அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2018)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

மோனஹன் குழுவினரது மொழிபெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப் பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேசமயம் லார்சன், பெப்ரீஷியஸ் ஹென்றி பவர் என்போருடைய தமிழ் மொழிபெயர்ப்புகளையும், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப்பார்த்து மோனஹன் குழுவினர் தமது பணியைச் செய்தனர். இவர்கள் தமது மொழி பெயர்ப்பு சாதாரண கிராமவாசிக்கும் விளங்கக்கூடிய வண்ணம் இலகுவான மொழியில் இருக்கவேண்டும் என்பதிலும், கிறிஸ்தவர்கள் அதுவரை காலமும் உபயோகித்துப் பழகிய வார்த்தைகளை மாற்றக்கூடாது என்பதிலும் அதிக அக்கறையுடையவர்களாக இருந்தனர்.

அதேசமயம், முழுமுதற் கடவுளுக்குத் தேவன் எனும் பதத்தைவிட கடவுள் என்ற பதமே சரியானது என்பதனால், அதையே மோனஹன் குழுவினர் உபயோகித்தனர். மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அதற்கெதிராகச் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதனால், இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் இக்குழுவினர் இருந்தனர். புதிய மொழிபெயர்ப்புக்கெதிராகச் சொல்லப்பட்ட கருத்துக்களும், அதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் அளித்த பதில்களும் இந்தியக் கிறிஸ்தவ தேசாபிமானி எனும் பெயர் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையில் வெளியிடப்பட்டன. புதிய மொழிபெயர்ப்பு, 1611ஆம் ஆண்டில் வெளி வந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமம் உபயோகித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிராதமையினால், அது சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதே இம்மொழிபெயர்ப்புக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டாகும். மொழிபெயர்ப்புக் குழுவினர், அக்கிரேக்கப் பிரதியைவிட அதற்கும் முன்பிருந்த கிரேக்கப் பிரதிகளே நம்பகமானவை என்பதைச் சுட்டிக்காட்டி வந்தனர்.

1949 இல், மோனஹன் குழுவினரது பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வெளி வந்தது. 1954 இல் புதிய ஏற்பாடு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. லார்சன் மொழிபெயர்ப்புக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு மோனஹன் மொழிபெயர்ப்புக்கு ஏற்படாத போதிலும், மக்கள் தொடர்ந்தும் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட ஐக்கிய பதிப்பையே உபயோகித்து வந்தனர். மொழிபெயர்ப்புகளுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள் குறைவாகவே இருக்கின்றபோதிலும், மக்கள் தாம் உபயோகித்துப் பழகிய மொழிபெயர்ப்பிலேயே திருப்தியடைந்து விட்டனர். அவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தரும் ஒரு மொழி பெயர்ப்பு அவசியம் என்பதை உணரவில்லை. மோனஹன் குழுவினர் அதிக கவனத்துடன் தமது மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தபோதிலும், அவர்களுடைய வேதாகமத்தில் ஆங்காங்கே சில அச்சுப்பிழைகளும், வேறுவகையான பிழைகளும் இருந்தன. எனவே, அவற்றைத் திருத்துவதற்கு 1961இல் ராஜரீகம் என்பவரது தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடும் சங்கீதங்களும் 1979இல் வெளிவந்தன. இது இலக்கணப் பிழைகள் அற்றதாகவும், எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் சிறிய வசனங்களைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும், வடமொழிச் சொற்கள் நீக்கப்பட்டு தனித் தமிழில் இம்மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதுவும் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆரம்பகால ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் ஒருசில வேதப் பகுதிகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். 1857ஆம் ஆண்டே ரோமன் கத்தோலிக்கச் சபையினரால் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பாண்டிச்சேரியில் வெளிவந்தது. இது, வெளிநாட்டு மிஷன்களுக்கான பாரீஸ் சங்கத்தைச் சேர்ந்த மிஷனரிகளினால் மொழிபெயர்க்கப்பட்டது. 1890இல், இயேசு சங்கத்தைச் சேர்ந்த ஜே.பி.டிரின்சல் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1904ஆம் ஆண்டு பாண்டிச்சேரியிலிருந்த ரோமன் கத்தோலிக்க மிஷன் அச்சகத்தில் பழைய ஏற்பாடு தமிழில் பிரசுரிக்கப்பட்டது. 1960 இல், முழு வேதாகமமும் ஒன்றாக வெளியிடப்பட்டது. 1970 இல், இக்கால மொழி நடைக்கு ஏற்றவிதமாக ரோமன் கத்தோலிக்கச் சபையினர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

