வாக்குத்தத்தம்: 2026 மே 1 வெள்ளி

விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோம. 5:1).

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம். (உபா. 33:27)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 29-31 | மாலை: லூக்கா.22:1-27

ஜெபக்குறிப்பு: 2026 மே 1 வெள்ளி

எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. நீர் ஒருவரே கர்த்தர் (நெகேமியா 9:5,6).

கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும் இரட்சிக்க கர்த்தருக்கு தடையில்லை (1சாமு.14:6) என்ற வாக்குப்படியே இமாதத்திலும் கர்த்தர் நம் துணையாயிருந்து வேண்டிய எல்லா உதவி ஒத்தாசைகளையும் பரத்திலிருந்து தந்தருளி குறைவில்லாமல் நடத்த நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

பள்ளத்தாக்கில் வாழுதல்

தியானம்: 2026 மே 1 வெள்ளி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 15:1-19

YouTube video

நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன் (உன்னதப்பாட்டு 2:1).

நமது அடைக்கலமும் பெலனும் ஆபத்து காலத்தில் அனுகூலமுமான கர்த்தராகிய பரிசுத்தர் இம்மாதத்தை ஆசீர்வதித்து தருவார். நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன் (யோவான் 14:18) என்று வாக்குப் பண்ணின ஆண்டவர் சீக்கிரம் வருவார். நாமும் அவரைச் சந்திக்க ஆயத்தமாவோம்.

ஒரு மலைச் சிகரத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தால், அந்த இயற்கைக் காட்சிகளை என்றென்றும் இரசித்துக்கொண்டே இருக்கத்தோன்றும். அதற்காக மலையுச்சியிலேயே நமது வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக்கொள்ள முடியாது. வாழ்க்கையின் யதார்த்தத்தில் பள்ளத்தாக்குகளில் வாழுவதே மனிதராகிய நமக்கு அதிக நன்மையைத் தரும். இஸ்ரவேலர் தங்கள் வரலாற்றில், மலையுச்சியின் அனுபவத்தைப் பெற்றார்கள். பார்வோனின் சேனையால் துரத்தப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் நடுவாக கால்நடையாய் கடந்துபோனபோது, தங்களைத் தொடர்ந்துவந்த எதிரியின் குதிரைகளையும் இரதங்களையும் சமுத்திரம் மூடிக்கொண்டதைக் கண்டு ஆனந்தமாய் கர்த்தரைப் புகழ்ந்து பாடினார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடித்திருக்கவில்லை. அவர்கள் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வரநேரிட்டது; வனாந்தரத்தின் கொடூரமான வறண்ட காற்றை எதிர் கொண்டனர். மூன்று நாட்களாக தண்ணீரைக் காணாமல் வனாந்தரத்தில் நடந்தார்கள். மலையுச்சியுடன் ஒப்பிடும்போது பள்ளத்தாக்கின் அனுபவம் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. வாழ்வில் நமது அனுபவமும் எப்படி?

ஆனந்தம் நிறைந்த தியானநேரத்தில் தேவனுக்கு மிக அருகாமையில் இருப்பதை நாம் உணர்ந்திருக்கலாம். அல்லது கூட்டமொன்றில் தேவனை தனிப்பட்ட முறையில் சந்தித்த அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். ஆலயத்தில் போதகரின் செய்தியின் மூலம் நமது ஆவிக்குரிய தேவை சந்திக்கப்பட்டிருக்கலாம். இவ்விதமான மலையுச்சியின் அனுபவங்களில் நாம் நிரந்தரமாக திளைத்திருக்கவே விரும்புவோம். ஆனால் அது முடியாது. அலுவலகப் பணிகள், இல்லத்தின் பணிகள், பிள்ளை வளர்ப்பு போன்ற உலக வேலைகள் நம்மை நெருக்குகின்றன. நிஜ வாழ்க்கை நாம் எதிர்பார்ப்பதுபோல குதூகல கொண்டாட்டம் நிறைந்த தல்ல. ஆனாலும் மலையுச்சியில் தங்களுக்குத் துணையாக நின்ற தேவன் பள்ளத்தாக்கிலும் கூடவே இருக்கிறார் என்பதை அன்று இஸ்ரவேல் மக்கள் அறிந்துகொண்டனர். அவர்களுடைய தாகத்தையும் பசியையும் போக்கிய கர்த்தரை, சத்துருக்களிடமிருந்து பாதுகாத்த கர்த்தரை அவர்கள் அனுபவித்தனர்.

