விமர்சிக்கும் வரம்
அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2017)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: யோவான் 8: 1-32
மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார் (யோவான் 8:2).
ஓர் ஆலயத்தின் போதகர் காலை ஆராதனையில் ஆவியின் வரங்களைப் பற்றி பிரசங்கம் பண்ணினார். அவரை சந்தித்த ஒரு பெண்மணி, “பாஸ்டர், எனக்கு விமர்சிக்கும் வரம் உண்டென்று நம்புகிறேன்” என்றார். போதகர் அவரைப் பார்த்து ‘இயேசு கிறிஸ்து கூறிய தாலந்துகளின் உவமையில் ஒரு தாலந்தைப் பெற்ற மனிதனை நினைவிருக்கிறதா?’ என்று கேட்டார். புரிந்துகொண்ட பெண்மணி தனது தலையை அசைத்தார். “அவன் அதை என்ன செய்தான் என்பதை அறிவீர்களா?” என்று அவர் கேட்டவுடன் ‘ஆம்; அவன் அதைப் புதைத்து வைத்தான்” என்று அவள் பதிலளித்தார். “நீயும் போய் அந்தப்படியே செய்!” என்றார் அப்போதகர்.
பரிசேயரும் சதுசேயரும் தங்களுக்கு விமர்சிக்கும் வரம் உண்டென்று எண்ணினர். எனவே அவர்கள் அடிக்கடி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை பேச்சில் அகப்படுத்த சூழ்ச்சி செய்தனர். இயேசு தமது வழக்கத்தின்படியே ஒலிவ மலையைக் கடந்து எருசலேமுக்குச் சென்றார். “மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார்” (யோவா.8:2). அவர் தேவாலயத்துக்குத் திரும்பி வந்தது பரிசேயர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் அவரை அகப்படுத்தும் ஒரு நுட்பமான சூழ்ச்சியாக அமைந்தது. அவர்கள் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை அழைத்துவந்தனர்.
கூடாரப்பண்டிகை கொண்டாட்ட காலத்தில் இவ்வித ஒழுக்கக்கேடுகள் மலிந்திருந்தன. மோசேயின் நியாயப்பிரமாணத்தை மேற்கோள் காட்டிய வேதபாரகர்கள் கிறிஸ்துவின்மேல் குற்றம் சுமத்த முயற்சித்தனர். அப்பெண்ணை கல்லெறியவேண்டும் என்று அவர் பதிலளித்தால் ரோம சட்டத்தை மீறினவராவார். ஏனெனில் இவ்வித தண்டனை ரோம அரசாங்க சட்டம் தடை செய்திருந்தது. ஆனால் அப்பெண்ணை கல்லெறியக்கூடாது என்றால் மோசேயின் சட்டதை மீறினவராவார் (உபா. 22:24). இயேசு எந்தப் பதிலைக் கூறினாலும் அவரை தாங்கள் குற்றம் கண்டுபிடித்துவிடலாம் என காத்திருந்தனர். மதத்தலைவர்களுக்கு அவ்விபச்சாரப் பெண்ணின் மீது ஆர்வமில்லை; ஆனால் இயேசுவின் பதிலிலேயே அவர்கள் குறியாயிருந்தனர். அப் பெண்ணைப் பற்றிய அவர்களுடைய விமர்சனம் இயேசுவை குற்றம் பிடிப்பதிலேயே ஆர்வமாயிருந்தது. ஆனால் கிறிஸ்துவோ இவ்விதமான எதிர்ப்புகளை எவ்விதம் சமாளிப்பது என்பதை அறிந்திருந்தார். அவர் உயர்வான கொள்கையை அறிவித்தார். “ஒரு குற்றவாளியை கல்லெறிய தீர்ப்பு வழங்கும்பொழுது, சாட்சிகள் முதலாவது கல்லெறியவேண்டும்” என்ற நிபந்தனையையும் மோசேயின் சட்டம் உள்ளடக்கியிருந்தது. “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” என்று அவர் அறிவித்தது அவர்களுடைய விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கூட்டத்தினர் ஒவ்வொருவராகக் கலைந்து சென்றனர். அங்கு பரிபூரண வாழ்வை நடத்திய ஆண்டவராகிய இயேசு மட்டுமே மீந்திருந்தார். அவர் ஒருவர் மட்டுமே அவளை நியாயந்தீர்க்கும் தகுதியுடையவர்.
அப்.பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தில் இதுபோன்றதொரு வினாவையே எழுப்புகிறார். “இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தேவன் தெரிந்து கொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோம. 8:31,33-34). நீதியுள்ள வாழ்வு நடத்தி, நமக்காக தமது ஜீவனைத் தந்த ஒரே மனிதராலே அவர் மாத்திரமே நம்மை நியாயந்தீர்க்க முடியும் என்ற ஒரு திட்டத்தை தேவன் உருவாக்கியிருந்தார். உலகத்தை நியாயந்தீர்க்க வராமல் உலகத்தை இரட்சிக்க வந்தவரிடமே அந்த பெண் பேசிக்கொண்டிருந்தாள்.
ஒரு பெரிய தொழிலதிபர் தன்னுடைய மேசையின்மேல் ஒரு பெரிய கல்லை வைத்திருந்தார். அதில் “முதலாவது” என்ற சொல் எழுதப்பட்டிருந்தது. “உங்களில் பாவமில்லாதவன் … முதலாவது கல்லெறியக்கடவன்” என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை அது அவருக்கு எப்பொழுதும் நினைவூட்டிக் கொண்டிருந்தது. அவரிடம் பணிபுரிபவர்கள் கொடுக்கப்பட்ட இலக்கை அடையாமல் இருந்தால், அவர்களை குற்றப்படுத்தாமல் தன்னுடைய குறைகளை எண்ணிப் பார்க்க அச்சொல் அவருக்கு உதவியது. எனவே அவருடைய பணியாளர்களை அவர் இரக்கத்துடனும் அன்புடனும் நடத்தினார். மற்றவர்கள் பாவம்செய்யும்பொழுது நாம் எவ்வாறு நடக்க வேண்டும் என்று நாம் வாசித்த வேதபகுதியானது குறிக்கவில்லை. விபசாரத்தையும் மற்ற பாவங்களையும் நாம் கண்டிக்க வேண்டும், மற்றவர்களது குறைகளையும் பாவங்களையும் நாம் கவனிக்கவேண்டியதில்லை. நாம் ஒரு குறைபாடற்ற வாழ்வை வாழும் பொழுது அவ்வாறு வாழாத மற்றவர்களிடம் நாம் குற்றம் காண முயற்சிக்கலாம். அப்பெண் ஒரு பெரிய பாவியாயிருந்தாலும் அவளுடைய காலத்தில் வாழ்ந்த மற்றவர்களைவிட அவள் மோசமானவளல்ல. நாம் சந்திக்கும் மக்களை குற்றமுடையவர்களாய் காண்பது நமது காரியமல்ல என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.
அதிகாலைப் பாடல்:
இயேசுவைப் போல நான் வாழ்ந்திட வேண்டும்,
அவருடைய அன்பை நான் காண்பிக்க வேண்டும்;
கலிலேயாவிலே அவருடைய சுயவெறுப்பு வாழ்வை,
நானும் கடைபிடிக்க நிதம் வாஞ்சிக்கிறேன்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை