வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 1 திங்கள்

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபேசியர் 1:7).

கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். (எரேமி.17:7)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 13,14 | மாலை: யோவான் 10:1-21

ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 1 திங்கள்

மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் (லூக்கா 11:9).

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய் (ஏசா.62:3) புதிய மாதத்தையும். புதிய நாளையும் தந்த நேசகர்த்தாவை ஸ்தோத்திரிப்போம். கர்த்தரையே நம்பிக்கையாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் கர்த்தரை நமக்கு முன்பாக நிறுத்தி பொறுமையோடு ஓட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

நிறைவேறுமளவும்…

தியானம்: 2026 ஜுன் 1 திங்கள் | வேத வாசிப்பு: சங்கீதம் 105:1-4; 16-22

YouTube video

கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது (சங்கீதம் 105:19).

இந்த ஆண்டிலும் ஆறாவது மாதத்திற்குள் வந்துவிட்டோம். வழுவாதபடி நம்மைக் காத்து, தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே நம்மை மாசற்ற வர்களாய் நிறுத்த வல்லமையுள்ளவருமாகிய தேவன் இம்மாதத்திலும் நம்மெல்லாரையும் அற்புதமாய் வழிநடத்துவாராக.

இம்மாதத்தில் பலவித மனநிலையோடும், பலவித கேள்விகளுடனும் நாம் இருக்கலாம். ஒரு காரியத்தை நாம் மறக்கக்கூடாது. கர்த்தர் சொன்னதைச் செய்வார். ஆனால், நாம் சோதிக்கப்படாமல் அல்லது புடமிடப்படாமல், கர்த்தரிடமிருந்து எந்தவொரு ஆசீர்வாதத்தையும் பெற்றிட முடியாது. தகுதிப் பரீட்சை இல்லாமல், உலகில் நமக்கு எந்தவொரு வேலையும் கிடைக்காது. அப்படியானால், தேவனுடைய ராஜ்ய பணிக்கு அழைக்கப்பட்டுள்ள நாம் இலகுவாக எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள நினைப்பது எப்படி?

இன்றைய தியான வாக்கியம் யோசேப்பைக் குறித்துச் சொல்லப்பட்டது. கர்த்தர் ஆபிராமை அழைத்து உடன்படிக்கை செய்தபோது, “உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருப்பார்கள்” என்றார். அந்தப்படியே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் எகிப்துக்குப் போக வேண்டும். அதற்கு முன்னோடியாக தெரிந்தெடுக்கப்பட்டவர்தான் யாக்கோபின் செல்ல மகன் யோசேப்பு. அதற்காக யோசேப்பின் நாட்கள் இலகுவானதாக இருக்கவில்லை. இளைஞனாக வீட்டை விட்டுப் புறப்பட்ட யோசேப்பு எகிப்தின் ராஜாவின் முன்பாக நின்றபோது முப்பது வயதாயிருந்தான். கர்த்தர் சொன்னது நிறைவேறுமளவும் அவருடைய வசனமே யோசேப்பைப் புடமிட்டது என்று வசனம் சொல்கிறது. அதாவது, தகப்பனிடமிருந்து பிரிக்கப்பட்ட இளைஞனான யோசேப்பு, எகிப்தில் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தப்படும்வரை கர்த்தரின் வார்த்தையே யோசேப்பைப் புடமிட்டது; அதாவது, துன்பங்களுக்கூடாக யோசேப்பின் தகுதி பரீட்சிக்கப்பட்டு, முப்பது வயதை அடையும்வரை இந்தப் புடமிடுதல் யோசேப்பின் வாழ்வில் நிறைவேறியது. பின்னர் தகுந்த நேரத்தில் யோசேப்பு, பார்வோனின் முன்பாக நிறுத்தப்பட்டார். அதன் பின்பு யோசேப்பின் நிலைமையை யாராலும் தகர்த்தெறிய முடியவில்லை. யோசேப்பை இதுவரை புடமிட்ட கர்த்தருடைய வார்த்தை, மரணம் மட்டும் அவரைத் திடப்படுத்தியது.

இப்படியிருக்க, கிறிஸ்தவ வாழ்வு என்பது இலகுவான செழிப்பான வாழ்வு அல்ல. புடமிடப்படாத எதுவும், தகுதிப்படுத்தப்படாத எதுவும் தேவ ராஜ்யத்தின் பணியில் உபயோகப்படுத்தப்பட முடியாது. “அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10) என்றார் யோபு. ஆம், நாம் ஆண்ட வருடைய பிள்ளைகள் என்பது மெய்யானால், நமக்கு நேரிடுகின்ற எதுவும் தீமைக்கல்ல, நன்மைக்கும், எதிர்காலத்தில் தேவனுடைய நாமம் நம்மில் மகிமைப்படவுமே நமக்கு நேரிடுகின்றது. ஆகவே தேவன் மீதுள்ள விசுவாசத்தில் நிலைத்திருப்போமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, கர்த்தருடைய வார்த்தை எங்களை புடமிடும்போது யோசேப்பை போல சகிப்புத்தன்மையோடும்; பொறுமையோடும் நடந்துகொள்ள உதவி செய்யும். ஆமென்.