ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 30 வியாழன்
நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி.28:15) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர்தாமே இம்மாதம் முழுவதும் தமது நேசகரத்தில் ஏந்தி குறைவுகளை நிறைவாக்கி நடத்திவந்தார். அவருடைய கிருபையை மகிழ்ச்சியோடு போற்றி நன்றி செலுத்தி ஆராதிப்போம்.
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம் (1தெச. 5: 2,6)
தேவ ஆலோசனை
தியானம்: 2026 ஏப்ரல் 30 வியாழன் | வேத வாசிப்பு: 2சாமுவேல் 5:17-25

… கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் (2சாமுவேல் 5:24).
நாம் புதிதாக ஒரு இடத்துக்குப் போகவேண்டி இருக்கும்போதோ அல்லது ஒரு பெரிய காரியத்தைச் செய்யவேண்டி இருக்கும்போதோ, யாராவது ஒருவர், நான் முன்னமே போய் எல்லாவற்றையும் ஆயத்தம் பண்ணுகிறேன். நீங்கள் மெதுவாக வாருங்கள் என்று நமக்குச் சொல்வாரேயாகில் அதைப் போன்ற ஒரு ஆறுதலான வார்த்தை எதுவுமே இருக்கமுடியாது. அப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா?
பெலிஸ்தரை முறியடிக்கப் போகுமுன்னர் தேவ ஆலோசனையைப் பெற்றான் தாவீது. அவனுக்குச் சரியான வழிநடத்துதலைக் கொடுத்த தேவன், அத்தோடு இன்னுமொரு காரியத்தையும் கூறுகிறார். முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்கிற இரைச்சல்களின் ஒசையை நீ கேட்கிறபோது புறப்பட்டுச் செல். அப்பொழுது பெலிஸ்தரை முறியடிக்க கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார். எவ்வளவு ஆச்சரியம் பார்த்தீர்களா? தாவீதுக்கு முன்பாக அவனுக்காய் போர் செய்ய கர்த்தர் புறப்பட்டுவிட்டார். ஆனால், அதற்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்பட்டது. அந்த ஓசையைக் கேட்கும்போதுதான் தாவீது புறப்படவேண்டும்.
நாம் எப்போதாவது தேவ ஆலோசனையைப்பெற அவர் பாதத்தண்டைக்குப் போனதுண்டா? நமக்காகக் காரியம் செய்ய தேவன் முன்னே செல்வார் என்று நாம் விசுவாசித்ததுண்டா? நாம் தேவனோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தால் இவ்விதமான அனுபவங்கள் நமது வாழ்விலும் நிகழவேண்டும். நாம் ஆராதிக்கும் தேவன் எங்கோ இருந்துகொண்டு நம்மை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பவர் அல்ல. அவர் நம்மோடு நம் மத்தியில் நம் உள்ளத்தில் வாழுபவர். அவரோடு நாம் பேசவேண்டும். அவர் நம்மோடு பேசுவதையும், நம்மை வழிநடத்துவதையும் நாம் நமது அன்றாட வாழ்வில் உணரவேண்டும். இவ்விதமான உறவு நமக்கும் தேவனுக்கும் இடையில் கட்டப்பட்டு எழுப்பப்படாவிட்டால் பயனில்லை.
அன்பானவர்களே, ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் என்று கூறிய ஆண்டவர் நமக்கு இருக்கிறார். மனுஷரின் ஆலோசனைகளை மாத்திரம் சார்ந்திராமல், தேவ ஆலோசனையைப் பெற்று, அவர் சொற்படி வாழ்ந்திட பிரயாசப்படுங்கள். அவர் நமக்குத் தரும் நல்ஆலோசனைகள் அவருடைய வார்த்தையாகிய வேதப் புத்தகத்திலே உண்டு. அதனை அனுதினமும் வாசியுங்கள், தியானியுங்கள், வாழ்விலே கடைப்பிடித்து அவர் ஆலோசனையின்படி வாழ்ந்திடுங்கள். நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் (சங்.32:8).
