மறைவானது எதுவுமில்லை
தியானம்: 2026 ஜூலை 1 புதன் | வேத வாசிப்பு: சங்கீதம் 19:12-14; எபி.4:13-16

அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை (எபிரெயர் 5:13).
பாதி வருடத்தை கர்த்தர் அருளால் நிறைவுசெய்து புதிய மாதத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள நமக்கு, நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு (யோசு.8:1) என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். யோசுவாவைப் பெலப்படுத்தின ஆண்டவர் நம்மையும் பெலப்படுத்தி இம்மாதத்தை ஆசீர்வதித்துத் தருவார்.
“நான் செய்த ஒரு தவறான காரியம், கடைசிவரைக்கும் யாருக்கும் தெரியாமலே இருந்தது. அது எவருக்கும் தீங்கு விளைவிக்காவிட்டாலும், எனக்குள் உண்டான குற்றஉணர்வு என்னைக் குத்திக் குதறிவிட்டது. மனுஷர் கைகளில் விழுவதிலும் ஆண்டவர் கைகளில் விழுவது நல்லது என்று உணர்ந்தேன். என் உள்ளத்தில் நான் மறைவாக கட்டி வைத்திருந்த விஷயத்தை உண்மைத்துவத்துடன் அவிழ்த்து விட்டேன். அவர் அருமையாகவும் என் தலை கவிழ்ந்து விடாமலும் காரியத்தைக் கையாண்டு, எனக்கு விடுதலை தந்தார். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.” இது ஒருவருடைய உண்மை சாட்சி.
தேவனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்துகின்ற அவருடைய சிருஷ்டிப்பையும், வல்லமைமிக்க வார்த்தையையும் ருசித்துப் பாடிய தாவீது, இந்த தேவனுக்கு முன்பாக எதுவும் மறைந்திருக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது என்பதை உணருகிறார். யார்தான் தன் பிழைகளை உணருகிறான்? உணர்ந்தால்தானே ஏற்றுக்கொள்ளமுடியும். ஏற்றுக்கொண்டால்தானே மனந் திரும்பி அறிக்கை செய்ய முடியும். அடுத்தவரில் பிழைகளைத் திருப்பிவிடுவதில் முனைப்பாயிருக்கிற மனிதன், தன் அவலநிலையை உணருவதில்லை. இங்கே தாவீது, “மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்” என்று ஜெபிக்கிறார். ஆம், இந்தப் பிரபஞ்சத்தை தாமே சிருஷ்டித்து, ஆளுகை செய்யும் தேவாதி தேவனுக்கு எதனை மறைக்கமுடியும்? மெய்யாகவே எந்தவொரு மனிதரும் காணமுடியாத சந்தர்ப்பத்திலும்கூட, நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்தை மாத்திரமல்ல, நாம் மனதிலே நினைப்பவை, கற்பனையில் பார்க்கிறவை என்று யாவையும் கர்த்தர் அறிவார். பின்னர் ஏன் நாம் அவருக்கு மறைக்கவேண்டும். மறைத்தால் அது நமக்குள் குற்றமனப்பான்மையைத் தோற்றுவித்துவிடும். இது நம்மை ஊனப்படுத்த வோ, நமக்குள் பயத்தைத் தோற்றுவிக்கவோ முடியும். இது மிகவும் ஆபத்தானது.
“அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாகவும் வெளியரங்கமாகவுமிருக்கிறது” (எபி.4:13). மனிதருக்கு எதையும் மறைக்கலாம், அல்லது, ஆலோசனை பெறுகின்ற நோக்கில் கூறினாலும், அவர்கள் அதை வைத்தே நம்மை வேதனைப் படுத்தலாம். மாறாக, எதையும் உண்மைத்துவமாய் அறிக்கையிட்டால் நம்மை ஏற்றுக்கொண்டு, நம்மை வழிநடத்த ஒரு அன்பான ஆண்டவர் நமக்கு இருக்கும்போது, நாம் ஏன் குற்ற உணர்வுடன் போராடவேண்டும்; மனிதரை நாட வேண்டும்? தைரியமாய் அவருடைய கிருபாசனத்தண்டை சேருவோமாக.
ஜெபம்: அன்பின் தகப்பனே, மறைவான குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட உம்முடைய சமுகத்தில் எங்களைத் தாழ்த்துகிறோம். ஆமென்.