திட்டவட்டமான வாழ்வு!

தியானம்: 2026 மே 29 வெள்ளி | வேத வாசிப்பு: லூக்கா 5:15-16; 6:12-13

YouTube video

அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமான போது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23).

ஒழுக்கமுள்ள திட்டவட்டமான வாழ்வு வாழ யாருக்குத்தான் விருப்பம் இல்லை! ஆனால் எவ்வளவு தூரம் நமது வாழ்வில அது சாத்தியமாயிருக்கிறது? ஒரு வாரத்திற்கு, அதிகாலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குப் போகும் வரைக்கும் ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்தோம் என்பதை நாளுக்கு நாள் ஒரு பேப்பரில் எழுதிப்பார்ப்போம். நமது ஒழுக்கமும் திட்டவட்டமான வாழ்வும் எப்படிப்பட்டதென்று அப்போது ஓரளவாவது விளங்கும்.

இயேசுவின் அந்த இறுதி மூன்றரை ஆண்டு காலத்திலே அவரது வாழ்விலே பல காரியங்களை நாம் கண்டாலும் இரு விஷயங்கள் மிக முக்கியமானவை. முதலாவதாக அவருடைய வாழ்வு ஒரு திட்டவட்டமான ஒழுங்குள்ள வாழ்வாக இருந்தது. முக்கியமாக அவரது ஜெபஜீவியம், அவர் நிறைவேற்றி வந்த பணியின் எந்தப்பகுதியும், அவருக்கும் பிதாவுக்கும் இடையேயுள்ள உறவைக் குறைத்துப் போடவில்லை. அவருடைய பெயர் பிரசித்தமானபோதும், ஜனங்கள் அவரைத் தேடி அலைந்தபோதும், அவர் ஜெபநேரத்தைத் தட்டி கழிக்கவில்லை. என் நிலைமை பிதாவுக்குத் தெரியும் என்று நாம் சொல்லுவதுபோல சொல்லிவிட்டு, ஊழியம் என்று ஓடவில்லை. தனிமையையும், வனாந்தரமான இடத்தையும் நாடிச்சென்று பிதாவுடன் எப்போதும் உறவாடினார். எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன் ஜெபித்தார். இராமுழுவதும் தனித்திருந்து ஜெபித்த வேளைகள் அதிகம் உண்டு. அது மாத்திரமல்ல, மற்றவர்களுக்காக ஜெபித்தார். பேதுருவுக்கு நடக்கப்போவதை அறிந்து அவருக்காகவும் ஜெபித்தார்.அதுமட்டுமல்ல, தேவசித்தத்துக்குள் தன்னை ஒப்புவித்து ஜெபித்தார். ஜெபமே இயேசுவின் மூச்சாக இருந்தது.

இரண்டாவதாக, ஜெபத்தைக் குறித்து மற்றவர்களுக்கு எதைச் சொல்லிக் கொடுத்தாரோ அதையே செய்தும் காட்டினார். குறிப்பாக தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக ஜெபித்தபோது, ஆண்டவர் ஜெபத்தின் உச்சிக்கே போய்விட்டார். இன்று நமது ஜெபஜீவியம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? கடமைக்காகவா? அல்லது காரியம் ஆகவேண்டும் என்பதற்காகவா? நினைத்தால் ஜெபிப்பது, இல்லையென்றால் அதற்கு ஒரு சாக்குச் சொல்லிக்கொள்வது என்று ஒரு திட்டம் இல்லாத வாழ்வு வாழுகிறோமா? நமக்கொரு திட்டவட்டமான ஜெபவாழ்க்கைமுறை அவசியம். இல்லையானால் நமது ஒழுக்கமும் பாதிக்கப்படும். தானியேலோவென்றால் … தினம் மூன்றுவேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் (தானி.6:10).

ஜெபம்: அன்பின் தேவனே, திட்டவட்டமான ஜெப வாழ்க்கைமுறையை எனது வாழ்வில் நான் கடைபிடிக்கவும், உலக காரியங்கள் அந்த ஒழுக்கத்திலிருந்து என்னை பிரித்துப்போடாதவாறும் தயவாய் காத்தருளும். ஆமென்.