பயம் வேண்டாம்!

தியானம்: 2025 மே 1 வியாழன் | வேதவாசிப்பு: யாத்திராகமம் 1:7-17

YouTube video

மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண் பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள் (யாத். 1:17).

இம்மட்டும் நம்மை வழிநடத்தின தேவன்தாமே மே மாதத்திற்குள் பிரவேசிக்க நமக்கு கிருபை செய்தபடியால் அவருக்கே துதி கனமகிமை உண்டாவதாக! இப்புதிய மாதத்தில் தேவன் நமது சகல தேவைகளையும் சந்தித்து வழிநடத்துவதோடு நமது குறைவுகள் யாவற்றையும் நிறைவாக்கி வழிநடத்த வேண்டுதல் செய்கிறோம். …நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்… (உபா.28:12).

தேவனுக்கு மாத்திரம் பயந்து வாழ்ந்ததினால், ஸ்காட்லாந்து நாட்டு சீர்திருத்த வாதியான ஜாண் நாக்ஸ் என்பவர், “எவருக்கும் அஞ்சாத மனிதர்” என்று அழைக்கப்பட்டார். பரிசுத்த வேதாகமத்தில் சுமார் 116 இடங்களில் தேவனுக்குப் பயப்படுவதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. “கர்த்தருக்குப் பயப்படும் பயம்” என்பது முகஸ்துதியாகவோ, அல்லது, ஒரு தாழ்வு மனப்பான்மையுடனோ அல்லாமல், பக்தி விநயத்துடனும், பிரமிப்புடனும் கூடிய ஒரு மரியாதையாகும். ஒருவரை அனைத்துக்கும் மேலாக வைத்து எண்ணும் ஒரு உயர்ந்த எண்ணமே அது!

இக்காரியத்தையே இஸ்ரவேல் மக்களுக்கு பணிவிடை செய்த மருத்துவச்சிகளிடம் காண்கிறோம். அவர்கள் பிரசவம் பார்க்கும்போது பிறக்கின்ற எபிரெய ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிடும்படி எகிப்தின் அதிகாரம் படைத்த பார்வோன் மன்னனால் கட்டளைக் கொடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவச்சிகள் தேவனுக்கு அதிகமாய் பயந்ததினால் பார்வோனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. உலகத்தின் ஆட்சியாளனிடம் வெகுமதிகளைப் பெறுவதைவிட தேவனைப் பிரியப்படுத்துவதையே அவர்கள் தெரிந்தெடுத்தனர்.

பிரியமானவர்களே, தேவனுக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் ஒரு மனுஷனுக்கு அல்லது ஏதாவது ஒரு சூழ்நிலைக்கு நீங்கள் பயந்ததுண்டா? நீங்கள் வேலை செய்யும் இடத்தில் தேவனைப் பிரியப்படுத்த முடியாமல் ஏதேனும் ஒரு பயம் உங்களைத் தடுக்கிறதா? “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி.4:13). “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ.1:7) என்கிற தேவவார்த்தைகளை நினைவிற்கொள்ளுங்கள். உங்களைப் பயமுறுத்தும் சூழ்நிலைகளின்போது இவ்வசனங்களை நினைத்துக்கொள்ளுங்கள். உங்களை உருவாக்கி மீட்டுக்கொண்டவர், உங்களை பயத்திலிருந்து விடுவிக்கத் தேவையான பெலத்தைத் தருவார். அவர் ஒருவருக்கு மாத்திரம் பயந்து, அவர் ஒருவரைமாத்திரம் பிரியப்படுத்த ஆரம்பியுங்கள்.

உலகத்தின் துன்பங்கள் உங்களைப் பயமுறுத்தினாலும் தேவபயம் நேர்மையானதைச் செய்ய உங்களுக்குத் துணிவைக் கொடுக்கும்.

ஜெபம்: “அன்பின் தேவனே, இந்த புதிய மாதத்திலும் நீர் எங்களை ஆசீர்வதித்து குறைவு களையெல்லாம் நிறைவாக்கி வழிநடத்தும். மனுஷபயத்திலிருந்து நாங்கள் விடுதலை பெற்று உமக்குக் கீழ்ப்படிவதையே தெரிந்துகொள்ள கிருபை தாரும். ஆமென்.”