1974இல், இந்திய வேதாகமச் சங்கம், ரோம சபையுடன் இணைந்து பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியை ஆரம்பித்தது. 1977இல் இந்திய சுவிசேஷ ஊழிய நூல் நிலையத்தினர் “ஜீவனுள்ள மீட்பின் செய்தி – ஒரு தெளிவுரை” எனும் தலைப்பில் புதிய ஏற்பாட்டின் இலகு மொழிநடையிலான மொழிபெயர்ப்பை வெளியிட்டனர். இது, ஆங்கிலத்தில் வெளிவந்த லிவிங் பைபிள் எனும் வேதாகமத்தின் தமிழாக்கமாகும். இம்மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழர்க்கு ஏற்றதல்ல எனக்கருதிய இலங்கையிலுள்ள லிவிங் பைபிள் ஸ்தாபனத்தினர் லிவிங் பைபிளை மறுபடியுமாக மொழிபெயர்த்து 1981இல் ‘வாழும் இறைவாக்கு’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இக்காலத் தமிழ் நடையில் வேதாகமம் இருந்தாலேயே மக்களால் தேவனுடைய வார்த்தையை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும் எனும் எண்ணத்தில் புதிய மொழி பெயர்ப்புகள் வெளிவந்தாலும், பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே இன்றுவரை உபயோகித்து வருகின்றனர்.

(முற்றிற்று)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

1927-ம் ஆண்டு, லார்சன் குழுவினரால் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. லார்சனின் மொழிபெயர்ப்பு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம், இம்மொழிபெயர்ப்புக்கெதிராக மாதா மாதம் நல்ல சமாரியன் எனும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளேயாகும். இக்கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்ட நியாயங்களைத் தொகுத்து, “புதிய தமிழ் மொழி பெயர்ப்பு அச்சிடாமலும் அதை உபயோகிக்காமலும் விடுவதற்கு ஒரு மனு” எனும் தலைப்பில் ஒரு ஆங்கில நூல் 1939-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில், லார்சன் குழுவினர் வேதாகமத்தின் பல வசனங்களை மாற்றியுள்ளனர்; அதில் பல வசனங்கள் விடப்பட்டுள்ளதோடு பல புதிய வசனங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்றும், மொழிபெயர்ப்புக் குழுவில் கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலித்த ஒருவர் இருக்கிறார் என்றும், இது 1611-ல் வெளிவந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமத்தைத் தழுவி மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், புதிய மொழிபெயர்ப்பில் இந்தியாவில் உபயோகிக்கப்படாத யாழ்ப்பாணத் தமிழ் கலந்திருக்கிறது என்றும், அம் மொழி பெயர்ப்புக்கு அடிப்படையாய் இருந்த சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகள் ஆதாரமற்றவை என்றும் சொல்லப்பட்டிருந்தது. மக்கள், லார்சன் மொழிபெயர்ப்பை வாசித்திராதபடியால், நல்ல சமாரியன் சுட்டிக்காட்டியவை உண்மை என நம்பினர். எனினும், லார்சன் மொழிபெயர்ப்பில் வாக்கிய அமைப்புகளே மாற்றப்பட்டிருக்கின்றன. அவை, வசனத்தின் கருத்தை மாற்றவில்லை என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.

லார்சன் குழுவினரது மொழி பெயர்ப்பில் யாழ்ப்பாணத் தமிழ் உள்ளது எனும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பு, யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனெரிகளின் ஆலோசனைப்படி திருத்தப்பட்டபோதே யாழ்ப்பாணத் தமிழ், வேதாகமத்தில் புகுந்தது. ஆனால், லார்சன் மொழிபெயர்ப்பில் யாழ்ப்பாணத் தமிழ் புகுவதற்கு இடமிருக்கவில்லை. அவரது மொழிபெயர்ப்பு தமக்குப் பழக்கமற்ற நல்ல தமிழ் நடையாய் இருந்தமையே, அது யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்லப்பட்டதற்கான காரணமாகும். கிறிஸ்தவர்கள், தாம் அதுவரை காலமும் உபயோகித்து வந்த மொழிபெயர்ப்பில் பழக்கப்பட்டுவிட்டதால், அதைவிட சிறந்த தமிழை இவ்வாறு குறை கூறினர். மொழிநடை திருத்தப்படும்போது, வசனத்தின் கருத்து மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே நாம் ஒரு மொழிபெயர்ப்பை நிராகரிக்கவேண்டும். லார்சனின் மொழிபெயர்ப்பு வேதவசனங்களின் கருத்தை மாற்றவில்லை. அப்படியிருந்தும், வேதத்தை மாற்றிவிட்டார்கள் எனும் பிரச்சாரம் அம்மொழிபெயர்ப்பைப் பிரபல்யமற்றதாக்கிவிட்டது. 1936-ம் ஆண்டு, லார்சன் குழுவினர் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுடன் சேர்த்து முழுவேதாகமமாக வெளியிடப்பட்டது.