அதே தேவன்தான் இன்று நம்மோடும் இருக்கிறார். நமது ஆவிக்குரிய சோதனை நேரத்திலும் சோர்வின்வேளையிலும் நம்முடன் கூடவே இருக்கிறார். அவர் நம்மைக் கைவிடமாட்டார். மகிழ்ச்சியான நேரங்களில் நம்முடன் இருந்த தேவன், நமது துக்கமான நேரத்திலும் கூடவே இருப்பார். ஆகவே இக்கட்டுகள் நேரிடும்போது கலங்கவேண்டிய அவசியமில்லை. நமது தேவன், மலையுச்சிக்கு மாத்திரமல்ல, பள்ளத்தாக்குகளுக்கும் தேவனாகவே இருக்கிறார்.

ஜெபம்: நல்ல ஆண்டவரே, எங்கள் மகிழ்ச்சியின் நேரங்களிலும், துக்கத்தின் நேரங்களிலும்; எங்களோடுகூடவே இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.”

அனுதினமும் கிறிஸ்துவுடன் மே-ஜுன் மாத இதழ் வெளிவர கிருபை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடுகளை நாம் அன்றாட செய்திகளில் கேட்டு ஜெபித்துவருகிறோம். அதற்குப் பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார் (2சாமுவேல் 21:14). நம் அனைவரின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டு சீக்கிரமாகவே யுத்தங்களை ஓயப்பண்ணுவார்.

சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

பேப்பர் மற்றும் அச்சுக்கூலி உயர்வுகளினால் வருடாந்திர விசுவாசபங்காளர் காணிக்கை ரூ.1000/- ஆகவும், அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தின் வருடசந்தா ரூ.400/- ஆகவும் உயர்த்தவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகி இருக்கிறோம். பங்காளர்களும் சந்தாதாரர்களும் இதைக் கவனத்தில் கொள்ளவும் அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் மே மாதம் யாத்திராகமம் புத்தகத்தில் மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் எல்லாச் சூழ்நிலையிலும் ஜனங்களுடைய மனப் பாங்கையும், மோசேயின் உயரிய குணங்களையும் தியானிக்கும் தியானங்கள் இடம் பெற்றுள்ளன. ஜுன் மாதம் யோசேப்பின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள் இடம் பெற்றுள்ளது. இரண்டு மாத தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். சகோதரி அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தியானங்கள் அனுதின வாழ்வில் அதிக பயனுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம்.

ஆ.ஜான் துரை

கிறிஸ்தவ வாழ்வின் நெறிமுறைகள்!

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம் 33

கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும் (சங்.33:11)

இவ்வசனத்தின் முதல்பகுதியில் நமக்கு எந்தவித சந்தேகமும் இருக்காது. ஏனெனில் நமது ஆண்டவர் இறையாண்மை கொண்டவர்; அவரது ஆலோசனையே இறுதியில் நிறைவேறும் என்பதில் நமக்கு எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் இவ்வசனத்தின் பிற்பகுதியில் சில விசுவாசிகள் தடுமாறுகின்றனர். நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கக்கூடும்.

தேவனுடைய சித்தம் என்பது அவருடைய இருதயத்திலிருந்து வருகிறது என்றும், அது அவருடைய அன்பின் வெளிப்பாடு என்று நீங்கள் நம்புவதற்கு கடினமான வேதனையான சில அனுபவங்களை நீங்கள் உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் அனுபவித்திருக்கலாம். பிதா நம்மை நேசிக்கிறார் எனில் நமது வாழ்வில் ஏன் இவ்வளவு ஏமாற்றங்களும் துக்கங்களும் துன்பங்களும் உண்டாகின்றன? தேவனுடைய மக்களுக்கு தீமையான காரியங்கள் நிகழும்பொழுது, எதிராளியானவன் “தேவன் உன்னை நேசிக்கிறார் என்றால் இது ஏன் நிகழ்கிறது?” என்று நம்மை வினவுகிறான். இக்கடினமான அனுபவங்களை நாம் எவ்வாறு சமாளிப்பது?

