வேதாகம நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டன?
வேதாகமம் உருவானது எப்படி? (நவம்பர் – டிசம்பர் 2025)
Dr.உட்ரோ குரோல்
வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உண்டு. அவற்றில் 39 புத்தகங்கள் பழைய ஏற்பாடு என்றும் 27 புத்தகங்கள் புதிய ஏற்பாடு என்றும் அழைக்கப்படும், பழைய ஏற்பாட்டில் 929 அதிகாரங்களும், புதிய ஏற்பாட்டில் 260 அதிகாரங்களும் உள்ளன.
பழைய ஏற்பாட்டில் எப்போதும் 39 புத்தகங்கள் இருந்ததில்லை. யூத ஜெப ஆலயங்களில் பயன்படுத்தப்பட்ட வேதாக மங்களில் 24புத்தகங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அவற்றில் 39 புத்தகங்களிலும் இருந்த பொருள் இருந்தது.
இந்த எபிரெய வேதாகமத்தில் இருந்த 24 புத்தகங்களும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன அவை;
1. சட்டப்புத்தகங்கள் அல்லது தோரா
இவை ஐந்தாகமங்கள் என்று அழைக்கப்படுகிறது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவை.
2. தீர்க்கதரிசன புத்தகங்கள்
ஏசாயா, எரேமியா போன்ற பெரிய தீர்க்கதரிசிகள் முதல் மல்கியா வரை உள்ள சின்ன தீர்க்கதரிசிகள் வரை எழுதிய புத்தகங்கள்.
3. பிறநூல்கள்
இதில் வரலாற்று நூல்களும் (இராஜாக்கள், நாளாகமம், போன்றவை) செய்யுள் நூல்களும் (சங்கீதம், நீதிமொழிகள், யோபு, ரூத், பிரசங்கி, எஸ்தர் போன்றவை) அடங்கும்.
பல வேத அறிஞர்கள் யோபு புஸ்தகம்தான் முதலில் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள், கி.மு 2150 இல் எழுதப்பட்டிருக்கலாம். அதற்கு அடுத்தபடியாக ஐந்தாகமங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். தீர்ககதரிசன நூல்கள் கி.மு 700, 600 இல் தொடங்கி கி.மு 400வரை எழுதப்பட்டிருக்கலாம். கடைசியில் எழுதப்பட்ட எஸ்றா, நெகேமியா, மல்கியா போன்றவை பழைய ஏற்பாட்டு நூல்கள் 1700 ஆண்டு காலத்தில் எழுதப்பட்டவை.
புதியஏற்பாட்டின் நூல்கள் குறுகிய காலத்தில் எழுதப்பட்டவை. கி.பி 50 முதல் கி.பி 100 ஆண்டுக்குள் எழுதி முடிக்கப்பட்டவை. பலர் யாக்கோபு எழுதிய நிருபம் முதன்முதலில் கி.பி 49ல் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள். இதைத் தொடர்ந்து தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட நிருபங்களும் பவுலின் ஆரம்ப நிருபங்களும் எழுதப்பட்டன. அதன்பின் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்). கடைசியாக யோவான் எழுதிய மூன்று நிருபங்களும் வெளிப்படுத்தின விசேஷங்களும் எழுதப்பட்டன.
அநேக புதிய ஏற்பாட்டு நூல்களில் அவற்றை எழுதியவர்களின் பெயர்கள் உள்ளன. யாக்கோபு, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், பேதுரு, யூதா என்பன, அப்போஸ்தலனாகிய பவுல், எழுதிய நிருபங்கள் அவை எந்த நகரத்தாருக்கு எழுதப்பட்டதோ, அந்த நகரத்தின் பெயரைத் தாங்கி உள்ளன. ரோமர், கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், சில புத்தகங்கள் பவுலினால் தனிப்பட்ட நபர்களுக்கு எழுதப்பட்டன. அவை தீமோத்தேயு, தீத்து, பிலேமோன்,
பழைய ஏற்பாட்டுக் காலத்திலும், புதிய ஏற்பாட்டு காலத்திலும் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டிருக்கிற நூல்கள் தவிர இன்னும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டிருந்தன. மக்கபேயர்1, மக்கபேயர்2, தோபித், பாருக், என்ற பெயர்களில் உள்ள புத்தகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பேதுருவின் நடபடிகள், பவுலின் நடபடிகள் பற்றித் தெரியுமா? நீங்கள் எஸ்தரின் சரித்திரம் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் யூடித் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எஸ்றாவின் புத்தகம் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் 1, 2 – எஸ்திராவின் புஸ்தகங்கள் பற்றி கேள்விப்ட்டிருக்கிறீர்களா?
பிரசங்கி என்ற புத்தகம் தெரியும். அதுபோல இன்னொரு புத்தகம் உள்ளது தெரியுமா? 12 வயதில் இயேசு தேவாலயத்தில் ஞானிகளின் கேள்விகளுக்கு விடை கூறியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயேசு களிமண்ணால் சிறுபறவைகள் செய்து அவற்றுக்கு உயிர்கொடுத்து, அவை பறந்து செல்வதைக் கண்டு ரசித்து விளையாடியதைப்பற்றி அறிந்ததுண்டா? இன்னும் இவைபோன்ற பல நூல்களும் பரிசீலனை செய்யப்பட்டு, வேதாகமத்தில் சேர்க்கப்படாத தகுதியற்றவை என முடிவு செய்யப்பட்டது. தள்ளுபடியாகம நூல்கள் என்று இந்த நூல்கள் விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கிப் பணத்தை வீணாக்காதீர்கள். வேதாகமத்தின் எந்த நூலும் இழக்கப்படவில்லை.
எப்படி சில புத்தகங்கள் மாத்திரம் வேதாகமத்தின் பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. எந்த தேர்வு செயல்முறை பயன்படுத்தப்பட்டது? இதற்கான அளவு கோல்கள் எவை? வேண்டும், வேண்டாம் என்று தீர்மானங்கள் செய்தது யார்? இவையனைத்தும் முக்கியமான கேள்விகள்.
நூல்களின் தரத்தை அறிவதற்கு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. புத்தகங்களில் கீழ்க்கண்ட அம்சங்கள் உள்ளனவா? என்று பரிசோதிக்கப்பட்டது.
1. அதிகாரம் உடையதாய் இருக்க வேண்டும்.
2. தெய்வீகமானதாய் இருக்க வேண்டும்.
3. விசுவாசிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்.
4. சபையில் செயல்படுத்தத்தக்கதாய் இருக்க வேண்டும்.
தெரிந்தெடுக்கப்பட்ட நூல்கள், “CANON” என்று அழைக்கப்பட்டன. இதற்கு அளவுகோல் என்று பொருள். வேதாகமத்தில் உள்ள 66 நூல்களும் “பரிசுத்த நூல்கள்” என்றே அழைக்கப்படும். இராஜாவின் கையில் செங்கோல் இருந்து நீதியாய் அரசாளுவது போல, இந்த நூல்கள் செங்கோல் போலக் கிரியை செய்யும்.
(தொடரும்)
மொழியாக்கம்: ஜி.வில்சன்