லார்சன் குழுவினரது மொழி பெயர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளாதமைக்கு இன்னுமொரு காரணம், மக்கள் ஹென்றிபவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பில் பழகிப்போனமையேயாகும். லூத்தரன் சபையைத் தவிர மற்ற அனைத்து சபையினரும் இம் மொழி பெயர்ப்பையே உபயோகித்து வந்தமையினால், அதுவே மக்கள் அறிந்திருந்த ஒரே ஒரு மொழிபெயர்ப்பாயிருந்தது. நாளடைவில், வேதாகமம் அதற்கும் முன்பே மொழிபெயர்க்கப்பட்டுத் திருத்தப்பட்டது என்பதை மக்கள் மறந்துபோயினர். தாம் உபயோகித்த வேதாகமத்தின் வசனங்களையே கிறிஸ்தவர்கள் மனனம் செய்து வந்தமையினால், அதன் மொழிநடையை மாற்ற எவரும் விரும்பவில்லை. ஹென்றி பவர் வேதாகமத்தை மொழிபெயர்த்தபோது, அதுவரைகாலமும் மக்கள் உபயோகித்து வந்த மொழிபெயர்ப்பின் வசனநடை மக்களை எவ்வாறு கவர்ந்துள்ளது என்பதை அறிந்து, வேதாகம மொழிநடை திருத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர்ந்திடாத வண்ணம் புதிய மொழிபெயர்ப்பை செய்தமையினால், எல்லோரும் அவருடைய புதிய மொழி பெயர்ப்பை ஏற்றுக்கொண்டனர். லார்சன் குழுவினர் இதைக் கருத்திற்கொள்ளாதமையினால் அவர்களது மொழிபெயர்ப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

லார்சன் மொழிபெயர்ப்பு நிராகரிக்கப் பட்டதன்பின் அதை மறுபடியுமாகத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் எனும் எண்ணம் உருவாகத் தொடங்கியது. நல்ல சமாரியன் குழுவினர், ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பையே தொடர்ந்தும் உபயோகிக்க வேண்டும் எனக்கூறி வந்தனர். எனினும் அம்மொழிபெயர்ப்பு, 16-ம் நூற்றாண்டில் அங்கீகரிக்கப்பட்ட கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தமையினால் திருப்திகரமான மொழிபெயர்ப்பு அல்ல என்பதே வேத பண்டிதர்களின் கருத்தாயிருந்தது. லார்சன் மொழிபெயர்ப்பு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதிருப்பினும் அது, மிகவும் நம்பகமான சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளை ஆதாரமாய்க் கொண்டிருந்தமையினால், அதுவே மூலமொழிக்கு ஏற்றமொழிபெயர்ப்பு என்பதை மூலமொழியை அறிந்திருந்த அனைவரும் நன்கறிந்திருந்தனர். எனவே, நம்பகமான பிரதிகளை அடிப்படையாய்க்கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தை ஏற்றுக்கொள்ளாமல், ஆதாரக் குறைவான மூலப்பிரதியை அடிப்படையாய்க் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தை உபயோகிப்பது நல்லதல்ல என பலர் கருதத் தொடங்கினர். ஆனால், லார்சன் குழுவினரது மொழிபெயர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளாதமையினால், அதை, மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டுமென்று 1939-ல் சென்னை வேதாகமச் சங்கம் தீர்மானித்தது.

லார்சன் மொழிபெயர்ப்பு ஹென்றி பவரின் மொழிநடையில் திருத்தப்பட வேண்டும் என வேதாகமச் சங்கம் கூறியது. ஹென்றி பவரும் இதேவிதமாகவே தனது மொழிபெயர்ப்பைத் திருத்தியிருந்தார். அவருடைய காலத்தில் மக்கள் பெப்ரீஷியசின் மொழிநடையில் பழகிப்போயிருந்தமையினால், ஹென்றிபவர் அம்மொழிநடையை மாற்றவில்லை. புதிய திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பை மக்கள் வாசித்தபோது, தாம் பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பையே வாசிக்கின்றோம் எனும் உணர்வு ஏற்படும் வண்ணம் ஹென்றிபவரின் மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. இதனாலேயே, லார்சன் மொழி பெயர்ப்பு ஹென்றிபவரின் மொழி நடையில் திருத்தப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, லார்சன் மொழிபெயர்ப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெகோவா எனும் பதத்தை, பழைய மொழிபெயர்ப்பிலுள்ளது போன்று கர்த்தர் என்றே மாற்றவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. புதிய மொழி பெயர்ப்புக் குழுவுக்குப் பொறுப்பாக சி.எச்.மோனஹன் என்பவர் நியமிக்கப்பட்டார். அயர்லாந்தைச் சேர்ந்த இவர் 1893 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிஷனரியாக வந்தவராவார். தான் அதுவரைகாலமும் பணியாற்றிய மிஷனிலிருந்து 1940 இல் ஓய்வு பெற்றபோது, இவர் வேதாகம மொழி பெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார்.

