ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2025)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு புத்தாண்டிற்குள் தேவன் நம்மை பிரவேசிக்க கிருபை செய்தபடியால் தேவனைத் துதிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் தேவன் நம்மை பாதுகாத்து நம் தேவைகளையெல்லாம் சந்தித்து வழிநடத்தினபடியால் அவருக்கு நன்றி பலிகளை ஏறெடுப்போம். இப்புதிய ஆண்டிலே உங்கள் ஒவ்வொருவரையும் குடும்பமாக ஆசீர்வதிக்க தேவனிடம் வேண்டுதல் செய்கிறோம். இவ்வாண்டில் தேவசமாதானமும் சுகமும் உங்கள் இல்லத்தில் நிறைவாய் தங்கியிருக்க தேவன் கிருபை செய்வாராக! 2025ஆம் ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள சத்தியவசன ஊழியப்பணிகளை தேவன் தாமே ஆசீர்வதிக்கவும் தொலைக்காட்சி ஊழியம், இலக்கிய பணி, இணைய தளம் மற்றும் சோஷியல் மீடியா ஊழியங்கள் ஆகியவற்றிற்கான தேவைகள் அனைத்தையும் தேவன் சந்திக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வூழியங்கள் வாயிலாக நற் செய்தி அறிவிக்கப்படவும் பங்காளர்கள் வேண்டுதல் செய்ய அன்போடு கேட்கிறோம்.
சத்தியவசன ஊழியத்தைக் கடந்தாண்டு முழுவதும் ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றிகூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம். தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2024ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும். 2025ஆம் வருட சத்தியவசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர் கள் 82ஆம் பக்கத்திலுள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும்.
ஜனவரி மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இப்புதியவருடத்தில் நாம் காட்டவேண்டிய அன்பைக்குறித்து எழுதியுள்ள தியானங்களையும், பிப்ரவரி மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோஸ் அவர்கள் பலதலைப்புகளில் எழுதியுள்ள தியானங்களையும் பிரசுரித்துள்ளோம். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபியுங்கள்.
கே.ப.ஆபிரகாம்