ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இவ்வுலகத்தில் மெய்யான ஒளியாக உதித்த ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வருடத்தின் இறுதிவரைக்கும் நடத்தி வந்த அன்பின் தேவனைத் துதிக்கிறோம். இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இத்தியானங்கள் யாவும் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். இத்தியானங்கள் இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாகவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்வாயிலாக தேவன் பெரிய காரியங்களை செய்ய எங்களோடு இணைந்து ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம். தங்கள் ஆவிக்குரிய நண்பர்கள் விசுவாசிகளுக்கும் தியான நூலை அறிமுகம் செய்துவையுங்கள்.

சத்தியவசன ஊழியத்தை இணைக்கரம் கொடுத்து தாங்கிவரும் பங்காளர்கள் அனைவருக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். பங்காளர்கள் அனுப்பும் அன்புகாணிக்கையினாலே தேவன் இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வருகிறார். இதுவரை விசுவாச பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் தயவுகூர்ந்து புதுப்பித்து தொடர்ந்து ஆதரிக்க அன்பாய் வேண்டுகிறோம்.

இத்தியானபுத்தகத்தில் வெளியாகிவரும் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடிக்கிறவர்கள் வழக்கம் போல் பெயர்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். அவர்கள் பெயர்களை அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் பிரசுரிப்போம்.

இவ்விதழில் நவம்பர் மாதத்தில் இஸ்ரவேல் ராஜாக்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களைக் குறித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறப்பின் சிறப்புதியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்