ஈவுகளை எண்ணு!
தியானம்: 2024 டிசம்பர் 30 திங்கள் | வேத வாசிப்பு: சங்கீதம் 106:1-22

ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள் (சங்கீதம் 106:13).
நம் எல்லோருக்குமே நன்மைகளை, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விருப்பம் அதிகம். தீமைகளையும், சாபங்களையும் நாம் வெறுத்து ஒதுக்குவோம். தேவனிடமிருந்து நன்மைகள் வரும்போது இருகரம் நீட்டி பெற்றுக்கொள்ளும் நாம், தற்செயலாக ஏதாவது ஒரு தீமை நடந்துவிட்டாலும் தேவன் எங்கே? அவர் இதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்? என்று கேள்விகளைக் கேட்டு சலித்துக்கொள்ளுகிறோம்.
மிகவும் ஐசுவரியவானாய், உத்தமனும் சன்மார்க்கனுமாய் இருந்த யோபுவின் வாழ்வில் ஒரேநாளில் அத்தனையும் அழிந்துபோனது. அப்போதும், “தேவனுடைய கையில் நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ” என்றே யோபு சொன்னார் (யோபு 2:10). இத்தனையாய் துன்பங்களை அனுபவித்தபோதும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப் பற்றிக் குறை சொல்லவுமில்லை என்று வாசிக்கிறோம் (யோபு 1:22).
இதேபோல் இஸ்ரவேலரை நோக்கினால், தேவன் அவர்கள் மத்தியில் எத்தனையோ அதிசயங்களைச் செய்து, அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கி, அவர்களை அதிசயமாய் வெளியே கொண்டுவந்தார். அவர்களோ அவை அனைத்தையும் மறந்து சிறிது கஷ்டம் வந்தவுடனேயே, முறுமுறுத்து தேவனுக்கு எரிச்சல் வரத்தக்க விதமாக நடந்துகொண்டார்கள். யோபு துன்பங்களை எதிர்நோக்கிய விதத்திற்கும், இஸ்ரவேலர் துன்பங்களை எதிர்நோக்கிய விதத்திற்கும் நிறையவே வித்தியாசமுண்டு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை.
தேவபிள்ளையே, வருடஇறுதிக்குள் வந்திருக்கும் நமது நிலைதான் என்ன? இவ்வருடத்தில் ஏற்பட்ட இழப்புக்கள், சோதனைகள், வேதனைகள், வியாதிகள் இவற்றைக் கண்டு சோர்ந்துபோய் இருக்கிறீர்களா? தேவன் தந்த ஈவுகளை நினைத்துப்பாருங்கள். அவரது ஆசீர்வாதங்களையும் அவரது வழிநடத்துதலையும் ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். எண்ணுக்கடங்காத கிருபைகளால் நம்மை அனுதினமும் தாங்கி நடத்திவரும் அவரது அளவிடமுடியாத அன்பை, கிருபையை, வழிநடத்துதலை ஒருமுறை நினைத்துப் பாருங்கள். எல்லாவற் றிற்கும் மேலாக நம்மை மீட்கும்பொருட்டு பரலோக மேன்மைகளை எல்லாம் துறந்து பாலகனாக இந்தப் பாவ உலகில் வந்துதித்த அவரது தியாக அன்பை எண்ணிப்பாருங்கள். இப்படிப்பட்ட ஒரு ஆண்டவர் நம்மோடுகூட இருக்கிறார் என்று எண்ணும்போது நம்முடைய கஷ்டம் ஒரு பொருட்டாக நமக்குத் தோன்றாது. கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன் (சங்-116:12).
ஜெபம்: அன்பின் தேவனே, நீர் தந்த ஈவுகளுக்காக என் முழுஇருதயத்தோடு நான் உம்மைத் துதிக்கிறேன். எனது குடும்பத்திற்கு நீர் செய்த சகல உபகாரங்களுக்காகவும் உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு தொழுதுகொள்கிறேன். ஆமென்.