புத்தாண்டின் உயரிய நோக்கம்
தியானம்: 2026 ஜனவரி 1 வியாழன் | வேத வாசிப்பு: எரேமியா 33:6-9

இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, …பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன் (எரே.33:6).

இழந்துபோன தேவசாயலை நாம் மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காக தம்மையே நமக்களித்த ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில், அனுதினமும் தேவனுடன் வாசகர்களுக்கு, அன்பின் புதுவருட வாழ்த்துக்கள்! இப்புதிய ஆண்டிலே, ஒழுக்கமும் கட்டுப்பாடுமுள்ள வாழ்வு வாழவும், கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொள்ளவும், கர்த்தர்தாமே நம் யாவருக்கும் நாள்தோறும் புதிய கிருபையும் பெலனும் தந்து வழிநடத்துவாராக.
தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிற (சங்.146:5) ஒவ்வொருவனுக்கும் கர்த்தர் நல்ல சுகமும் குணமும் தந்து, நிலையான நிறை வாழ்வையும் தருவேன் என்று வாக்களிக்கிறார். வாக்குறுதி நமக்கு என்றும் உண்டு. ஆனால் அது நம் வாழ்வில் செயல்படுவது அல்லது நிறைவேறுவது என்பது, நம்மை நாம் தேவ நோக்கத்திற்கு விட்டுக்கொடுப்பதிலேதான் தங்கியிருக்கிறது. ஆக, தமது பரிபூரண சமாதானத்தை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று தேவன் நம்மீது வைத்திருக்கிற நோக்கம்தான் என்ன? அன்று இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அழைத்துவந்த தேவன், அவர்களது சகல கீழ்ப்படியாமையின் மத்தியிலும் அவர்களைத் தண்டித்துக் கண்டித்து நடத்தினாரே தவிர, அவர்களைத் தள்ளிவிடவில்லை. ஏன்? அவர்களுக்கூடாக தம்மை உலகத்திற்கு வெளிப்படுத்துவதே அவர் நோக்கமாக இருந்தது. அப்படியே தாவீதின் வம்சத்தில் இயேசு வந்துதித்தார்.
அந்த இயேசுவை ஏற்றுக்கொண்ட நமது வாழ்விலும் தேவன் பெரிய நோக்கங்களை வைத்திருக்கிறார். நம்முடைய வாழ்விலே அவர் மகிமைப்படுவது மாத்திரமல்ல, கிறிஸ்துவைப்போல நாம் மாறவேண்டும் என்பதே அந்த மகா மேன்மையான சித்தம் என திருமறை நமக்கு விளக்குகிறது. நாம் கிறிஸ்துவாகிறது அல்ல; கிறிஸ்துவைப் போல் ஆகிறது. அதாவது இழந்துபோன தேவசாயலை கிறிஸ்துவில் நாம் தரித்துக்கொள்வது; தேவனோடு நித்தியமாய் வாழும் ஒப்பற்ற சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்வது. கிறிஸ்துவின் குணாதிசயம், அவருடைய சிந்தை இவற்றை நமதாக்கிக்கொள்வது. தினமும் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்திலே என்றும் மாறாத கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு பரிபூரண சமாதானத்தைத் தருவது எதுவும் இருக்கமுடியாது. அந்த மகிமையின் சாயலைப் பெற்று, பூரண சமாதானத்துடன் கிறிஸ்துவை இவ் உலகில் பிரகடனப்படுத்தவேண்டிய நாம் இந்தப் புதிய ஆண்டில் நமது இரட்சகருக்காய் என்னதான் செய்யப்போகிறோம்? என் வாழ்வின் நோக்கம்தான் என்ன? அது உலகத்தோடு முடிந்துவிடுமா? நித்தியம் வரைக்கும் நடத்துமா?
ஜெபம்: “அன்பின் பிதாவே இப்புதிய ஆண்டிலும் தேவரீர் அருளும் பரிபூரண சமாதானத்தை நாங்கள் பெற்றுக்கொள்ளவும், கர்த்தருக்காய் புதியவாழ்வை தரித்துக் கொண்டு வாழ உமதருள் தாரும். ஆமென்.