எழும்புங்கள் போவோம்!
தியானம்: 2026 மே 31 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 14:28-31

எழுந்திருங்கள், இவ்விடம் விட்டுப் போவோம் வாருங்கள் என்றார் (யோவான் 14:31).
கிறிஸ்துவையேப் பின்பற்றி, அவரைப்போலவே மாறவேண்டும் என்று வாஞ்சையோடு தொடர்ந்து தியானங்களை படித்துவருகிறோம். போதனைகளைக் கேட்பதும், தியானிப்பதும் இலகு. ஆனால் அதை நாம் செயற் படுத்தும்வரை அதனால் பயன் ஏதுமில்லை. அன்றும் சீஷர்கள் உட்கார்ந்து ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்பதில் ஆவலாக இருந்தனர். ஆனால் இயேசு தமது பாடுகளையும் மரணத்தையும் குறித்துப் பேசினால், அதை மறுத்து, தவிர்த்து, வேறுவிதமாக கற்பனை பண்ணியே சீஷர்கள் பதில் கொடுத்தார்கள். ஆண்டவரோ வெறுமனே ஒரு போதகராக வரவில்லை. கிரியையில் தம்மைத் தாமே பலியாக ஒப்புக்கொடுக்க வந்தவர். ஆகவே, அன்று சீஷர்களை எழுந்துபோக அழைத்தவர் இன்று நம்மையும் அழைக்கிறார்.
நாம் எழுந்து போகும்வரைக்கும் நாம் கற்றதை செயற்படுத்தமுடியாது. செயற்படுத்தும் வரைக்கும் நமது அழைப்பில் நிலைத்து நிற்கமுடியாது. அழைப்பை உதாசீனப்படுத்துகிறவன் சிலுவை சுமக்கமுடியாது. சிலுவை சுமக்காதவன் கிறிஸ்துவைப் பின்பற்ற முடியாது. கிறிஸ்துவைப் பின்பற்றாதவன் அவருடைய சீஷனாய் இருக்கமாட்டான். சீஷனாய் இராதவன் தன் குருவைப்போல ஆகமாட்டான்.
வாருங்கள், நாம் இருக்கும் இவ்விடத்தை விட்டுப்போவோம் என்று ஆண்டவர் அழைக்கிறார். சீஷர்கள், செயற்படாமல் அமர்ந்திருந்தவரை, அவர்கள் வேறு சிந்தனையின்றி, அவருடைய வலதுபக்கத்தில் யார் உட்காருவான், இடதுபக்கத்தில் யார் உட்காருவான் என்ற எண்ணங்களுடனும் இருந்தார்கள். ஆனால் ஆண்டவரோ எழுந்துபோக, செயற்பட அழைத்தார். நமக்குப் பாதுகாப்பு, வசதி, நல்ல எதிர்காலம், மனநிம்மதி என்று நினைக்கும் இடத்தைவிட்டு எழுந்துபோவோம் வாருங்கள் என்று அழைக்கிறார். இது நமக்குக் கடினமாக இருக்கலாம். நம்மை நாம் வெறுக்கவும், நமக்கு அருமையானவற்றை இழக்கவும் யார்தான் விரும்புவார்? ஆனால், நமக்கு அருளப்பட்ட சிலுவையைச் சுமந்து அவரைப் பின்பற்றும்வரை, அவருடைய பாடுகளிலும் உயிர்த்தெழுதலிலும் நமக்குப் பங்கு கிடையாது.
அருமையான தேவபிள்ளையே, எழும்பு; இது சுகமனுபவிக்கும் காலமல்ல, சிலுவை சுமக்கவேண்டிய நேரம். இது களித்திருக்கும் வேளையல்ல; கண்ணீர்விட்டுப் புலம்பவேண்டிய நேரம். இது உலகத்தின் வெற்றிகளை நாடி ஓடும் பாதை அல்ல; கெத்செமனேத் தோட்டத்தை நோக்கி நிதானத்தோடு நடக்கவேண்டிய நேரம். இது இளைப்பாறும் வேளையல்ல; போராட்டத்தின் நேரம். நமது தெரிந்தெடுப்பு என்ன?
ஜெபம்: அன்பின் இயேசுவே, எனக்கு அருளப்பட்ட சிலுவையை உண்மையோடு சுமக்கும்படி எழுந்து புறப்பட, செயற்பட பரிசுத்தாவியின் பெலன் தாரும். ஆமென்.