யூதாவின் ராஜா ஆகாஸ்

தியானம்: 2025 நவம்பர் 8 சனி | வேதவாசிப்பு: 2நாளாகமம் 28:1-5

YouTube video

யூதாவின் ராஜா ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார் (2நாளாகமம் 28:19).

அந்நாட்களில், ராஜா எவ்வழி நடக்கிறானோ அதையே மக்களும் பின்பற்ற வேண்டும். எதிர்க்கிறவர்கள் வாழ்வுக்கு ஆபத்து நேரிடும். அந்தப்படியே ஆகாஸ் எவ்வழி சென்றானோ, யூதா மக்களும் அவ்வழி சென்றார்கள். இதனால் மக்கள் பலவிதங்களிலும் தாக்கப்பட்டார்கள். ஆக, தலைமைத்துவம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.

பதினாறு வருடங்களாக எருசலேமில் ஆட்சி செய்த ஆகாஸ் தனது தகப்பனாகிய யோதாமின் வாழ்வை மறந்துவிட்டான். யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான் (2நாளா. 27:6) என்று வாசிக்கிறோம். ஆனால் ஆகாஸ், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையாய் நடவாமல், பாகால்களுக்கு விக்கிரகங்களைச் செய்து, புறவினத்தாரின் அருவருப்புகளின்படியெல்லாம் நடந்தான். கர்த்தர் பலரை எழுப்பி தண்டித்தார். ஒரே நாளில் இலட்சத்திருபதினாயிரம் மக்கள் சீரியரினால் செத்தார்கள், சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இஸ்ரவேலர் இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களையும் பிள்ளைகளையும் சிறைப்படுத்தினார்கள். ஏதோமியரும் பெலிஸ்தரும்கூட துன்புறுத்தினார்கள். அசீரியனும் நெருக்கினான். ஆனால், “தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம் பண்ணிக்கொண்டே இருந்தான்.” ஆகாஸ் கர்த்தருக்கு விரோதமாக நடந்ததால், மக்களும் கர்த்தரின் சமுகத்தில் தாழ்த்தப்பட்டுப்போனார்கள்.

இன்று நமது நாட்டில், ராஜ ஆட்சி இல்லை; ஜனநாயகம் இருக்கிறது. என்றாலும் ஒரு குடும்பத் தலைவனாக, ஒரு ஸ்தாபனத்தின் தலைவனாக நாம் ராஜ ஆட்சி நடத்துகிறோமா என்பதே கேள்வி. நமது தெரிவுகள், விருப்பங்களுக்கு மிகுந்த இடமுண்டு என்பதால் மனம்போனபடி நாம் நடக்க சோதிக்கப் படுகிறோம். நமது சுயதெரிவுகள் நம்மை மட்டுமல்ல, சுற்றியிருக்கிறவர்களையும் தேவனைவிட்டு விலக்கிவிடும் ஆபத்தும் உண்டு. தேவனுக்குப் பிரியம் எது, சித்தம் எது, சுயதெரிவுகளின் விளைவுகள் என்ன, எல்லாமே நமக்குத் தெளிவாகத் தெரியும். அன்று தலைவனின் பாவத்தால் மக்களும் தண்டிக்கப்பட்டார்கள். இன்று நமது சுயதெரிவுகள் நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும்கூட பாதிக்கத்தான் செய்கின்றன. கர்த்தரே சில சோதனைகள் தண்டனைகளை அனுமதிப்பது நம்மை வெறுப்பதால் அல்ல, நம்மைச் சீர்படுத்தவே! அதையும் நாம் உணராதிருக்கிறோம்! இன்று நான் தேவசித்தத்தில் நிற்கிறேனா? இன்று நம்மைக் குறித்து தேவன் எழுதுவாரென்றால் என்ன எழுதுவார்? என் நிமித்தம் வேறு யார் யார் பாதிக்கப்படுகின்றார்கள்?

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, எங்களது சுயதெரிவுகளினாலே மற்றவர்களும் பாதிக்கப்படாதபடி, தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக எங்கள் வழிகளை நேராக்கிட எங்களுக்கு உதவும். ஆமென்.