பிறரைக் குறித்த பாரம்

தியானம்: 2026 ஜுன் 29 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 18:7-9

YouTube video

என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள்; (யோவான் 18:8).

பிரச்சனைகள் நம்மை நிலைகுலையச் செய்யும்போது, பிறரைக் குறித்த நமது பொறுப்பு என்ன? நமது சாட்சி, இயேசுவைப் போலாகவேண்டும் என்ற விருப்பம் யாவும் இந்த இடத்தில் தடுமாற இடமுண்டு. ஒரு வைத்தியர் தனது ஊழியர் ஒருவருக்கு மனிதாபிமானத்தில் சில மருந்துகளைக் கொடுத்து உதவினார். இதனால் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். உண்மையை அறிந்துகொண்ட அதிகாரிகள், வைத்தியரில் பரிவுகாட்டுவதுபோல நடித்துக் கொண்டு, மருந்தை உன் கையினால் கொடுக்கவில்லையே, மருந்துக்குப் பொறுப்பாயிருந்தவர்தானே கொடுத்தார். ஆகையால் நீயல்ல, அந்த மனிதனே மருந்தைக் கொடுத்தார் என்று அறிக்கை சமர்ப்பி. இல்லாவிட்டால் உன் வேலை பறிபோய்விடும். நீயும் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று வற்புறுத்தினார்கள். தண்டனையைக் குறித்து அவர்கள் சொன்னது உண்மைதான். அதற்காக, அந்த அப்பாவி மனிதனுக்குத் தண்டனையா?

அதிகாரிகள் நெருக்குதலுக்கு மேல் நெருக்குதல் கொடுத்தார்கள். ஆனாலும், இறுதியில் வைத்தியர் உறுதியாக பதில் தந்தார். என்னதான் நேர்ந்தாலும் நானேதான் மருந்து கொடுத்தேன் என்ற உண்மையை எழுதுங்கள் என்றார். ஏறத்தாழ ஒன்பது மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர், அந்த அதிகாரிகள் ஆச்சரியத்துடன் வைத்தியரை வாழ்த்தி, அவர்கள் கேட்ட கேள்வி, டாக்டர் நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? என்பதுதான். அன்று வெறுமனே கிறிஸ்தவர் என்ற பெயரைக் கொண்டிருந்த அந்த வைத்தியர், இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட பின்னர், கிறிஸ்து தம்மை எவ்வளவாய் நேசித்து நடத்தினார் என்பதை நினைவுகூர்ந்து தேவனை ஸ்தோத்திரித்தார்.

இயேசுவோடுகூட சீஷர்களையும் கைதுசெய்ய அன்று நல்லதொரு தருணம். ஆண்டவர் வாய்திறவாமல் இருந்திருந்தால், சீஷர்களுக்கு எதுவும் நடந்திருக்கும். ஆனால், ஆண்டவரோ இவர்களைப் போகவிடுங்கள் என்று தமது சீஷருக்காகப் பரிந்துபேசினார். அன்று ஏதேன் தோட்டத்திலே ஆதாம் ஏவாளைச் சுட்டிக்காட்டினான். ஏவாளோ பிசாசைக் காட்டினாள். இன்றும் தாம் பிழைத்துக்கொள்ள அடுத்தவரைக் காட்டிக்கொடுக்கிறவர்களும், அடுத்தவரும் துன்பப்படட்டும் என்று எண்ணுகிறவர்களும் அநேகர். இதனால் எத்தனை குடும்பங்கள் சிதைந்துபோயிருக்கின்றன. இது கிறிஸ்துவின் வழி அல்ல. நம்மையும் அறியாமல் நாம் யாருக்காவது இப்படியொரு தீமை செய்திருந்தால், செய்ய நினைத்திருந்தால் இப்போதே அதைச் சரிசெய்திடுவோமாக. கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார் (1பேது.2:21)

ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, ஆபத்துநேரத்திலும் சீஷர்களுடைய பாதுகாப்பிற்காக வாதிட்டீரே, நாங்களும் அந்த மனப்பான்மையோடே நடந்து துன்பத்தில் இருக்கிற மற்றவர்களை நேசிக்க எங்களுக்குக் கிருபை செய்யும். ஆமென்.”;.