பரிசுத்தமாய் ஆண்டுகொள்

தியானம்: 2026 ஜூலை 31 வெள்ளி | வேத வாசிப்பு: 1தெசலோனிக்கேயர் 4:1-8

YouTube video

உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து, இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும்… இருக்கவேண்டும் (1தெச. 4:5,6).

அறிவு தெரிந்த காலந்தொட்டு, அறிவு மங்கிப்போகும் காலம் வரைக்கும் மனிதனுடைய அந்தரங்கத்தையே அசைத்துவிடுகிறது இயற்கையாக அவனுக்குள் இருக்கிற பாலுணர்வு. அது பரிசுத்த நோக்கத்திற்காக தேவன் தந்த ஈவு. பாவத்தில் விழுந்துவிட்ட மனிதனுக்கோ, அது தன்னோடும், பிறரோடும் தேவனோடும் பகையை ஏற்படுத்துகிற ஒன்றாக மாறிவிட்டது. மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் இன்று எத்தனையோபேர் வெளியே சொல்லமுடியாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமது நிலைமையை ஒப்புக்கொள்ளவும் முடியாமல் தவிக்கிறார்கள். இன்றைய வாசிப்புப்பகுதியில் இதைக்குறித்து பவுல், தெளிவாகக் கற்றுத் தருகிறார். தேவனுக்குப் பிரியமாய் நாம் நடக்கவேண்டுமானால், நாம் கிறிஸ்தவவாழ்வில் அதிகமதிகமாய் தேறவேண்டுமானால், இது கவனிக்கப்பட வேண்டியதொன்று.

ஆவியையும் ஆத்துமாவையும் ஒப்புக்கொடுக்கலாம்; ஆனால் சரீரத்தை ஒப்புக்கொடுப்பது இலகுவல்ல என்று ஒருவர் சொன்னார். மற்றவரோ, நாம் சரீரமின்றி வெறும் ஆவி ஆத்துமாவுடன் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால் நாம் மனுஷரே அல்ல என்றார். திருமண உறவுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு பாலுறவும் தேவனுக்கு அருவருப்பானதே. மனுஷன் வெகு இலகுவாக அகப்பட்டுக்கொள்வதும் இந்தப் பாவத்திலேதான். இது சிலசமயங்களில் தனி மனிதனை மாத்திரமல்ல, குடும்பங்களை, சபையை, சமுதாயத்தையும் பாதித்துவிடுகிறது. இது சரீரத்திற்கு மாத்திரமல்ல; ஆத்துமாவுக்கும் துன்பம் உண்டாக்குகிறது. மேலும் மனித உறவுகளையும், தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவையும்கூட கெடுத்துப்போடுகிறது. இவையெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனக்குத் தவறு என்று தெரியும்; ஆனால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று இருபது வயதுமட்டுமே நிறைந்த ஒரு வாலிப சகோதரி என்னிடம் கண்ணீரோடு முறையிட்டாள்.

இந்த விஷயத்தில் மனிதர்கள் எல்லோருமே சோதிக்கப்படுகிறவர்களாகவே இருக்கிறோம். ஆனாலும் நமது அந்தரங்க உணர்வுகளை, விட்டுவிட முடியாத தவறான உறவுகளை தேவபாதத்தில் நாம் உண்மையாய் வைக்கும்போது, பரிசுத்தாவியானவர் நிச்சயமாய் நம்மை விடுவிப்பார். பலர் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று பெருமையாக எண்ணலாம். நல்லது, ஆனால் அதேசமயம் நமது தவறான மனஓட்டம், பாவசிந்தனை என்பவற்றை விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார் (1நாளா.28:9).

ஜெபம்: கர்த்தாவே, அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும் நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவீர். வேதவசனத்திற்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்தமாய் வாழ எங்களுக்குக் கிருபை செய்யும். ஆமென்.