ஆண்டவரின் முழுமையான நோக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

தேவனுடைய ஞானம் என்னவென்றால் “நாம் அனைவரும் அவருடைய குமாரனுக்கு ஒப்பாக மாறவேண்டும்” (ரோமர் 8:29). வாழ்க்கையின் சோதனைகள் நம்மை இயேசுவைப்போல மாற்றமுடியாத அளவுக்கு கடினமாய் விடுகின்றன. தேவன் நம்முடைய இரட்சிப்பை செயல்படுத்தும்பொழுது பயத்தோடும் நடுக்கத்தோடும் பிரயாசப்பட பரி.பவுல் அறிவுறுத்துகிறார் (பிலி.2:12-13). எகிப்தில் தான் அநேக பாடுகளை அனுபவித்ததன் காரணத்தை யோசேப்பால் அறிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அவை யாவும் அவரை அரியணையில் அமர்த்தி, இயேசுவைப்போல் மாற்ற உதவின. தம்முடைய தலைவர் ஏன் பாடுகளை அனுபவித்து மரணமடையவேண்டும் என்பதை சீஷர்களால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் இறுதியில் அச்செய்தியை அறிந்துகொண்டனர்.

ஆண்டவரின் முழுமையான அன்றாட திட்டங்களுக்கு அர்ப்பணியுங்கள்.

“மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்” (நீதி.19:21). என் வாழ்விலும் ஊழியப்பாதையிலும் “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” என்ற எரே.29:11 பகுதியை அநேகமுறை நினைவுபடுத்தி, நான் என்னை ஊக்கப்படுத்திக்கொள்வேன். கர்த்தர் இம் முழுபிரபஞ்சத்தையும் நிர்வாகிக்க வேண்டும். ஆனால் அவர் நம்மை நினைத்திருக்கிறார் என்ற எண்ணம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாம் அவரை நம்பினால் அவர் நமக்காக யாவையும் திட்டமிட்டு, நமது நம்பிக்கையை விரிவாக்கி ஓர் ஒளிமயமான எதிர்காலத்துக்குள் வழிநடத்துவார். இந்த வாக்குறுதி பெத்தானியாவில் இருந்த ஒரு குடும்பத்துக்கு வந்த சோதனையை எனக்கு நினைவூட்டுகிறது. யோவான் 11:5 இல் “இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்” என்று எழுதியிருக்கிறது. அவ்வாறாயின் ஏன் லாசரு நோய்வாய்ப்பட இயேசு அனுமதித்தார்? மேலும் அவர் நேசித்த சகோதரிகளுக்கு உதவ பெத்தானியாவுக்குச் செல்ல ஏன் தாமதித்தார்? ஆனால் இவை யாவும் ஒன்றிணைந்து தேவனுக்கு மகிமையைக் கொண்டுவர ஏதுவாக செயல்பட்டது. “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங்.31:15).

ஆண்டவரின் அன்பில் நிலைத்திருங்கள்.

மார்த்தாள், மரியாள் லாசரு ஆகியோருக்கு மாத்திரமல்ல, உங்களுக்காகவும் எனக்காகவும் தேவனுடைய சித்தம் ஆண்டவரிடமிருந்தே வருகிறது. அது அவருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்துகிறது. எங்களுடைய மூத்த மகன் முதல் வகுப்பில் படிக்கும்பொழுது, ஒரு வேலியில் ஏறமுயன்று தன்னை அதிகமாகக் காயப்படுத்திக்கொண்டான். நாங்கள் மருத்துவமனைக்கு காரில் சென்றபொழுது அவன் பயந்து கவலையுடன், “டாக்டர் என்ன செய்வார்?” என்று என்னிடம் கேட்டான். “மருத்துவர் காயத்தை கிருமி நீக்கம் செய்து தடுப்பூசி செலுத்துவார், தேவைப்பட்டால் சில தையல்களும் போடுவார் என்றேன்”. இவை யாவும் வலிமிகுந்ததே. ஆனால் இவை அனைத்தும் ஒன்றிணைந்து அவனை குணமாக்கும். நான் ஏன் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்? ஏனெனில் அவனுடைய தாயாரும் நானும் அவனை நேசித்ததால் அவனுக்கு சிறந்த சிகிச்சை கொடுக்க விரும்பினோம். நம்முடைய பரம பிதா அவர் நேசித்த அவருடைய சொந்த குமாரனை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்தவர் நம்மை கைவிடமாட்டார் (ரோமர் 8:32). நம்மைக் கைவிடாதிருக்க தம்முடைய சொந்த குமாரனைக் கைவிட்டவர் அவர். ஆண்டவர் தமது கிருபையினால், நமது துன்பங்களை மகிமையாக மாற்றி அவருடைய குமாரனுக்கு ஒப்பாக மாற்றுவார். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோம.8:29). உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் (சங். 76:24).

மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர் (நீதி.16:9).

(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)

வேதாகமத்தில் எப்படிப் பல பதிப்புகள் நமக்குக் கிடைத்தன!

வேதாகமம் உருவானது எப்படி? (மே – ஜுன் 2026)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தில் எப்படி இத்தனை பதிப்புகள் வெளிவந்தன? என்று எப்போதாவது நீங்கள் ஆச்சரியப்பட்டதுண்டா? ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள வேதாகமப் பதிப்புகளைப் பாருங்கள்.

  1. King James Version
  2. The New American Standard Bible
  3. The New king James Version
  4. The Revised standard Version
  5. The New International Version
  6. Today’s English Version

மற்றும் இன்னும் பல.

தமிழ் மொழியில் வேதாகமம் வெளியிடப்பட்ட பதிப்புகளையும் வருஷங்களையும் பார்ப்போம்.

  1. பப்ரீசியூஸ் பதிப்பு 1796
  2. பெர்சீவல் பதிப்பு 1850
  3. பவர் பதிப்பு 1871
  4. லார்சன் பதிப்பு 1936
  5. மோனகன் பதிப்பு 1949
  6. தமிழக ஆயர்பேரவை 1973
    (R.C) வெளியிட்ட பதிப்பு
  7. பொது மொழிபெயர்ப்பு 1995
  8. நிறைவாழ்வு ஆய்வுவேதாகமம் 2005
  9. வாழ்வியல் விளக்க வேதாகமம் 2007

இவைகளெல்லாம் எங்கிருந்து வந்தன? இவைகளெல்லாம் நமக்குத் தேவையா? ஏன்? இவற்றில் உங்களுக்கு மிகவும் பிரியமானது எது? இவற்றில் சிறந்த பதிப்பு எது?

பழைய ஏற்பாட்டின் பல்வேறு மொழி பெயர்ப்புகள் இயேசுவின் காலத்திலும் கூட இருந்தன. சவக்கடல் சுருள்கள் கி.மு. 100 முதல் கி.பி.100 வரை கண்டுபிடித்து எடுக்கப்பட்டன. செப்துவ ஜிந்து வேதாகமம் கிரேக்கமொழி பேசும் யூதர்களுக்காக கி.மு.280இல் மொழிபெயர்க்கப்பட்டது.

அதன்பின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் தோன்றினர். ஒவ்வொருவரும் எழுதியதில் மூல நகல் என்று மட்டுமே இருந்தன. அவைகள் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு, எழுதப்பட்டிருந்தன. இந்த மூலப்பிரதிகள் ஒன்றும் இன்று இல்லை. நமக்குக் கிடைத்திருப்பவைகளெல்லாம் நகல்களே. பெரும்பாலும் நகல்களின் நகல்கள்தான் கிடைத்துள்ளன.

கீழ்க்கண்ட ஐந்து கையெழுத்துப் பிரதிகளும் புதிய ஏற்பாட்டு நூல்களுடையவை. இவை கிறிஸ்து பிறப்பு முதல் உள்ள 500 வருஷங்களில் எழுதப்பட்டவை.

1. பாப்பிரை:

1895 இல் மத்திய எகிப்துப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாப்பிரை எழுத்துத் தகடுகள் கிடைத்தன. அவற்றில் பெரும் பாலானவை மம்மிகளின் கட்டுகளிலும், பதப்படுத்தப்பட்ட முதலைகளின் உடல் களிலும் திணித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று யோவான் 18ஆம் அதிகாரத்தின் ஒரு துண்டு. இதன் காலம் கி.பி.125 என்று தெரிகிறது.