ஜெபம்: ஆலோசனையில ஆச்சரியமான தேவனே, என்மேல் உம் கண்ணை வைத்து எனக்கு எப்போதும் ஆலோசனை தந்து உமது வழியில் என்னை நடத்தும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 29 புதன்
என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. (எண்ணா. 14:18)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 23-25 | மாலை: லூக்கா.21:1-19
ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 29 புதன்
குடும்பத்தில் இரட்சிக்கப்படாதவர்களைக் குறித்த பாரம், ஏமாற்றப்பட்ட சூழ்நிலை, வியாதியின் போராட்டம், வாழ்வில் சந்தித்த தோல்விகள், ஆண்டவர் தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்ற கேள்விகளோடு பல காரியங்களினாலே சோர்ந்து போயிருப்போர்களை சர்வவல்லமையுள்ள கர்த்தர் தேற்றி, ஏற்றகாலத்தில் அவர்களை ஆசீர்வதித்து உயர்த்த ஜெபிப்போம்.
பாவத்தின் விளைவு
தியானம்: 2026 ஏப்ரல் 29 புதன் | வேத வாசிப்பு: 2சாமுவேல் 12:15-25

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடுதியில் நாசமடைவான்; (நீதி. 29:1).
நாம் எவ்வளவு கொடிய பாவிகளாய் இருந்தாலும், நாம் உண்மையாய் மனந்திரும்பி பாவமன்னிப்பு கேட்கும்போது, நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள ஆண்டவர் ஆயத்தம் உள்ளவராய் இருக்கிறார். ஆனால், நாம் செய்த பாவத்தின் விளைவுகளை நாம் சிலவேளைகளில் சந்தித்தே ஆகவேண்டும். இங்கும், தாவீது தனது பிழையை உணர்ந்தும், தேவன் அவரை மன்னித்தாலும், பாவத்தில் உருவான அந்தப்பிள்ளை சாகும் என்று தேவன் கூறிவிட்டார். ஆனால், அப்பிள்ளைக்காக தாவீது புசியாமல், குடியாமல் தேவனிடம் பிரார்த்தித்தவராக தரையிலே விழுந்துகிடந்தார் என்று வாசிக்கிறோம். ஆனாலும், அவரால் அந்தப் பிள்ளையை மீட்டுக்கொள்ள முடியவில்லை. ஏழாம் நாளிலே பிள்ளை செத்துப்போனது. தாவீது தன் பாவத்தின் விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்காக தாவீது தேவனை குறை சொல்லவுமில்லை.
பாவத்தோடு விளையாடும் வாழ்வு நமக்கு வேண்டாம். வேதம் சொல்லுகிறது: அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடிதியில் நாசமடைவான் (நீதி.29:1). நமது வாழ்வில் தேவனுக்கு விரோதமான பாவங்களையும், அவர் நமக்கு உணர்த்திய பாவ காரியங்களையும் விட்டுவிடுவோமாக. அதன்பின் விளைவுகள் நம்மைத் தொடர்ந்து பிடிக்குமானால் அதை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்கு முன்பு பாவத்தோடு விளையாடுவதை நிறுத்தி மனந்திரும்புவோம்.
இவ்விதமாக பாவத்தில் விழுந்த தாவீது, பிள்ளைக்காக தரையிலே விழுந்தார். எனினும் அவர் அப்படியே விழுந்துகிடக்கவில்லை. பிள்ளைசெத்ததும், அவர் தரையைவிட்டு எழுந்தார், ஸ்நானம் பண்ணினார், எண்ணை பூசிக் கொண்டு தன் வஸ்திரங்களை மாற்றிக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பிரவேசித்து பணிந்துகொண்டு, தன் வீட்டிற்கு வந்து போஜனம் பண்ணி மீண்டும் ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கிறார். தேவனின் மன்னிப்பைப் பெற்றார் தாவீது. அதனால்தான் தேவன் என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன் என தாவீதைப் பற்றிக் கூறுகிறார் (அப்.13:22).
பாவிகளாகிய நம்மை மீட்பதற்காய் கல்வாரிச் சிலுவையிலே தம் உயிரையே பணயமாக வைத்த தேவன் நம்மை மன்னித்து தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். இப்படி ஒரு தேவன் நமக்கு இருக்கும்போது நாம் ஏன் பாவத்துடன் சேர்ந்திருக்கவேண்டும்? அல்லது ஏன் பாவத்தை மறைக்கவேண்டும்? இன்றே நம்மை அவரிடத்தில் ஒப்படைப்போம்.
ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, எங்களிலுள்ள குறைகளை, பாவத்தை அடிக்கடி நீர் உணர்த்திக் காட்டும்போது அதை உடனே விட்டு விலக ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்ய ஜெபிக்கிறோம். ஆமென்.”