஆகும்? சாத்தான் நம்மைக் குற்றஞ்சாட்டி நம்முடைய தோல்விகளைக் கூறி நிலைமையை இன்னும் மோசமாக்குவான். ஆனால், இயேசு நம்மைக் கைவிடமாட்டார். நமது பாவங்களுக்காக அவர் மரித்து, தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக அவர் ஏற்கனவே மரித்துவிட்டார்; பிதாவானவர் தம்முடைய பிள்ளைகள் பாவங்களை அறிக்கையிட்டால் அவர்களை மன்னிப்பதற்கு தயை பெருத்தவராய் இருக்கிறார். இந்த அனுபவத்தை விளங்கிக்கொள்வதற்கு சகரியா 3ஆம் அதிகாரத்தை வாசித்து அதை நம்புங்கள்.

4. உண்மையுள்ள சாட்சி (வெளி. 1:5; 3:14).

இயேசு இவ்வுலகில் ஊழியம் செய்தபோது தேவனுடைய வார்த்தையைத் தெளிவாகப் பேசினார். அவருடைய வார்த்தைகள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கண்டதையும், கேட்டதையும் சாட்சியாக அறிவிக்கிறார் என்று யோவான் ஸ்நானன் கூறியுள்ளார். தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், ஏனெனில் தேவன் அவருக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார் (யோவான் 3:32,34; 18:37) தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் அதை நடைமுறைப்படுத்தவும் தூயஆவியானவர் நமக்கு உதவுகிறார். இவ்வாறே நாம் “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் வளர்கிறோம்” (2 பேதுரு 3:18).

5. உண்மையுள்ள வெற்றி வீரர் (வெளி.19:11).

இயேசு சமாதான பிரபு; ஆனால், அவர் அனைத்து எதிரிகளையும் வென்று தமது அரசை நிறுவும் வெற்றி வீரர் (2 தெச.1;: 7-10). இன்று, விசுவாசிகளாகிய நாம், “நம்மில் அன்புகூருகிறவராலே நாம் முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் (ரோமர் 8:37). ஒருநாள் அவர் கெர்ச்சிக்கும் சிங்கம்போல வருவார்; ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்ற பெயரை அணிந்திருப்பார் (வெளி.19:16). நமக்கான போர்களில் இன்று அவர் வெற்றி பெறட்டும்!

கர்த்தர் உண்மையுள்ளவர்; எனவே அவர்மீது நாம் நம்பிக்கை வைப்போம். நம் முடைய சொந்த விசுவாசத்தில் நம்பிக்கை வைப்பதால் நாம் வெற்றியாளராக முடியாது. ஆனால், நம்மோடு என்றும் உண்மையாக இருக்கும் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாலேயே அது நிறைவேறும்; நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்துவது? “விசுவாசத்துக்காகப் போரிடுவது அல்ல, உண்மையான ஒருவரைச் சார்ந்திருப்பதாலேயே நம்முடைய விசுவாசம் வளரும்” என்று சீனாவுக்கான முன்னோடி மிஷனரி ஜே.ஹட்சன் டெய்லர் எழுதியுள்ளார். “நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்” 2 தீமோ.2:13ஐ அவர் மேற்கோள் காட்டுகிறார். உண்மையான அவரையே எப்பொழுதும் சார்ந்திருப்போமாக!

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது (புலம்பல் 3:22-23).

மொழியாக்கம்: திருமதி அகஸ்டா மங்களதுரை