வேதாகமத்தில் எப்படிப் பல பதிப்புகள் நமக்குக் கிடைத்தன!

வேதாகமம் உருவானது எப்படி? (மே – ஜுன் 2026)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தில் எப்படி இத்தனை பதிப்புகள் வெளிவந்தன? என்று எப்போதாவது நீங்கள் ஆச்சரியப்பட்டதுண்டா? ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள வேதாகமப் பதிப்புகளைப் பாருங்கள்.

  1. King James Version
  2. The New American Standard Bible
  3. The New king James Version
  4. The Revised standard Version
  5. The New International Version
  6. Today’s English Version

மற்றும் இன்னும் பல.

தமிழ் மொழியில் வேதாகமம் வெளியிடப்பட்ட பதிப்புகளையும் வருஷங்களையும் பார்ப்போம்.

  1. பப்ரீசியூஸ் பதிப்பு 1796
  2. பெர்சீவல் பதிப்பு 1850
  3. பவர் பதிப்பு 1871
  4. லார்சன் பதிப்பு 1936
  5. மோனகன் பதிப்பு 1949
  6. தமிழக ஆயர்பேரவை 1973
    (R.C) வெளியிட்ட பதிப்பு
  7. பொது மொழிபெயர்ப்பு 1995
  8. நிறைவாழ்வு ஆய்வுவேதாகமம் 2005
  9. வாழ்வியல் விளக்க வேதாகமம் 2007

இவைகளெல்லாம் எங்கிருந்து வந்தன? இவைகளெல்லாம் நமக்குத் தேவையா? ஏன்? இவற்றில் உங்களுக்கு மிகவும் பிரியமானது எது? இவற்றில் சிறந்த பதிப்பு எது?

பழைய ஏற்பாட்டின் பல்வேறு மொழி பெயர்ப்புகள் இயேசுவின் காலத்திலும் கூட இருந்தன. சவக்கடல் சுருள்கள் கி.மு. 100 முதல் கி.பி.100 வரை கண்டுபிடித்து எடுக்கப்பட்டன. செப்துவ ஜிந்து வேதாகமம் கிரேக்கமொழி பேசும் யூதர்களுக்காக கி.மு.280இல் மொழிபெயர்க்கப்பட்டது.

அதன்பின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் தோன்றினர். ஒவ்வொருவரும் எழுதியதில் மூல நகல் என்று மட்டுமே இருந்தன. அவைகள் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு, எழுதப்பட்டிருந்தன. இந்த மூலப்பிரதிகள் ஒன்றும் இன்று இல்லை. நமக்குக் கிடைத்திருப்பவைகளெல்லாம் நகல்களே. பெரும்பாலும் நகல்களின் நகல்கள்தான் கிடைத்துள்ளன.

கீழ்க்கண்ட ஐந்து கையெழுத்துப் பிரதிகளும் புதிய ஏற்பாட்டு நூல்களுடையவை. இவை கிறிஸ்து பிறப்பு முதல் உள்ள 500 வருஷங்களில் எழுதப்பட்டவை.

1. பாப்பிரை:

1895 இல் மத்திய எகிப்துப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாப்பிரை எழுத்துத் தகடுகள் கிடைத்தன. அவற்றில் பெரும் பாலானவை மம்மிகளின் கட்டுகளிலும், பதப்படுத்தப்பட்ட முதலைகளின் உடல் களிலும் திணித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று யோவான் 18ஆம் அதிகாரத்தின் ஒரு துண்டு. இதன் காலம் கி.பி.125 என்று தெரிகிறது.

2. இலத்தீன் வல்கேட்:

கி.பி.382 இல் ரோமாபுரியிலுள்ள பிஷப் சிறந்த இறையியல் அறிஞரான ஜெரோமிடம் நமக்கு நற்செய்தி நூல்களின் பழைய லத்தீன் மொழி பெயர்ப்பைத் திருத்தும்படி கேட்டுக்கொண்டார். ஜெரோம் நான்கு நற்செய்தி நூல்களை மட்டுமல்ல, லத்தீன் புதிய ஏற்பாட்டையே திருத்த முற்பட்டார். இந்தப் பணியில் பல எபிரேய கையெழுத்துப் பிரதிகளைப் பயன்படுத்தினார். ஒப்பிட்டு சரிபார்த்தார். மேலும் எபிரெய மொழியிலிருந்து நேரடியாக லத்தீன் மொழியில் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியை மொழி பெயர்த்தார். இந்தப் பணிக்காக ஜெரோம் 25 ஆண்டுகள் செலவிட்டார்.

வல்கேட் என்பது ஒரு லத்தீன் சொல் இதன் பொருள் பொதுவான என்பதாகும். இது வல்கேட் வேதாகமம் என்று அழைக்கப்பட்டது. 1228 இல் இந்த வல்கேட் வேதாகமம் ஸ்டீபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டது. இவர் கேண்டர்பரியின் ஆர்ச் பிஷப் ஆக இருந்தார்.

பின்னர் ஸ்டீபானாஸ் என்று அழைக் கப்படும் இராபர்ட் ஸ்டீபன்ஸ் இந்த அதிகாரங்களை வசனங்களாகப் பிரித்தார். இது 1551 இல் செய்யப்பட்டது. சுமார் 1571இல் மெரன்டானஸ் என்பவர் இந்த வசனங்களுக்கு எண் இட்டார்.

ஜான் குட்டென்பர்க் என்பவர் 1455இல் இந்த வல்கேட் வேதாகமத்தை முதல்முதல் அச்சிட்டார்.

3. கோடக்ஸ் சினைட்டிக்கஸ்

கி.பி. 330 இல் எழுதப்பட்ட கிரேக்க செப்துவ ஜிந்து வேதாகமத்தின் பழைய கையெழுத்துப் பிரதி கிடைத்தது. இது ஜெர்மனியில் உள்ள வேதாகம அறிஞரான டிஸ்கென்டோர்ப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1844 இல் சீனாய் மலையில் இருந்த தூய காதரீன் துறவியர் மடத்தில் கிடைத்தது. இது அங்கு குப்பைக்கூடையில் இருந்ததைக் கவனித்தார். இவர் அதைக் கண்டெடுக்காவிட்டால் இந்த அரிய பொக்கிஷம் குப்பையோடு குப்பையாகப் போட்டு எரித்து அழிக்கப்பட்டிருக்கும். இதில் பழைய ஏற்பாட்டின் 199 தகடுகளும் புதிய ஏற்பாடு முழுவதும் கிடைத்தது.

4. கோடக்ஸ் வாட்டிக்கானஸ்

இதுவும் கி.பி.330 இல் எழுதப்பட்டதே. இது ரோமாபுரியில் உள்ள வாட்டிக்கன் நூலகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. இது 1481 இல் கண்டுபிடித்து எடுக்கப்பட்டது. ஆனால் இந்த கையெழுத்துப் பிரதி 19ஆம் நூற்றாண்டு வரை திறமையான வேத அறிஞர்களுக்குக் காட்டப்படவில்லை. 312 இல் ரோம சக்கரவர்த்தியாகக் கான்ஸ்டன்டைன் வந்தபோது, அவர் வேதாகமத்துக்கு 50 நகல்கள் எடுக்கச் செய்தார். கோடக்ஸ் சினைட்டிக்கஸ், கோடகஸ் வாட்டிக்கானஸ் என்பவை இந்த 50 பிரதிகளில் உட்பட்டவை என்று நம்பப்படுகிறது.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்