வேதாகமத்தில் எந்தெந்த நூல்கள் சேர்க்கப்படவேண்டும் என்று தீர்மானித்து. ஐந்து அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன.
1. எழுதியவர்
புத்தகத்தை அல்லது நிருபத்தை எழுதியவர் யார்? அது ஒரு அப்போஸ்தலனா? புகழ்பெற்ற சபை உறுப்பினரா? அல்லது அறியப்படாத ஒருவரா?
2. சபைமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
முதல் நூற்றாண்டுத் திருச்சபை மக்கள் இந்த நூல் அல்லது நிருபம் குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார்கள்? அதைச் சரியானது என்று ஏற்றுக்கொண்டார்களா? அது அவர்களது அனுபவங்களோடு ஒத்துப்போனதா?
3. சபைக்குருக்கள் இந்தப் புத்தகங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்களா?
இரண்டாம் நூற்றாண்டில் சபைக் குருக்கள் இப்புத்தகங்களை ஏற்றுக்கொண்டார்களா? இந்தக் குருக்கள் இயேசுவின் சீஷர்களின் சீஷர்கள். உதாரணமாக, போலிகார்ப் என்பவர் அப்போஸ்தலனாகிய யோவானின் சீஷனாய் இருந்தவர். இந்த நூல்களைக் குறித்துப் பரிசீலிக்கும்போது “இந்தப் புத்தகத்தைக் குறித்துப் போலிகார்ப் என்ன நினைத்தார்?” என்று கேட்பார்கள்.
4. புத்தகத்தின் பொருளடக்கம்
அந்தப் புத்தகம் அல்லது நிருபம் எதைப் பற்றியது? அதில் கூறப்பட்டிருக்கும் கொள்கைகள் நல்லவைகளா? சரியான வைகளா? ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளா? வாழ்க்கைக்குப் பொருத்தமானவைகளா? பின்பற்றக் கூடியவைகளா? இது வேறுபுத்தகங்களின் கருத்துக்களோடு முரண்பட்டதா? இப்புத்தகத்தில் உள்ள கதைகள் பண்பற்றதாகவும், கற்பனையானதாகவும் இருக்கின்றனவா?
5. தனிநபர் பக்திவிருத்திக்கேதுவானதா?
சபைமக்களுக்கும், தனிநபர்களுக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய, அகத்தூண்டுதல் தரக்கூடிய, பக்திவிருத்தி ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கிறதா?
இந்த நெறிமுறைகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சரியாய் இருந்தால் போதாது. எல்லா அம்சங்களும் சரியாய் பொருந்தியிருக்க வேண்டும்.
புத்தகத்தின் காலம் அது அதிகார பூர்வமானது என்று சான்றளித்து விடுவதில்லை. பல பழைய புத்தகங்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக எண்ணாகமம் 21:5இல் கர்த்தருடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது என்று உள்ளது.
யோசுவா 10:13 இல் இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது என்று உள்ளது. இந்தப் புத்தகங்கள் வேதாகமத்தில் சேர்க்கப்படத் தகுதியானவை என்று காணப்படவில்லை என்று தெரிகிறது.
வேதாகமப் புத்தகங்கள் எழுதப்பட்ட மொழி அடிப்படையில் புத்தகங்கள் தெரிந்தெடுக்கப்படவில்லை.
தோபித்து என்னும் புத்தகம் எபிரெயமொழியில் எழுதப்பட்டது. ஆனால் அது பழையஏற்பாட்டு நூல்களுடன் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதே வேளையில் தானியேல் புத்தகத்தின் ஒரு பகுதி அரமேய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அது பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
தள்ளுபடியாகம நூல்கள்
சில வேதாகமங்களில் பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையே 14 நூல்கள் இருப்பதைக் காணலாம். இவற்றைத்தான் தள்ளுபடியாகம நூல்கள் (APOCRYPHA) என்கிறோம். இந்த நூல்களில் பல முக்கியமான தகவல்கள் உள்ளன. எனினும் அவை பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்படவில்லை என்று கணிக்கப்பட்டு, வேதாகம பரிசுத்த நூல்களுடன் சேர்க்கப்படவில்லை. ஏன்? பெரும்பாலும் அவற்றின் பொருளடக்கமே அதற்குக் காரணம்.
தோபித்து ஒரு தள்ளுபடியாகம நூல். இது தோபித்து என்னும் ஒரு தெய்வபக்தியுள்ள யூதனின் கதை. ஒருநாள் தற்செயலாக ஒரு சிட்டுக் குருவியின் எச்சம் இவனுடைய கண்ணில் பட்டு, கண் பார்வை போய்விட்டது. பின்னர் ரபேல் என்னும் தேவதூதன் வந்து, மீனின் இருதயம், ஈரல், பித்தப்பை இவற்றினால் ஒரு கஷாயம் தயாரித்து தோபித்துவின் கண்களில் விட்டான். உடனே அவனுக்கு கண்பார்வை கிடைத்துவிட்டது. பரிசுத்த நூல்களைத் தெரிந்தெடுத்த மக்களுக்கு இது ஒரு நீண்ட கதையாகத் தெரிந்தது. இதைச் சேர்த்துக்கொள்ளவில்லை.
இன்னொரு தள்ளுபடியாகம நூலின் பெயர் பேலும், பேயும் என்பது. இதில் இரண்டு கதைகள் உள்ளன. இதில் உள்ள இரண்டாவது கதையில் வரும் பேய், பாபிலோனியரால் கடவுளாக நினைத்துத் தொழப்பட்டது. இந்தக் கதையில் இதைப் பணிந்துகொள்ளும் படியாகத் தானியேல் அழைக்கப்பட்டான். தானியேல் அதை வணங்குவதற்குப் பதிலாக அதற்கு கீல், முடி, கொழுப்பு கலந்த கலவையைச் சாப்பிடக் கொடுத்தான். அது அதைச் சாப்பிட்டு அதன் வயிற்றின் உள் சென்றதுமே அது வெடித்துச் சிதறியது. இந்தப் புத்தகம் பரிசுத்த நூல்களுடன் சேர்க்கப்படாததன் காரணம் புரிகிறதல்லவா?
தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட பரிசுத்த நூல்களோடு இந்தத் தள்ளுபடியாக நூல்கள் சேர்க்கப்படாததற்குத் தகுந்த காரணங்கள் உண்டு. பரிசேயர்கள் இந்த நூல்களை பழைய ஏற்பாட்டுடன் சேர்க்கவில்லை. இந்த நூல்களிலிருந்து எந்த மேற்கோளும் எடுத்துக்காட்டப்படவும் இல்லை. யூதர்களோ, புதிய ஏற்பாட்டு நூலாசிரியர்களோ, இந்த தள்ளுபடியாகம நூல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் இல்லை. தாங்கள் எழுதும்போது இவற்றிலிருந்து எந்த மேற்கோளையும் எடுத்துக் காட்டவும் இல்லை. அதற்கு அவை தகுதியானவை அல்ல.
யூத வரலாற்றாசிரியரான ஜோச பாஷீம் இந்தநூல்களைத் தள்ளிவிட்டார். புகழ்பெற்ற யூத தத்துவ ஞானியாகிய பைலோ என்பவர் இந்த நூல்களை அங்கீகரிக்கவே இல்லை. ஆதித்திருச்சபையின் சபைக்குருக்களில் ஒருவரும் இந்த நூல்களில் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.