மோனஹன் குழுவினரது மொழி பெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப்பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

(தொடரும்)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்து 50 வருடங்களாவதற்குள் அதை மறுபடியும் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்படத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டுவந்த வேதப்பிரதிகளைவிட பழைமையானதும் நம்பகமானதுமான இரு வேதப்பிரதிகள் கண்டுபடிக்கப்பட்டமையேயாகும். கி.பி.4ஆம் நூற்றாண்டில் வல்கேட் என அழைக்கப்படும் ஜெரோமின் லத்தீன் மொழிபெயர்ப்பு வேதாகமம் வெளிவந்தபின், அதையே ரோம சபை உபயோகித்து வந்தது. கி.பி. 1453இல் கான்ஸ்டன்டிநோபிள் எனும் நகரைத் துரக்கியர்கள் கைப்பற்றியபோது, கிரேக்க மொழியை அறிந்திருந்த பல பண்டிதர்கள் ஐரோப்பாவில் குடியேறத் தொடங்கினர்.

இதனால் 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப் பாவில் கிரேக்க மொழியறிவு அதிகரித்தபோது, லத்தீன் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்குமுன் உபயோகத்தில் இருந்த பல கிரேக்க புதிய ஏற்பாட்டுப் பிரதிகளையும் மக்கள் உபயோகிக்கத் தொடங்கினர். எனினும், இவற்றில் பல வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் இருந்தமையினால், இரஸ்மஸ் என்பவர், தனக்கு கிடைத்த 20 கிரேக்க வேதப்பிரதிகளை அடிப்படையாய்க் கொண்டு ஒரு புதிய கிரேக்க வேதப்பிரதியைத் தயாரித்தார். இதுவே, அதன்பின் அங்கீகரிக்கப்பட்ட மூலப்பிரதியாக எல்லா மொழி பெயர்ப்பாளர்களினாலும் கருதப்பட்டது. இதிலிருந்தே 250 வருடங்களாக ஆங்கில உலகை ஆக்கிரமித்திருந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பு இவ்வாங்கில மொழிபெயர்ப்பைத் தழுவிய மொழி பெயர்ப்பாகவே இருந்தது.

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வெளிவந்தபின், வேதாகமத்தின் இரு முக்கியமான கிரேக்க மூலப்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று 1859இல் சீனாய் மலையிலுள்ள புனித கத்தரின் துறவுமடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவடியாகும். அதேசமயம் வத்திக்கான் நூலகத்திலிருந்த வேதச்சுவடியும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் பிரதி பண்ணப்பட்டதாகும். இச்சுவடி 15ஆம் நூற்றாண்டிலிருந்தே அறியப்பட்டிருந்தாலும், 1843 இலேயே இதை உபயோகிப்பதற்கு ரோம சபை அனுமதியளித்தது. இவ்விரு வேதச் சுவடிகளையும் ஆராய்ச்சி செய்த பண்டிதர்கள், அதுவரை காலமும் மூலப்பிரதியாக உபயோகிக்கப்பட்டு வந்த அங்கீகரிக்கப்பட்ட வேதப்பிரதியைவிட, இவையிரண்டும் சிறப்பானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதைக் கண்டுகொண்டனர்.

இதன்பின்னர், 16 ஆம் நூற்றாண்டில் இரஸ்மஸ் தயாரித்த மூலப்பிரதியை ஆராய்ச்சியாளர்கள் நம்பகமானதாகக் கருதவில்லை. இதிலிருந்து, அதுவரை காலமும் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் எல்லாம் பிழையானவை என நாம் எண்ணலாகாது. கிரேக்க மொழி கையெழுத்துப் பிரதிகளில் சில வித்தியாசமான வாக்கிய அமைப்புகள் ஏற்பட்டிருந்தன. இது பிரதிபண்ணியவர்களினால் ஏற்பட்ட தவறாகும். எனவே, கிடைக்கக்கூடிய எல்லா பிரதிகளையும் ஆராய்ந்து பார்த்து எது நம்பகமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும்.

19 ஆம் நூற்றாண்டில், சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதற்கும் முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த கிரேக்க பிரதியை அடிப்படையாய்க்கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் திருத்தப்படவேண்டியது அவசியமாகிறது. ஹென்றி பவரின் திருத்தப்பட்ட வேதாகமம் வெளிவந்த காலத்தில், 1611 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம் ஆங்கில உலகில் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இதனால் அதை அடிப்படையாய்க்கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் வேதாகமம் திருத்தப் பட வேண்டும் எனும் கருத்து உருவானது.

ஹென்றி பவரின் மொழிபெயர்ப்பில் சில பிழைகள் இருப்பதனால் அது திருத்தப்படவேண்டும் என சென்னைக் கிறிஸ்தவப் பிரதிநிதிச் சங்கம் 1915இல் தெரிவித்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட கிரேக்க வேதப் பிரதியை 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த வேதப்பண்டிதர்கள், அதைவிட சீனாய் மற்றும் வத்திக்கான் சுவடிகளே நம்பகமானவை என்பதை அறியத்தந்தமையினால், தற்சமயம் பல கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ந்த நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டதாக தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. அத்தோடு, வேதாகமத்தில் பவுல் போன்றவர்களை அவன் என்று மரியாதைக் குறைவாக அழைக்கக்கூடாது என்றும் இச்சங்கம் தெரிவித்தது. இக்கருத்துக்கள் அனைத்தும் இச்சங்கத்தினால் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