2. இலத்தீன் வல்கேட்:

கி.பி.382 இல் ரோமாபுரியிலுள்ள பிஷப் சிறந்த இறையியல் அறிஞரான ஜெரோமிடம் நமக்கு நற்செய்தி நூல்களின் பழைய லத்தீன் மொழி பெயர்ப்பைத் திருத்தும்படி கேட்டுக்கொண்டார். ஜெரோம் நான்கு நற்செய்தி நூல்களை மட்டுமல்ல, லத்தீன் புதிய ஏற்பாட்டையே திருத்த முற்பட்டார். இந்தப் பணியில் பல எபிரேய கையெழுத்துப் பிரதிகளைப் பயன்படுத்தினார். ஒப்பிட்டு சரிபார்த்தார். மேலும் எபிரெய மொழியிலிருந்து நேரடியாக லத்தீன் மொழியில் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியை மொழி பெயர்த்தார். இந்தப் பணிக்காக ஜெரோம் 25 ஆண்டுகள் செலவிட்டார்.

வல்கேட் என்பது ஒரு லத்தீன் சொல் இதன் பொருள் பொதுவான என்பதாகும். இது வல்கேட் வேதாகமம் என்று அழைக்கப்பட்டது. 1228 இல் இந்த வல்கேட் வேதாகமம் ஸ்டீபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டது. இவர் கேண்டர்பரியின் ஆர்ச் பிஷப் ஆக இருந்தார்.

பின்னர் ஸ்டீபானாஸ் என்று அழைக் கப்படும் இராபர்ட் ஸ்டீபன்ஸ் இந்த அதிகாரங்களை வசனங்களாகப் பிரித்தார். இது 1551 இல் செய்யப்பட்டது. சுமார் 1571இல் மெரன்டானஸ் என்பவர் இந்த வசனங்களுக்கு எண் இட்டார்.

ஜான் குட்டென்பர்க் என்பவர் 1455இல் இந்த வல்கேட் வேதாகமத்தை முதல்முதல் அச்சிட்டார்.

3. கோடக்ஸ் சினைட்டிக்கஸ்

கி.பி. 330 இல் எழுதப்பட்ட கிரேக்க செப்துவ ஜிந்து வேதாகமத்தின் பழைய கையெழுத்துப் பிரதி கிடைத்தது. இது ஜெர்மனியில் உள்ள வேதாகம அறிஞரான டிஸ்கென்டோர்ப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1844 இல் சீனாய் மலையில் இருந்த தூய காதரீன் துறவியர் மடத்தில் கிடைத்தது. இது அங்கு குப்பைக்கூடையில் இருந்ததைக் கவனித்தார். இவர் அதைக் கண்டெடுக்காவிட்டால் இந்த அரிய பொக்கிஷம் குப்பையோடு குப்பையாகப் போட்டு எரித்து அழிக்கப்பட்டிருக்கும். இதில் பழைய ஏற்பாட்டின் 199 தகடுகளும் புதிய ஏற்பாடு முழுவதும் கிடைத்தது.

4. கோடக்ஸ் வாட்டிக்கானஸ்

இதுவும் கி.பி.330 இல் எழுதப்பட்டதே. இது ரோமாபுரியில் உள்ள வாட்டிக்கன் நூலகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. இது 1481 இல் கண்டுபிடித்து எடுக்கப்பட்டது. ஆனால் இந்த கையெழுத்துப் பிரதி 19ஆம் நூற்றாண்டு வரை திறமையான வேத அறிஞர்களுக்குக் காட்டப்படவில்லை. 312 இல் ரோம சக்கரவர்த்தியாகக் கான்ஸ்டன்டைன் வந்தபோது, அவர் வேதாகமத்துக்கு 50 நகல்கள் எடுக்கச் செய்தார். கோடக்ஸ் சினைட்டிக்கஸ், கோடகஸ் வாட்டிக்கானஸ் என்பவை இந்த 50 பிரதிகளில் உட்பட்டவை என்று நம்பப்படுகிறது.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்