ஜெபக்குறிப்பு: 2026 மே 29 வெள்ளி

பொருளாதாரத்திலே வறுமைகோட்டிற்கும் கீழ் நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அன்றாட வேலை செய்து தினக்கூலி பெறுபவர்களுக்கு தினசரி வேலைகள் கிடைப்பதற்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் உள்ள பெரியவர்கள், அனாதைகளாக்கப்பட்டு சிறுவர் காப்பகங்களில் இருக்கும் பிள்ளைகள் யாவரையும் கர்த்தர் போஷித்து ஆதரிக்க கருத்தாய் ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 மே 28 வியாழன்

அப்படியிருக்க நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் (1கொரி.3:7) சத்தியவசனம் வெப்சைட், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப் போல நூறுமடங்கு பலனை கர்த்தர் காணச்செய்வதற்கும் ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 மே 27 புதன்

சத்தியவசன இருமாத வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் அதிக ஆசீர்வாதமாக இருப்பதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கிருபைவரங்களால் நிரப்பி இன்னும் வல்லமையாய் கர்த்தர் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.

ஜெபக்குறிப்பு: 2026 மே 26 செவ்வாய்

சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி உனக்குக் கட்டளையிடுவாராக (1சாமு.1:17) கர்த்தருடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டு நிந்தை நீங்கப்பெற்ற அன்னாளைப் போல குழந்தைப் பாக்கியத்திற்காய் காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளுக்கும் கர்த்தர் வாக்குப் பண்ணினபடியே குழந்தைச் செல்வத்தை அருளிச்செய்ய ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 மே 25 திங்கள்

பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள் (எபிரெயர் 13:9) நமது விசுவாச வாழ்க்கையைப் பெலப்படுத்துகிற, சத்தியத்தை சத்தியமாய் போதிக்கிற ஆரோக்கியமான உபதேசத்தை கேட்டு கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கவும், வேற்று உபதேசங்களினால் விழுந்து போகாதபடி எச்சரிக்கையாயிருக்க நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 மே 24 ஞாயிறு

என் ஓய்வு நாட்களைப் பரிசுத்தமாக்குங்கள் (எசேக்.20:20) பரிசுத்தமுள்ள தேவனை உயிர்த்தெழுந்த நாளில் விடுதலையோடு ஆராதிக்கும் வாய்ப்புகளை பெற்றிருக்கும் நாம், சுவிசேஷத்தினிமித்தமாய் அவமானங்களையும் நிந்தைகளையும் அனுபவிக்கும் ஊழியர்களை கர்த்தர் தமது வல்லமையுள்ள புயத்தினாலே பாதுகாத்து நடத்த வேண்டுதல் செய்வோம்.