கிறிஸ்தவப் பிரதிநிதிச்சங்கத்தின் கருத்துக்களை ஆராய்ந்த சென்னை வேதாகமச் சங்கம், லூத்தரன் சபை ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளாதமையினால், அவர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேதாகமத்தைத் திருத்த வேண்டுமென 1917இல் தீர்மானித்து அதற்கென ஒரு குழுவை நியமித்தது. 1920இல், புதிய ஏற்பாட்டில் திருத்தப்படவேண்டிய பகுதிகள் எவை என்பதை இக்குழு வேதாகமச்சங்கத்திற்கு எடுத்துக்காட்டியது. எல்.பி.லார்சன் என்பவர் இக்குழுவுக்குத் தலைவராக இருந்தார். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இவர், 1889ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்துவந்தார். 1910இல் பெங்களூரில் புதிதாக ஒரு இறையியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது லார்சன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் மொழியில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்த இவர், 1924இல் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார். 1925ஆம் ஆண்டு மத்தேயு சுவிசேஷமும் பின்னர் மாற்கு, யோவான் சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் வெளியிடப்பட்டன. திருத்தப்பட்ட இப்பதிப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மொழிபெயர்ப்பில் தேவன் என்பதற்குப் பதிலாகக் கடவுள் எனும் வார்த்தையை லார்சன் உபயோகித்திருந்தார். லூத்தரன் சபை தேவன் எனும் பதத்தை விரும்பாதமையினால் கடவுள் எனும் பதம் அவர்களைத் திருப்திப்படுத்தும் என வேதாகமச் சங்கம் எண்ணியது. அதேசமயம், தேவன் என்ற சொல் மூலப்பதத்தின் சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. 1927ஆம் ஆண்டு, லார்சன் குழுவினரால் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது.

(தொடரும்)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(5) ஹென்றி பவர் மொழிபெயர்ப்பு

ஹென்றி பவரின் குழுவினரது மொழிபெயர்ப்புப் பணிகளின் காரணமாக 1863-ல் புதிய ஏற்பாடும் 1868-ல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. ஆரம்பத்தில், யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் இப்புதிய மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் அவர்கள், தமது மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறவில்லை.

மாறாக, புதிய மொழிபெயர்ப்பு இன்னும் திருத்தப்படவேண்டும் என்று தெரிவித்ததோடு, அதற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டினர். அதேசமயம், புதிய மொழிபெயர்ப்பு மூலமொழியைத் தழுவியதாயிருக்கையில் தமது மொழிபெயர்ப்பு தமிழ் நடையில் சிறந்ததாயிருக்கின்றமையினால், இவ்விரண்டையும் ஒருங்கே கொண்ட ஒரு மொழிபெயர்ப்பைத் தயாரிக்க யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் தீர்மானித்தனர். எனினும், அச்சமயம் இன்னுமொரு புதிய மொழிபெயர்ப்பைச் செய்ய சென்னை வேதாகமச் சங்கம் விரும்பாததினால், யாழ்ப்பாண மிஷனெரிகளின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பைத் திருத்த தீர்மானித்தது. மூலமொழியில் உள்ள ஒரு வார்த்தையைப் பலவாறு தமிழில் எழுதக்கூடிய தாயிருப்பினும் அழகிய சொற்களை உபயோகிப்பதே நல்லது என யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் கூறினர்.

1869-ல் இரு நாட்டினது மிஷனரிகளும் ஹென்றி பவரின் வீட்டில் கூடி அவரது மொழிபெயர்ப்பைத் திருத்தினர். மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும் 468 திருத்தங்கள் செய்யப்பட்டன. இதுபோல ஏனைய புத்தகங்களிலும் அநேக திருத்தங்கள் செய்யப்பட்டன. அதுவரை காலமும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பையே உபயோகித்து வந்தமையினால், ஹென்றி பவரின் திருத்தப் பதிப்பு பெப்ரீஷியசினுடைய மொழி நடையையே பின்பற்றியது. எனினும், தேவை ஏற்படும்போது ரேனியஸ் மற்றும் பேர்சிவெல் என்போருடைய மொழிபெயர்ப்புகளில் இருந்தும் சொற்கள் எடுக்கப்பட்டன.

ஹென்றி பவரின் திருத்தப்பட்ட வேதாகமம் 1871-ல் சென்னையில் அச்சிடப்பட்டது. லூத்தரன் சபையைத் தவிர மற்ற அனைத்து சபைகளையும் சேர்ந்தவர்கள் இத்திருத்த மொழி பெயர்ப்புக் குழுவில் இருந்தமையினால், திருத்த மொழிபெயர்ப்பு, ஐக்கியப் பதிப்பு அல்லது ஒன்றிணைப்புப் பதிப்பு என அழைக்கப்படுகின்றது. லூத்தரன் சபையினர் மட்டும், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பை தொடர்ந்து உபயோகித்து வந்தனர்.

