வாக்குத்தத்தம்: 2026 மே 30 சனி

அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்.16:27)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 9,10 | மாலை: யோவான்.9:1-20

ஜெபக்குறிப்பு: 2026 மே 30 சனி

சத்தியவசன ஊழியத்தை அனுதினமும் தங்கள் ஜெபங்களில் நினைத்து தியாகமான காணிக்கையால் தாங்கிவரும் விசுவாசப் பங்காளர்கள். ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் நேயர்களை தேவாதிதேவன் நினைத்தருளி அவர்களது கைகளின் பிரயாசங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்தி உயர்த்திட வேண்டுதல் செய்வோம்.

இடறும் கல்லா? படிக்கல்லா?

தியானம்: 2026 மே 30 சனி | வேத வாசிப்பு: எபிரெயர் 4:12-16

YouTube video

சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப் போலிருப்பான்; (லூக்கா 6:40).

கிறிஸ்துவைப்போல மாறவேண்டும் என்ற நோக்கத்தோடே நாம் தியானங்களை தியானித்து வருகிறோம். ஒரே மாதத்தில் நாம் மாறமுடியாது. இவ்வளவுதானா என்று நாம் நினைவுக்கவும் கூடாது. அவரைப்போல மாற வேண்டும் என்று நாம் செய்யும் தியானம் ஒரு துளி மாத்திரமே. ஏனெனில் இந்த மாற்றம் ஒரு வளர்ச்சியாகும். அன்றாட வாழ்விலே பயிலுகின்ற ஒரு பயிற்சியாகும். ஆகையால்தான் ஆண்டவர் தேறினவன் என்று சொன்னார். நமது அன்றாட வாழ்வில் நாம் வளரவேண்டும். பரீட்சைக்குட்படவேண்டும். அதில் தேர்ச்சி பெறவேண்டும். தேர்ச்சி, வெற்றி என்று வரும்போது நாம் நம் குருவை முகமுகமாய் சந்திக்கிறவர்களாவோம்.

ஆனாலும் இந்த வளர்ச்சியில் மந்தநிலையும் பின்வாங்கிப்போகும் பரிதாப நிலையும்கூட நேரிடலாம். முக்கியமாக சோதனைகள் வரும் நேரத்தில் நாம் அதிகமாக தடுமாறிப்போகிறோம். அதற்காக இடறிவிடக்கூடாது. மோட்சப்பிரயாணம் என்ற புத்தகத்திலே கிறிஸ்தியான் வழிதவறிய இடங்களையும், பின்னர் நேரிய பாதையில் வந்து சேர்ந்ததையும் ஆக்கியோன் அழகாக விபரித்துள்ளார். சோதனைகள் வரும். வரவேண்டும். சோதனை வந்துவிட்டது. கடவுள் ஏன் இதைத் தடுக்கவிலலை என்று நினைத்துக் குழம்புவது ஆபத்து. மாறாக, அவற்றை எப்படிச் சந்திக்கிறோம் என்பதிலேயே, நமது ஆவிக்குரிய வளர்ச்சியும் வெற்றியும் தங்கியிருக்கிறது.

அன்பான தேவபிள்ளையே, சோதனைகளை இடறிவீழ்த்தும் கற்களாகப் பார்க்கிறோமா? அல்லது அவற்றை நமது வெற்றிப் படிக்கற்களாகப் பார்க்கிறோமா? ஆண்டவருக்கு எப்போது சோதனை வந்தது என்று ஒரு ஓய்வுநாள் பள்ளிஆசிரியை கேட்டார். வனாந்தரத்தில் என்று ஒருவன் சொன்னான். இன்னொருவன், உலகத்தில் பிறக்க சிந்தித்த நேரத்திலிருந்து சிலுவையில் தம்மைக்கொடுத்த நேரம்வரைக்கும் அவருக்குச் சோதனைதான் என்றான். ஆம். ஆண்டவர் பாடுகளினாலே சோதிக்கப்பட்டார். சகலத்திலும் வெற்றி கண்டார். தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரடசிப்பை அடைவதற்குக் காரணரானார் (எபி.5:9). அதுபோல நமக்கு வரும் சோதனைகள் நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு வளருகின்ற அற்புத தருணங்கள். அந்த வளர்ச்சி, முடிவில் அது ஜெயத்தைத் தரும். அதுவே கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் பயிற்சிக்கூடமாகும். அதிலே நாமும் கலந்து நமது குருவைப்போலாகுவோமாக! ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று (1பேது.2:7).

ஜெபம்: அன்பின் தேவனே, சோதனையில் வீழ்ந்து தேய்ந்து போகாமல் உமக்குக் கீழ்ப்படிந்து ஜெயமாய் வாழ உமது கிருபைவரம் தாரும். ஆமென்.