சமநிலை ஊழியம்!
அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி
வேதபகுதி: நெகேமியா 6:1-15
அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந் தேதியிலே முடிந்தது (நெகே.6:15).
ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதன் முடிவு சிறப்பாக அமைய வேண்டும். ஒரு செயலை உருவாக்குவது வேறு; அதை வெற்றியாக முடிப்பது வேறு. நெகேமியாவும் அவரது உடன்வேலையாட்களும் தங்களது காரியத்தை வெற்றிகரமாக முடித்தார்கள். எருசலேமின் அலங்கமும் வாசல்களும் பலப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டது. எதிரிகள் யூதர்களைப் பார்த்து சிரித்தனர். அது இயலாத காரியம் என்று கேலி செய்தனர். ஆனால், அது செவ்வனே நிறைவேறி முடிந்தது. இத்திட்டத்தைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் சமநிலை; நாம் செய்கின்ற ஒவ்வொரு தேவஊழியத்துக்கும் இது தேவை.
முன்னேறுதலும் பின்பற்றுதலும்:
எருசலேம் நகரம் அவமானமான குழப்பத்தில் இருப்பதாகவும், புறஜாதியினரின் கேலிக்குரியதாகவும் இருக்கிறது என்பதை தனது சகோதரன் மூலமாகக் கேட்டவுடன் நெகேமியாவின் இதயம் உடைந்தது (நெகே.1). தேவனுடைய உதவிக்காக அவர் அழுது துக்கித்து ஜெபித்தார். அரசரின் அனுமதியுடன் வசதியான அரண்மனையைவிட்டு அவர் வெளியேறி, எருசலேமுக்குச் சென்று அதன் நிலையை ஆய்வுசெய்தார். தனது பாரத்தை அங்கிருந்த தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டார். 3ஆம் அதிகாரத்தில் தலைவர்கள் என்ற வார்த்தை 8 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகரம் செவ்வனே ஒழுங்கமைக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் நெகேமியா தனது பணிக்குழுக்களை மேலும் சீரமைத்தார். பெரிய ஒரு தரிசனத்தை கவனமான மேற்பார்வையுடன் செயல்படுத்தினால் மற்றவர்களது ஏளனத்தை தவிர்க்கமுடியும். அதிகாரம் 3இல் அனைவரும் வேலைசெய்ய முன்வரவில்லை என்பதையும் வாசிக்கிறோம் (வச.5), மேலும் இப்பணிக்குழுவில் ஆசாரியர்கள் (வச.1) திறமையான கைவினைஞர்கள் (வச.8, 32), மகளிர் மற்றும் எருசலேமுக்கு வெளியே வசித்தவர்களும் இருந்தனர் (வச. 2, 5,7). சிலர் மற்றவர்களைவிட அதிக வேலை செய்தனர் (வச.11,19, 21,24, 27,30).
உருவாக்குதலும் போரிடுதலும் (நெகே.4:18):
கிறிஸ்தவ வாழ்வில் உருவாக்குவதும் எதிர்ப்பைச் சந்திப்பதும் இணைந்தே செல்கின்றன (லூக்கா 14:25:33); நாம் ஆயுதம் ஏந்தவில்லையெனில் கட்டப் பட்டதைப் பாதுகாப்பது இயலாத காரியம். நமது பாதுகாப்பு ஆயுதங்கள் எபேசி யர் 6:10-20இல் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் விசுவாசத்தோடு நாம் அதை அணிந்துகொள்ள வேண்டும். ஆவிக்குரிய வாழ்வில் நமது பேராயுதங்கள் தேவனுடைய வார்த்தையும் ஜெபமுமே ஆகும். நமது செய்கைகளின் பலனை இழந்துபோகாதபடி பாதுகாப்பதில் எச்சரிக்கையாயிருக்கவேண்டும் (2 யோவான் 8). இல்லையெனில் நாம் போராடுவதில் ஈடுபட்டு, உருவாக்குவதை மறந்துவிடுவோம்! தேவனுடைய போராளிகளும் ஊழியக்காரர்களும் சமநிலையைப் பின்பற்றவேண்டும்.
விழித்திருப்பதும் ஜெபிப்பதும் (நெகே.4:9):
ஊழியம் செய்தல், விழித்திருத்தல் (எச்சரிப்புடன் இருத்தல்), ஜெபித்தல் மற்றும் போராடுதல் ஆகியவை எவருக்கும் சவாலாக அமையவேண்டும். “விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற கட்டளை மாற்கு 11:11 மற்றும் 14:38இல் தரப்பட்டுள்ளது. எபேசியர் 6:18 மற்றும் கொலொசேயர் 4: 2-4 ஆகிய பகுதிகளையும் தியானிப்பது நல்லது. நாம் விழித்திருந்து ஊக்கமாக உழைக்கும்பொழுது நம்மை திசைதிருப்பிவிட அநேக கரியங்கள் உண்டு. எனவே அது அதிக கடினமாக உள்ளது. பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் மறு ரூபமலையில் உறங்கிவிட்டனர் (லூக்கா 9:32); கெத்செமனே தோட்டத்திலும் அவர்கள் நித்திரையாயிருந்தனர் (லூக்கா22:45). உறங்கும் விசுவாசிகள் பாதிக்கப்படுவார்கள் அவர்கள் வெற்றியாளர்கள் அல்லர்!
விசுவாசித்தலும் சேவித்தலும் (யாக்கோபு 2:14-26).
நமது ஊழியங்களுக்காக நாம் ஜெபிப்பது மட்டும் போதாது. நாம் உழைக்கவும் வேண்டும். ஆவியில்லாத சரீரம் செத்தது. அதுபோல கிரியை இல்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கும் (யாக்.2:26). நாம் தேவனுடைய திறமைமிக்க ஊழியர்களாக இருப்பதற்கான சமநிலை ஊழியமுறையை நெகேமியாவும் அவருடைய வேலையாட்களும் அழகாக விளக்குகின்றனர். நம்முடைய விசுவாசம் உண்மையானதாக இருந்தால், அது தேவனுடைய ஊழியத்தை செய்வதற்கான தூண்டுதலைத் தரும். நகரத்தின் அலங்கம் திரும்பக் கட்டப்படவேண்டும் என்றும், அதின் கதவுகள் சீர் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படவேண்டும் என்பதற்கான காரியத்தைத் தானே முன்னெடுத்துச் செயல்படுத்தவேண்டும் என்பதை நெகேமியா நன்கு அறிந்திருந்தார். தேவனுடைய அழைப்பு என்றால் அவர் அதனை செயல்படுத்துவார். நாம் அவரை நம்பி கீழ்ப்படியவேண்டும் என்பதே நமது பொறுப்பு ஆகும்.
மகிமையில் பிரவேசித்துள்ள எனது நண்பர் “சமநிலையுள்ள மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று அடிக்கடி சொல்லுவார். அந்த ஆசீர்வாதத்தை நானும் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவு கூருகிறோம் (1 தெச.1:2).
மொழியாக்கம்: திருமதி அகஸ்டா மங்களதுரை