ஹென்றி பவரின் தலைமையின் கீழ் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனெரிகளின் ஆலோசனையின்படி திருத்தப்பட்ட ஐக்கியப் பதிப்பு வேதாகமமே இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் உபயோகிக்கும் வேதாகமமாகும். வேதாகமம் முதன்முதலில் 1714-ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. எனினும், நாம் இன்று 1871-ல் வெளி வந்த திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே உபயோகிப்பது அநேக கிறிஸ்தவர்கள் அறியாத ஒரு உண்மையாகும். பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தாம் உபயோகிக்கும் வேதாகமமே முதன் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதென்றும், இதை எவ்வகையிலும் திருத்த முயல்வது தேவனுடைய வார்த்தையை மாற்றுவது எனும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். ஆயினும், நாம் உபயோகிக்கும் வேதாகமம் பல தடவைகள் திருப்பி மொழி பெயர்க்கப்பட்டும் திருத்தப்பட்டும் இருப்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

ஹென்றி பவரின் மொழி பெயர்ப்பிலும், அதைத் திருத்தும் பணியிலும் எல்லா மிஷனரி சங்கங்களையும் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தமையினால், திருத்த மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர் எல்லோரும் அதையே உபயோகிக்கத் தொடங்கினர். மேலும் வேதாகம மொழிபெயர்ப்பு பற்றி அக்காலத்தில் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களை இம்மொழி பெயர்ப்பு திருப்திப்படுத்துவதாய் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இம்மொழி பெயர்ப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ஹென்றி பவர், தமது மொழி பெயர்ப்பு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மொழி பெயர்ப்பாக இருப்பதற்காக, மொழி பெயர்ப்பு பற்றி எவர் எதைச்சொன்னாலும் அதையெல்லாம் கவனித்துக் கேட்டு எல்லோரிடமும் ஆலோசனைகளைப் பெற்று வேதாகமத்தை மொழி பெயர்த்துள்ளார்.

இதனால்தான், முதலில் தான் மொழிபெயர்த்த வேதாகமத்தைத் திருத்தவேண்டும் என யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் கூறியபோது, அவர்களது ஆலோசனையின்படி தனது மொழிபெயர்ப்பைத் திருத்தினார். இம்மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர் வேதாகமச் சங்கம் வேறு எந்த ஒரு மொழிபெயர்ப்பையும் அச்சிடாததினால், நாளடைவில் இதுமட்டுமே தமிழ் மொழியில் இருக்கும் வேதாகமம் எனும் கருத்து தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.

(தொடரும்)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(4) பேர்சிவெல் மொழிபெயர்ப்பு

பீட்டர் பேர்சிவெல் மெதடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவராவார்.  இவர்களுக்கு வேதாகம மொழிபெயர்ப்பில் உதவி செய்தவர் தமிழ்ப்புலவர் ஆறுமுக நாவலராவார். உண்மையில், பேர்சிவெல் மொழிபெயர்ப்பின் தமிழ் நடை ஆறுமுக நாவலருடையதாகவே இருந்தது. இம்மொழிபெயர்ப்பின் வேலைகள் 1846 இல் ஆரம்பமானது.

யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் தமது மொழிபெயர்ப்பின் பிரதிகளை சென்னைக்கு அனுப்பியபோது, அது மூலமொழியின் சரியான மொழிபெயர்ப்பு அல்ல என்றும், யாழ்ப்பாணத்தமிழ் இந்தியாவுக்கு ஒத்துவராது என்றும் சென்னை வேதாகமச் சங்கம் தெரிவித்தது. எனினும், இக் குற்றச்சாட்டுகளை யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆறுமுகநாவலருடைய தமிழ்நடை உயர்வானதாக இருப்பதினாலேயே சென்னை வேதாகமச் சங்கம் இவ்வாறு கூறுவதாக அவர்கள் வாதிட்டனர். 1848 இல் யாழ்ப்பாண வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. இம் மொழிபெயர்ப்பிலேயே கடவுளுக்குத் ‘தேவன்’ எனும் பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேனியஸ் இப்பதத்தை ஒருசில இடங்களில் பயன்படுத்தியிருந்தபோதிலும், அவர் பராபரன் எனக் குறிப்பிட்டிருந்த இடங்களிலெல்லாம் பேர்சிவெல் குழுவினர் தேவன் எனும் பதத்தை உபயோகித்தனர். தேவன் எனும் பதம் அக்காலத்தில் பன்மையில் இந்து சமயத்தில் உள்ள தெய்வங்களைக் குறிக்கும் பதமாயிருந்தது. ஒருமையில், அத்தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வத்தைக் குறிக்கும். எனினும், இந்து சமயத்தில் முழுமுதற் கடவுள்களான பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் தெய்வங்களுக்குத் தேவன் எனும் பதம் அக்காலத்தில் உபயோகிக்கப்படவேயில்லை. முழுமுதற்கடவுள்களுக்குக் கீழானவர்களாயுள்ள தேவர்களே தேவன் என அழைக்கப்பட்டனர். இதனால், கிறிஸ்தவ கடவுளை இப்பதத்தால் அழைப்பது முறையல்ல என்று கருதப்படுகின்றது. ஆறுமுக நாவலரே தந்திரமாக இச்சொல்லை வேதாகமத்தில் புகுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு சிறப்பான மொழிநடையில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த போதிலும், தென்னிந்தியாவிலிருந்த மிஷனரிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதில் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்றும், அது  தனி ஒரு மனிதனுடைய மொழிபெயர்ப்புப்போலத் தென்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினர். இம்மொழி பெயர்ப்பு, சாதாரண பாமர மக்களால் விளங்கிக் கொள்ளப்பட முடியாத மொழிநடையில் உள்ளதென்றும் கருதப்பட்டது. இதனால் சென்னை வேதாகமச் சங்கம் இம்மொழி பெயர்ப்பை நிராகரித்துவிட்டது.

