தேவனுடைய வேளை

தியானம்: 2026 ஜுன் 20 சனி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 41:1-14

YouTube video

இரண்டு வருஷம் சென்றபின்பு, …. காலமே பார் வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது (ஆதி.41:1,8).

ஏதாவது நன்மை நடக்காதா என்று ஏங்கி காத்திருப்பது மிகுந்த இளைப்பைத் தந்து விடுகிறது. ஆனால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்கூட நமக்கான சோதனைக் காலம் தான் என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். எப்பவுமே ஒரேமாதிரி இருக்காது. ஒன்றில் முடிவு வரும், அல்லது மாற்றம் வரும். இது நியதி. ஆனால் கர்த்தருக்கு ஒரு வேளை உண்டு. அது வரும்வரை அவருக்குள் உறுதியாயிருப்பதே உத்தமம்.

பானபாத்திரக்காரன் வேலையில் அமர்த்தப்பட்டு இரு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு தடவையேனும் அவன் யோசேப்பை நினைக்கவேயில்லை. இது அவனது தவறா? அல்லது, தேவனுடைய வேளை இன்னமும் வராதிருந்ததுதான் காரணமா? உலகரீதியாக பார்த்தால் அவன் செய்தது தவறுதான். ஆனால் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்த்தால் எல்லாமே தேவனுடைய கட்டுப்பாட்டிலே இருந்தது என்பது விளங்கும். ஆம், அவன் சொல்லி யோசேப்புக்கு விடுதலை கிடைத்திருந்தாலும்கூட, ராஜாதானே யோசேப்பின் தலையை உயர்த்துவது என்பது தேவனாலேயல்லாமல் யாராலே கூடும்? அடுத்து, பார்வோன் இந்த இரு ஆண்டுகளாக ஒரு கனவும் காணவில்லையா? ஆனால் குறிப்பிட்ட இந்த சொப்பனம் பார்வோனைக் கலங்கடித்தது கர்த்தருடைய வேளையின் ஆரம்பத்தை வெளிப்படுத்துகிறது. அந்நாட்களில் பல மந்திரவாதிகள், சோதிடர்கள் அரண்மனையில் பல தேவைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களின் செயல்கள் அசுத்தஆவிகளுடன் சம்மந்தப்பட்டவை. அவர்களால் பார்வோனின் சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்ல முடியாமற் போனது. இங்கேதான் பானபாத்திரக்காரன் யோசேப்பை நினைவுகூருகிறான். யோசேப்பு காவற்கிடங்கிலிருந்து அவசர அவசரமாக பார்வோனிடம் கொண்டு வரப்படுகிறான். இதுவே தேவனது செயலாகும்.

ஒரு காரியத்தைக் கவனித்தீர்களா? யோசேப்பு விடுதலைக்காக ஏங்கிய காலத்தில் விடுதலை கிட்டவில்லை. மாறாக, எந்தவித ஆயத்தமும் இல்லாத பொழுதிலே அவசர அவசரமாக விடுதலை கிடைத்தது. யோசேப்பு தடுமாறவில்லை. ஏனெனில் அவருக்கு தேவனுடனிருந்த உறவு நிலையாயிருந்தது. தனக்கு நேரிட்ட சோதனைகளிலெல்லாம் ஜெயம் பெற்ற யோசேப்பின் நற்குணம், அவர் தனது சகோதரர்களைச் சந்தித்தபோது வெளித்தெரிந்தது! இனி எதுவுமில்லை என்னும்போதுதான் பெரிய தருணங்கள் நம்மைத் தேடி வருகின்றன. அடுத்தது, கர்த்தருடைய வேளை வந்துவிட்டால், பின்பு அதை யாராலும் தடுக்கவோ தாமதிக்கவோ முடியாது. மேலும், நாம் தேவனுடனான உறவிலே உறுதியாக நிலைத்திருந்தால் எந்தவேளையிலும் நாம் தயங்காமல் முன்செல்லலாமே. ஆகவே, எந்த நிலைமையானாலும் தேவனுடைய வேளைக்குள் ஒப்புக் கொடுத்துவிட்டு அவருடைய கரத்துக்குள் அமர்ந்திருப்பதே சிறப்பானது.

ஜெபம்: தகப்பனே, எங்களுக்கு ஆயத்தப்படுத்தி வைத்த நன்மைகள் தாமதமானாலும் நீர் முன்குறித்த வேளையில் எங்களுக்கு கிடைக்கும் என முழுஇதயத்தோடும் விசுவாசித்து காத்திருக்கிறோம். ஆமென்.