மனிதன் மறப்பான்
தியானம்: 2026 ஜுன் 19 வெள்ளி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 40:9-23

ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான் (ஆதி. 40:23).
மறக்கப்பட்டு, தள்ளப்பட்டு, ஒதுக்கப்பட்டுவிட்டதாக உணரக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுமாயின் உண்மையிலேயே அது மிக கொடுமையான அனுபவம்தான். அதிலும் நமது தேவைகளில் நாம் எதிர்பார்த்தவர்களால் மறக்கப்பட்டுவிட்டோமே என்று அறியவரும்போது அது தரும் வேதனை சொல்லி முடியாது. இப்படிப்பட்ட ஒரு சோதனை யோசேப்பின் வாழ்விலும் நேரிட்டது. பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன் இருவரினதும் சொப்பனங்களுக்கும் யோசேப்பு அர்த்தம் கூறினார். முதலில் பானபாத்திரக்காரன்; மூன்று நாளைக்குள் ராஜா அவனை உயர்த்துவார் என்றார் யோசேப்பு. அத்துடன் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார். அவன் வாழ்வடைந்திருக்கும்போது தன்னை நினைத்து, தன்னைக்குறித்து ராஜாவிடம் பரிந்துபேசி தன்னை விடுதலை செய்ய உதவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடுத்தது சுயம்பாகி; இவனுடைய சொப்பனத்தின் அர்த்தப்படி இவன் மூன்று நாட்களுக்குள் தூக்கிலிடப்படவேண்டும். யோசேப்பு சொன்ன அர்த்தப்படியே யாவும் சரியாகவே சம்பவித்தது. “ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் மறந்துவிட்டான்.” (ஆதி.40:23). மூன்று நாட்களுக்குள் தனது விடுதலைக்கு ஒரு தருணம் கிடைத்தது என்று எண்ணியிருந்த யோசேப்பு, இன்னமும் இரண்டு வருடங்கள் காத்திருக்க நேரிட்டது.
பானபாத்திரக்காரன் செய்தது பெரிய துரோகம்தான்; ஆனால் யோசேப்புக்காக தேவன் நியமித்தவேளை இன்னமும் வராதிருந்தது என்பதே உண்மை. பானபாத்திரக்காரன் செய்தது அநியாயமேதான்; ஆனாலும், யோசேப்பின் குணாதிசயம் இன்னமும் துலக்கப்பட வேண்டியிருந்தது எனலாம். ஏற்கனவே குடும்பத்தாரால் மறக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த மனிதனாலும் மறக்கப்பட்டபோது, தன் நம்பிக்கையை இழந்துவிடாமல், ஒரு தருணம் போனால் இனி அடுத்த தருணம் வரும் என்ற உறுதியுடன் காத்திருந்தாரே யோசேப்பு, அந்த உறுதி நமக்கும் வேண்டும். இது கடினம் என்றாலும் இதுதான் உண்மை. ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற நினைவுக்கு இடமளித்தால் அதுவே நம்மைக் கொன்றுபோடும். மனிதர் நம்மைக் கைவிட்டாலும் ஆண்டவர் நம்மைக் கைவிடார் என்று உறுதியான நம்பிக்கையை நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். கர்த்தர் ஒருபோதும் தவறு செய்யமாட்டார். ஏற்றநேரத்தில் நமது தலையை அவர் உயர்த்துவார். பானபாத்திரக்காரன் சிபாரிசு செய்து யோசேப்பு விடுதலை பெறுவதிலும்பார்க்க, பார்வோனினாலே நேரடியாகவே யோசேப்பு உயர்த்தப்படுவதுமேன்மையல்லவா. ஆண்டவர் ஒருபோதும் தவறு செய்யவேமாட்டார். ஏற்றவேளையில் ஏற்ற காரியங்களை நேர்த்தியாகவே செய்து முடிப்பார். ஆனால் நாம் கர்த்தருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்க வேண்டும், இருப்போமா!
ஜெபம்: அன்பின் தேவனே, இதுபோன்ற சூழ்நிலைகளில் நீர் எங்களை மறப்பதில்லை என்ற முழுநிச்சயத்தோடு உமது கரத்திற்குள் அடங்கியிருக்க உதவி செய்யும். ஆமென்.