(5) ஹென்றி பவர் மொழிபெயர்ப்பு

யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப் படாதமையினால், சகல சபைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமான ஒரு புதிய மொழிபெயர்ப்பைத் தயாரிக்க வேண்டுமென சென்னை வேதாகமச் சங்கம் 1853 இல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அக்காலத்தில், அதுவரை காலமும் மொழிபெயர்க்கப்பட்டிருந்த 4 மொழிபெயர்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்தன. ஒவ்வொரு மிஷன் சங்கமும் தமக்கு விருப்பமான மொழிபெயர்ப்பை உபயோகித்து வந்தது. அந்நிலை மாறி, அனைவரும் ஒரு மொழிபெயர்ப்பை உபயோகிக்க வேண்டும் என்பதே வேதாகமச் சங்கத்தினது தீர்மானத்திற்கான காரணமாயிருந்தது.

இதனால், 1857இல், ஹென்றி பவர் என்பவருடைய தலைமையில் ஒரு புதிய வேதாகம மொழிபெயர்ப்புக் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில், தமிழ்நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றும் அனைத்து மிஷனரி சங்கங்களினது பிரதிநிதிகளும் இருக்க வேண்டும் என கூறப்பட்டபோதிலும், தமது மொழிபெயர்ப்பு நிராகரிக்கப் பட்டமையினால், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மிஷனரிகள் இம்மொழி பெயர்ப்புக்குழுவில் இருக்கவிரும்பவில்லை.

புதிய வேதாகம மொழிபெயர்ப்புக் குழுவுக்குத் தலைவராக இருந்த ஹென்றி பவர் என்பவர், 1833ஆம் ஆண்டிலிருந்து லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பில் இந்தியாவில் பணியாற்றியவராவார். இவர், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்துஸ்தானி எனும் மொழிகளை அறிந்திருந்தார். இவர் தமிழில் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் 1858ஆம் ஆண்டு வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார். இவரது மொழி பெயர்ப்புக் குழுவில் இருந்தவர்கள், மூலமொழி வேதாகமங்களையும், ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த வேதாகமங்களையும் ஆராய்ந்து பார்த்து ஒரு புதிய மொழி பெயர்ப்பைத் தயாரித்தனர். இதன் பிரதிகள் பலரிடம் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டு, அவர்களது விமர்சனங்களைக் கருத்திற்கொண்டு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டபோதிலும், இம்மொழிபெயர்ப்பு 1611ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வெளிவந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமத்தையே அடிப்படையாய்க் கொண்டிருந்தது.

ஹென்றி பவரின் குழுவினரது மொழி பெயர்ப்புப்பணிகளின் காரணமாக 1863 இல் புதிய ஏற்பாடும் 1868 இல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. ஆரம்பத்தில், யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் இப்புதிய மொழிபெயர்ப்பை ஏற்கவில்லை. அதேசமயம் அவர்கள், தமது மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறவில்லை.

(தொடரும்)

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (மார்ச்-ஏப்ரல் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(3) ரேனியஸ் மொழிபெயர்ப்பு

தமிழ் மொழியில் சிறப்பான முறையில் பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த ரேனியஸ், பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் முதன் முதலில் பூமி சாஸ்திரப் பாடப்புத்தகம் இவராலேயே எழுதப்பட்டது. இவர் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும், வசனத்தமிழை முதன் முதலாகச் சந்தி பிரித்து எளிமையாக்கியவரும் இவரேயாவார். சுவிசேஷம் அறிவிப்பதிலும், பாடசாலைகளையும் சபைகளையும் ஸ்தாபிக்கும் முயற்சியிலும் இவரது பணி மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் திருநெல்வேலியில் 300 சபைகளை ஸ்தா பித்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பின் மொழி நடையைத் திருத்தினார். இவரால் திருத்தப்பட்ட சுவிசேஷங்களும் அப்போஸ் தலர் நடபடிகளும் 1827இலும், புதிய ஏற்பாடு முழுவதும் 1833இலும் வெளியிடப்பட்டது. 1840இல் இவரது புதிய ஏற்பாடும் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாடும் ஒன்றாக வெளியிடப்பட்டது.

