அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்
தமிழ் வேதாகமத்தின் வரலாறு
(4) பேர்சிவெல் மொழிபெயர்ப்பு
பீட்டர் பேர்சிவெல் மெதடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவராவார். இவர்களுக்கு வேதாகம மொழிபெயர்ப்பில் உதவி செய்தவர் தமிழ்ப்புலவர் ஆறுமுக நாவலராவார். உண்மையில், பேர்சிவெல் மொழிபெயர்ப்பின் தமிழ் நடை ஆறுமுக நாவலருடையதாகவே இருந்தது. இம்மொழிபெயர்ப்பின் வேலைகள் 1846 இல் ஆரம்பமானது.
யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் தமது மொழிபெயர்ப்பின் பிரதிகளை சென்னைக்கு அனுப்பியபோது, அது மூலமொழியின் சரியான மொழிபெயர்ப்பு அல்ல என்றும், யாழ்ப்பாணத்தமிழ் இந்தியாவுக்கு ஒத்துவராது என்றும் சென்னை வேதாகமச் சங்கம் தெரிவித்தது. எனினும், இக் குற்றச்சாட்டுகளை யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆறுமுகநாவலருடைய தமிழ்நடை உயர்வானதாக இருப்பதினாலேயே சென்னை வேதாகமச் சங்கம் இவ்வாறு கூறுவதாக அவர்கள் வாதிட்டனர். 1848 இல் யாழ்ப்பாண வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. இம் மொழிபெயர்ப்பிலேயே கடவுளுக்குத் ‘தேவன்’ எனும் பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேனியஸ் இப்பதத்தை ஒருசில இடங்களில் பயன்படுத்தியிருந்தபோதிலும், அவர் பராபரன் எனக் குறிப்பிட்டிருந்த இடங்களிலெல்லாம் பேர்சிவெல் குழுவினர் தேவன் எனும் பதத்தை உபயோகித்தனர். தேவன் எனும் பதம் அக்காலத்தில் பன்மையில் இந்து சமயத்தில் உள்ள தெய்வங்களைக் குறிக்கும் பதமாயிருந்தது. ஒருமையில், அத்தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வத்தைக் குறிக்கும். எனினும், இந்து சமயத்தில் முழுமுதற் கடவுள்களான பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் தெய்வங்களுக்குத் தேவன் எனும் பதம் அக்காலத்தில் உபயோகிக்கப்படவேயில்லை. முழுமுதற்கடவுள்களுக்குக் கீழானவர்களாயுள்ள தேவர்களே தேவன் என அழைக்கப்பட்டனர். இதனால், கிறிஸ்தவ கடவுளை இப்பதத்தால் அழைப்பது முறையல்ல என்று கருதப்படுகின்றது. ஆறுமுக நாவலரே தந்திரமாக இச்சொல்லை வேதாகமத்தில் புகுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு சிறப்பான மொழிநடையில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த போதிலும், தென்னிந்தியாவிலிருந்த மிஷனரிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதில் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்றும், அது தனி ஒரு மனிதனுடைய மொழிபெயர்ப்புப்போலத் தென்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினர். இம்மொழி பெயர்ப்பு, சாதாரண பாமர மக்களால் விளங்கிக் கொள்ளப்பட முடியாத மொழிநடையில் உள்ளதென்றும் கருதப்பட்டது. இதனால் சென்னை வேதாகமச் சங்கம் இம்மொழி பெயர்ப்பை நிராகரித்துவிட்டது.
(5) ஹென்றி பவர் மொழிபெயர்ப்பு
யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப் படாதமையினால், சகல சபைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமான ஒரு புதிய மொழிபெயர்ப்பைத் தயாரிக்க வேண்டுமென சென்னை வேதாகமச் சங்கம் 1853 இல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அக்காலத்தில், அதுவரை காலமும் மொழிபெயர்க்கப்பட்டிருந்த 4 மொழிபெயர்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்தன. ஒவ்வொரு மிஷன் சங்கமும் தமக்கு விருப்பமான மொழிபெயர்ப்பை உபயோகித்து வந்தது. அந்நிலை மாறி, அனைவரும் ஒரு மொழிபெயர்ப்பை உபயோகிக்க வேண்டும் என்பதே வேதாகமச் சங்கத்தினது தீர்மானத்திற்கான காரணமாயிருந்தது.
இதனால், 1857இல், ஹென்றி பவர் என்பவருடைய தலைமையில் ஒரு புதிய வேதாகம மொழிபெயர்ப்புக் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில், தமிழ்நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றும் அனைத்து மிஷனரி சங்கங்களினது பிரதிநிதிகளும் இருக்க வேண்டும் என கூறப்பட்டபோதிலும், தமது மொழிபெயர்ப்பு நிராகரிக்கப் பட்டமையினால், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மிஷனரிகள் இம்மொழி பெயர்ப்புக்குழுவில் இருக்கவிரும்பவில்லை.
புதிய வேதாகம மொழிபெயர்ப்புக் குழுவுக்குத் தலைவராக இருந்த ஹென்றி பவர் என்பவர், 1833ஆம் ஆண்டிலிருந்து லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பில் இந்தியாவில் பணியாற்றியவராவார். இவர், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்துஸ்தானி எனும் மொழிகளை அறிந்திருந்தார். இவர் தமிழில் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் 1858ஆம் ஆண்டு வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்தார். இவரது மொழி பெயர்ப்புக் குழுவில் இருந்தவர்கள், மூலமொழி வேதாகமங்களையும், ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த வேதாகமங்களையும் ஆராய்ந்து பார்த்து ஒரு புதிய மொழி பெயர்ப்பைத் தயாரித்தனர். இதன் பிரதிகள் பலரிடம் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டு, அவர்களது விமர்சனங்களைக் கருத்திற்கொண்டு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டபோதிலும், இம்மொழிபெயர்ப்பு 1611ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வெளிவந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமத்தையே அடிப்படையாய்க் கொண்டிருந்தது.
ஹென்றி பவரின் குழுவினரது மொழி பெயர்ப்புப்பணிகளின் காரணமாக 1863 இல் புதிய ஏற்பாடும் 1868 இல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. ஆரம்பத்தில், யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் இப்புதிய மொழிபெயர்ப்பை ஏற்கவில்லை. அதேசமயம் அவர்கள், தமது மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறவில்லை.
(தொடரும்)