ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 2 வியாழன்

உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் (சங்.138:2) சத்தியவசன இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகப்பணி ஊழியங்களினாலே கர்த்தருடைய வார்த்தை மகிமைப்படுத்தப்படவும், திரள்மக்கள் வசனத்தால் நடத்தப்படுவதற்கும், நல்ல நிலத்தில் விழுந்து நூறு மடங்கு பலன் தரும்படியாகவும் வேண்டுதல் செய்வோம்.

அந்த ஒருவன்

தியானம்: 2026 ஏப்ரல் 2 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 13:11-21

YouTube video

என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான் (யோவா.13:18).

வருடந்தோறும் கொண்டாடிய பஸ்கா பண்டிகை; ஆனால், இம்முறை ஆண்டவருக்கு இது மிக விசேஷித்ததாக இருந்தது. தம்முடைய நாட்கள் நெருங்கிவிட்டதை அறிந்த இயேசு, இப்பூமியிலே தம்முடையவர்களுடன் அருந்தும் கடைசி இராவிருந்தும் இதுதான் என்பதையும் அறிந்திருந்தார். போஜனத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதையும் அறிந்திருந்த ஆண்டவர், ஆவியிலே கலங்கினார் (13:21) என்று பார்க்கிறோம். ஏன்? தாம் காட்டிக் கொடுக்கப்படப் போவதற்காகவா கலங்கினார்? இருக்காது! மூன்றரை ஆண்டுகளாக கூடவே இருந்தவன், ஒன்றாக அப்பம் புசித்தவன், இப்போ கேட்டின் மகனாகிவிட்டானே (17:12). அதற்காக அவர் அவனை வெறுக்கவில்லை. தமக்குரிய அநாதி திட்டத்தில் யூதாஸ் இருக்கிறதை இயேசு அறிவார். பிசாசு அவன் இருதயத்தைத் தூண்டிவிட்டதையும் அறிவார். இதையெல்லாம் அறிந்திருந்த இயேசு தம்மைக் காட்டிக்கொடுக்க வந்த யூதாஸைப் பார்த்து “சிநேகிதனே” (மத்.26:50) என்று அழைத்தபோதாவது யூதாஸ் உணர்வடைந்தானா?

யூதாஸ் தம்மைக் காட்டிக்கொடுப்பது நடந்தே தீரும் என்பதை அறிந்திருந்தும், அவனுக்கு இயேசு பல தருணங்களைக் கொடுத்திருந்தார். முதலில், “உங்களில் ஒருவன் காட்டிக் கொடுப்பான்” என்றார்; பின்னர் தம்முடன் அப்பம் புசிக்கிறவர்களில் ஒருவன் என்று அவனைக் குறிப்பிட்டார். மற்ற சீஷர்களுக்கு அவன் யார் என்பது தெரியாவிட்டாலும் யூதாசுக்கு அது தான்தான் என்பது நன்கு தெரியும். அப்போதாவது அவன் பயப்பட்டானா? “இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான்” என்றும் சொன்னார் இயேசு. அப்படிச் சொல்லி தோய்த்த துணிக்கையை யூதாஸின் கைகளிலே கொடுக்கிறார். அப்பொழுதுகூட யூதாஸ் உணர்வடையவில்லை. இறுதியில் “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்” என்று சொன்னபோதாவது அவனுடைய மனது உடையவில்லை.

அநேக தருணங்கள் யூதாஸிற்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவனால் மனம்திரும்ப ஏன் முடியவில்லை? ஒன்றாய் உட்கார்ந்து போஜனம் அருந்திவிட்டு, பந்திக்குக் காரணரையே காட்டிக்கொடுத்த யூதாஸ்போல நாம் எவரும் இருக்கக்கூடாது. இன்றும் இயேசு நமக்காகச் செய்துமுடித்தவற்றை நினைவு கூரும் பரிசுத்த பந்தியில் மாதந்தோறும் பங்கெடுக்கிறோம். ஆனால், நமது வாழ்வில் அவருக்கு உண்மையாய் இருக்கிறோமா? தூய்மையான இருதயத்துடன் அவரைச் சேவிக்கிறோமா? சாத்தான் நம்மைச் சோதிக்க நிச்சயம் வருவான். ஆனால், நம்மை மீட்டு இரட்சித்த ஆண்டவருக்கு குதிங்காலைத் தூக்காதபடி விழிப்புடன் இருப்போமாக.

ஜெபம்: அன்பின் தகப்பனே, வேதவசனங்களினாலே நீர் எங்களை உணர்த்தும்போது, எங்களை நாங்கள் அறிந்துகொண்டு மனந்திரும்ப உதவி செய்யும். ஆமென்.

வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 1 புதன்

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார் (1யோவான் 2:2).

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். (மத்.26:41)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 14-16 | மாலை: லூக்கா.7:18-35

ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 1 புதன்

கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன் (எரேமி. 17:10).

நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை தப்புவிப்பார் (தானியேல் 6:16) இந்தப் புதிய மாதத்திற்காகவும். பரிசுத்த வாரத்திற்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். இந்த மாதம் கிறிஸ்துவை அதிகமாய் கிட்டிச்சேரும் நாட்களாக இருப்பதற்கும், கர்த்தரின் வல்லமை நம்மேல் தங்கும்படியும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

குமாரனில் வைத்த அன்பைப்போல…

தியானம்: 2026 ஏப்ரல் 1 புதன் | வேத வாசிப்பு: யோவான் 17:20-26

YouTube video

நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும் … வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவான் 17:23).

நம்மை தம்முடைய விசேஷித்த ஜனமாக தெரிந்துகொண்ட கர்த்தாதி கர்த்தர் இப்புதிய மாதத்திற்குள் அடியெடுத்து வைக்க உதவி செய்திருக்கிறார். நான் உன்னோடே இருந்து நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காப்பேன் (ஆதி.28:15) என்ற வாக்குப்படியே இம்மாதத்திலும் கர்த்தர் நம்மோடிருந்து நம்மை நடத்துவார்.

இந்தநாளின் வேதபகுதியில் சீஷர்களுடைய வார்த்தையினால் தம்மை விசுவாசிக்க இருப்பவர்களுக்காக இயேசு வேண்டிக்கொள்கிறார். அதாவது இன்று அவருடைய பிள்ளைகளாக்கப்பட்ட நம் எல்லோருக்காகவும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே இயேசு ஜெபித்துவிட்டார் என்பது நமது மனங்களை இந்த நாளில் உறுத்தட்டும். இப்படிப்பட்ட ஆண்டவரிடம் வீண் முறையீடுகளும், பிறருடன் பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டு நாம் வாழுவது தகுமா?

இந்த இறுதிப் பகுதியில் இயேசு, முக்கியமாக தமது பிள்ளைகள் எப்போதும் ஒன்றாயிருக்கவேண்டுமென்ற தமது பாரத்தை வெளிப்படுத்துவதைக் காணலாம். பிதாவாகிய தேவன் தமது குமாரனிலும், குமாரன் பிதாவுடன் ஒன்றாயிருப்பதைப்போல தம்முடைய பிள்ளைகளும் ஒன்றாயிருக்கவேண்டும் என்பதே இயேசுவுடைய ஆதங்கமாயிருந்தது. அதற்காகவே, பிதா குமாரனில் வெளிப்படுத்திய தமது மகிமையை குமாரன் தமது பிள்ளைகளுக்குக் கொடுத்ததாக ஜெபித்தார். அந்த மகிமை இன்று நம்மில் வெளிப்படுகிறதா? நமக்குள், அதாவது உறவுகளுக்குள் குடும்பங்களுக்குள் மாத்திரமல்ல, சபைக்குள், சபைகளுக்குள் இன்று காணப்படுகின்ற பிரிவினைகள் ஆண்டவரை எவ்வளவாகத் துக்கப்படுத்தும் என்பதை நம்மில் யாராவது உணருகிறோமா?

அடுத்த முக்கிய விஷயம், பிதாவாகிய தேவன் பாவிகளான நம்மில் எவ்விதமான அன்பு கொண்டிருக்கிறார் என்பதை இயேசுவின் ஜெபம் நமக்கு தெளிவாக இப்பகுதியில் வெளிப்படுத்தியிருக்கிறது. “நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும்” (வச.23); “நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும்” (வச.26). இப் பெரிய பாக்கியத்தைப் பெற்றிருக்கிற நாம் ஏன் அற்பத்தனமாக நடக்கவேண்டும். தமது குமாரனில் பிதா எவ்வளவு அன்பை வைத்திருக்கிறாரோ அதில் ஒரு பிசகும் இல்லாமல், அப்படியே நம்மிலும் அன்பு வைத்திருக்கிறார் என்றால், அதற்கு நாம் எம்மாத்திரம்?

இயேசுவின் இந்த முழு ஜெபமும் சுயநலம் இல்லாத ஒரு ஜெபம்; மாத்திரமல்லாமல், பிதாவை மகிமைப்படுத்துகிறதும், தம்முடையவர்கள் தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்றும் ஜெபித்த ஜெபம். இதற்கும் மேலாக, இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னால் தேவனுடைய கிருபையால் தம்மை விசுவாசிப்பதற்கு இரக்கம் பெற்ற நமக்காகவும் நமது அன்பின் ஆண்டவர் ஜெபித்த ஜெபம் இது. இந்த ஆண்டவரை நாம் எவ்வளவுக்கு நேசிக்கிறோம்? நேசிக்கிறோம் என்றால் அவருடைய வார்த்தைக்கு எவ்வளவு தூரம் கீழ்ப்படிகிறோம்?

ஜெபம்: அன்பின் தேவனே உம்மை அதிகமதிமாக நேசிக்க உமக்குக் கீழ்ப்படிய என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.