பெப்ரீஷியசைப் போலவே ரேனியசும் கடவுளுக்குப் பராபரன் எனும் பதத்தை உபயோகித்துள்ள போதிலும், அவர் சில இடங்களில், ‘தேவன்’ எனும் பதத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பிலிருந்த சில இலக்கணப் பிழைகளையும் ரேனியஸ் திருத்தியுள்ளார். குறிப்பாக, அஃறிணைப் பன்மை எழுவாய்க்கு, ஒருமைப் பயனிலையே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் உபயோகிக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், சாதாரண பேச்சு வழக்கில் இவ்விதம் பன்மை எழுவாய், ஒருமைப் பயனிலையுடன் உபயோகிக்கப் பட்டமையேயாகும். உதாரணமாக, விதைப்பவனுடைய உவமையில் விதைகள் விழுந்தது, பறவைகள் பட்சித்தது, அவை முளைத்தது, என்றே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டிருந்தது. ரேனியஸ் இவ்வாக்கியத்தை இலக்கணமுறைப்படி, விதைகள் விழுந்தன, பறவைகள் பட்சித்தன, அவை முளைத்தன என திருத்தினார். பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் இதைப்போன்ற பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பிலிருந்த சில வார்த்தைகளையும் ரேனியஸ் மாற்றியுள்ளார். உதாரணமாக, இந்த லோகம் என்பதை இவ்வுலகம் என்றும், வெளிச்சம் என்பதை ஒளி என்றும், வானராச்சியம் என்பதை பரலோகராச்சியம் என்றும், பாஷா என்பதை பஸ்கா என்றும், சிநேகம் என்பதை அன்பு என்றும் ரேனியஸ் மாற்றினார். மேலும் 1கொரிந்தியர்13 இல் ஓசைதரும் கிண்கிணி என்றிருந்ததை ஓசையிடுகிற கைத்தாளம் என்றும், அப்போஸ்தலர் 1:3இல் உயிரோடிருக்கிறவராகப் பிரசன்னப்படுத்தினார் என்பதை, உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார் என்றும், 2தீமோத்தேயு 4:7இல், விசுவாசத்தைக் கைக்கொண்டேன் என்றிருந்ததை விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்றும், எபிரேயர் 12:1 இல், சாட்சிகளின் இத்தனை பெரிய மேகம் என்றிருந்ததை மேகம் போல் இத்தனை திரளான சாட்சிகள் என்றும் திருத்தினார். இதிலிருந்து ரேனியசின் திருத்தங்கள் எத்தகையவை என்பதை அறியக்கூடியதாயுள்ளது.

இதைப்போன்று, பெப்ரீஷியசின் மொழி நடையில் ரேனியஸ் பல திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையிலான புத்தகங்களையும், சங்கீதங்கள், ஏசாயா, தானியேல் எனும் புத்தகங்களையும் திருத்தியுள்ளார். ரேனியஸ் மொழிபெயர்ப்பு இலக்கணத்தில் ஆர்வமிக்கவர்களாய் இருந்தவர்களினாலேயே பாராட்டப்பட்டது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவருடைய மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

(4) பேர்சிவெல் மொழிபெயர்ப்பு

ரேனியசினுடைய மொழி பெயர்ப்பு வெளிவந்த பின்னர், சில சபைகள் அம்மொழிபெயர்ப்பின் வசனநடை சிறந்ததெனக் கருதி அதை உபயோகிக்கத் தொடங்கினாலும் பெரும்பாலான சபைகள், அது மூல மொழியை விட்டு விலகிச்சென்றுள்ளது எனக் கூறி அம்மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அச்சபைகள், பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பையே தொடர்ந்தும் உபயோகித்துவந்த போதிலும், அதன் வசன நடை அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இவ்விரு மொழிபெயர்ப்புகளிலும் உள்ள குறைகள் நீக்கப்பட்டதாகவும், அதேசமயம் இரண்டினதும் சிறப்பம்சங்கள் ஒருங்கே காணப்படுவதுமான ஒரு புதிய மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் அனைத்து சபையினராலும் உணரப்பட்டது. அச் சமயம், இத்தகைய ஒரு மொழி பெயர்ப்பைத் தாம் செய்து தருவதாக வட இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிகள் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவித்தனர். இதனால் யாழ்ப்பாணத்தில் வேதாகம மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்வதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டது. பீட்டர் பேர்சிவெல் எனும் மிஷனரி இக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பீட்டர் பேர்சிவெல் மெதடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவராவார். 1826 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்த இவர் தயாரித்த ஆங்கில தமிழ் அகராதி மிகவும் பிரபல்யமானது. யாழ்ப்பாண மொழிபெயர்ப்புக் குழுவில் மெதடிஸ்ட் மற்றும் அமெரிக்கன் மிஷன்களைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகித்தனர். இவர்களுக்கு வேதாகம மொழிபெயர்ப்பில் உதவி செய்தவர் தமிழ்ப்புலவர் ஆறுமுகநாவலராவார்.

(தொடரும்)